வியாழன், ஜனவரி 19, 2017

போராட்டம்.

ஒன்னு மட்டும் எனக்கு புரியவே இல்ல, நாம எதுக்கு எல்லா போராட்டத்துக்கும் நடிகர் நடிகையோட சப்போர்ட்டை எதிர்ப்பாக்குறோம்?. சினிமாக்காரன் கு பின்னாடி நின்னு போராட்டம் பண்ணினால்தான் மதிப்பா?. நேத்துவரை ‘’ரஜினி எதுக்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?’’ என கண்டனம் தெரிவித்தவர்கள், ஆதரவு தெரிவித்தவுடன் ‘’உன் ஆதரவு யாருக்கு வேண்டும், முதல்ல உன் மகளையும், மருமகனையும் பீட்டாவை விட்டு வெளியேறச் சொல்லு?’’ என அடுத்த கண்டனம். 

சினிமா துறை சார்ந்தவர்கள் அவர்களுடய தனிப்பட்ட ஈடுபாட்டின் பேரில் கலந்துகொள்வது என்பது வேறு, அவர்களை கட்டாயப்படுத்தி அல்லது கிட்டத்தட்ட மிரட்டி சப்போர்ட் செய்யவைப்பது என்பது வேறு. காவிரிப் பிரட்சனையில் சினிமாத் துறையின் அனைத்து போராட்டங்களும் / உண்ணாவிரதங்களும் மேற்கூறிய இரண்டாம் வகையே. அதன் மூலமாக நாம் சாதித்தது என்ன?. தண்ணீர் வந்துவிட்டதா?. மக்களின் போராட்டத்திற்கு அஞ்சாத அரசா, சினிமாக்காரர்களின் ‘உ.வி’க்கு அஞ்சி தண்ணி திறந்துவிடப்போகிறது?.

சல்லிக்கட்டு விவகாரத்தில்,  ஹிப் ஹாப் தமிழா ஆதி தவிர்த்து, இதனை ஆதரிக்கும் எந்த சினிமா பிரபலங்கள் மீதும் எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆதி ஒருவர்தான் முதலிருந்தே இந்த விஷயத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் எல்லாம், தற்போதய போராட்ட வீரியத்தைக் கண்டு களத்திற்கு வந்தவர்கள். சிம்பு, ஜி.வி பிரகாஷ்சை எல்லாம் நம்புவது என்பது வளர்மதியை நம்பும் அதிமுககாரன் மாதிரிதான். சிம்பு பேட்டியை பார்க்கும்போதே இது பக்கா ஸ்கிர்ப்ட் என தெரியும், தெரியவில்லை என்றால் நம்மக்கு முன்னாடி ஒரு உணர்ச்சித் திரை இருக்கிறது என பொருள்படுக.

ஒரு தலமை இன்றி, எந்தவித சுய ஆதாயமும் இன்றி இவ்வளவு பெரிய போராட்டம் நடப்பது என்பது மிகப்பெரிய ஆச்சர்யம், அதிசயம். சல்லிக்கட்டு விசயத்தில் இது மிகப்பெரிய நம்பிக்கை தரக்கூடியது. களத்தில் போராடும் இளைஞர்களுக்கும், மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள். கூட்டம் கூடுவதோ அல்லது கூட்டுவதோ பெரிய விசயமில்லை, ஆனால் தொடர்ந்து மூன்று நாட்கள், நான்கு நாட்கள் என நீண்டுகொண்டு போவதுதான் பிரமிப்பை தருகிறது.

இது சல்லிக்கட்டு என்ற ஒன்றுக்கான போராட்டம் மட்டுமில்லை.

சல்லிக்கட்டிற்காகத்தான் இந்த போராட்டம் என்றால் அது இரண்டு வருடத்திற்கு முன்பாகவே நடந்திருக்க வேண்டும். ‘’குட்டுப்பட்ட குட்டுப்பட்ட கூட்டம், குனிந்த கதை போதும், பொறுமை மீறும் போது, புழுவும் புலியாகும்’’ என்ற சிட்டிசன் பாடல் வரியின்படி, தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்ற ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த போராட்டம் இது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்த போராட்டம் நடந்திருக்குமா? என்றால், என்னைப் பொருத்தவரை, நடந்திருக்கும் ஆனால் இந்த அளவிற்கு பெரிய அளவிற்கு நடந்திருக்காது.

