ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

அவன்.


நம் அனைவரின் மீதும் இறைவனின், சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
சிலரை நமக்கு உடனே பிடிக்கும், சிலரை போக, போக பிடிக்கும், அதே போல ஒரு சிலரை, அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கூட பிடிக்கவே பிடிக்காது. அதுக்கு, ஒருத்தன பிடிப்பதற்கு எப்படி காரணம் சொல்லமுடியாதோ அதேமாதிரித்தான் சில பேரை பிடிக்காததற்கும் காரணம் சொல்லமுடியாது, அப்படீன்னு சொல்லியெல்லாம் எஸ்கேப் ஆக நான் விரும்பல, அந்த காரணத்த இந்த பதிவின் இறுதியில் கண்டு பிடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இரங்கியுள்ளேன். எத்தன நாளைக்குத்தான் நாம, நமக்கு பிடித்த பயபுள்ளைங்கலைப் பற்றியே எழுதுவது, ஒரு வித்தியாசத்திற்காக, எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஒருவனைப் பற்றிய பதிவு இது.

“ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை என்ற வாக்கின்படி, நானும் பல முறை யோசனை செய்து பார்த்துவிட்டேன், என்னை நானே கேட்டும் பார்த்தேன், அப்படி என்ன அவன் நமக்கு செய்துவிட்டான் அவனை எனக்கு இந்த அளவிற்கு பிடிக்காமல் போனதற்கு?. அவனுடைய பேச்சு என் நண்பர் கூட்டத்தில் எழும் போதெல்லாம், எழுந்து விடத் தோனுவது ஏன்?. ஒரு பிடியும் கிடைக்கவில்லை.

கிட்டத்தட்ட அவன் மூலமாகத்தான் என்னுடைய கேரியர் ஆரம்பித்தது என்று கூட சொல்லலாம். ஒரே கம்பெனியில் வேலை செய்தோம், ஆனால் வேறு, வேறு திட்டங்களில் இருந்தோம். வேறு, வேறான வேலையும் கூட. அவன் இருந்த திட்டத்தில் இருந்த எனது மற்ற நண்பர்களைப் பார்க்கும் போது, இவனைப் பற்றிய செய்திகள் மேலோங்கும், காரணம் இவன் ஒரு வெட்டி பந்தா, வெள்ங்காத சீண் பார்ட்டி. தன்னை ஒரு பெரிய பண்ணையார் வீட்டுப் பையன் லெவலுக்கு இவன் விடும் கதைகளை என்னிடம் அவர்கள் கூறுவதுண்டு. ஆனாலும் நான், அவனை தெரிந்தவன் போல் காட்டிக்கொள்வதில்லை. மேலும் எனக்கு அவனைப் பற்றி தெரியுமேயொழிய அவனுடய குடும்பம் பண்ணையார் குடும்பமா? இல்ல பரதேசி குடும்பமா என்பது எனக்கு அறியாது.
இவன் விடும் ஸீன்களை கேட்டு நம்பிய சில பேர், வாயடைத்துப் போய் நின்றது கூட உண்டு, அதனை நேரில் கண்டு நான் ஆச்சர்யப்பட்டதுவும் உண்டு. அந்த கம்பெனியில சில பொண்ணுங்களும் வேலை செய்தார்கள், கேட்கவா வேணும், பச்சத்தண்ணியில பாயாசம் போடுறவன், பாக்கெட் பால் கெடச்சா சும்மாவா விடுவான், சும்மா, ஆத்து, ஆத்துன்னு அவன் குல பெருமைகளை எல்லாம் ஆத்திட்டான். அதுவும் சுமாரான பிகரா இருந்தாலும் பரவாயில்லை எல்லாம் அட்டு பிகருங்கன்னு மனசாட்சிய கொன்னுட்டு என்னால சொல்லமுடியாது, ஏன்னா கரெக்ட் பண்ணுர கியூவியல் அவன் முதல் வரிசையில் முதலில் நின்றாலும், நான் 4 வது லைனில் நின்றிருப்பேன். ஆனால், அவன் முதலில் நிற்பதற்கான தகுதி அவனிடத்தில் இருந்தது அதில் மட்டும் நான் அவனை குறை கூறப்போவதில்லை ஏனென்றால் அவன் உண்மையிலேயே கொஞ்சம் அழகு. அந்த மூலதனத்தினை பயன்படுத்திக்கொண்டு இலாபம் அடைந்ததாகக் கூட அதிகாரப்பூர்வ தகவல் உண்டு. அதையெல்லாம் கேட்கும் போது, “சரி அவனுக்கு பல் இருக்கு பக்கோடா சாப்பிடுகிறான் என்று என்னை நானே தேற்றிக்கொள்வேன்.

அவனை பார்த்தவுடனேயே பிடிக்காமல் போன எனக்கு, அவனின் இந்தமாதிரியான ஓவர் பில்டப்களும், ஸீன்களும் என்னை அவன் பக்கம் போகாமல், இருந்த இடைவெளியினை அதிகப்படுத்தியது. ஒருமுறை என் அப்பாவை அவன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட, அவன் என்னமோ தானே, அந்த கம்பெனியை தூக்கி நிறுத்துவதாகவும், என்னை நம்பியே அவன் இருக்கும் திட்டம் நடைபெருவதாகவும் அதற்கு காரணம் நான் சைட் இஞ்சினியராக இருப்பதால் தான், உங்கள் பையன் ஆபிஸினுள் வேலை செய்வதால் அத்தனைக்கு பெரியதாக சொல்லிக்கொள்ள ஒன்னுமில்லை என போகிற போக்கில் அவனால் முடிந்த அளவுக்கு அள்ளிப் போட்டுவிட்டு போக, அதன் விளைவு, அடுத்த அரை மணி நேரத்தில் தொலைபேசியில் தெரிந்தது. “உடனே உன் திட்டமேலாலரிடம் கேட்டு சைட்டுக்கு மாறிவிடு, ஆபிஸ் வேலை எல்லாம் வேணாம் என்று என் தகப்பனார் கொந்தளிக்க அவன் மேல் கொஞ்ச நாள் கொலைவெறியில இருந்தேன்.
கொஞ்ச காசை சுருட்டிக்கொண்டு, இதனை விட அதிக சம்பளம் கிடைத்தவுடன் அவன் கம்பெனிக்கு கம்பி நீட்டிவிட, அவனுடனான தொடர்பு எனக்கு அரிதானது. எப்போதாவது நேரில் காண்பதுண்டு, பார்த்தால் என் அருகில் வந்து பழைய கம்பெனியைப் பற்றி கேட்டு, அந்த மேலாளரிடம் நேற்றுதான் பேசினேன் என்று என்னிடமே அள்ளிவிடுவான். நானும் ஓ, அப்படியா என்று நழுவி விடுவேன். அடிக்கடி கம்பெனி மாறினால், கேரியருக்கு நல்லது இல்லை என எண்ணி அந்த கம்பெனியில் சுமார் 4 வருடங்கள் இருந்தேன். அதற்குள் அவன் 4 கம்பெனி மாறி என்னிலிருந்து ஒருபடி மேலோங்கியே இருந்தான்.
பிற்பாடாக அவனுடைய தொடர்பு முற்றிலுமாக நின்றாலும், மூன்றாவது நபர் மூலமாக அவனுடைய செய்திகளை அறிவதுண்டு. அவனுடய வேலை, வாழ்கைத் தரத்தினைப் பார்த்து நான் கொஞ்சம் பொறாமைப்பட்டதும் உண்டு. சில சமயங்களில் எதிர்காலத்தினை கணக்கில் வைத்து, நாம் அன்று செய்தது தவறு என்று அவனுடன் என்னை ஒப்பிட்டு நொந்ததுவும் உண்டு.

பிந்தய நாட்களில் என்னை அவனுடன் ஒப்பிட்டு பார்க்க்கும் பழக்கம் அதிகமாகிப் போனது. அதனால் அவனை முற்றிலும் ஒதுக்கவேண்டும், அல்லது ஒதுங்கிவிடவேண்டும் என்று எண்ணி அவனுக்கும் எனக்கும் உள்ள நடுத்தர நண்பர்களின் நட்பினைக்கூட குறைத்துக்கொண்டேன். விதி விட்டது யாரை?, நாம ஓடி போனாலும், சனியன் கால் டேக்ஸி பிடிச்சு நமக்கு முன்னால போய் நிற்கும், அது மாதிரி நானே வேண்டாம் என்று ஒதுங்கினாலும், அவனுடைய எல்லா அப்டேட்களும் என்னிடம் வந்து சேர்ந்து என்னை பாடாய் படுத்துகின்றது. கடந்தவாரமும் அதே போலத்தான் ஆகிவிட்டது, யாரோ ஒருத்தன், தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, என்னை நானும் அறிமுகப்படுத்திக்கொண்டேன். உடனே அவன் கேட்டான் “அப்படீன்னா, உங்களுக்கு _____________ அவனைத் தெரிந்திருக்குமே?.”........................................................................ நீண்ட அமைதிக்குப் பின்பு “ஆம் தெரியும், ஆனா ரொம்ப பழக்கமில்லை என்று கூறி இடத்தினை காலிசெய்தேன்.

