வியாழன், செப்டம்பர் 25, 2014

-மயிரே போச்சு-

‘ஏமாற்றுபவனை விட, ஏமாறுபவனை சுட்டுக் கொல்ல வேண்டும்’ என்ற பொன்மொழியை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஏதோ ஒரு போராளியோ, புரட்சியாளனோ சொல்லியதாக என் நினைவு. போராளி, புரட்சியாளன் என்றவுடன் சீமானோ, வைகோவோ என்று உங்களது எண்ணங்கள் உசேன் போல்டிற்கு போட்டியாக ஓடினால் நிர்வாகம் பொறுப்பல்ல. அந்த வாக்கியத்தின் படி பல குண்டடிகளைத் தாண்டி உயிர்வாழும் இந்த ஜீவன், கடைசியாகத் துளைத்த தோட்டாவைத் தாங்கியபடி கீ போர்டில் தட்டச்சு செய்துகொண்டிருக்கின்றது.

‘ஆசையே அனைத்து அழிவிற்கும் காரணம், ஆகையால் அனைவரும் ஆசையைத் துறக்கவேண்டும்’ என்று ஆசைப்பட்ட புத்தரைப் புத்தகத்தில் படித்தவன் நான். இருப்பினும், கூந்தல் விசயத்தில் கூடுதல் முறை காசை கரியாக்கியிருக்கின்றேன், முடி மேட்டரில் மோசம் போயிருக்கின்றேன், வராத கேசத்தை வரவழைக்க, வழுக்கைத்தலையுடன் மார்க்கெட்டிங் செய்யும் பலரிடமிருந்து எண்ணெய்களை வாங்கி இருந்ததையும் இழந்திருக்கின்றேன். ‘......த்தா மயிரே போச்சு, மூடிக்கிட்டு இருடா’ என்று இருமார்ப்புடன் இருந்தாலும், ஏமாற்றத்தின் ஆணிகள் ஏனோ எண்ணிக்கையிலடங்காமல் எகிறிக்கொண்டிருக்கிறது.

‘புடிங்கியதெல்லாம் போதும், இனி ஆணியே புடுங்க வேணாம்’...என்று முடிவெடுத்து திரும்பினால், நடு மண்டையில் ஆணி அடிப்பதற்காக சுத்தியலோடு காத்திருப்பான் ஒருவன். இம்முறை சுத்தியல் ஒரு ஆப்கானிஸ்தான் கையில் இருந்தது, எப்படி அவன் ஆப்கானிஸ்தானி என்று தெரியும்னு கேக்குறீங்களா?, அவனே சொன்னான். ஊர் சென்ற உடன்பிறப்பு, எனக்கென்று கொண்டுவந்த 5 ரூபாய் பெறுமானமுள்ள நேசனல் கடை அல்வாவையும், பால்காரன் கடை சேவையும் வாங்க 50 ரூபாய்க்கு பஸ்பிடித்து அபுதாபியில் இருந்து துபாய் சென்றேன்.

பார்த்திபன் சொன்ன, துபாய் பஸ்ஸெல்லாம் வந்து நிற்குமே அதே பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே இருந்த தியேட்டரில் ஒட்டப்பட்டிருந்த அஞ்சான் போஸ்டரில், தோரனையாக சூர்யா நின்றாலும், தொடை தெரிய நின்ற சமந்தாவை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். தண்ணீர் பாட்டில் கையிலிருந்தாலும், வாயில் வழிந்த நண்ணீரை அவன் கண்டிருக்க வேண்டும்.

பாசத்தோடு தம்பி என்று ஹிந்தியில் அழைத்தான், திரும்பினேன். இருக கையைப் பிடித்துக்கொண்டான், ‘க்க்கியா..., இத்னி....அய்சா...’ என ஒரு வார்த்தையை கூட முழுசாக முடிக்காமல், பிட்டு படத்துல வர்ற பிட்டுமாதிரி பாதி பாதியா பேசினான். அப்புறம்தான் புரிந்தது அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசுறாராமாம்.....எல்லா பிட்டுகளையும் பேஸ்ட் செய்து பார்க்கையில், அவன் சொன்னது என்னவென்றால், “இந்த சின்னவயசிலே இப்படி எல்லா முடியும் போயிடுச்சே?, என் தம்பிக்கும் இப்படித்தான் இருந்தது, அப்புறம் இங்க பக்கத்துல இருக்குற ஆயுள்வேத கடையில் ரெண்டு பொடிவாங்கி தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து 2 மாதத்தில் நல்லா முடி வளர்ந்திருக்கிறது, அந்த எண்ணெய் வாங்கி நீயும் தேய். என்பதுதான், ஆனால் எல்லாத்தையும் நம்பும்படியாக பாடிலாங்குவேஜ்ஜுடன் சொன்னான். அவனுடன் மேலும் ரெண்டு பேர், எல்லாருக்கும் கோல்கேட் கம்பெனியை லீசுக்கு எடுத்து பல் தேய்த்துவிட்டாலும் போகாத கருப்பு கரை. சரி, கரை நல்லதுதானே என்று நானும் விட்டுவிட்டேன்.

