புதன், நவம்பர் 18, 2015

ஆஹாங்...

ஒரு படத்தில் வடிவேலு பிக்பாக்கெட் அடிப்பதற்காக, பிரசாந்த் பாக்கெட்டில் கை வைப்பார். ஆனால், பர்ஸுக்கு பதிலாக ஒரு தேள் கையோடு வந்து கொட்டும். ‘கீழவிடு தல’ என கத்தும் அஸிஸ்டன்டிடம், ‘’நான் எங்கடா புடிச்சிருக்கேன்?, அதுதாண்டா என்ன புடிச்சிக்கிட்டு இருக்கு’’ என்று வடிவேல் சொல்லுவார். அதுபோல, நான் பேஸ்புக்க வச்சிருக்கேனா? இல்ல, பேஸ்புக் என்ன வச்சிருக்கா?ன்னு எனக்கே தெரியல. வார இதழில் வரும் நல்ல போஸ்டைப் பார்த்து, புலங்காகிதமடைந்து, பேஸ்புக்கில் அவனுடன் ஃபிரண்ட்ஸானால், போக்கிரி படம் பார்த்துவிட்டு ‘விஜய்னா’வுக்கு ஃபேன் ஆனது போலாகிவிட்டது. வேட்டைக்காரன், சுறா என அடுத்தடுத்த அத்தனை போஸ்ட்டுகளும் அம்புட்டு மொக்கை.

சில பேர், ஷேர் பண்ணுகிற சரித்திரம், வரலாறு எல்லாம் வண்ட வண்டயாக இருக்கிறது. இருநூறு, முன்னூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்கிபடித்த சரித்திர புருஷர்களின் வாழ்க்கையை, தரித்திரம் புடிச்சவனுங்க வேறுமாதிரி எழுதி ‘’ஆஹாங்’’ ரியாக்சனுக்கு உள்ளாக்குகிறார்கள். சிலர் எழுதும் வரலாற்று நிகழ்வுகள், ‘வரலாறு’ அஜித்தின் டான்ஸர் கெட்டப் போல, அதுவா? இதுவா? என குழப்பத்தை உண்டாக்கும். பேஸ்புக்கில் இருந்து வெளியேறிவிட பலமுறை முயற்சி செய்தும், ம்க்கும் எங்க?. -- அம்மா ஆட்சியில் கைது செய்து ஜாமினில் வெளியில் வருபவனை, கோர்ட்டில் வைத்தே அடுத்த கேஸில் அரஸ்ட் செய்வதுபோல, ஒரு முடிவேயில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

‘’தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்று நபி ஸல்லல்லாஹூ அலைவ ஸல்லம் கூறுகிறார் (அதாரம், @#$%)’’ என்ற போஸ்டைப் பார்த்துவிட்டு ‘ஒண்டர் புல்’ ‘ஃபெண்டாஸ்டிக்’ ‘ஆசம்’ என புகழ்ந்துகொண்டே ஷேர் செய்தவனைப் பார்த்தால், பொண்டாட்டி பேச்சைக் கேட்டு தனிக்குடுத்தனம் போனவன். ‘’யோக்கியன் மட்டும்தான் போஸ்ட் போடனும்னா, நீ மட்டும்தான் போடனும்’’ என்று நீங்கள் புலம்புவது புரிகிறது. ஆனால் நான், என் அளவிற்கு இல்லை என்றாலும் ஒரு 80% அளவிற்காவது என்னைப்போல எதிர்பார்ப்பது தவறா?.

‘தவறவிட்ட பாஸ்போர்ட் உரியவரிடம் கிடைக்க, அதிகமாக ஷேர் செய்யுங்கள்’ என்று அந்த பாஸ்போர்டை போட்டோ எடுத்து ஒரு கும்பகோணத்துக்காரர், பேஸ்புக்கில் போஸ்ட் செய்கிறார். யாருடைய பாஸ்போர்ட் என்று அட்ரஸ் பார்த்தால், அதுவும் ஒரு கும்பகோணத்துக்காரனுடயது. எடுத்தவன் விளம்பரத்துக்காக அதை ஸ்கேன் செய்து, பேஸ்புக்கில் அப்லோடு செய்வதற்கு இருபது நிமிஷமாகியிருக்கும், அதற்கு அவன் நடந்து போய் கொடுத்திருந்தால் பத்து நிமிஷம்தான் ஆகும். இந்த அநியாயத்தை தட்டி கேட்க ஆள் இல்லையா? என்றால். இதுதான் ‘’டிஜிடெல் இண்டியா’’ என்று கமெண்ட் போடுகிறார்கள். கருப்பா ஒரு பெண் படத்தைப் போட்டு ‘கருப்பா இருக்கும் எனக்கு லைக் கிடையாதா?’ என்று ஆயிரம் லைக் வாங்குகிறான். ஏண்டா? லைக்குக்கு டங்க தொங்கப்போட்டு டாக்கு மாதிரி திரியனும் என்று சொன்னால், லொல் லொல் என்று என்மீது விழுகிறார்கள்.