ஏன் நாம் நம்மை இவனுடன் இப்படி ஒப்பிட்டு பார்கிறோம் என்று எனக்கே ரொம்ப அசிங்கமாகப்பட்டது. ஆனா ஒரு விசயம், அவனை அறிந்த எவனும் அவனை கெட்டவன் என்று சொல்லவில்லை. மனிதன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வான், ஏன் நீ என்ன யோக்கியமா, நீ அள்ளிவிடாதவனா?, பொண்ணுங்ககிட்ட இளியாதவனா? என்ற கேள்வியை நான் கேட்டுப்பார்த்தேன். பதில் “ச்சீ நாம இவ்வளவு மோசமா என்று தோனியது. ஒப்பிட்டு பார்பதினை கொஞ்சம், கொஞ்சமாக நான் நிறுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றேன், எப்போது என்றால், கீழ்காணுவதை கண்டபோதிலிருந்து.

--------------------------------------------------------------------------யாஸிர்.

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

விழிநீர் வழிய வீதியில் நாம்.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதான்மும் உண்டாவுவதாக.
எனக்கு தெரிந்த ஒரு நண்பரை வாரம், வாரம் காணச்செல்லும் போது, அவர் நாட்டில் நடக்கும் விசயங்களை சட்டசபை நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிந்துகொண்டிருப்பார் ஜெயா டி.வியின் மூலமாக. “ஜென்ம சாபம் கொண்டேனும் ஜெயா டி.வி காணேன்என்று வீரவசனம் பேசிய என்னை “அம்மா என்ன சொல்லுறாங்க பாத்திங்களான்னு, சும்மா, சும்மா சீண்டுவார்.

நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்தே மலர்தலை உலகம்:
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே”--------புறநானுறு

நாட்டிற்கு நெல்லும், நீரும் முக்கியமில்லை, அந்த நாட்டை ஆளும் அரசனே முக்கியம். இதனை அவன் உணர்ந்து மக்களுக்கு வேண்டியதை செவ்வனே செய்திடல் வேண்டும் என்பது அதன் பொருள். அப்படியா நடக்கின்றது இங்கு. நல்ல வேலை எழுதியன் இறந்துவிட்டான் இல்லன்னா, நிற்க இடமில்லாதவன் பெயரில், நில அபகரிப்பு புகாரில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பான்.

இன்னும் என்னமோ இந்த அம்மையாருக்கு, எம்.ஜி.ஆருடன் நடிப்பதாகவே நினைப்பு, சட்டசபையில், எவனோ எழுதிக் கொடுத்த காகிதத்தினை படிக்க, எதற்கு இவ்வளவு ஒப்பனைகள். ரெண்டு பட்டி, பர்ஸ்ட் கோர்ட், செகண்ட் கோர்டு என ஒரு வீட்டுக்கு பெயிண்ட் அடிச்சமாதிரி, முகத்துக்கும், கழுத்துக்கும் அத்தனை கலர் வித்தியாசம்.

தப்பித்தவறி கூட தி.மு.க, எம்.எல்.ஏ தெரிந்துவிட கூடாத அளவிற்கு ஒரு நேர்த்தியான ஒளிப்பதிவு / எடிட்டிங். சும்மா, சும்மா, மைனாரிட்டி தி.மு.க அரசு, கி.மு 4 ம் நூற்றாண்டில் நடந்த சம்பவம், மதுரை ஆதினம் சொன்னார்... இப்படி நாட்டிற்கு மிகவும் தேவையானவை மட்டும் விவாதிக்கப்படும் அதி புத்திசாலிகள் நிறைந்த சபையைக் காண, கண்கோடி வேண்டும். ஒரு சாதாரண மக்கள் பிரச்சனையை தீர்த்ததற்காக, மாநாட்டு போட்டு பேசுறது மாதிரியான சஞ்சாலப்புகள்.

கலைஞர், தன்னைப் புகழ்பாட வேண்டும் என்று கூறினாலும், அது கலைஞர் அரங்கத்தில் மட்டுமே அறங்கேறியது, இப்போது சட்டசபையில் அமோகமாக அமர்களப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இரண்டு நிமிடத்தில், கேட்க வேண்டிய ஒரு கேள்வியை, 10 நிமிடத்திற்கு பெத்த தாய கூட அம்மான்னு கூப்பிடாத பல பக்கிகள், அம்மா, அம்மாவென புகழ்பாடுகின்றார்கள். எங்கே போகுது நம்ம நாடு.
மக்கள் பிரச்சனை எதையாவது பேசுகிறார்களா என்றாள், எதுவுமில்லை. ஒரு மணி நேர அந்த நிகழ்சியில் ஒரு லட்டம் “தங்க தாரகை, ஒரு லட்சம் “தாயுள்ளம் கொண்ட தலைவி, ஒரு லட்சம் “புரட்சித் தலைவி, .... இப்படி லட்ச லட்சமான துதிகளை அள்ளிவிட்டு கோடிளை கைப்பற்றி, லட்சியங்களை கோட்டையிலேயே கோட்டை விட்டுவிடுகிறார்கள். எண்பது வயதுக்காரனுக்கும் இந்த அறுபத்தந்து வயதுக்காரர் தான் அம்மாவாம், எங்கு காணமுடியும் இந்த அறிவியல் அதிசயத்தை.
தமிழ் புத்தாண்டு, சித்திரையிலா, தையிலா என்ற பட்டிமன்றம் நடுவர் இல்லாமலே நடந்து கொண்டிருக்கின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், இவர்களது சண்டையில், (தலை)வலிதான் பிறக்கிறது. ஒரு பேயை விரட்ட ஆசைப்பட்டு, ஒரு பிசாசு நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது வேதனை. விதியின் வழியில் தான் மதி செல்லும் என்று கூறிக்கொண்டு இருந்திடத்தான் வேண்டுமோ?

இனிமேல், ஜெயலலிதா இருக்கும் வரை (ஆட்சியில்) தமிழ்நாட்டிற்கு போகவே கூடாதுங்குற நிலைமைக்கு வந்துவிட்டேன், இந்த பாழாய்போன பவர்கட்டினால். எங்க ஊருக்கு பரவாயில்லை, பக்கத்து ஊர் சங்கரன் கோவிலில் ரொம்ப அனியாயம். இடைத்தேர்தலை முன்னிட்டு, 24 மணி நேர பவர் சப்ளைக்கு சேத்து மாத்தாக இப்ப 12 மணி நேர பவர்கட்டாம்.

எங்கும் ஆடம்பரம், எதிலும் ஆடம்பரம் என்று எங்கு திரும்பினாலும் ஒரே அலப்பரையாகத்தான் இருக்கின்றது. 5 லட்சம் பெருமானமுள்ள உதவிதொகை கொடுக்கவரும் முதல்வருக்கு 15 லட்சம் ரூபாய் செலவில் பேனர்களும், ஃபிளக்ஸ்களும் தெருவெங்கும் தொங்குகின்றன. இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு சொத்து, அந்த கட்சிக்காரன் காசா?. இல்லை ஆட்சியினால் லாபம் கொழுத்த பணக்கார முதலாலிகளின் காசா?. வரி செலுத்துபவன் வறுமையின் பக்கம். செலவழிப்பவன் சுகங்களின் பக்கம். விழிநீர் வழிய வீதியின் ஓரத்தில் விழுந்து கிடக்கின்றோம் நாம்.
காமராஜர் ஆட்சிகாலத்தில், அவருடைய நண்பர் எஸ்.டி சுந்தரம், காமராஜரிடம் சொன்னாராம், நீங்கள் எவ்வளவோ சிறப்பான செயல்திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை வெற்றிகரமாக செய்துகொண்டிருக்கின்றீர்கள், பல பேருக்கு கல்வி அறிவு கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் இதை எல்லாம் ஒரு வீடியோ படமாக எடுத்து வைத்தால் அதனை மக்களுக்கு எளிதாக கொண்டுபோய் சேர்த்துவிடலாம் என்று சொல்ல, அதற்கு காமராஜர் எவ்வளவு செலவாகும் என கேட்க, 3 லட்சம் ஆகும் என்று நண்பர் சொல்வதைக்கேட்டுவிட்டு, காமராஜர் சொன்னாராம் அந்த 3 லட்சத்தை வைத்து நான் இன்னும் 10 பள்ளிக்கூடம் திறந்துவிடுவேனே என்று, பின்பு நண்பரிடம் நடையை கட்டுமாறு கூறிவிட்ட அந்த மகான்களைப் போன்ற அரசியல்வாதி இனி எப்போது நமக்கு கிடைப்பார்கள்.

தலைமை கொஞ்சம் தகிடதத்தோமாக இருக்கும் போது, அமைச்சர்கள் அதன் அச்சாரமாக இருக்க வேண்டும், நேரு பிரதமராக இருந்த போது, அவர் அமைச்சரவையில் இருந்த அவருடைய மருமகனே ஒரு ஊழல் புகாரை நிரூபித்து, சம்பந்தப்பட்டவர்களை, பதவி நீக்கம் செய்யவைத்தார். அப்படியா இருக்கின்றது இப்போது. வாயைத்திறக்காமல் இருக்கும் போதே, வளர்ப்பு பையன் மேல், கஞ்சா கேஸ் விழுக்கின்றது, இதைக்காணும் யாராவது தலைமைக்கு எதிராக பேசிவிடமுடியுமா என்ன?. ஒரு நல்ல அமைச்சர் எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?

