ஞாயிறு, அக்டோபர் 18, 2015

ஆணாதிக்க ச(ண்)மூகம்.

இஸ்லாமிய சொற்பொழிவுகளை பார்ப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ அதிக ஆர்வம் ஏற்படுவதில்லை. ‘’சொற்பொழிவு’’ என்ற பெயரில் அத்தனையும் இரைச்சல். அவர்களின் அகராதியில் அது உணர்ச்சிவசப்பட்டு பேசுதலாம். வெள்ளிக்கிழமை தொழுகையில்கூட இமாம்களின் உரை அதே பாணியில் இருப்பதால், குழந்தைகளைக்கூட வீட்டில் விட்டுச்செல்லும் நிலை. சுறா படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி ஹைபிச்சில் பாடும்போது வடிவேலுவின் ரியாக்சன் போலவே என்னுடய ரியாக்சனும் இருக்கும்.

எப்போதும் போல எதார்த்தமாக பேசுவதில் அவர்களுக்கு அப்படியென்ன கஷ்டம்மென்றே தெரியவில்லை, மைக் முன்பாக சென்றுவிட்டால் பாக்கிஸ்தான் தீவிரவாதியிடம் விஜயகாந்த் பேசுவது போல ஒரே காட்டுக்கத்தல். இதற்கு இடையில் மைக்கிலிருந்து ‘’குய்ய்ய்ய்.......’’ன்னு சவுண்ட் வேற. வீட்டிற்கு வந்தபின்பும் அந்த குய்ய்ய்ய்ங்க் சவுண்ட் நிற்பதில்லை. நான் உங்களை விஜயகாந்த் மாதிரி பேசவேண்டாம் என்று சொல்லவில்லை, ஏன் வல்லரசு விஜயகாந்த் மாதிரி பேசுறீங்க? வானத்தைப் போல பெரிய விஜயகாந்த் மாதிரி அமைதியா பேசுங்கன்னுதான் கேட்கிறேன்.

இதைப் பற்றி, வீட்டுக் கக்கூஸில் தண்ணீர் வரவில்லையென்றால்க் கூட, காவல்துறை கமிஷனர் ஆபிஸ் முற்றுகை போராட்டம் நடத்தும் ஒரு இயக்கத்தைச் சார்ந்த ஒருவனிடம் ‘’ஏன் பாய், இப்படி கத்தி பேசுறீங்க? கொஞ்சம் மெதுவா பேசுனா நீங்க சொல்லவரும் கருத்தும் விளங்கும், காதுக்கும் கொஞ்சம் நல்லா இருக்குமே’’ என்று கேட்டேன். அவனோ ‘’நபி அவர்கள் மக்களிடம் உரை நிகழ்த்தும் போது இப்படித்தான் சத்தமாகத்தான் உரை நிகழ்த்துவார், இது நபி வழி’’ என்று அறிவாளியாய் பதில் சொன்னான். அவனுக்கு கத்தி பேசுறதுக்கும் சப்தமா பேசுறதுக்குமான வித்தியாசமே விளங்கவில்லை. நபி காலத்தில் மைக், ஸ்பீக்கர் போன்ற சாதனங்கள் இல்லை, அதனால் அவர் ஒரு குன்றின் மீது ஏறி, தன்னுடய உரையை சப்தமாகத்தான் மக்களிடம் சொல்லியாகவேண்டும். இந்த குறைந்தபட்ச அறிவுகூட அந்த கொள்கை குன்றுக்கு இல்லை.

மேலும் ஏதாவது சொன்னாலோ அல்லது கேட்டாலோ, ‘’பாய், ‘பூ’வ ‘பூ’வுன்னும் சொல்லலாம், ‘புய்ப்பம்’ன்னும் சொல்லலாம், நீங்க சொல்லுறமாதிரியும் சொல்லலாம்’’ என்றே பதில் வருகின்றது. டாக்டர் ஹபிபுல்லா அவர்களின் ‘’மானுட வசந்தம்’ நிகழ்ச்சி பார்த்தாவது இவர்கள் திருந்தவேண்டும். பி.ஜெய்னுலாபிதின் செயல்பாடுகளின் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லாவிட்டாலும் அவரின் எதார்த்தமான பேச்சு எனக்கு பிடிக்கும். பி.ஜெ தவிர்த்து அவரின் விழுதுகள் அனைவருமே வெண்ணிடை ஆடை மூர்த்திகள்தான்.

கொஞ்ச காலத்துக்கு முன்னாடி பேஸ்புக்கில், கிட்டத்தட்ட எல்லா பாய்களும் ஷேர் பண்ணிய வீடியோ ஒன்றில் ஒரு இமாம் எதையோ கூறிக்கொண்டு அழுதுகொண்டிருந்தார். அந்த இமாம் ஒரு இளைஞர், சுமார் 30 வயதுதான் இருக்கும். தற்போது இவருக்குத்தான் கொஞ்சம் மார்க்கெட் அதிகம்போல, அதிகமாக இவருடய உரைகள்தான் பேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவருடய பயான்கள் (உரைகள்) அனைத்தும் ‘’மெட்டி ஒலி’’ ரேஞ்சில் கண்ணீரும், கம்பளையுமாகவே இருக்கும்.