அக்கவுண்டை டி-ஆக்டிவ் பண்ணலாம் என்றால், சொல்லிவச்ச மாதிரியே, அந்த மாதத்தில்தான் என் பிறந்த நாளுக்கு வாழ்த்துச்சொன்ன, அந்த பத்துப்பேருடைய பிறந்த நாளும் வரும். சரி, அடுத்த மாதம் செய்யலாம் என்றால், ‘ஈத் முபாரக்’. அதுக்கு அடுத்த மாதம் ‘ஹேப்பி தீபாவளி’, ‘தல தீபாவளி’...... இப்படின்னா? எப்படி? நான் டி ஆக்டிவேட் பண்ணி, நான்  சந்தோசமா இருந்து, மத்தவங்களையும் சந்தோசமா வச்சிக்கிறது. பேஸ்புக்கில் ‘’புரட்சிப் போராட்டம்’’ நடத்தினால், நம்மை பொங்கள் வைத்துவிடுவார்கள்.

போனமுறை ஊருக்கு சென்றபோது, ‘பேஸ்புக்குன்னா என்னப்பா? அதுல ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிக்கொடேன்?’ என்று எங்கப்பா கேட்டபோது, கண் இரண்டும் சைடில் சொருகி மயக்கமாகிவிட்டேன்’.  நாக்கு வரண்டு ‘’பேஸ்....பேஸ்பு....பேஸ்புக்கா?, அதபத்தி யாரு சொன்னா?, உங்களுக்கு எப்படி தெரியும்?’’ என்று அப்பாவிடம் கேட்டேன். ‘’இல்லப்பா. பள்ளிவாசல்ல எல்லோரும் அதபத்தி பேசிக்கிட்டு இருப்பாங்க, அதுதான் கேட்டேன்’’ என்று பதில் வந்தது. அதுதானே!! ஊரு உருப்படாம போகனும்னா அத பள்ளிவாசல்ல வச்சித்தானே பேசணும். அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசில, அந்த  பிஞ்சு மனசுலயும் நஞ்ச விதச்சிட்டானுங்க பாவிங்க.  

பேஸ்புக்குல ஃபிரெண்டா இருக்குறவனுங்கதான் கடுப்பேத்துறானுங்க என்றால், பேஸ்புக்கும் அதனால் எவ்வளவு முடியுமோ ‘’சஜஸ்டட் வீடியோ’’ என்ற பெயரில் அவ்வளவு வெறுப்பேத்துகிறது. தலையில் முடிவளர வைக்கும் கருவி, மாற்று முடி ஆப்ரேஷன், முக சுருக்கத்தை நீக்கும் கிரீம்...... என வீடியோக்கள் திரும்ப திரும்ப வந்து வெறுப்பேற்றுகிறது. பேஸ்புக்கில் போட்டோக்களை அப்லோடு செய்தாலும் தலையில் தொப்பி போட்ட போட்டோவை மட்டும்தான் அப்லோடு செய்வேன். இவ்வளவு கவனமாக இருந்தும், பிறகு எப்படி கம்யூட்டர் ஜீக்கு நம்முடைய மொட்டைமாடி மார்பிள் தரையைப் பற்றி தெரியும்? என யோசித்து யோசித்து சுத்தி இருந்த கொஞ்ச முடியும் கொட்டிவிட்டது.