பன்னீர் செல்வத்தினாலோ, அல்லது சசிகலாவாலோ இதை தடுத்திருக்க முடியுமா? என்றால்,  முடியும். ஆனால், அதில் ஏதாவது பிசுறு ஏற்பட்டால், அதை வைத்து மத்திய அரசு ஏதாவது செய்துவிடும் என்ற பயமோ அல்லது சசிகலா முதல்வராக கூடுதல் எதிர்ப்பு ஏற்படுமோ என்ற பயமோ காரணமாக இருக்கலாம். ‘’இல்லாட்ட மட்டும் கிளிச்சுத் தள்ளியிருப்பாய்ங்க’’ என்று உங்களுத் தோன்றலாம். ஒன்றும் சொல்வதற்கில்லை.

என்னோடு (சவுதியில்) ஒரு கர்நாடகப் பையன் வேலை செய்கிறான், சல்லிக்கட்டிற்கான போராட்டம் பற்றி அவன் இன்றுதான் என்னிடம் ‘’ நீ ஏன் சல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?’’ என்று கேட்டான். ‘’ ’நானும் சல்லிக்கட்டை ஆதரிக்கிறேன், எதுக்கு கேக்குற?’’ என்று கேட்டேன். ‘’இல்ல என்னோட தமிழ் பிரண்ட்ஸ் எல்லோரும் சப்போர்ட் பண்ணி நிறைய போஸ்ட் போடுறாங்க ஆனா உன்னோட பே.புக்கில் அதுமாதிரி ஒன்னுமே இல்லையே அதனால கேட்டேன்’’ என்றான். ‘’ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி உள்ள போஸ்ட்ட போய் பாரு, பொது சிவில் சட்டத்துக்கு எதிரா போஸ்ட் போட்டிருப்பேன்’’ என்றேன். அவனுக்கு புரியவில்லை என்பதிலிருந்து ‘’இன்னும் பயிற்சி வேண்டும்’’ என்று எண்ணிக்கொண்டேன்.

பொது சிவில் சட்டம் கொண்டுவந்துட்டா சல்லிக்கட்டு மாதிரி பண்பாடு, கலாச்சாரம், இனம், மொழி......etc., சம்பந்தமான ஆயிரம் அடையாளங்களை அழிச்சிடலாம். அதுக்கப்புறம் ‘’கம்பங்கூழ் நான் ஏன் குடிச்சு ஆரோக்கியமா இருக்கக்கூடாது?’’ன்னு நீ கேட்க முடியாது. ‘’கோக்’’தான் நீ குடிச்சு வயிறு புண்ணாகி சாகனும்னு அவன் சொல்லுறதத்தான் கேட்கணும். மாநிலத்துக்குன்னு எதுக்கு ஒரு அரசு வேண்டும்? அதற்கு என்று எதற்கு சில அதிகாரங்கள் வேண்டும்? என்பதை விளங்கவேண்டும். அதுபோன்ற மாநில அதிகாரங்களைக் கொண்டுதான் நாம் நம்முடைய வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாட்டை......etc காத்துக்கொள்ள முடியும்.

இனி மாநிலத்திற்கு ஒரு மண்ணும் கிடையாது எல்லா ஆணியையும் நாங்க புடிங்கிக்கிறோம்னு சொன்னா, சல்லிக்கட்டு மட்டும் இல்ல, நாம் கும்புடுற சுடல மாடசாமி, கரடி மாடசாமி எல்லாம் சாமியே இல்லன்னு சொல்லுவான். நாமளும் மூடிக்கிட்டு ‘’கும்புடுறேன் சாமி’’ன்னு கைகட்டி நிக்கனும்.. இங்க பலருக்கு ஏன் நீட் (NEET) மருத்துவத் தேர்வை எதிர்கிறார்கள்? என்றே தெரியவில்லை. கல்வி விசயத்துல மாநில உரிமையை பறிப்பதுதான் நீட் (NEET) தேர்வு முறை. தமிழகத்திற்கான மாணவர் எண்ணிக்கையில் குறைவு வராது, இது திறமையை கண்டறியும் தேர்வு என்று வடை சுடுபவர்களிடம் ஒன்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. அந்த திறமையை நாங்களே தேர்வு வைத்து கண்டுபிடிச்சிக்கிறோம். நீங்க ஒரு முடியையும் புடுங்கவேண்டாம். பொறியியல், மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வு என்பது தமிழ்நாட்டில் ஏற்கனெவே நடைமுறையில் இருந்ததுதான். அதையே நாங்க திரும்ப கொண்டுவந்துகொள்கிறோம்.

இந்த போராட்டம் விவசாயிகள் மரணத்திற்கும் மற்ற இன்ன பிற விசயங்களுக்கும் இனி நடக்கும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது ஏதோ உணர்ச்சி வசத்தால் பேசுவதாகவே நான் கருதுகிறேன். அப்படி நடைபெற்றால் உண்மையில் சந்தோசம்தான். சல்லிக்கட்டில் சாதிய சார்பு இல்லாதது என்பதை ஒட்டுமொத்தமாக புறம் தள்ளிவிடமுடியாது, இது போராடுற பலபேருக்குத் தெரியும், இருந்தும் எல்லோரும் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிற்க காரணம், இப்பவும் சொல்கிறேன் இது சல்லிக்கட்டிற்கான போராட்டம் மட்டும் அல்ல, சல்லிகட்டின் பெயரில் நடக்கும் தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுப் போராட்டம்.
       