அந்த வீடியோவை பேஸ்புக்கில் முதலில் காணும் போது, அவருக்குத்தான் ஏதோ கஷ்டம்போல என்று எண்ணினேன். ஆனால், விஷயம் என்னவென்றால், விஜய் டி.வி ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு முஸ்லிம் பெண் தனக்கு நடிகர் சூர்யாவைப் பிடிக்கும் என்றும், தன் தங்கைக்கு சிவகார்த்திகேயனை பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் அந்த தங்கை, தனக்கு சிவகார்த்திகேயனை ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும், அவர்மாதிரித்தான் மாப்பிள்ளை வேண்டும் என்று தன் அம்மாவிடம் கூறிவிட்டதாகவும் கூறுகிறார். இவ்வளவுதான் மேட்டர். புறாவுக்கு போரா? பெரும் அக்கப்போராக அல்லவா உள்ளது என்பதைப்போல இதுக்கு ஒரு பஞ்ஜாயத்து.

‘’நம் இஸ்லாமிய சமூகம் எங்கே செல்கிறது?, பெண்கள் சீரழிந்துவிட்டார்கள், பெண்களுக்கு மார்க்கத்தின் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது, கண்ணியத்திற்க்கு கூட ஸ்பெல்லிங்க் தெரியவில்லை, நம் சமூகம் எங்கே செல்கிறது, நம் சமூகத்துப் பெண்கள் எதை நோக்கிச் செல்கிறார்கள்......’’ என கையை நீட்டி நீட்டி பேசிக்கொண்டிருந்தார். அவர் கை நீட்டிய திசையில் நானும் ‘எங்கே செல்கிறது? எதை நோக்கி செல்கிறது?’  என்று எட்டிப் பார்த்தேன் ஒன்றும் காணக்கிடைக்கவில்லை.

குரான், ஆண்களையும் பெண்களையும் சமமாகவே கருதுகின்றது, ஆனால் இந்த இமாம்களோ, அறிவுரைகளை பெண்களுக்கு மட்டுமே கூறுகின்றார்கள். கண்ணியம் என்பது பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கு, குரானில் கூறும் கண்ணியம் பற்றி ஏன்  இந்த இமாம்கள் அதிகம் பேசுவதில்லை. ஆடைக்கட்டுப்பாடு, விபச்சாரம் என எல்லா விதிகளும் ஆண்களுக்கும் உண்டு. திருமணத்தில் ஆண்களுக்கு இருக்கும் உரிமை, பெண்களுக்கும் இருக்கின்றது. பெண்கள், அவர்களுக்கு பொருத்தமான ஆணை / விரும்பும் ஆணை மணக்கவேண்டும் என்றே இஸ்லாம் கூறுகின்றது.

தனக்கு விருப்பமில்லாத ஒருவரை தன்னுடய தந்தை திருமணம் செய்துவைத்துவிட்டார் என்று நபிகளிடம் முறையிட்ட பெண்ணின் திருமண ஒப்பந்தத்தை ரத்துசெய்யக் கூறிய ஹதீஸ் (வரலாறு) தெரியாதா?. ‘கணவர்களுக்கு பெண்கள் மீது உரிமை இருப்பது போல பெண்களுக்கு அவர்களின் மீதும் உரிமை உண்டு (குரான் 2:228)’ என்பதை படிக்கவில்லையா?. திரும்ப, திரும்ப பெண்களின் ஒழுக்கம், கற்பு, கண்ணியம் பற்றிமட்டும்  பேசுவதாலேயே இஸ்லாம் பெண்களுக்கு எதிரானது என்ற தோற்றம் உண்டாகிறது.  

அந்த பெண் நடிகர் சூர்யாவோ, சிவகார்த்திகேயனோ தனக்கு கணவனாக வரவேண்டும் என்று கூறவில்லை, சூர்யா மாதிரி ஹேண்ட்சம்மாக, சி.கார்த்திகேயன் மாதிரி ஹீயுமரான, யாஸிர் மாதிரி ஸ்மார்ட்டான (ஒரு விளம்பரம்....) ஒரு கணவன் வேண்டும் என்றுதான் கேட்கிறாள். இதில் எந்த இடத்தில் அவள் இஸ்லாத்திற்கு மாறாக நடந்துகொண்டாள் என்பது புரியவில்லை.  அந்த பெண்களுக்கு எதிராக, அந்த இமாமின் சொற்பொழிவு வீடியோவை பேஸ்புக்கில் ஷேர் செய்த அத்தனை ஆண்களும் ‘அனுஷ்கா, ஹன்சிகா, நயந்தாரா.....’ மாதிரி பெண்தான் வேண்டும் என்று வீட்டில் மல்லுக்கு நின்றவர்கள்தான்.

