வியாழன், மே 21, 2015

‘’கார்’’ காலப் பெண்கள்.

நான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டரில்தான் நான் வேலைபார்க்கும் சைட். முன்பெல்லாம் என்னுடய சைட்டின் வாசல் கேட் வரை அரசு பஸ் வரும். ‘’அதுதான் லைசென்ஸ் வச்சிருக்குறீயே!! கார் வாங்கு, கார் வாங்கு’’ன்னு காறி துப்பாத குறையாக நட்பு வட்டாரங்கள் இம்சித்தாலும், மேல் கூறிய காரணங்களுக்காக காரின் தேவை எனக்கு அவசியமானதாகத் தோன்றவில்லை. ‘’கார் ஓட்டுறதுக்கு பயமா கொமாரு’’ என்று யாரவது கேட்கும் போது, நான் கார் ஓட்டுவதும், பஸ்ஸில் போவதும் ஒன்றுதான் என சொல்லிவிடுவேன். எப்படி? என்றால், கார் ஓட்டும் போது சுத்திமுத்தி பார்க்கமல் நேராக பார்த்து ஓட்டவேண்டும், பஸ்ஸில் போகும் போதும் அப்படித்தான் சுத்திமுத்தியெல்லாம் பார்ப்பது இல்லை, நேராகத்தான் பார்ப்பேன். ஏனென்றால் பெண்கள் முன் பகுதியில்தான் இருப்பார்கள்.

ஐஸ்வர்யா ராய் அம்பது கிலோ தங்கத்தோட வந்து நிக்கும்போது, அருக்காணிக்கு அஞ்சு பவுன் போட்டு கட்டிக்கமுடியுமா? சொல்லுங்க. கார் எடுத்தால்?, எனக்காக,  ஜனவரி குளிரில் கூட மினி ஸ்கர்ட் போட்டுவரும் வெள்ளக்காரி பெண், பட்டனே தெரிச்சாலும் பரவாயில்லை என நினைத்து டைட்ட்டா ஆணின் சட்டையை போட்டுவரும் மொராக்கோ பெண், சுருட்ட முடியை சுருட்டிக்கொண்டே ரெண்டு வருசமா ஒரே நாவலை படித்துக்கொண்டுவரும் வட இந்திய பெண், லிப்ஸ்டிக் கம்பெனியை லீசுக்கு எடுத்து பூசிக்கொண்டுவரும் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்....Etc என பலதரப்பட்ட பெண்களை என் மனசறிந்து எப்படி ஏமாற்றமுடியும்?. நான் ஒரு நாள் பார்க்கவில்லை என்றால் கூட நாடாவில் நாண்டுகொண்டல்லவல்லா உயிர்விட்டுவிடுவார்கள்.

பெண்களைப் பற்றிமட்டுமே சொல்லுறியே அந்த பஸ்ஸில் உன்னைத்தவிர வேறு ஆம்பளைங்களே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அந்த அயோக்கிய ராஸ்கல்களைப் பற்றி நாமக்கு என்ன கவலை?. அபுதாபி பஸ்களில் முன்னாடி உண்டியல் ஒன்று இருக்கும், 2 திர்ஹம்ஸ் போட்டால் போதும், பஸ் எவ்வளவு தூரம் செல்கிறதோ அவ்வளவு தூரம் போகலாம். முன்பகுதி 3+3 வரிசை பெண்களுக்கான இடம். அந்த இடத்தில் ஆண்கள் உட்கார ஏன், நிற்க கூட அனுமதியில்லை. பின்புறத்தின் (பஸ்ஸின்) இருந்துகொண்டு ரசிப்பதற்கு அனுமதிதேவையில்லை.