ஒரு நாள், அரசனுடன் முல்லாவும் காட்டில் வேட்டையாடிவிட்டு அரண்மனை நோக்கிவந்து கொண்டிருக்கையில், அரசன் முல்லாவிடம் கேட்டார் “முல்லாவே என் ஆட்சி பற்றி மக்கள் என்ன நினைக்கின்றார்கள். முல்லா முன்னும், பின்னும் நோட்டமிட்டபோது ஒரு கழுதையினைக் கண்டார். சுமக்கமுடியாத அளவிற்கு சுமைகளுடன், வாயில் ஒரு பூட்டு போடப்பட்டிருந்தது, அதனுடன் ஒரு தடியுடன் ஒரு வணிகன் வந்தான். அரசே அந்த கழுதையை கவனியுங்கள் என்று கூற அரசனுக்கு ஒன்றும் புலப்படவில்லை. பின்பு முல்லா சொன்னார்

“அந்த கழுதைக்கும், நம் குடிமக்களுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை

-------------------------------------------------------------------------யாஸிர்.

திங்கள், ஏப்ரல் 16, 2012

அழகிய கன்னிகளின் அற்புத தீவு.....


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
கல்யாண தேதி குறித்தவுடன், எல்லோருக்கும் தோன்றுவது போல், எனக்கும் எனது மனைவியுடன் எங்க எங்கயெல்லாம் போகனுமோ, அந்த இடங்களை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டேன். இதுல முதலாவது, மனைவியுடன் பார்க்கும் முதல் படம். கல்யாணத்துக்கு ஒரு ரெண்டு மாசத்திற்கு முன்னாடியிருந்தே, நம்ம கல்யாணத்த ஒட்டி என்னென்ன படங்கள் வருகின்றன, யாரு யாரு நடிச்சிருக்கா, இயக்குனர் யாரு, காமெடி படமா இல்ல ஆக்சன் படமா?, ஒரே நேரத்துல 4 படம் ரிலீஸ் ஆனா, அதில் எந்த படத்துக்கு கூட்டிக்கொண்டு போவது என்ற பலவிதமான சிந்தனையில் மனசு ஆழ்ந்திருந்தது. எனக்கு அஜித்குமார் பிடிக்கும் என்பதாலும், பில்லா 2, முதலில் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டதாலும், சரி தல படமா, தல படத்தையே பார்த்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். கல்யாண தேதி நெருங்க, நெருங்க படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போகி, ஆசை நிராசையாகிவிட்டது.

இது சரிப்படாது என்று எண்ணி, என் மனைவியிடமே “ உனக்கு எந்த படத்துக்கு போகனும்னு சொல்லு, நாம அந்த படத்துக்கே போகலாம் என்று சொன்னேன். அவள் உடனே “நண்பன் என்றாள், எனக்கு நீ “எதிரி ஆகிடுவ, அந்த படத்தவிட்டு விட்டு வேறு ஏதாவது படம் சொல்லுன்னு நான் விஜயகாந்த் ஸ்டைல்ல சொல்ல, பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டப்படாமலே கூட்டம் கலைந்தது. ஆனாலும் விடலியே, மறுநாள், மறுபடியும் ஆரம்பமானது
சொல்லுமா எந்தப் படத்துக்கு போகலாம்?

ஒ.கே, ஒ.கே எப்ப ரிலீஸ்? என்று எதிர் கேள்வி கேட்டாள் அவள்

தெரியலியே, அடுத்தமாசம் தான் ரிலீஸ் ஆகுமுன்னு நினைக்கிறேன்.

ஓ, அப்படியா. அந்த படம் வந்த கண்டிப்பா பாக்கணும்?

பார்த்துட்டா போச்சு, ஆமா, அந்த படம் உனக்கு ஏன் பிடிக்கும்?, இயக்குனர் ராஜேஸுக்காகவா, இல்ல சந்தானத்துக்காகவா?

உதயநிதி ஸ்டாலினுக்காக.

உலக வரலாற்றிலேயே, நீ ஒருத்திதாண்டி, படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே, ஒரு நடிகனுக்கு ரசிகையானது.

அதுக்கு காரணம் இருக்கு மச்சான், என்ன தெரியுமா?

என்ன, அவன் ஸ்டாலின் பையங்குறதுனாலையா?

இல்ல, அவன் உங்கள மாதிரியே இருக்கான்?

!?!?!?!?!?!?!?!?!?! (இவ நம்மள அசிங்கப்படுத்துறாளா இல்ல உதயநிதிய அசிங்கப்படுத்துறாளா?)

இப்படி சொன்னதுக்கப்புறம் தான் உதயநிதி ஸ்டாலினை உற்றுப் பார்த்தேன், ஒரே மாதிரியான இரண்டு படத்துல 6 வித்தியாசம் கண்டுபிடிக்குற மாதிரி, ஒரு கையில கண்ணாடி, இன்னொரு கையில அந்த ஹீரோவின் படத்த வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டு இருந்தேன். எல்லாமே வித்தியாசமாகத்தான் இருந்துச்சி, ஒரு ஒற்றுமை கூட இல்ல. ஆஹா இவ நம்மள் ஓவரா உட்டு கலாய்கிறாங்குற உண்மைய, எல்லாரையும் போலவே எனக்கும் ரொம்ம லேட்டாகத்தான் தெரிஞ்சுது.

என் வாழ்கையில பக்காவா பிளான் பண்ணி ஏதாவது செஞ்சா அது அட்டர் பிளாப் ஆகும். அது மாதிரித்தான் இதுவும் ஆகிவிட்டது. ஆனால் பிளான் பண்ணாம ஒரு நாள் அது நடந்தது.

குற்றாலத்துல திடிரென பெஞ்ச மழையால, அரிவியில் தண்ணீர் விழுகுதுன்னு என் மச்சான் ஒருவன் சொல்ல, சரி இன்னைக்கு போவமான்னு அவனே கேட்க, சரி போகலாமுன்னு நான் சொல்ல, ஒரு ஆட்டோ அமத்தி அவங்க அவங்க ஜோடியோட மதிய சாப்பாடு முடித்து போகலாமுன்னு முடிவானது.
இங்க தான் கதையில ஒரு டுவிஸ்டு. ஆட்டோ வரல, ஏதோ முக்கியமான வேலையிருக்குன்னு ஆட்டோ டிரைவர் (எனது மச்சானின் நண்பர்) சொல்ல பிளான் அல்மோஸ்ட் கேன்சல். இத கேட்ட மனைவிமார்கள் முகம் கோண, இன்னைக்கு போகலன்னா என்னைக்கும் போகமுடியாதுன்னு முடிவு பண்ணி, பைக்குல போகலாமுன்னு நான் என் வீட்டில் உள்ள ஸ்ப்பிளண்டரை ரெடி பண்ண, எனது மச்சான் டி.வி.எஸ் எக்ஸலுடன் நின்னான் (அவனுக்கு கியர் வண்டி ஓட்டவராது). பெரிய வண்டியும், சின்ன வண்டியும் மேச் ஆகாதுன்னு, நான் என் வீட்டில் அப்பாவிடம் இருந்த எக்ஸலை எடுத்துக் கொண்டு குற்றாலத்தை நோக்கி கிளம்பினோம்.

எங்க ஊருக்கும், குற்றாலத்துக்கும் மிஞ்சிப்போனா ஒரு 15 கி.மீட்டர் தான். அதையும் ஒரு மணி நேரமா ஓட்டு ஓட்டுண்ணு ஓட்டிக்கொண்டு போய் சேர்ந்தோம். வேறு எந்த அருவியிலும் தண்ணீர் விழாத காரணத்தால், ஐந்தருவியில் மட்டும் குளித்து விட்டு, சீக்கிரமாக வீடு திரும்ப திட்டமிட்ட நேரத்தில்,

என் மச்சான் சொன்னான். “அப்படியே தென்காசியில் படம் பார்த்துவிட்டு போகலாம்.

எனக்கும் ஆசை தான் இருந்தாலும் படம் ஒன்னு சரியில்லைய மச்சான், கொஞ்சம் உருப்படியான படம்னா அரவான் தான், ஆனா அது எப்படி இவள்களுக்கு பிடிக்கும்? என நான் கூற.

தாய்பாலாவில் “நாங்க இன்னைக்குத்தான் ரிலீஸ், வேணும்னா அதுக்கு போவமா?
நாங்கவா, சரி போவோம்னு சொல்லி, குற்றாலம் வழியாக தென்காசிக்கு (3.கி.மீ) செல்லும் வழியில் உள்ளது அந்த தியேட்டர். தியேட்டர் நெருங்கி வந்ததும், நான் ரோட்டைப் பார்த்து ஓட்டிக்கொண்டிருந்த போது, என் மனைவி பதறிய குரலில் சொன்னாள், “மச்சா, வேணாம், வண்டிய நிறுத்தாம அப்படியே ஓட்டுங்கன்னு. ஏண்டி இது தானே அந்த தியேட்டர் என்று, வண்டியை நிறுத்திவிட்டு போஸ்டரைப் பார்த்தேன்.

“அழகிய கன்னிகளின் அற்புத தீவு

போஸ்டரில் ஒரு அழகிய பெண், பாவம் ரொம்ப, ரொம்ப கஷ்டப்பட்ட பேமிலி போல, கொஞ்ச துணியோட சிரிச்சிக்கிட்டே, சும்மா கும்முன்னு நின்றது. ஓஹோ, இதுக்குத்தான் நீ, அப்படி அலரியடிச்சு வண்டிய நிப்பாட்டாதீங்கன்னு சொன்னியா? ன்னு என் மனைவியிடம் அசடுவழிய கேட்டேன். “அத வண்டிய கொஞ்சம் தள்ளிக் கொண்டு போயி, அங்கிட்டு நின்னு பேசலாமே என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னாள்.

சரி வேறு வழியில்லை, அரவான் தான் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து. இறுதியாக அரவானைப் பார்த்துவிட்டு வந்தோம். எங்க இவள்களுக்கு பிடிக்கப்போகிறது என்று நினைத்த எனக்கு, ஒரே ஆச்சர்யம், எனக்கு புரியாத சில இடங்களை, அவள், எனக்கு விளக்கிக் கொண்டிருந்தாள்.