சுருட்ட முடி, அடர்ந்த கண் இமை, சராசரி அளவை விட கொஞ்சம் பெரிய கண் (பூனைக் கண் என்றால் கூடுதல் நலம்). எடுப்பான மூக்கு, வட்டமான முகம், என்னை விட இரண்டு இஞ்ச் கம்மியான உயரம் என்று பெண்பார்க்கும் போது என்னுடய எதிர்பார்ப்பைச் சொன்னேன். அப்படி எல்லா தகுதியுமுள்ள பெண்கள் அனைவரும் ‘எடுத்து முடியுற அளவுக்கு முடி இல்லையென்றாலும் ஏத்தி சீவுற அளவுக்காவது மாப்பிள்ளைக்கு முடி இருக்கனும்’ என்று சொல்லி அசிங்கப்படுத்தியபோதுதான் தக்காளிச் சட்டினிக்கும், ரத்தத்திற்க்குமான வித்தியாசமே எனக்கு புரிந்தது.

--------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், அக்டோபர் 06, 2015

ஹிந்தி சிக்காவ்.

என்னோட சேர்த்து ரூமில் மொத்தம் மூன்று பேர். ஒருவன் உத்திர பிரதேஷ், மற்றொருவன் பீகார். அது ஏன் என்று தெரியவில்லை, எல்லா பீகாரிகளும் தங்களை பீகாரி என்று சொல்லிக்கொள்வதற்கு விருப்பப்படுவதில்லை. நான் ரூமில் சேர்ந்த புதிதில் அந்த பீகாரி தன்னை, மும்பை என்றே அறிமுகப்படுத்திக்கொண்டான். உண்மையை எத்தனை நாள்த்தான் மறைக்கமுடியும். நாங்கள் இருப்பது மூன்று படுக்கையறைகள் கொண்ட ஒரு பிளாட், அதை ஒரு மலையாளி மொத்தமாக வாடகைக்கு எடுத்து, பேச்சிலர்களுக்கு கட்டிலுக்கு இவ்வளவு என்று வாடகைக்கு விட்டுக்கொண்டிருக்கின்றார். கிச்சனிலும் இரண்டு கட்டிலைப் போட்டு அதிலும் வருமானம் செய்துகொண்டிருந்ததால், அந்த பிளாட்டில் வசிப்பவர்களுக்கு சாப்பாடு ஹோட்டலில்தான்.

எங்களுடய ரூமில் பால்கனி இருப்பதால், அந்த இரண்டு ஹிந்திவாலாக்களும் அங்கு கரண்ட் அடுப்பு வைத்து சமைத்து சாப்பிடுவார்கள். இருவரும் (அவர்களும்) முஸ்லீம்கள் என்றாலும் மெஸ்ஸில் எப்போதும் வெஜ்டேரியனாகவே இருக்கும். கேட்கும்போதெல்லாம், உருளைக்கிழங்கு சப்ஜி, வெஜிடபுள் குருமா, பீன்ஸ் கிரேவி, பன்னீர் மசாலா, மட்டர் புலாவ், தால் பாலக்..... என வெஜ் அயிட்டங்களின் பெயர்தான் வருமேயொழிய, நான்வெஜ் அயிட்டங்களை கேள்விப்படுவது ரொம்ப அரிது. ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை பிரியாணி செய்வார்கள். செலவைக் குறைப்பதற்க்காக என்று சொல்லமுடியாது, ஏனென்றால் இங்கு வெஜ்க்கும் நான்வெஜ்க்கும் பெரிய விலை வித்தியாசம் இல்லை.

ஒரு நாள் நான் கேட்டேவிட்டேன் ‘’முஸ்லீமாக இருந்துகொண்டு எப்படி வெஜ்ஜிடேரியனா சாப்பிடுறீங்க? எதுவும் கொலஸ்ட்ரால் பிரட்சனையா?’’. அதற்கு பீகாரி ‘’இத நீ முஸ்லீம், ஹிந்து என்று பார்க்கக்கூடாது, வட இந்தியா, தென் இந்தியா என்ற கோணத்தில் பார்க்கவேண்டும், பொதுவாக வட இந்தியாவில் யாரும் அதிகமாக நான்வெஜ் சாப்பிடுவதில்லை, ஆனால் உங்க ஏரியவிலோ வாரத்துக்கு எட்டு நாள் கறியாத்தானடா திண்ணுறீங்க’’ என்று கழுவி ஊற்றினான். தமிழ்நாட்டுக்காரனை கொஞ்சம் கருணை அடிப்படையில் விட்டுவிட்டாலும், ஹைதராபாத்காரர்களை இந்த விசயத்தில் காரித் துப்பிக்கொண்டிருந்தான். ஓணானை எடுத்து வேட்டியில் விடுவதற்குப் பதில் ஜட்டிக்குள்ளேயே விட்டதுபோல் ஆகிவிட்டது.