அன்று ஒருநாள், நான் பஸ் ஏறவேண்டிய இடத்தில், ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்குட்டியிடம் 2 திர்ஹம்ஸ் சில்லரை இல்லை. தாய்குலத்திற்கு ஒரு இன்னல் என்றால் இடியே விழுந்தாலும் முன்நிற்பவன் நான். சுமாரான தாய்குலத்திற்கே அப்படி என்றால் சூப்பரான தாய்குலத்திற்கு கேட்கவா வேண்டும். அதுவும் ஹன்ஸிகா மாதிரியான தாய்குலமாக இருந்ததால் ஒரே குதுகலம்தான். ‘’முகம் மெய்யாலுமே ஹன்ஸிகா மாதிரி இருந்துச்சா?’’ என்று கேட்காதீர்கள், ஏனென்றால் நான் கழுத்துக்கு மேலே பார்க்கவில்லை. மேட்டருக்கு வருவோம். காசு இல்லாததால், எக்ஸ்ராவாக என்னிடமிருந்த 2 திர்ஹம்ஸை கொடுத்து உதவினேன்.

உதவு செய், பலனை எதிர்பாராதே என்ற கீதாச்சாரத்தை கீதா மேடம் சொல்லி கேட்டிருக்கிறேன். பலனை எதிர்பாரத எனக்கு பலான பலன்..... ச்ச்சீ சாரி, பலனோ பலன். இதுமாதிரியான உதவியை நம்ம நாட்டுக்காரிகளுக்கு செய்திருந்தால் ‘’நன்றி தம்பி’’ என்ற சொல்லை நாலுமுறை கூறிவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் அந்த ஹன்ஸிகா, ரெண்டு சீட் காலியாக இருந்த (ஆண்கள் சைடு) இடமாக பார்த்து உட்கார்ந்துகொண்டு, என்னையும் அவள் அருகில் அமர கை அசைத்தால். 2 திர்ஹம்ஸ்கே பக்கத்துல உட்காரலாம் என்றால், 20 திர்ஹம்ஸ்க்கு?.....

இப்படி எல்லாம் நல்லாத்தான் போய்கொண்டிருந்தது. ரோடு போடுகிறோம் என்ற பெயரில் எனது சைட் வரை வந்த பஸ் ஒரு கிலோ மீட்டருக்கு முன்னதாகவே நின்றுவிட்டது. மீண்டும் ரோட்டை விரித்து போட அடுத்த ஒரு கிலோ மீட்டர் என பஸ் நிறுத்தம் எனது ரூமில் வாசலுக்கே வந்துவிடும் நிலை வந்ததால், காரின் தேவையை நாடவேண்டியதாயிற்று. ரொம்ப கஷ்டப்பட்டு தேடி ஒரு பழைய காரை சொந்தமாக்கிக் கொண்டேன். பழைய காரே ஒழிய, ரொம்ப பழ்ழ்ழைய்ய்ய கார் இல்லை. வாங்கிய காசுக்கு நிகராக ‘’பட்டி’’, ‘’டிங்கரிங்’’க்குக்கான காசு செலவானது.

முதல் நாள் காரை எடுப்பதற்கு முன்பு, விஞ்ஞான பூர்வமாக எலுமிச்சி பழத்தை வைக்கவேண்டுமே? என ஆசைப்பட்டு ஃபிர்ட்ஜை திறந்து பார்த்தால் இருந்தது இரண்டு எலுமிச்சி பழங்கள். அதுதான் நாளைய எலுமிச்சை சாதத்திற்கான கோர் மெட்டீரியல் என நியாபகம் வரவே, காரா? சோறா? என்று பார்த்தால், நமக்கு சோறுதான் முக்கியம். டயருக்கு அடியில் எலுமிச்சை வைக்காததால், தெய்வகுத்தம் ஏற்பட்டு துபாய் அலைவரிசை எஃப். எம் அபுதாபியில் விடிவி கணேஷ் குரலில் கேட்கிறது. USP ஆடாப்டர் வாங்கினால் மெமரி கார்டு போட்டு பாட்டுகேட்கலாம் என ஒருவனின் ஆலோசனைப்படி வாங்கிமாட்டப்பட்டது.