படம் நல்லா இருந்தாலும், அந்த அழகிய கன்னிகளை மறக்க முடியவில்லை. மறு வாரம், ஒரு வேலையாக, தனியாக தென்காசி செல்லும் நிலை வந்த போது, அந்த தியேட்டருக்குப் போனேன். படத்த மாத்திட்டானுங்க, அட அது கூட பரவாயில்ல.

 தக்காளி.....அந்த போஸ்டரையும் மாத்திட்டானுங்க............

--------------------------------------------------------------------------யாஸிர்.

சனி, ஏப்ரல் 14, 2012

கடவுள் எனும் தொழிலாளி கண்டெடுத்த முதலாளி.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
 முகநூலில் நண்பர்கள் அனுப்பும் சில விசயங்களைப் பார்த்துவிட்டு ஒரு கணம் மனசு கிடந்து துடிக்கும். முன்பு, அப்படியான ஒரு விசயம் கபாடி உலக கோப்பையை வாங்கிவிட்டு நமது நாட்டு வீராங்கனைகள் நாடு திரும்பிய போது, திரும்பிப் பார்க்கக்கூட எவனும் செல்லாதது. இது மக்களின் தவறு இல்லை, இது முற்றிலுமான அரசாங்கத்தின் தவறு, மீடியாக்களின் தவறு. இந்த ஒரு சாதனையை இந்தியனாக நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய விசயத்தினை முறையாக மக்களிடம் சென்று சேர்க்காதது அவர்களுடைய பொருப்பின்மையை காட்டுகின்றது. விமான நிலையத்தில் இருந்து, அவர்களின் வீட்டிற்கு ஆட்டோவில் 5 பேராக அட்ஜெஸ்ட் செய்து செல்லும்படியாக அலைக்கழித்தது அரசாங்கத்தின் குற்றம் இல்லையா?. இன்னும் நம்மில் பலருக்கு, கபாடி பெண்கள் பிரிவில் இந்தியா வென்றது தெரிந்திருக்கும் என்பது சந்தேகமே !. இன்று விவசாயத்திற்காக பாண்டிச் சேரியைச் சார்ந்த திரு. வெங்கடபதிக்கு பத்மஸ்ரீ பட்டம்பெற்றது பற்றியது.

ஒவ்வொரு முறையும், பத்மஸ்ரீ, பத்ம பூசன் விருதுகள் வழங்கும் போது, எத்தனை நடிகர், நடிகைகளுக்கு விருது கிடைக்கின்றது என்பதனை முதல் பக்கத்தில் போடும் எந்த எச்சக்கல பத்திரிக்கைகாரனும், அவன் பத்திரிக்கையில் இந்த உத்தமனுக்கு ஒரு பெட்டி செய்திக்குறிய இடம் கூட கொடுக்கவில்லை. இது ஒரு தமிழனுக்கு கிடைத்திருக்கின்ற காரணத்திற்காக அதை வெளிச்சம் போட்டு காட்டாததற்காக ஆதங்கப்படவில்லை, மாறாக அவரின் துறை சம்பந்தப்பட்டதற்காகவே என்னுடய கோபம். ஒவ்வொரு வருசமும் வானிலை மாற்றங்களினால் ஏற்படும் அவஸ்தைகளைப் பற்றி பக்கம் பக்கமாகப் போட்டு விட்டு, மரம் நடுவீர், நாட்டைக் காப்பீர் என்று போட்டுவிட்டு சமுதாயக் கடைமையாகக் காட்டிக்கொள்ளும் பேப்பர்காரனும் சரி, சேனல்காரனும் சரி சுயநலவாதிகள் தான். 

இந்த வார விகடனின் இரண்டு புத்தகங்களில் (ஆனந்த விகடன், ஜீனியர் விகடன்) இவரது பேட்டி மற்றும் அனுபவத்தினை நமக்கு அளித்ததில் சற்று ஆருதல் கொஞ்சம் ஆனந்தம் எனக்கு. எப்போதும் மிஸ்டர் மியாவ் படிக்கும் நான், ஏனோ என்னை அறியாமலேயே முதலில் பத்மஸ்ரீ வெங்கடபதி அவர்களைப் பற்றி படிக்க ஆர்வமாகினேன். இனி அவரைப் பற்றி அவர்.
''நான், பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். வீட்டுக்கு ஒரே பிள்ளைங்கறதால செல்லமாத்தான் வளர்ந்தேன். நாலாம் கிளாஸுக்கு மேல படிப்பு ஏறல. ஜாலியா சுத்திக்கிட்டிருந்த என்னோட போக்கை மாத்துறதுக்காக, 16 வயசுலேயே கல்யாணம் முடிச்சு வைச்சுட்டாங்க. 19வயசுலதான் எங்க குடும்பத்துக்குச் சொந்தமா இருந்த நிலத்துல கால் வெச்சேன். நெல்லு, கடலைனு வழக்கமான பயிர்கள்ல லாபமே இல்லை. லாபம் தேட ஆரம்பிச்சப்பத்தான், 'கனகாம்பரச் செடியைப் பயிர் செய்'னு பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் சம்பந்த மூர்த்தி ஆலோசனை சொன்னார். அப்படியே செஞ்சேன், நல்ல லாபம் கிடைச்சுது.

பிறகு, சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்​தறதுக்காக நாற்றுகளை விலைகொடுத்து வாங்கினேன். அதுல தரம் இல்லை, பயங்கர நஷ்டம். 'நாற்றுகளை நாமளே உருவாக்குவோம்'னு தொடர்ந்து ஆராய்ச்​சியில இறங்கின எனக்கு 'கதிர் வீச்சுமுறை கைகொடுத்துச்சு. கல்பாக்கம் அணு மின் நிலைய உதவியோடு அதிலும் ஜெயிச்சேன். இதுக்கு உதவி செய்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரையே அந்த கனகாம்பர ரகத்துக்கு வெச்சேன். பிறகு, சவுக்கு மர ஆராய்ச்சியில இறங்கி, ஏக்கருக்கு 200 டன் மகசூல் கிடைக்கற ரகத்தை உருவாக்கினேன். இதுக்கு உதவி செய்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேரையே சவுக்குக்கு வெச்சேன்'' என்று சொன்ன வெங்கடபதி, ''கனகாம்பரம், சவுக்கு கன்னுகளை எல்லாம் குறைஞ்ச விலையிலதான் விவசாயிகளுக்குக் கொடுத்துட்டு வர்றேன். இப்ப இது ரெண்டும் இந்தியா முழுக்கப் பரவி, விவசாயிகளுக்கு பெரும் உதவியா இருக்கு. அந்த வகையில இந்த 'பத்மஸ்ரீவிருகுக்கு நான் தகுதியானவன்தான்னு நினைக்கிறேன்'’

அவரே தொடர்ந்து, ''விருது வாங்கினதுல சந்தோஷம்ன்​னாலும் ஒரு வருத்தமும் எனக்கு இருக்கு. விவசாயி​களை இந்த நாடு இன்னும் கூட சரியா மதிக்கலை. விருது வாங்கினவங்கள்ல நான் மட்டும்தான் விவசாயி. ஜனாதிபதி மாளிகைக்கு வந்திருந்த அரசியல்வாதிங்க, அதிகாரிங்க எல்லாருமே... விருது வாங்கின சினிமாக்காரர்கள், தொழில் அதிபர்கள், இசைக் கலைஞர்களை மதிச்சி, பக்கத்துல கூப்பிட்டுப் பேசினாங்க. போட்டோ எடுத்துக்கிட்டாங்க. ஆனா, ஒரு விவசாயியான என்னை யாரும் கண்டுக்கவே இல்ல.

ஆனா, ஒரு காலம் வரும்... அப்ப நிச்சயமா எல்லாருமே விவசாயிகளை மதிப்பாங்க'' என்கிறார் நம்பிக்கையுடன்.

அதே நம்ம்பிக்கையுடன் நாமும் இருப்போம். சும்மாவா சொன்னான் வள்ளுவன் அன்றே

"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை."
------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

புதன், ஏப்ரல் 11, 2012

ங்ங்கொய்யால ஊராடா இது.......


நம் அனைவரின் மீதும், இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
எனக்கு தெரிந்து, என்னுடய ஊரில், அதிக நாட்கள் இருந்தது இந்த முறையாகத்தான் இருக்கும். முழுமையான 60 நாட்கள் (இந்த முறை இரண்டு மாதம் விடுமுறைக்கு காரணம் எனது கல்யாணமாக இருந்தது). பெங்களூரிலும் சரி, துபாய்கு வந்தபின்பும் சரி, இத்தனை நாட்கள், நான் எனது ஊரில் விடுமுறையை செலவழித்ததே இல்லை. அதனால் தான் என்னமோ எனக்கு, எங்க ஊரை இதற்கு முன்பு அவ்வளவு பிடித்திருந்தது.

எல்லோரும் துபாயில் இருந்து வந்தவுடன், அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி, “என்னப்பா எப்போ வந்தாய்? என்று, ஆனால் எனது ஊரில் “எத்தன மாதம் லீவு?, எப்ப மறுபடியும் பயணம்? இந்த கேள்வி, எனது பக்கத்து வீடு, சொந்தங்களுக்கு கல்யாணப் பத்திரிக்கை கொடுக்கச் சென்ற போது, எதிர் கொண்டது. எப்படி இருக்கும் நமக்கு. நான் கல்யாணத்திற்கு வந்திருக்கன்னு தெரிஞ்சிருந்தும், பக்கிகள் அந்த கேள்விய அழுத்தி, அழுத்தி கேட்குதுங்க.