பீகாரியும் நானும் அதிகமாக விவாதிப்போம், அவர் ஹிந்தியில் கேள்விகேட்பார் நான் ஆங்கிலத்தில் பதில் சொல்லுவேன். எப்போதாவது ஹிந்தியிலும் பேசிக்கொள்வோம். அரசியல், கம்யூனிசம், மதம், பெண்கள் இந்த தலைப்புகளில்தான் விவாதம் அதிகமாக இருக்கும். அரசியல், கம்யூனிசம், மதம் சம்பந்தமான விவாதங்களில் உ.பிக்காரன் பக்கத்திலேயே வருவதில்லை. பெண்களைப் பற்றி பேசும்போதும், மசாஜ் செண்டர்களைப் பற்றி பேசும்போது மட்டும், அவன் அணியில் உறுப்பினராகிக்கொள்வான். பீகாரி, பக்கா ஆன்மீகவாதி, ஐந்து வேளை தொழுகை, குரான் ஓதுவது, நன்மைக்காக சில நோன்புகள் நோற்பது என்று அனைத்தையும் கடைபிடிப்பவன். ஒரே ஒரு பெரிய குறை, இஸ்லாத்தைப் பற்றி அரைகுறை அறிவுடன், நான் சொல்லுறதுதான் இஸ்லாம் என்று கொல்லுவான். உ.பிக்காரனைப் பற்றி அதிகம் கூற ஒன்றுமில்லை ‘’கையப்புடுச்சி இழுத்தியா? என்ன கைய புடிச்சி இழுத்தியா?’’ ரகம்.

ஒருநாள் விவாதம் ஹிந்தி மொழிபற்றியதாக இருந்தது. அதைப்பற்றி ஹிந்தியில் அவர்கள் இருவருக்குள்ளாக பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லா மாநிலங்களிலும் ஹிந்தியை ஏற்றுக்கொள்ளும் போது, தமிழ்நாட்டுக்காரர்கள் மட்டும்தான் முரண்டுபிடிப்பதாக அவர்களின் பேச்சு சென்றது. அதில் என்னுடய அபிப்பிராயத்தை அவர்கள் கேட்கவில்லை, அதில் நானும் தலையிட விருப்பமில்லை. ஏனென்றால் தமிழனுக்கே ஹிந்தி எதிர்ப்பிற்கும், ஹிந்தி திணிப்பிற்கும் இன்னும் வித்தியாசம் விளங்கவில்லை, இதில் ஹிந்திக்காரனிடம் எதை விளக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு சும்மா இருந்தேன். ஒரு கட்டத்தில், நான் சும்மா இருந்ததால் அவர்கள் சொல்லுவது எல்லாம் சரி என்ற போக்கில் பேசிக்கொண்டே இருந்தார்கள். இதற்கு மேல் சும்மா இருந்தால் ஆகாது, பொங்கி பொங்கல் வைக்கவேண்டியதுதான் என்று முடிவெடுத்தேன்.

முதலில், ‘’தமிழ்நாட்டில் ஹிந்தி படிப்பதற்கு எங்கும் தடையில்லை, கிட்டத்தட்ட எல்லா மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் ஹிந்தி விருப்ப பாடமாக உள்ளது. உங்களுக்கு விருப்பம் இருப்பின் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தடையுமில்லை’’ என்பதை விளக்கினேன். பின்பு ‘’தமிழ்நாட்டு போராட்டம்/எதிர்ப்பு என்பது ஹிந்தியை முதல் மொழியாக திணித்து தமிழை இரண்டாம்தர மொழியாக மாற்றும் மத்திய அரசின் கொள்கைக்குத்தான்’’ என்பதையும் விளக்கினேன் (இதை தமிழில் தமிழனுக்கு சொன்னாலே புரியாது, பின்பு எப்படி? ஆங்கிலத்தில் ஹிந்திக்கார விளக்கெண்ணெய்க்கு விளங்கப்போகிறது?). ‘’அதிலென்ன தப்பு?’’ என்று பீகாரி கேட்டான்.

‘’அத்தையை அம்மான்னு கூப்பிடுறது உங்களுக்கு வேணும்னா சரி என்று தோன்றலாம், ஆனா தமிழ்நாட்டுக்காரனுக்கு யாரை அம்மான்னு கூப்பிடனும்?, யாரை அத்தைன்னு கூப்பிடனும்னு? தெரியும்’’ என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன் (நல்லவேளை அவனுக்கு அ.தி.மு.க்காரனின் ‘’அம்மா’’ பற்றி தெரிந்திருக்கவில்லை). நான் இந்த விவாதத்தை ‘’புலி’’ பட ஆக்சன் காட்சிகள் போல் பேண்டசியாகத்தான் கொண்டுசெல்ல முயன்றேன், ஆனால் அது ‘’பாகுபலி’’ போர்க்காட்சிகள் போல் மாறிப்போனது. ‘’இந்தியர்கள் அனைவரும் ஒரே மொழியை கொண்டிருந்தால் நாம் முன்னேறலாம்’’ என்பது உ.பிக்காரன் வாதம்.