முதல் பாடல். எனது இசை ஆசான் இளையராஜா பாடல்தான் போடுவேன் என அடம்பிடித்து ஆன் செய்தால்....... வண்டி மூவ் ஆகவும், கரகாட்டகாரன் சொப்பனசுந்தரி தீம் மியூசிக் ஸ்டார்ட் ஆகவும் நேரம் சரியாக இருந்தது. ‘’என் கூட இருந்தவனுங்க எல்லாம், ரஹ்மான், ஹரிஸ், ஜி.வி பிரகாஷ் என தலைமுறைக்கு தகுந்தது போல் மாறினாலும் ராஜா, ராஜான்னு சொன்னேனே அதுக்காகவா எனக்கு இந்த தண்டனை?’’.  ‘’காலேஜில் பக்கத்து ரூம் கம்யூட்டரில் ‘’♫♪முஸ்தபா, முஸ்தபா....♪♫” பாட்டு ஓடும் போது, எங்க ரூமில் இருந்த தகரமும், தகரம் சார்ந்த பொருட்களாலும் செய்யப்பட்ட ரேடியோ என எங்களுக்கு நாங்களே அழைத்துக்கொண்ட அதில் இருந்து மோகன், ராமராஜன் பாடல்களை போட்டிக்கு போட்டு ராஜாடா....ராஜாடா என தொண்டை கிழிய கத்திய உம்முடைய இசைபக்தனுக்கு இதுவா தண்டனை?’’ என இளையராஜாவை திட்டினேன்.

இன்று.

பஸ்ஸில் வருபவர்கள் ஒரு கிலோமீட்டர் நடந்துதான் சைட்டுக்கு வரவேண்டும், ஆகையால் நான் காலையில் வரும்போது நடந்துவருபவர்களை எனது வண்டியில் அழைத்துக்கொண்டுவருவேன் (யாராவது இருந்தால்). இன்று கொஞ்சம் லேட்டாகிவிட்டதால் அந்த பஸ்ஸ்டாண்டில் யாரும் இல்லை, அதாவது அயோக்கிய ஆம்பள பசங்க யாரும் இல்லை. ஒரு பெண். அவள் லிப்ட் கேட்கவே இல்லை, ஆனால் என்னை அறியாது கார் அவள் முன்பாக போய் நின்றது. அந்தநேரம்  காரில் ஆத்மா படத்தில் இருந்து ♫♪ கண்ணாலே காதல் கடிதம் சொன்னாலே எனக்காக.....♫♪♫  ஓடிக்கொண்டிருந்தது ‘’ ச்சே இளையராஜா, இளையராஜாதான் என்னமா செட் பண்ணிவிடுறாரு’’ என மனது ராஜாவுக்கு நன்றிக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தது.

அவள் ‘’நீங்க சைட்டுக்குள்ளா போறீங்க?’’ என வாய்திறந்துகேட்டாள். ‘’நீ காருக்குள்ள வந்தா எங்கனாலும் போகலாம்’’ என என்மனது பதில்கூறியது. ஆமாம் என தலையசைத்ததால், கதவை திறந்து காருக்குள் ஒரு காலை தூக்கிவைக்க, ஆத்மா பட பாடல் முடிந்து, தர்மதுரை படத்தில் இருந்து மாசி மாசம் ஆளான பொண்ணு பாடல் தொடங்கியது  ♫♪ ஸ்ஸ்ஸ்....ஆஆங்....ம்ம்ம்........ ஸ்ஸ்ஸ்....ஆஆங் ♫♪♫ இந்த சவுண்டை கேட்டவுடனே காரில் வைத்த காலை தூக்கிவிட்டாள் (அதாவது எடுத்துவிட்டாள்). பதட்டத்தில் ஆப் செய்ய பட்டனை அழுத்த நினைத்தவன், சவுண்டை கூட்டிவிட்டேன். பிறகு என்ன?............. தெரித்து ஓடியவள்தான், என் காரின் வேகத்தைவிட வேகமாக ஓடி மறைந்துவிட்டாள். அந்த சவுண்டை கேட்டவுடன் அவள் கண்ணால் கேட்ட அத்தனை கெட்டவார்த்தைக்கும் அர்த்தம் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

இருந்தாலும், ‘’இளையராஜா செட் பண்ணிவிடுறாரு’’ன்னு சொன்னதுக்காக இம்புட்டு பெரிய தண்டனையா?.  டூமச் இளையராஜா.


-----------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.