காவிரி, முல்லைப் பெரியாறு, மீத்தேன் திட்டம், சம்ஸ்கிரத / இந்தி திணிப்பு, பொங்கல் விடுமுறை என வஞ்சிக்கப்பட்ட ஒரு இனத்தின் உணர்ச்சி வெடிப்பு. சமூக வலைதளங்களின் மூலமாகத்தான் இந்த எழுச்சி ஏற்பட்டது  எவ்வளவு உண்மையோ அதே அளவு அபத்தங்கள்தான் சல்லிக்கட்டை முன்வைத்துக்கொண்டு அங்கு நடந்துகொண்டிருப்பது. திரிசா, விஷால் மேட்டர், பஞ்சாப் அரசியல் கூட்டம் போட்டோவை மதுரை சல்லிக்கட்டு போராட்டம் என கூறுவது என எவ்வளவோ இருக்கிறது. முக்கியமான ஒன்று, தமிழகத்தில் இதுதான் முதன்முறையான அறப் போராட்டமாம்??? பார்த்தவுடனே தொங்கிரலாமுன்னு தோணுச்சு. மருந்திற்குக் கூட கூடங்குளம் போராட்டம் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.

‘’இந்த சுதந்திரத்தால் ஆதிக்க சாதியினர் கைதான் ஓங்கும், ஆகையால் ஆகஸ்டு 15 கருப்பு நாள்’’ என்று பேசிய பெரியாரை தேசதுரோகி என்ற நாம்தான், இன்று குடியரசு தினவிழாவை கருப்பு தினமாக கடைபிடிக்கச் சொல்கிறோம். லத்தி சார்ஜ்ஜை கண்டித்து தமிழ்நாடு இனி தனி நாடாகும் என்று கொதிக்கும் நாம் பெல்லட் குண்டில் செத்த காஷ்மீர்காரர்களைப் பார்த்து நகைத்தோம். எவ்வளவு நடைமுறை முறண் ?.  

தன்னோட உரிமையை பறிக்கும்போது, தன்னுடய கலாச்சாரத்தில் கைவைக்கும்போது, உணர்சியைத் தூண்டும்போது, அங்கு போராட்டம் / புரட்சி வெடிக்கும். இது எல்லா இடத்திற்கும் பொருந்தும். இதுமாதிரியான போராட்டங்களை அரசு எப்படி கையாளுகின்றது பெல்லட் குண்டு வைத்தா? லத்தி ஜார்ஜ் செய்தா? அல்லது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டேவா? என்பதில்தான் அது காஷ்மீரா, தமிழ்நாடா இல்லை மற்றவையா என்பது தெரியும்.

ரெண்டு வருசத்துல 20க்கும் மேற்பட்ட அவசரச் சட்டம் போட்டவர்களுக்கு, சல்லிக்கட்டிற்கு ஒரு அவசரச் சட்டம் கொண்டுவர முடியாதா?. முந்தய ஆட்சியில் ஊழல் நடந்ததாகச் சொல்லப்பட்டு தடைசெய்த நிலக்கரி ஏல முறையை, அவசர சட்டம் கொண்டு மீண்டும் ஏலம் விட்டவர்களால் இதற்கு ஒரு அ.சட்டம் கொண்டுவருவதா கஷ்டம்?

அரசியலை நாம் ஆழப் படிக்காவிட்டாலும் அளவாகவாது படிக்கவேண்டும்.

---------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், டிசம்பர் 27, 2016

பிங்கி.

மஞ்சள், பச்சை, ஊதா, பிங்க்....... என கலர் கலரா அந்த கோழிக் குஞ்சுகளைக் காணும் போதே மனசுக்கு, புது ரெண்டாயிரம் நோட்டுக்கு சில்லரை கிடைத்த மாதிரியான சந்தோசம் ஏற்படும்.  ஒரு காலத்தில் அதுதான் எங்க உலகம். கரடி பொம்மை எல்லாம் எப்படி மெஷினில் தயாராகிறதோ அதே போலத்தான், கரண்டின் மூலமாக ‘’கரண்ட் குஞ்சு’’ உருவாகிறது என்று எண்ணிக்கொண்டிருந்தோம். ‘’பச்ச சுட்சை போட்டால் பச்ச குஞ்சு வரும்’’, ‘’மஞ்ச சுட்ச போட்டால் மஞ்சள் குஞ்சு வரும்’’ என அரையடி அப்துல் கலாம்கள் கூறுவதை ‘’ஆ’’ ன்னு வாய் திறந்து கேட்டு நம்பிக்கொண்டிருந்தோம்.