‘’பாக்கிஸ்தானில் அனைவருக்கும் உருது மொழிதான், அவர்கள் எந்த விசயத்தில் நம்மைவிட மேலோங்கி இருக்கிறார்கள்?, ஒரே மொழியைக் கொண்ட பல நாடுகள் பஞ்சத்தில் இருக்கத்தான் செய்கிறது? அறிவுக்கும் வளர்ச்சிக்கும்தான் தொடர்பேயொழிய, மொழிக்கும் வளர்ச்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.’’ என்று நான் வாதிட்டாலும், ஒரே மொழியின் கீழ் இந்தியர்கள் வருவது நல்லது என்றே இருவரின் வாதம் இருந்தது.

‘’இந்தியர் அனைவருக்கும் ஒரே மொழி என்று நீங்கள் விரும்பும் பட்சத்தில், தமிழர்கள் குறுக்கே நிற்கவில்லை. ஆகையால் அனைத்து இந்தியர்களும் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள். இந்தியாவை தமிழால் இணைப்போம்’’ என்று கூறியவுடன் ‘’நாங்க ஏன் தமிழ் கற்றுக்கொள்ளவேண்டும்? நீங்கள் ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள், ஏனென்றால் இந்தியாவில் 80% பேருக்கு ஹிந்தி தெரியும்’’ என்று பதறிப்போய் பதிலுரைத்தான் பீகாரி.

‘’என்னோட மொழிய கத்துக்கமுடியாது சொல்லுற உன்னோட ஹிந்திய மட்டும் நான் ஏன் கத்துக்கனும்?, உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம், பொதுமொழியாக சைனிஷ் கொண்டுவா, நீயும் படி, நானும் படிக்கிறேன், ஆனாலும் அது என் தாய்மொழிக்க்கு அடித்தபடியாகத்தான் இருக்கும்’’ என்று என்னுடய வாதம் நீண்டுகொண்டே சென்றது.

‘’அப்படியென்றால், உன்னைப் பொருத்தவரை தாய் மொழிதான் முக்கியம், மற்றவையெல்லாம் அதற்க்கு அப்புறம்தான் என்கிறாயா? அப்படி என்றால் குரான் அருளப்பெற்ற அரபி மொழி சிறந்ததா? தமிழ் மொழி சிறந்ததா?’’ என்று கேள்விகேட்டான் பீகாரி. ‘’கண்டிப்பாக குரான் அருளப்பட்ட மொழி என்பதால் அரபி மொழிக்கு தனிச் சிறப்பு இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக அது என் தாய் மொழி தமிழுக்கு அடுத்துத்தான்’’ என்றேன்.

‘’நீ ஒரு காஃபிர், இறை மறுப்பாளன், முஸ்லீமே அல்ல, முனாபிக், அல்லாஹ்வால் அருளப்பெற்ற குரான் மொழி அரபியை விட எப்படி மற்ற மொழி சிறந்தது?’’ என்று கூறி என்னிடம் கோபம்கொண்டான். ‘’முஹம்மது நபி அரபு நாட்டில் வாழ்ந்ததால் அவருக்கு இறைவைன் குரானை அவரது தாய் மொழி அரபியில் அருளினான், இதே அவர் மாஸ்கோவில் வாழ்ந்திருந்தால் ரஷ்யனில் குரான் வந்திருக்கும் அவ்வளவுதான். மேலும் குரானில் எந்த இடத்திலும் அரபி மொழிதான் சிறந்தது என்று இல்லை. முஹம்மது நபியின் இறுதிப் பேருரையில் கூட ‘’இஸ்லாத்தில், அரபிமொழி பேசுகின்ற எந்த ஒருவரும், அரபிமொழி பேசாத மற்றவருக்கு உயர்ந்தனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை’’ என்றே கூறினார். அரபியோ, அரபியரோ மற்றவரை விடச் சிறந்தவர் என்றால் முஹம்மது நபி ஏன் அவ்வாறு கூறவேண்டும்?, ஆகையால் நபி கூறாத ஒன்றை கூறுவதால், நீ தான் முனாபிக், நீ தான் காபிர்......’’ என்று பதிலுக்கு நானும் கோபம்கொண்டேன்.

ஆனாலும் அவன் கேட்பதாக இல்லை, கடைசிவரை ‘’ஹிந்தி சீக்கிரம் சிக்காவ், மெரினா பீச்சில் உக்கார்ந்து பானி பூரி விக்காவ்’’ என்றே சொல்லிக்கொண்டிருந்தான்.