இருந்தாலும் இது போன்ற பல பேரை, பல இடங்களில் பார்த்திருந்ததால், ‘இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை, எனக்கு வேண்டாம்’ என்று நிராகரித்தாலும், ‘டிரை பண்ணித்தான் பார்க்கலாமே’ என்று என் உள்மனது கொஞ்சம் சத்தம் போட்டு சொல்லியது அவன் கண்ணில் விழுந்திருக்கவேண்டும், இந்த முறை கொஞ்சம் டியூனாகி, என்னை நம்ப வைக்க அவன் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் எங்கிட்ட இறக்கினான்.

‘எனக்கு என்ன தேவையா, உனக்கு இப்படி சொல்லவேண்டும் என்று, ஏதோ சின்ன வயசுக்காரனா இருக்கியே, என் தம்பி மாதிரி வேற இருக்குறதனால இதச்சொன்னேன். மற்றபடி உன் இஷ்டம், வெறும் பத்து ரூபாய்ல (திரஹம்) உன் அழகை மீண்டும் பெறலாம், போன வெறும் பத்து ரூபாய், வந்தா இளமை, யோசி...’ என்று பேசி ஆறாம் அறிவை ஆஃப் செய்தான். நானும் ‘ இல்லாத மயிற வச்சி மலையை இழுப்போம், வந்தா மயிறு, போனா பத்து ரூபாதானே.........’ யென யோசித்து அவனுடன் நம்பி போனேன். முதலில் ஒரு கடையில் போய் எண்ணெய் வாங்கினான், கடைக்காரன் 12 ரூபாய் என சொல்ல, ‘என்னடா, ஏமாத்தலான்னு பாக்குறியா? 10 ரூபா பொருளை 12 ரூபான்னு சொல்லுற, போலிஸ கூப்டுருவேண்.. போலிஸ கூப்டுருவேன்’னு கடைகாரனை மிரட்டி என்னை 10 ரூபாய் கொடுக்க சொன்னான்.

‘ஒரு வேள நல்லாவனா இருப்பானோ’ என்று மனது மூளையுடன் விவாதித்துக்கொண்டிருந்தது. ‘ஹரே பாய், தும் பத்துரூபா போலா?, எண்ணெய்க்கே பத்துரூபா ஓகயா?’ என சுத்த ஹிந்தியில் பேசியதும், என்னைப் பார்த்து ‘சத்தியமா உன்ன யாராலயும் ஏமாற்றமுடியாதுடா?’ என்று சொல்வதைப் போல ஒரு ரியாக்ஸன் கொடுத்தான், அந்த பூரிப்புல, பதிலை எதிர்பார்க்காமல் நான் அப்படியே ஆஃப்பாயிட்டேன். ‘நான் சொன்னது மருந்துக்குத்தான், எண்ணெய்க்கு இல்லை’ என்றும் சொன்னான்.

முதல்ல ஒரு மூத்தர சந்துக்குள்ள கூட்டிக்கொண்டு போனான், அங்கிருந்து இடது பக்கத்தில் திரும்பி இரண்டாவது மூத்திர சந்து அது, அப்படியே வலது பக்க மூன்றாவது மூத்திர சந்து..... என பல ரைட், லெப்டுகளுக்கு முடிவில் ஒரு மலையாளத்தில் எழுதிய ஆயுள்வேத கடையில் வாசலில் நின்றோம். முதல் மூத்திர சந்துக்குள் நுழையும் போதே தெரிந்துவிட்டது, இது பிம்பிலிக்கா பிலாப்பி என்று. சரி கொடுக்கவேண்டிய பத்து ஓவாவை கொடுத்துவிட்டு நடையைக் கட்டவேண்டியது தான் என்று எண்ணும் போது, கதையில் ஒரு டுவிஸ்ட்.