எங்க ஊரைப் பொருத்தவரை, துபாயில் இருந்து கிளம்பும் தேதிய நாம முடிவு செய்யணும், துபாய்கு வரும் தேதிய எதிர்வீட்டுக்காரன் தான் முடிவு செய்வான். காலையில வீட்டவிட்டு கிளம்பும் போது, எங்கடா போற? ன்னு கேட்டா, போகுற காரியம் போக்காயிருமுன்னு எங்கப்பாவே கேட்கமாட்டாறு, பக்கத்து வீட்டுக்காரன், கொட்டாவிய, கம்முகட்டு வழியா விட்டுக்கிட்டே “எங்க....த்தா கா....லயிலே கிளம்பியாச்ச்ச்ச்ச்ச்சு ங்ங்க்ஸ்ஸ்ஸ்? ன்னு கேட்டுகிட்டே வண்டிமுன்னாடி வந்து நிப்பான். ஒன்னுமில்ல மாமா, சும்மா ரோட்டுக்கு........ன்னு பல்ல கடிச்சி, வாய சிரிச்ச மாதிரியே வச்சிகிட்டு பதில் சொல்லனும்.
ஊருக்குள்ள, எவனையும், எவனுக்கும் பிடிக்கல. பேசுறவனெல்லாம், அவன பெரிய யோக்கியன்னு நினைச்சுக்கிட்டு பேசுறான். தன்னை, தன்னுடைய மாமன், மச்சான் நல்லவன்னு சொல்லனுங்குறதுக்காக, அடுத்தவன் பேருல, லோன் எடுத்து, இவன் வட்டிக்கி கொடுக்குறான். சமுதாயத்த நான் தூக்கி நிப்பாட்டுறன்னு வேட்டிய தூக்கிகிட்டு வந்தவன், துண்டக்காணம், துணியக் காணமுன்னு ஓடுறான். விவசாயம் பாக்கலாமுன்னு துபாயில வேலைய விட்டு வந்தவனப்பத்தி வஞ்சகம் பேசி, பேசி சவுதிக்கு சானியள்ள அனுப்பிட்டானுங்க. லட்சங்கள் எல்லாம் போயி, கோடியில பேசுதுங்க, பத்துரூபா கூட சம்பாதிச்சு கொடுக்காத, கோட்டிகள்.

ஊரைப் பொருத்தவரை ஒன்னே ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது. எல்லோருக்கும் தான், தலைவன் ஆகனும்னுங்குற எண்ணம் வந்திருச்சு. வீட்டுப் பிரச்சனைக்கு வீதியில வந்து சண்ட போடுறன், ஊருப் பிரச்சனைக்கு ஓடி ஒளியிறான். சாக்கடை அடச்சிருக்கு, நம்ம ஏரியா தண்ணி பைப்பை திருப்பி, அடுத்த ஏரியாவிற்கு கொண்டுபோகுறான், இத எதிர்த்து போராட்டம் பண்ண வாங்கன்னு அந்த வார்டு கவுன்சிலர் கூப்பிட்டா, இந்த கிளம்பிட்டாரு அன்னா ஹசாரேன்னு, கேலி பேசுறான். ஊர் தலைவர் பதவிக்கு நடக்கும் சண்டய வேடிக்கை பார்க்க, வேகம் எடுத்து செல்கிறது எங்க ஊருக்காரனுங்க கால்கள்.

அமைப்புகள் அதிகமாகிவிட்டது,
-அதனால்
அமைதி குறைந்துவிட்டது.

எத்தனை அமைப்புகள்தான் இருக்கவேண்டும் ஊரில், அத்தனை அமைப்பும் அங்கொன்னும், இங்கொன்னுமாக எண்ணிக்கையில் அடங்காது. எத்தனை அமைப்பு இருக்கோ, அத்தனை அமைப்பிற்கும் ஒரு, ஒரு பள்ளிவாசல்கள். முன்பு தொழுகைக்கு 1000 பேர் ஒன்னா வருவான். இப்போ பத்து, பத்து பேரா 100 பள்ளிவாசல்களில் தொழுகிறான். ஊர் பணம், உறங்கிக்கொண்டிருக்கின்றது. அந்த பணத்தை வைத்து ஊருக்கு என்ன நல்லது செஞ்சிருக்கீங்கன்னு கேட்க ஆள் இல்லை. பொதுத் தேர்வு நடைபெறும் இந்த நேரத்தில், கரண்ட் இல்லாத இரவு நேரத்தில், மாணவர்களுக்கு ஜெனரேட்டர் மூலமாக படிக்கவைக்க பள்ளிவாசலை ஏற்பாடு செய்யலாம். கோடை விடுமுறையில் பெண்களுக்கு தையல் போன்ற சுய சம்பாத்திய பயிற்சிகளை கொடுக்கலாம். ஆங்கில வகுப்புக்கு ஏற்பாடு செய்யலாம். வட்டியில்லா கடன் கொடுத்து கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவலாம்.............. ஒரு மண்ணும் கிடையாது.
ஊரில் படிப்பாளிகள் அதிகமாகிவிட்டார்கள் என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தப் பார்த்து “மடையர்கள் என்று சொன்னால் என்ன தப்பு. படிப்புக்கும், அறிவிற்கும் வித்தியாசம் தெரியாமல் போன வீணர்கள். கம்யூட்டர் சயின்ஸ் படித்தவனுக்கு மானிட்டருக்கும், கீ போர்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. பிறகு அவன் படிச்சு என்ன புண்ணியம். துபாயில் வேலை செய்கிறவனில் எத்தனை பேர், அவனவன் படித்த படிப்பிற்கான வேலையை செய்கின்றான்?. M.C.A படிச்சவனுக்கும், சீப்போர்டு டிராலி கிளார்க் வேலைக்கும் என்ன சம்பந்தம். B.B.A படிச்சவனுக்கு, பலுதியா ஹெவி டிரைவர் வேலைக்கு என்ன தொடர்பு. திரிஷா இல்லன்னா, ஒரு திவ்யான்னது மாதிரி, கிடைக்குறத ஏத்துகிற கூட்டமாகிவிட்டது கொடுமை. துட்டு, டப்பு, மாலு இந்த மூணும் எங்க கிடைக்கோ அதுதான் முக்கியமே ஒழிய, M.C.A, B.B.A எல்லாம் சும்மா லுலுலாய்க்குத்தான்.

துபாயின் புண்ணியத்தில், பணம் புறழ்கிறது, பொண்டாட்டிகள் பல்லிளித்து பக்கத்து வீட்டுக்காரியிடம் வாசலில் இருந்து பொறம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தெருவில் ஒரு ஆண் வருகிறார் என்றால், அடிப்பாங்கறைக்கு ஓடும் பெண்கள் போய், பெண்கள் இருக்கிறார்கள் என்று விலகிச் செல்லும் ஆண்கள் அதிகமாகிப் போனார்கள்.
விலைநிலங்கள் எல்லாம் விலை மதிப்பில்லா, பிளாட்டுகளாகிப் போயின. வாங்குவது என்பது முடிவாகிப் போன நிலையில், பார்த்து வாங்க வேண்டாமா? அப்ரூவல் இருக்கா?, நேரான பாதை இருக்கா? எதனையும் யோசிப்பது இல்லை. இப்புட்டுத் தானோ!!!!!!!!!!, வெரும் @#$%& லட்சமா!!!!!!!!!!! என்று ஆச்சிரியக் குறியே ஆச்சரியப் பட்டுப் போகும் அளவிற்கு, அதிசய்ங்கள் நடந்துகொண்டிருக்கின்றது. இதெல்லாம் எதுவரைக்கும், துபாய், சவுதி ஷேக்குகள் எல்லாம், பேக்குகலாக இருக்கும் வரை மட்டும். அதுக்கு அப்புறம்?????????????????

“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.

என்ற வள்ளுவனின், கூற்றுப்படி எது, எது ஒரு நல்ல ஊரில் (நாட்டில்) இருக்கக்கூடாதோ, அதெல்லாம் இருப்பதுவே கடையநல்லூர். இப்ப சொல்லுங்க என் தலைப்பு சரி தானே.

இவ்வளவு சொல்லுறியே, நீ என்ன உத்தமனான்னு கேட்டா, சத்தியமா இல்ல, மேலே சொன்னதுல பாதி என் வீட்டிலும் நடக்குது, ஏன்னா நாங்களும் கடையநல்லூர்காரங்கதானே......

-------------------------------------------------------------------------யாஸிர்.

திங்கள், ஏப்ரல் 02, 2012

தமிழக இயக்குனர்களுக்கு செருப்படி

நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும்  உண்டாவுவதாக.

நான் பிளாக் ஆரம்பித்த போது, என்னுடய தளத்தில் யாருடைய படைப்பினையும் களவாண்டு, பசை செய்து வெளியிட விரும்பவில்லை. அதே போல சினிமா சம்பந்தமான விசயங்களையும் வெளியிட விருப்பமில்லை. ஹிட்டுக்காக, பிட்டு படம் ஓட்டவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் இந்த நோக்கத்தினை, சற்று தளர்த்தி சினிமா சம்பந்தமான, ஆனந்த விகடனில் பிரசகமான ஒரு விசயத்தினை எனது பிளாக்கில் வெளியிட முடிவெடுத்தேன். அது.....