-----------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

திங்கள், அக்டோபர் 05, 2015

டு மதுரை

ஞாயிற்றுக் கிழமை செல்லவேண்டிய மதுரை பயணம், திங்கள் கிழமைக்கு தள்ளிப்போனது. ஒருவார விடுமுறையில், ஒருநாள் மதுரைக்கு என்று அபுதாபியில் இருந்து புறப்படும்போதே முடிவானதுதான். ஒரு நாள் தள்ளிப்போனது கூட நல்லதற்க்குத்தான் என்று, பின்பு தெரிந்துகொண்டேன். எங்கள் ஊரில் இருந்து மதுரைக்கு 4 மணி நேர பஸ் பயணம். மணிக்கணக்காக பஸ்ஸில் பயணித்து ஆறு வருடங்களுக்கு மேல் இருக்கும், ரயிலில் போக சிலர் ஆலோசனைகள் வழங்கினாலும், பஸ்ஸில் பயணிப்பதையே நான் விரும்பினேன்.

தமிழ்நாட்டு பஸ்ஸிற்கும், அபுதாபி டு திருவனந்தபுரம் இந்தியன் எக்ஸ்பிரஸிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. சொல்லப்போனால்,  இ.எ விட பஸ்ஸில் குலுக்கல் கொஞ்சம் கம்மிதான். நடுவானில், நடுக்கடலில் இ.எக்ஸ்பிரஸ் ஒரு குலுக்கு குலுக்கும் போது பயணிகள் கொடுக்கும் ‘’என்டே ஏசுவே ரச்சிக்கனே....’’ ‘’எண்டே குருவாயூரப்பா காக்கனே....’’ ‘’படச்சோனே பாதுகாக்கனே...’’ என்ற சேட்டன்களின் சப்தத்தில்தான் கேப்டனே தூக்கத்தில் இருந்து எழுந்திருப்பார்.

பயணம் ஒரு நாள் தள்ளிப்போனது நல்லதற்குத்தான் என்று சொன்னதன் காரணத்தை சொல்லவில்லையே. அது திங்கள் கிழமை அதிகாலை 5 மணி, வாரவிடுமுறைக்கு வந்து சென்ற காலேஜ் பெண்கள், அந்த காலை நேரத்திலும் குளித்து, அளவான மேக்கப், வாடாத மல்லிகையோடு மதுரை பஸ்ஸிற்கு காத்திருந்தார்கள். காலம்தான் எவ்வளவு மாறிப்போனது, நான் காலேஜ் படிக்கும் போது அதிகாலையில் எழுந்து பஸ் ஸ்டாண்ட் சென்றால், நாய் புடிக்கிறவன் மாதிரி நான் நிற்க, பன்னி மேய்க்கிறவன் போல் பக்கத்தில் ஒருத்தன் நிற்பான், எருமை மேய்க்கிறவன் போல் எதிர்தால்போல் மற்றொருவன் நிற்பான்.

‘’சார், நீங்க மதுரைக்குத்தானே போறீங்க, இந்த பொண்ணுங்கள பாத்துங்கங்க’’ என்று அங்கு நின்ற ஐந்து பெண்களின், ஏதாவது ஒரு அப்பனாவது சொல்லுவான், அதையே மூலதனமாகக் கொண்டு, மதுரை வரை கடலை பயிர்செய்துவிடலாம் என்று நானும் சுற்றி சுற்றி வந்தேன். ஒன்னும் நடக்கல. பஸ் வந்தது, நான் பின்புறம் ஏறுவதை கவனித்து. ஐந்து பெண்களையும் முன்புறமாக ஏற்றிவிட்டார்கள் பெற்றவர்கள். அப்பன் பேச்சைக் கேட்டதால், ஐந்து பெண்களும் நின்று கொண்டே வந்தார்கள், எனக்கோ ஜன்னலோர சீட்டு. அதோடு இளையராஜாவின் பாடல்கள் வேறு, கேட்கவேண்டுமா?. கனவுலகுக்கு அந்த ஐந்து பெண்களும் வெள்ளைக் கவுனில் வந்து, என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தார்கள்.