பிறந்த நாள் அன்று, கண்ணாடியில் முகத்தை கொஞ்சம் குளோசப்பில் பார்த்தபோதுதான், முகத்தில் ஏற்பட்ட சுருக்கத்தை கவனித்தேன். மறுநாள், பேஸ்புக்கை திறந்தால், வீடியோவில், ஒரு வயதானவரின் முக சுருக்கத்தில் ஒரு கிரீமை தடவி, ஃபூ, ஃபூ என ஊதியவுடன், முக சுருக்கம் ‘’ஹோகயா’’, ‘’இட்ஸ் கான்’’, போயே போச்சு’’. கண்ணாடியில் என் முக சுருக்கத்தை பார்த்தபோது சுருங்காத என் இதயம், பேஸ்புக் வீடியோவைப் பார்த்தவுடன் சுக்குநூறாகிப் போனது. விசயத்தை ஒரு நண்பனிடம் கூறி விளக்கம் கேட்டேன். அவன் ‘’டெலிபதி மாதிரி நம்மோட என்ன ஓட்டத்தை பே.புக் பிரதிபலிக்கும்’’ என்றான். அப்படியா? என ஆச்சிரியத்தில் அவன் கம்யூட்டரில் அவன் பேஸ்புக்கை பார்த்தேன். எனக்காவது சுருங்கிப்போன முகத்துக்கு கிரீம், அவனுக்கு..........(சொன்னால் கேவலம், அத விடுங்க). ‘’டெலிபதி மூலமாக நம்மை பற்றி பேஸ்புக் தெரிந்துகொண்டு, நமக்கு தேவையான வீடியோவை தருகிறது’’ என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படியென்றால், என் மனைவி ஊரில் இருப்பதும் பேஸ்புக்கிற்கு தெரிந்திருக்க வேண்டுமல்லவா?.

எங்கப்பா கேட்டது போலவே என் மனைவியும், பேஸ்புக்கைப் பற்றி கேட்டு ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்துதர வேண்டினாள். நான் எவ்வளவு சொல்லியும் கேட்பதாயில்லை. ‘’சரி, ‘பேஸ்புக்’ என ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் எழுதிகாட்டு, நான் உனக்கு பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணித்தருகிறேன்’’ என்று சொன்னேன். இரண்டு நாள் கழித்து ‘’வெட்டிப்பயலுங்க, முட்டாளுங்க, கேணப்பயலுங்க, ‘இன்னும் சில டாஷ் டாஷ்’ ங்கதான் பேஸ்புக் வச்சிருப்பாங்கலாமே, அப்படியா மச்சான்?’’ என்று கேட்டாள். இவ்வளவு கரெக்டா சொல்கிறாள் என்றால், ஏதோ டி ஆக்டிவ் செய்த பண்ணாடைதான் சொல்லியிருக்கவேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டு, ‘’ஆமா, தங்கம் ஒருத்தனை தவிற’’ என்று பதில் கூறினேன். அவள், அந்த ஒருத்தன் யார் என்று கேட்கவில்லை. இறைவன் அடுத்த பொய்யை விரும்பவில்லை போலும். காட் இஸ் கிரேட்.

அவளுடய மொபைல் பழுதடைந்ததால், என்னுடய மொபைலை கொடுத்துவிட்டு துபாய் வந்தேன். அதிலிருந்து பேஸ்புக் ஆப்பை டெலிட் செய்ய மறந்துவிட்டேன். தொழில் கற்றுக்கொள்ள அதை நோண்டிய போது ‘’A’’ என டைப் செய்து போஸ்ட் செய்துவிட்டாள். ஆபிஸில் வந்து கம்யூட்டரில் பேஸ்புக்கை ஓப்பன் செய்துபார்த்தால் ‘’A’’. வேக, வேகமாக அந்த போஸ்டை டெலிட் செய்துவிட்டு,  மனைவிக்கு போன் செய்து ‘அறிவிருக்கா?’ ‘புத்தியிருக்கா?’ என திட்டு திட்டு என திட்டினேன். அனைத்தையும் பொறுமையாக கேட்டுவிட்டு, சொன்னாள் ‘’அந்த போஸ்டுக்கு லைக் கொடுத்த அந்த எட்டுப் பேரு யாரு?


-----------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

6 கருத்துகள்:

  1. பேஸ்புக் அக்கவுன்ட் இல்லாம யாராச்சும் இருக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி யாரயாச்சும் சந்தோசமா இருக்க விட்டுறுவோமா என்ன?.

      நீக்கு
  2. பதில்கள்
    1. உங்களுக்கு பேஸ்புக்குல அக்கவுண்ட் இல்லையா?. அதுனாலத்தான் சிரிச்ச முகமா இருக்கீங்க.

      நீக்கு
  3. "A" போட்டாலும் லைக்கா?
    என்னைக்கு ரெஸ்ட் பண்ணி(ப் பார்த்து)ற வேண்டியதுதான்!!!

    ஆஹாங்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வேணும்னா B போட்டு பாருங்க. கொஞ்சம் அதிக லைக் கிடைக்கலாம்.

      நீக்கு