'தி சைக்கிளிஸ்ட்' இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப்ஒளிப்பதிவாளர் செழியன்


வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்தித்துவிட வேண்டும் என்று விரும்பு பவர்களின் மனப் பட்டியல் நம் எல்லோரி டமும் இருக்கிறது. அதில் எத்தனை பேரை நம்மால் சந்திக்க முடிகிறது? எனது பட்டி யலில் சிலர் கடல் கடந்து தொலைவில் இருக்கிறார்கள். சிலர் காலம் கடந்துநினை வில் இருக்கிறார்கள். சார்லி சாப்ளினையும் தார்க்கோவ்ஸ்கியையும் நேரில் சந்திக்கும் ஆசை இருக்கிறது. இந்த வரிசையில்இயக்கு நர் தியோ ஆஞ்சலோபோலஸைச் சந்திக்க வேண்டும் என்கிற ஐந்து வருடக் கனவும் இந்த ஜனவரி மாதத்தின் விபத்தில் முடிந் தது. இந்த ஏமாற்றங்களுக்கு நடுவில், இளையராஜா, ஜெயகாந்தன், லா.ச.ரா., பாலுமகேந்திரா, மகேந்திரன் எனத் தொட ரும் இனிய சந்திப்புகளும் இருக்கின்றன. அந்த வரிசையில் என் மனப் பட்டியலில் இருந்த இன்னொரு மனிதரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பெயர் மஹ்சன் மக்மல்பஃப் (Mohsen Makmaulbuf). 
 மக்மல்பஃப், இரானிய சினிமாவின் பிதாமகன்களில் ஒருவர். கலகக்காரர். 1960-களில் இரானில் நடந்த அரசியல் சூழலில் மன்னர் கோமேனிக்கு எதிராகத் தனது கிராமத்தில் கெரில்லாப் படையைத் தொடங்கியவர். பலால் ஹபாஷி எனப்படும் அந்த இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட இவர், தனது 17-வது வயதில் ஒரு போலீஸைத் தாக்கியதற்காகத் துப்பாக்கியால் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டார். நான்கு வருட சிறைவாசத்தில் இலக்கியம் மீதான ஆர்வம் ஏற்பட்டு, பிறகு அந்த ஆர்வம் சினிமா மீது திரும்பியது. அந்த வயதில் மக்மல்பஃப் பாட்டி வீட்டில் வளர்ந்தார். சினிமாவை சாத்தான் என்றும்ஹராம் என்றும் நம்பிய இஸ்லாமியக் குடும்பத்தில் வளர்ந்து, 24 வயது வரை சினிமாவேபார்க்காத அவர், இன்று உலகம் போற்றும்திரைப்பட இயக்குநர் ஆனார். இரானில் திரைப்படப் பள்ளியைத் தொடங்கினார். இவரது மனைவி மெர்ஷியா, மகள்கள் சமீரா, ஹானா மூவரும் இயக்குநர்கள். மகன் மெய்சம் ஒளிப்பதிவாளர். உலகத் திரைப்பட விழாக்களில் இந்தக் குடும்பம் வாங்கிய சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 89. அரசுக்கு எதிராகப் படம் எடுத்ததால், இரானில் இருந்து குடும்பத்தோடு நாடு கடத்தப்பட்ட இவர், தனது அடுத்த படத்தைப் பிரதி எடுக்கும் வேலைகளுக்காக சென்னை வந்திருந்தார். அவரைச் சந்திக்க அந்த மதியப் பொழுதில் நான் பிரசாத் லேப்பில் இருக்கும் திரையரங்கின் வாசலில் காத்துக்கொண்டு இருந்தேன்.

 வெள்ளை நிற அம்பாஸடர் கார் வந்து நிற்க... அதில் இருந்து மக்மல்பஃப் இறங்கினார். வெள்ளை நிறக் கதர் ஆடையில் கால்சட்டையும் மேலாடையும் அணிந்திருந்தார். ஒட்டக் கத்தரித்த தலைமுடியுடன் எளிய விவசாயிபோல உறுதியான உடல் அமைப்புடன் இருந்தார். அவருடன் ஒரு பெண்ணும் இறங்கினார்.

அவரைப் பார்த்ததும் வணக்கம் சொல்லி நெருங்கினேன். வணக்கம் சொல்லி புன்னகையுடன் அருகில் வந்தார். அவரிடம் விகடன் பிரசுரமான எனது 'உலக சினிமாநூலைக் கொடுத்து, அவரது 'தி சைக்கிளிஸ்ட்’ (The cyclist) படம் குறித்து அதில் எழுதி யிருப்பதைச் சொன்னேன். ஆர்வ மாக அதில் இருக்கும் சர்வதேச இயக்குநர்களின் குறிப்புகளையும் படங்களையும் பார்த்துக்கொண்டே வந்த அவர், 'தி சைக்கிளிஸ்ட்படம் இருக்கும் பக்கம் வந்ததும் புன்னகை மலர என்னை நிமிர்ந்து பார்த்தார். அருகில் இருக்கும் பெண்ணிடம் அந்தப் பக்கத்தைக் காட்டினார். மேலும், பக்கங்களைத் திருப்ப... அந்த நூலிலேயே அவரது மனைவி மெர்ஷியாவின் 'தி டே ஐ பிகேம் எ உமன்’ (The day i became a woman) படமும் இருந்தது. இருவர் முகங்களிலும் புன்னகை மலர... ''இது மெர்ஷியா'' என்று அருகில் இருந்த பெண்ணை அறிமுகம் செய்துவைத்தார். தெரியாத மொழியில் இருவரின் படங்களும் இருப்பது அவர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கலாம். புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருந்தார்.

''நான் ஒளிப்பதிவாளராக இருக்கிறேன்!'' என்றதும் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். மெர்ஷியா மொழி தெரியாத பாவனை முகத்தில் இருக்க... புன்னகையுடன் தலையசைத்தார்.
படத்தின் பிரதி தயாராக இருப்பதாக அழைப்பு வந்தது. வாருங்கள் என்று படம் பார்க்க என்னை யும் அழைத்தார். 'தி மேன் ஹூ கேம் வித் தி ஸ்நோ’ (The man who came with the snow) என்ற அவரது படம் திரையில் ஓடத் தொடங்கியது. அவர் முன் இருக்கையில் இருக்க... நான் பின்னால் இருந்தேன். படத்தில் சப்-டைட்டில் இல்லாததால், ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் திரும்பி என்னிடம் விளக்கம் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரது ஆங்கிலம் தெளிவாக, நிதானமாக இருந்தது. படம் முடிந்து வெளியில் வந்ததும் படத்தின் வண்ணம் குறித்தும் தரம் குறித்தும் என்னிடம் பேசினார். தான் நாடு கடத்தப்பட்டதால் இந்தப் படத்தை கஜகஸ்தானில் எடுத்ததாகவும் பிரதி எடுக்க இந்தியா வந்ததாகவும் சொன்னார். சில நிமிடங்களில் அவர் விடைபெறுவதாகச் சொல்ல... ''திரும்பவும் உங்களைச் சந்திக்க வேண்டுமே'' என்றேன். ''நாளை அறைக்கு வாருங்கள்'' என்றார். ஒரு சர்வதேச இயக்குநர் அவ்வளவு எளிமையாகவும் அன்பாகவும் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
மறு நாள் காலை 10 மணிக்கு வடபழனி கமலா தியேட்டரை ஒட்டிய சந்தில் இருக்கும் அந்த எளிய விருந்தினர் விடுதியின் கதவைத் தட்டினேன். நண்பர்கள் அருள் எழிலனும் எழுத்தாளர் விஸ்வாமித்திரனும் உடன் இருந்தார்கள். கதவு திறக்க, நேற்று பார்த்த அதே கதர் உடையில் மக்மல்பஃப் இருந்தார். புன்னகையுடன் வரவேற்று அங்கு இருந்த இருக்கைகளில் அமரச் சொன்னார். சில நிமிடங்களில் மெர்ஷியா அதே புன்னகையுடன் உலர்ந்த பழங்களை யும் ஸ்டிக்கர் ஒட்டிய ஆரஞ்சுப் பழங்களை யும் கொண்டுவந்தார். மக்மல்பஃப் மெர்ஷியாவையும் அங்கேயே அமரச் சொன்னார்.