நான்கு பாடல்கள் முடிந்த நிலையில், முகத்தில் மழைத்துளி தூற, கனவில் கன்னிகளுடலான குஜாலை நிறுத்தி, மழையை ரசிக்க கண்விழித்தபோது அறிந்தேன், முகத்தில் விழுந்தது மழைத்துளி அல்ல. மூன்று சீட்டிற்க்கு முன்பாக இருந்தவன் காரிக் காரி துப்பிக்கொண்டிருந்தான். காற்றில் பறந்து வந்து என் முகம் முழுக்க வெள்ளாமை பண்ணியது. படிப்பறிவு இல்லாதவனாக இருக்க வேண்டும் அல்லது ஆறாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை உதறிய உதவாக்கரையாக இருக்கவேண்டும். ஏழாவது படித்திருந்தால் காற்றின் எதிர் விசை பற்றி அறிவியலில் படித்திருப்பானே!!!. துப்புவதை நிறுத்தவில்லை, பாவிப்பய.........., நாடிக்கமலத்தில் இருந்து இழுத்து இழுத்து துப்பிக்கொண்டிருந்தான். ‘’யோவ்...., அறிவிருக்கா, நீ துப்புறது என் மூஞ்சில வந்து விழுது’’ என்று சப்தம் போட்டவுடன். ‘’சாரி பாஸ்’’ என்று நிறுத்திக்கொண்டான்.

புளியங்கூடியில் அவன் துப்பியதை ராஜபாளையம் வரை துடைத்துக்கொண்டே வந்தேன். ராஜபாளையத்தில் பஸ் பத்து நிமிடம் நிற்க, பிசிலரி வாட்டர் வாங்கி முகத்தை கழுவினேன். வாஸ்த்துப்படி அந்த இடம் சரி இல்லாததால், எதிர் திசையில் அமர்ந்துகொண்டேன். ஒருவர் தினகரன் பேப்பருடன் ஏறினார். ‘’கொஞ்சம் படிச்சிட்டு கொடுக்கலாமா?’’ என்று கேட்டு வாங்கிக்கொண்டேன். ஒரு முறைப்புடன்தான் பேப்பரைக்கொடுத்தார். ‘’ரொம்ப திமிர் புடிச்சவனா இருப்பான் போல’’ என மனசுக்குள் நினைத்துக்கொண்டேன். கடன் வாங்கிய தினகரனினில் நாட்டிற்கும், வீட்டிற்கும், எதிர்கால சந்ததிகளின் நலனுக்கும் பயன்படக்கூடிய அனைத்து சினிமா செய்திகளையும் படித்துவிட்டு, திரும்ப கொடுக்கும் போது, சிவப்பு நிறத்தில் கட்டம்போட்ட சட்டையை கழட்டிவிட்டு போலிஸ் யூனிபார்மை மாட்டிக்கொண்டிருந்தார் அவர். ‘’பொம்பள படத்தை பாக்குறதுக்குத்தான் பேப்பரை வாங்கினியாக்கும்’’ என்று அவர் கூற முனையும் சமயத்தில், திருமங்கலம் – மதுரை பைபாஸில் நடந்த ஆக்ஸிடெண்டை பார்த்துவிட்டு ‘’ஓ!!!! ஏகாதிபத்திய அரசாங்கமே.................’’ என அரசுக்கு எதிராக முழங்கிக்கொண்டிருந்தார். பாவம், பஸ்ஸில் யாரும் அவரைக் கவனிக்கவில்லை.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பாக பார்த்த மதுரை முற்றிலும் மாறி இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் மதுரை அப்படியேதான் இருந்தது, புது ரோடுகளோ, புது பாலங்களோ எதுவும் இல்லை, மக்கள் நெருக்கடிதான் மிகவும் அதிகரித்திருந்தது. மதுரை போக்குவரத்து இடைஞ்சல்ளுக்கான மாற்றுத் தீர்வுதான் என்னுடய இஞ்சினியரிங் புராஜெட்டாக இருந்தது. மதுரை முக்கிய ரோடுகளில் நின்று கொண்டு, பீக் ஹவர்ஸில், மணிக்கு எத்தனை வாகனங்கள் வருகின்றன, போகின்றன என்பதை அறிந்து அதற்கான மாற்று பாதையை கண்டறிவது, என்றாக இருந்தது அந்த புராஜெக்ட்.

மதுரையில் இரண்டு இடங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒன்று, எப்போது மதுரை சென்றாலும் காணக் கிடைக்கும் தங்க ரீகல் தியேட்டர், இந்த முறையும் கண்ணில்பட்டது. இரண்டாவது, ஒவ்வொருமுறையும் பார்க்க விருப்பப்பட்டு பார்க்காமல் போன அம்மா மெஸ், இந்த முறையும் தவறிப்போய்விட்டது. தங்க ரீகல் தியேட்டரை நான் பார்க்க ஆசைப்பட்டதன் காரணத்தை கூற வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். அடுத்தது அம்மா மெஸ். மதுரையில் புராஜெட் செய்யும் போது, முக்கியமான ரோடுகளுக்கு அட்ரஸ் சொல்லும் எங்கள் புராஜெக்ட் கெய்டு ‘’அம்மா மெஸ்ஸில இருந்து 10A போகும்’’ ‘’பெரியார் பஸ்ஸ்டாண்டுக்கு, அம்மா மெஸ்ஸில் இருந்து 7 வது ஸ்டாப்’’ என அம்மா மெஸ்ஸை மையமாக வைத்துத்தான் வழி சொல்லுவார். அவ்வளவு புகழ்வாய்ந்த அந்த அம்மா மெஸ்ஸை இம்முறையும் பார்க்கமுடியாதது மிக துயரம்.