மலையாளத்தில் எழுதியிருந்த கடையில், சுடிதார் போட்ட பாக்கிஸ்தான்காரர்கள், நான் அப்படியே ஷ்ஷாக்காயிட்டேன்.....அத பார்த்தபின்னாடி கண்டிப்பா ஏமாந்துபோயிட்டோம் என்று முடிவுக்கே வந்தாச்சு. தப்பிச்சு போகலாமுன்னு பார்த்தா, கடைக்குள் ஏறும் போதே பின் பக்கமா, ஆஜானபாகுவா இரண்டு பாக்கிஸ்தானிகள் லாக் செய்துவிட, செய்கூலி கொஞ்சம் அதிகமானலும் பரவாயில்லை, சேதாரமின்று ரூம் செல்ல எத்தனித்ததால் ‘பீ கேர்ஃபுல்’ என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

கூட்டிக்கொண்டு சென்றவன் ஆப்கானில் டப் செய்யப்பட்ட சிவாஜி கணேசன் படங்களை பார்த்திருக்கவேண்டும், வாங்கிய 50 ரூபாய்க்கு 500 ரூபாய்க்கு நடித்துக்கொண்டிருந்தான். கடைக்காரனிடம் ‘போன முறை என் தம்பிக்கு கொடுத்த அந்த மருந்து கொடு, இத்தாலி மருந்து வேண்டாம், கொஞ்சம் பைசா ஜாஸ்தி என்றாலும் பரவாயில்லை ஜெர்மனி மருந்து கொடு’ என்று கேட்டுக் கேட்டு, கொண்டுப்போன எண்ணெயில் கலந்துகொண்டிருந்தார்கள். கடைகாரன் வாசிம் கான் நம்பூதரி ‘உன் வயசு என்ன?’ என்று வினாவினான், ‘எதுக்கு?’ என்றேன். ‘மருந்தை வயதுக்கு ஏற்றவாருதான் கலக்கவேண்டும் இல்லை என்றால், வளரும் முடியில் சில வெள்ளைமுடியாக மாறிவிடும்’னு சொன்னதைக் கேட்டபின்பு ‘இதுக்கு பி.ஜே.பிக்காரன் 100 நாளில் கருப்பு பணத்தை கொண்டுவருவோம்னு சொன்னதே பரவாயில்லடா’ என்று நினைத்துக்கொண்டேன். கலக்குற சாக்பீஸ் பவுடருக்கு, சயிண்டிஸ்மாதிரி விளக்கம் வேற.

எல்லாம் முடிந்து பாட்டிலை கொடுக்கும் போது, 10 ரூபாய் சில்லரை இல்லாததால் நான் பையில் இருந்த 50 ரூபாயை எடுத்துக் கொடுக்கொடுத்தேன். வாங்கியபின்பு, கடைக்காரன் ‘கியா?’ என்றான், நானும் ‘கியா?’ என்றேன், கூட்டிச்சென்றவனும் ‘கியா?’ என்றான். ‘மருந்தோட விலை 350 ரூபாய் என்றான், நீ வெறும் 50 ரூபா தார, மிச்சம் 300 எங்கே?’. என்று கடைக்காரன் கேட்க, ‘யோவ், நான் எப்படா 50 ரூபா தாரேன்னு சொன்னேன்? ஒழுங்கா 10 ரூபா எடுத்துக்கிட்டு மிச்ச 40 ரூபாயை திருப்பி கொடு?’ என்று நான் முரண்டுபிடிக்க, கூட்டிக்கொண்டு வந்தவனோ ‘ஒரு நாளுக்குத்தான் பத்து ரூபாய்ன’னு சொன்னேன், உனக்கு ஒரு மாசத்துக்கான மருந்து கலந்து இருக்கு, ஆக 30 X 10 = 350 (????)’ ன்னு சொன்னான். நல்லவேளையாக என் பர்சில் அப்போது அந்த ரூபாயை தவிர வேறு பணம் இல்லாததால், கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனாலும் அவர்கள் விடுவதாக இல்லை. அரை மணி நேரம் ஆகியும் விடுவதாக இல்லை, பின்பு, ATMமில் பணம் எடுத்து தருகிறேன் என்று கூறிவிட்டு, தப்பிச்சோண்டா சாமீ.... என்று பின்தலையில் கால்பட ஓடி தப்பித்தேன்.

‘சீலை இல்லன்னு சித்திக்கிட்ட வாங்கப்போனாலாம் ஒருத்தி, ஈச்ச ஓலையை சுத்திக்கிட்டு எதித்தாப்புல வந்தாலாம் சித்தி’ ங்குற கதையா, காலனா சம்பாதிக்கலாமுன்னு கடல்தாண்டி வந்தாலும் காவாலிப்பயலுக கப்பலேறி வந்து நிக்கானுங்க.
---------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.