நானும் விஸ்வாமித்திரனும் எழிலும் பேசத் தொடங்க... அங்கிருந்த ஆரஞ்சுப் பழங்களை உரித்து எங்களுக்குத் தந்துகொண்டே... மக்மல்பஃப் தனது வாழ்க்கை மற்றும் சினிமா குறித்து இயல்பாகப் பேசத் தொடங்கினார். உரையாடல் அவரது திரைப்படப் பள்ளி குறித்து திரும்பியது.
''என் மகள் சமீராவுக்கு எட்டு வயது இருக்கும்போது நான் படம் பிடிக்கும் இடத்துக்கு வருவாள். என் கால்களைச் சுற்றிக்கொண்டே திரிவாள். ஒருநாள் பள்ளியில் இருந்து வந்த அவள், 'அப்பா! எனக்கு பள்ளிக்குப் போகவே பிடிக்கவில்லைஎன்றாள். எனக்கும் இரானின் பாடத்திட்டம் மேல் உடன்பாடு இல்லை என்பதால், அன்றே அவளைப் பள்ளியில் இருந்து நிறுத்தி என்னுடன் வைத்துக்கொண்டேன். அவளுக்கு சினிமா பிடித்திருந்ததால் அதனை நான் கற்றுக்கொடுத்தேன்!''
''உங்கள் திரைப்படப் பள்ளியில் அப்படி என்ன கற்றுக்கொடுத்தீர்கள்... அதன் பாடத்திட்டம் என்ன?'' என்று கேட்டேன். ''பாடத்திட்டம் என்று எதுவும் கிடையாது. எனது பள்ளி சமீரா, ஹானா மற்றும் மெர்ஷியாவுக்காக உருவானதுதான். இங்கு இருக்கும் திரைப்படக் கல்லூரிகளில் பாடத்திட்டம் என்று என்ன வைத்திருக்கிறார்கள்? உலகின் சிறந்த படங்களைப் பார்க்கச் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு, 'சிட்டிசன் கேன்என்றால், அந்தப் படத்தைப் போட்டு, அதை எப்படி எடுத்தார்கள், அதன் நுட்பங்கள் என்ன என்று கற்றுத்தருகிறார்கள். அது ஆர்சன் வெல்ஸின் சினிமா. அதன் நுட்பம் என்பது அவர் சார்ந்த கலாசாரம், அரசியல் மேலும் அவர் வளர்ந்த விதத்தைப் பொறுத்து இருக்கிறது. அதை நாம் தெரிந்துகொள்ள லாம். ஆனால், பின்பற்ற வேண்டும்என்பது அவசியம் இல்லையே? இப்போது இருக்கிற கல்லூரிகள் பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவை ஒரு தொழிலாகக் கற்றுக் கொடுக்கின்றன. அரசுப் பணியாளர்போல ஒரு சினிமாக்காரரை உருவாக்குகின்றன. என் வேலை அதுவல்ல!''
''பிறகு எப்படித்தான் கற்றுக்கொடுப்பீர்கள்?''

''தினமும் 50 கி.மீ. சைக்கிள் ஓட்ட வேண்டும். இரண்டு மணி நேரம் நீச்சல் அடிக்க வேண்டும். இதெல்லாம் எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சினிமா படைப்பாளிக்கு முதலில் உடல் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில், எங்கள் நாட்டில் படம் எடுப்பது பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வகையான போர் முறை. நான் 'கந்தகார்எடுத்தபோது, நாங்கள் படம் எடுத்த இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவில் குண்டு வெடித்தது. கேமரா, தொழில் நுட்பச் சாதனங்கள் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு ஓடினோம். அந்த உடல் உறுதி ஒரு திரைப்படப் படைப்பாளிக்கு அவசியம். எந்த நாடாக இருந்தாலும் படம் எடுப்பவர் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் பலம்... பலவீனம் இரண்டும் உங்கள் படைப்பில் வெளிப்படும்... இல்லையா'' என்று சிரித்தார். ''எங்கள் திரைப்படப் பள்ளியில் இலக்கியம் படிக்க வேண்டும். ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துக்கொண்டு ஒரு வாரம் முழுக்க அவரது கவிதைகளை மட்டுமே படிப்போம். வாசிக்கச் சொல்வோம். அதுபற்றிக் கலந்து பேசுவோம். விவாதிப்போம். பிறகு, படம் பார்ப்போம். ஓவியங் கள் பார்ப்போம். ஒரு வாரம் முழுக்க ஒரே படம். ஒரே இயக்குநரின் படம். திரும்பத் திரும்பப் பார்ப்போம். விவாதிப்போம். இதுதான் எனது பாடத்திட்டம். இந்தச் சூழலில் வளர்கிற சமீரா, 17 வயதில் ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறாள். ஒருநாள் தொலைக்காட்சி செய்தி பார்க்கிறாள். ஒரு அப்பா தனது மகள்கள் இருவரையும் பல வருடங்கள் வெளி உலகமே தெரியாமல் அடைத்துவைத்திருக்கிறார் என்ற செய்தி அவளைப் பாதிக்கிறது. 'இதைப் படமாக எடுக்கலாமா?’ என்று கேட்கிறாள். 'எடுஎன்கிறேன். அவளே கேமராவை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து, பதினோரு நாளில் 'ஆப்பிள்படத்தை எடுக்கிறாள். அப்போது சமீராவுக்கு 19 வயது. இப்படித் தன்னைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக் கவனிப்பவர் களாக, அதனைத் திரைப்படமாக மாற்ற முடிகிறவர்களாக எனது பயிற்சி அவர்களை உருவாக்குகிறது. இதுதான் நீங்கள் கேட்கிற பாடத்திட்டம்!'' என்று சிரிக்கிறார்.
''உங்கள் படங்கள் அனைத்திலும் தொழில்முறை அல்லாத சாதாரண மனிதர் களையே நடிக்கவைக்கிறீர்கள். அவர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?''

''என்னிடம் வாய்ப்பு கேட்டு வருபவர் களை அல்லது நான் நடிகர்களாகத் தேர்ந்து எடுக்கிறவர்களைப் பிச்சை எடுக்கத் தெருவுக்கு அனுப்புவேன். யார் அதிகமாகப் பிச்சை எடுத்துவருகிறார்களோ அவர்தான் நடிகர். எந்தக் கூச்சமும் இல்லாமல் மக்களிடம் சென்று தன்னை ஒரு பிச்சைக்காரராக நம்பவைக்க முடிகிறது என்றால், அவர்தானே சிறந்த நடிகர்!''

''நடிகர்களுக்கான ஊதியம் என்று என்ன தருவீர்கள்?'' என்று நான் கேட்டதும், உடனே ''இங்கு புகழ்மிக்க நடிகருக்கு எவ்வளவு ஊதியம் கொடுக்கிறீர்கள்?'' என்று கேட்டார். நான் சொன்னதும் அவர் அதை அமெரிக்க டாலர் மதிப்பில் மாற்றிப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ''ஏன் நடிகருக்கு இவ்வளவு தருகிறீர்கள்?'' அவரது ஆச்சர்யம் அடங்கவில்லை. பிறகு, இயக்குநரில் தொடங்கி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஊதியம் என்று கேட்டார். அவருக்குத் தொடர்ந்த அதிர்ச்சிகள் காத்திருந்தன. ''சரி... உங்கள் படங்களின் பட்ஜெட் என்ன?'' என்று கேட்டார்.  ''அதுவும் சில கோடிகள்... வருடத்துக்கு இதுபோல தமிழில் மட்டும் 150 படங்கள் எடுக்கிறோம்!'' என்று சொன்னதும் கன்னத்தில் கைவைத்துவிட்டார்.
''சரி... உங்கள் படப்பிடிப்புத் தளத்தில் எத்தனை பேர் இருப்பீர்கள்?'' என்று கேட்டார். ''குறைந்தது 100 பேர்!'' என்று சொன்னேன்.  

''100 பேரை வைத்துக்கொண்டு எப்படிப் படம் எடுக்க முடியும்? உதாரணத்துக்கு, வறுமையைப் பற்றிய படம் எடுக்கிறீர்கள் என்றால், ஷாட் முடிந்தததும் 100 பேர் அதே இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பீர்களா? எங்கள் படங்களின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? உங்கள் ரூபாய் மதிப்பில் வெறும் 15 லட்சம். அதற்கு மேல் நாங்கள் எந்தப் படமும் எடுத்தது இல்லை. எனது படப்பிடிப்பில் நான், டிரைவர், சமையற்காரர், நடிகர் எல்லாம் சேர்த்து படப்பிடிப்புக் குழு மொத்தமே 8 பேர்தான் இருப்போம்!'' என்று சொல்லிச் சிரித்தார். ''இயக்குநரே க்ளாப் அடிக்க வேண்டும். ஒலிப்பதிவு செய்ய வேண்டும். ஒளிப்பதிவாளர் தனக்கான எல்லா வேலைகளையும் தானே செய்துகொள்ள வேண்டும். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கிளம்பும்போது, நாங்களே எல்லாவற்றையும் தூக்கிச்செல்வோம். நாங்கள் அனைவரும் ஒரு காரில்தான் பயணம் செய்வோம். அந்த ஒரு கார்தான் எங்கள் படப்பிடிப்புக் குழு. எங்களது நடிகருக்கு ஊதியம் எவ்வளவு தெரியுமா? பணமாக ஒன்றும் இல்லை. நான் எனது 'சைக்கிளிஸ்ட்படத்தில் நடித்தவருக்கு ஒரு சிறிய வீடு கட்டிக்கொடுத்தேன். அதுதான் எங்களால் கொடுக்க முடிந்த ஊதியம்.
நீங்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால், சினிமா இங்கு மிகவும் கெட்டுப்போன நிலையில் இருக்கிறது. ஒரு தொழிலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும், நிறையப் பணம் முதலீடு செய்யப்படுகிறது என்றால், அதைவைத்து லாபம் பார்க்கவே எல்லோரும் நினைப்பார்கள். நல்ல படம் எடுக்க யார் நினைப்பார்கள்? செலவைக் குறைக்க வேண்டும். என் மகள் ஹானா, 'புத்தா கொலாப்ஸ்டு அவுட் ஆஃப் ஷேம்’ (Buddha Collapsed Out of Shame) என்றொரு படம் எடுத்தாள். இது வீடுகளில் நாம் பயன்படுத்தும் கையளவு டிஜிட்டல் கேமராவினால் எடுக்கப்பட்டது. செலவு உங்கள் பணத்தில் வெறும் 8 லட்ச ரூபாய். திரைப்பட விழாக்களின் மூலம் அது ஈட்டிய பணம் 15 லட்சம். அதுதான் அடுத்த படத்துக்கான மூலதனம். இந்தியாவில் கதைக்கா பஞ்சம்? சாலையில்தான் எத்தனை கதைகள்? நேற்று நானும் மெர்ஷியாவும் லேப்பில் இருந்து வரும்போது ஒரு கடையில் நின்றோம். அந்தக் கடையில் நான் ஒரு பழச்சாறு வாங்கிக் குடிக்க முயன்றபோது, என் கால்களை யாரோ சுரண்டினார்கள். திரும்பிப் பார்த்தேன். அழுக்கான ஒரு சிறுவன் நின்றுகொண்டு இருந்தான். அவன் என்னைப் பார்த்து, என் கையில் இருந்த பழச்சாறைக் கேட்டான். நானும் மறுக்காமல் அவனிடம் கொடுத்துவிட்டு, அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தேன். அது வரைக்கும் அவன் செய்ததில் எதுவும் இல்லை. அதற்கு மேல் அவன் செய்ததுதான் எனக்குத் தீராத ஆச்சர்யமாக இருந்தது.