நண்பர்களுடன் அன்றய தினம் மிக வேகமாக சென்றது. ஊருக்கு திரும்பிச் செல்ல மாட்டுத்தாவணியில் பஸ்ஸுக்காக நின்றேன். அரசு பஸ்ஸை விட தனியார் பஸ் மிக வேகமாகச் செல்லும் என்று எண்ணி ஒரு தனியார் பஸ்ஸில் ஏறி மோசம் போனேன். ஷேர் ஆட்டோவை விட கேவலம், கை நீட்டினால் பஸ்ஸை நிறுத்தி ஆள் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். பஸ் காற்றுவாங்கிக் கொண்டுதான் இருந்தது. மூன்று சீட்டிற்கு முன்பாக ஆள் இல்லாதவரை, ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்திருந்தேன். அந்த சீட்டிற்கு ஆள் வர, நான் என் இருப்பை, சீட்டின் ஓரத்திற்க்கு நகற்றிக்கொண்டேன்.

ஒரு ஸ்டாப்பில், முழு போதையில் ஒருவர் ஏறினார். அவ்வளவு சீட் காலி இருந்தும், என் அருகில் வந்து அமர்ந்தார். ‘’குட் மார்னிங்க் பிரதர்’’ என்ற முகமன் வேறு. நானும் ‘’குட் மார்னிங்க்’’ என்றேன். ஆனால் அப்போதே தெரிந்துவிட்டது இது ஒரு ‘’வெரி பேட் ஈவினிங்க்’’ என்று. ‘’தம்பி, கொஞ்சம் டயர்டாக இருக்குது, திருச்சி வந்தவுடன் என்னை எழுப்பிடுங்க’’ என்று மல்லாக்க சாய்ந்துவிட்டார். ‘’என்னது திருச்சியா?, பிரதர் இது ராஜபாளையம் போகுற பஸ், நீங்க, தப்பா ஏறிட்டீங்க’’ என நான் சொன்னாலும் அவர் கேட்பதாக இல்லை. இல்லை, கேட்கக்கூடிய நிலையில் இல்லை.

கண்டெக்டரிடம் நிலமையைச் சொன்னேன். அவரோ ‘’யோவ், எங்கயா போகனும்?’’ என்று குடிமனிடம் கேட்டார். பதிலுக்கு கு.ம “அம்ரிக்கான்னா அங்க கொண்டுபோய் விட்டுறுவியா?, திருச்சிக்கு ஒன்னு கொடு’’ என்று எழுந்தெரிக்காமலே ஏழரையை கொடுத்துக்கொண்டிருந்தார். ‘’யார்டா இவன், கப்பித்தனமா காமெடி பண்ணிக்கிட்டு, திருச்சிக்கெல்லாம் போகாது, முதல்ல நீ பஸ்ஸவிட்டு இறங்கு’’ என கண்டெக்டர் சொன்னதுதான் தாமதம். ‘’டேய் என்ன இறக்கிருவியா? ஒம் பஸ்ஸு இனி ஓடிருமா?.........நான் யாருன்னு நினச்சே?’’ என சில மானே, தேனே போட்டு கண்டெக்டரை அர்ச்சனை செய்துகொண்டிருந்தார். ‘’நீ யாருன்னு இப்பத்தான் தெரியுது, வேட்டிய எடுத்து மூடு. இப்ப என்ன திருச்சிக்குத்தானே போகனும், 26 ரூபாய் கொடு’’ என வாங்கிக்கொண்டு டிக்கெட்டை கொடுத்தார்.

எனக்கு தலை சுற்றியது, ஒரே பஸ் எப்படி? திருச்சிக்கும், ராஜபாளையத்துக்கும்? என குழம்பிக்கொண்டிருந்தேன். சில மணி நேரத்திற்கு அப்புறம். ‘’யோவ், திருச்சி வந்தாச்சு, இறங்கு’’ என அந்த குடிமகனை, டி.கல்லுப்பட்டியில் இறக்கிவிட்டுவிட்டார் அந்த கண்டெக்டர்!!!!. நான் தூங்காமல், நடந்ததை கவனித்ததை, அந்த கண்டெக்டர் கண்டுவிட்டார்.

‘’என்ன தம்பி, நீங்களும் திருச்சிக்குத்தான் போகனுமா?’’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார் கண்டெக்டர்.

‘’இல்ல சார், ராஜபாளையத்துக்கே போய்க்கிறேன்’’ என்று உள்ளுக்குள் அழுதுக்கொண்டே சொன்னேன்.

மது வீட்டிற்க்கும், நாட்டிற்கும் மட்டுமல்லாது திருச்சி செல்வதற்க்கும் கேடு.


-------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.