என்னிடம் இருந்த பழச்சாறுக் குவளையை வாங்கியதும் அவன் உடனே குடிக்கவில்லை. அதை எடுத்துக்கொண்டு நடந்து சென்றான். அவனது உடைகள் அவ்வளவு அழுக்காக இருந்தன. என்றாலும், சாலையைக் கடந்த அவன் அங்கு இருந்த திண்டில் ஒரு செய்தித்தாளை விரித்து உட்கார்ந்தான். அதில் ஒரு ராஜாவைப்போல கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டு, போகும் வரும் வாகனங்களையும் மனிதர்களையும் ஏளனமாகப் பார்த்துக்கொண்டே அந்த பழச்சாறைப் பருகினான். நான் அசந்துவிட்டேன். அந்தச் சிறுவனைப் பின்தொடருங்கள். அங்கு ஒரு கதை நிச்சய மாக இருக்கிறது. அதுதான் சினிமா. உலகில் எங்கும் இல்லாத அளவுக்குத் தணிக்கை விதிகள் இருந்தபோதும் இரானிய சினிமா ஒளிர்கிறது என்றால், அதன் காரணம் என்ன? அதில் குழந்தைகளும் சிறுவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள்தானே நமது உண்மையான ஆன்மா. இதுபோன்ற மனிதர்களைப் படம் எடுங்கள். வருடத்துக்குத் தமிழில் மட்டும் 150 படங்கள் எடுக்கிறீர்கள். இந்தியாவில் மொத்தம் எத்தனை படங்கள் இருக்கும்? 100 கோடிப் பேருக்கும் அதிகமாக இருக்கிற இந்தியாவில், சிறந்த இயக்குநர்கள் எத்தனை பேர்? ஒரு 10 பேரைச் சொல்ல முடியுமா? இந்தியா சினிமாவில் கடக்க வேண்டிய தூரம் வெகு தொலைவில் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்!''
''ஒரு நல்ல சினிமா எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டோம்.

''மக்களைப் பேசுகிற எந்தப் படமும் நல்ல படம்தான். சமீரா எடுத்த 'ஆப்பிள்சர்வதேச அளவில் எல்லா விருதுகளையும் குவித்தது. அத்துடன் நிற்காமல் சமீரா அந்தச் சிறுமிகளுக்கு அந்த வீட்டின் மேலேயே ஒரு மாடியைக் கட்டிக்கொடுத் தாள். ஆனால், அந்தக் குழந்தைகளை அவர்களின் தகப்பன் திரும்பவும் பூட்டி வைத்தான். சமீரா அந்தக் குழந்தைகளுக் காகத் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறாள். திரைப்படம் என்பது சில விருதுகளோடு முடிந்துபோகிற ஒன்று அல்ல. அது காலம் காலமாக மக்களின் நினைவுகளிலும் வாழ்க்கையோடும் இணைந்திருக்க வேண்டும். அப்படியான சினிமா இயக்கத்தை தமிழில் நீங்கள் தொடங்குங்கள்'' என்று எங்கள் மூவரையும் பார்த்துச் சொன்னார்.

விருதுகள் பற்றிப் பேச்சு வந்தது. ''விருதுகள் பெறுகிற மகிழ்ச்சி ஒரு நிமிடம்தான். பிறகு, அது மறந்துவிடும். ஆப்கனில் யுத்தம் நடந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. ஏனெனில், இரானின் சட்டப்படி அகதிகள் கல்வி கற்க முடியாது. நான் ஏதாவது செய்ய வேண்டுமே என்று அவர்களைப் பற்றி ஓர் ஆவணப்படம் எடுத்து அரசுக்கு அனுப்பினேன். அவர்கள் அதைப் பார்த்ததும் சட்டத்தைத் தளர்த்தி அத்தனை குழந்தை களையும் பள்ளியில் சேர்த்துக்கொண்டார் கள். ஒரு சின்ன டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படத்துக்குக் கிடைத்த மரியாதை இது. சமூகத்தில் சினிமாவின் பங்கு என்ன என்று கேட்டால், இதுதான் என்று நான் சொல்வேன். மற்றபடி இந்த விருதுகளை நான் அதிகம் பொருட்படுத் துவது இல்லை. இப்போது எப்படிப் படம் எடுத்தால் விருதுகள் கிடைக்கும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு படம் எடுக் கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அது  சினிமாவே அல்ல. நான் மக்களோடு இருக்கிறேன். அவர்களுக்கான சினிமாவையே நான் உருவாக்க விரும்புகிறேன்!''

வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். புகைப்படங்கள் எடுத்தோம். இடையிடையே மெர்ஷியா பதப்படுத்தப்பட்ட பழச்சாறைக் கொண்டுவந்து தந்து அதே மாறாத புன்னகையுடன் அமர்ந்திருந்தார். மக்மல்பஃப் சில விஷயங்களை குர்தீஷ் மொழியில் கேட்டபோது மெர்ஷியா சொன்ன பதில்களை எங்களிடம் ஆங்கிலத்தில் பகிர்ந்துகொண்டார். நாங்கள் விடைபெறும் நேரம் வந்தபோது எங்களுக் கான உபசரிப்பு குறித்து போதிய கவனிப் பினைச் செய்ய முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். அவர் நாளையும் இருக்கிற செய்தியைச் சொல்லி, முடிந்தால் நாளையும் சந்திக்கலாம் என்று சொன்னார்.

மறுநாள் இயக்குநர் பாலாஜி சக்திவேலை அழைத்துச் சென்றேன். உடன் விஸ்வாமித்திரனும் இருந்தார். அழைப்பு மணி அடித்ததும் மக்மல்பஃப் அதே வெள்ளை கதர் உடையில் கதவைத் திறந்தார். பாலாஜி சக்திவேல் அவருக்கு சால்வை அணிவித்து வணங்கினார்.
மக்மல்பஃப் நெகிழ்ந்துபோய் அவர் அணிவித்த சால்வையுடன் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தார். தங்கள் உடைமைகளைத் தவறவிட்டதால் இந்த கதர் உடையை இரவுகளில் துவைத்துப்போட்டு மூன்று நாட்களாக ஒரே உடையை அணிந்திருப்பதைப் புன்னகையுடன் சொன்னார்.
''தமிழ்ப் படம் எதுவும் பார்த்திருக்கிறீர்களா?''

''ஒன்றுகூடப்  பார்த்ததில்லை. ஆனால் பார்க்க விரும்புகிறேன். இந்திப் படங்கள் போல உங்கள் படங்களிலும் நடனமும் பாட்டும் இருக்குமா?'' என்று கேட்டுப் புன்னகைத்தார். ''இந்தியப் படங்களில் நான் பார்த்த ஒரே படம் 'பதேர் பாஞ்சாலி’. மனம் சோர்வடையும்போது ரேயின் 'பதேர் பாஞ்சாலி’, ஃபெலினியின் 'லாஸ்ட்ரடாஇரண்டு படங்களையும் பார்ப்பேன்'' என்று சொன்னார். நேற்று பர்மா பஜார் போகும்போது அவரது படங்கள், மெர்ஷியாவின் படங்கள் உள்ளிட்ட உலகப் படங்களின் குறுந்தகடு கள் குறைந்த விலையில் கிடைப்பது குறித்து ஆச்சர்யமாகச் சொன்னார்.

''என்னைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று என்னிடமே பிரதி இல்லை. ஆனால், உங்கள் ஊரில் கிடைக்கிறது. இரண்டு பிரதிகள் வாங்கினேன்!'' என்று சொல்லி அதில் ஒரு பிரதியை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். நாளை அதிகாலை விமானம் என்பதால் இன்று மாலை படப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டு கிளம்ப வேண்டும் என்று சொன்னார். வாய்ப்பு இருந்தால் திரும்பவும் விரைவில் இந்தியா வருவதாகவும் தமிழில் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு படம் எடுக்கலாம் என்றும் சொன்னார்.

விடைபெறும் தருணம். எல்லோரும் இணைந்து நிழற்படம் எடுக்க வேண்டும் என்பதால், கேமராவை மேசையில் சாயாமல் வைத்து, அதன் தானியங்கியை இயக்கி ஓடிவந்து அவர்களுடன் நின்று கொண்டேன். ர்ஞ்ஞென்று சத்தம் கேட்க... நாங்கள் அனைவரும் மேசையில் இருக்கும் கேமராவைப் பார்த்து நின்றிருந்த கணம் அற்புதமானது. விடைபெற்று வெளியில் வந்தோம். அந்த எளிமையும் கனிவும் வழிகாட்டுதலும் முழுப் பயணத்துக்குமான ஒரு சுடரைக் கையில் தந்ததுபோல் இருந்தது.

---------------------------------------------------------------------------யாஸிர்.