டபுள் மீனிங் என்றால் ‘’எந்த ஊர்?’’ என்று எதிர் கேள்வி கேட்ட அந்த பால்யத்தில் ‘’என்னோட குஞ்சு வளந்திருச்சு”, ‘’உன்னோடது சின்ன குஞ்சு’’ ‘’அவன் குஞ்சு வெள்ளையா இருக்கும்’’ என பொது இடத்தில் பேசி பெரியவர்களிடம் மரண அடிவாங்கி இருக்கிறோம். ‘’எதுக்கு அடிக்கிறாரு?’’, ‘’அவர் குஞ்சு செத்துப்போயிருக்கும் அந்த கோவத்துல நம்மள அடிக்கிறாரு’’ என்று எங்களுக்கு நாங்களே சமாதானம் சொல்லிக் கொள்வோம். பின்பாக, அடிக்கான உண்மையான காரணம் தெரிந்து அதிகம் கோவம் வந்தது. ‘’வராதா பின்ன...., நேத்திக்கு வரைக்கும் அந்த மர்ம தேசத்தை ‘’சக்கரை’’ என்ற பெயரில் அழைத்துவிட்டு, திடீரென 500, 1000 செல்லாது இனி 2000 தான்னு சொன்னா நாங்க என்ன தொக்கா?’’. என கோபத்தில் கத்தியபோது, சில நல்லுள்ளங்கள் எல்லை ராணுவ வீரர்களின் கதைகளைச் சொல்லி சமாதானம் செய்தனர்.

குஞ்சு என்பது கெட்ட வார்த்தையாகிவிட்டதால், இனி கோழிக் குஞ்சை, கோழிக் குட்டி என்றா சொல்லமுடியும்?. விவாதத்துக்கு சரி என்றாலும்  ‘’கலர் கலரான குட்டிகள்’’ என்று சொல்லும் போது, அது ‘’அண்டர் ஈவ்டீசிங் ஆக்ட் 420’’ பிரிவில் வரும். (என்னடா தமிழுக்கு வந்த சோதனை).

காலையில் குரான் கிளாஸுக்கு போய்விட்டு திரும்பும் போது, பள்ளிவாசலுக்கு பக்கத்தில் அந்த டீ கடை எதிரில் தான்,  கலர் கலரான குஞ்சிகள் விற்கப்படும். ஒவ்வொரு சல்லடைப் பெட்டியிலும் ஒவ்வொரு கலர் குஞ்சிகள் இருக்கும், இப்படியாக 4 அல்லது 5 அடுக்கு பெட்டிகளை டி.வி எஸ் 50 ல் கொண்டுவந்து பெரிய வட்டமாக அட்டையை தடுப்பாக வைத்து, அந்த குஞ்சிகளை சல்லடைப் பெட்டியில் இருந்து திறந்துவிடும் போது மெல்லிய ‘’கீச் கீச்’’ சப்தத்தோடு, அந்த சின்ன கால்கொண்டு குதித்து குதித்து வெளியில் ஓடி வரும் அழகே அழகு. எத்தனை கலர் இருந்தாலும், எனக்கு என்னவோ பிங்க் கலர் குஞ்சுகள் கூடுதல் அழகாகத் தோன்றும்.

ஒரு குஞ்சின் விலை 3 ரூபாய். பெரும்பாலும் யாரும் அப்படி 3 ரூபாய் கொடுத்து வாங்குவதில்லை. எல்லோருக்குமே, குலுக்கல் முறையில் வாங்குவதற்குத்தான் அவ்வளவு இஷ்டம். ஒரு டோக்கனுக்கு 50 காசு, குலுக்கலில் நம்பர் வருபவனுக்கு ரெண்டு கோழி குஞ்சு கிடைக்கும். ஆறு முறை தோற்பதற்குப் பதில், 3 ரூபாய் கொடுத்து ஒரு குஞ்சு வாங்க யாருக்கும் மனசு வராது. பத்து ரூபாய் போனாலும் குலுக்கலில் ஜெயிச்சு குஞ்சு வாங்குறதுதான் திரில்லே. அந்த இன்பம் அலாதியானது.

என்னோட முதல் குஞ்சுகள் அப்படி கிடைத்தவைதான். ரெண்டுமே பிங்க் கலரில் கொடுக்க மறுத்ததால், ஒரு பிங்க், ஒரு பச்சை என வாங்கிக்கொண்டேன். ‘’அந்த சின்ன வாயில் எப்படி முழு அரிசி போகும்?’’ என யோசித்து, அரிசியை ரெண்டாக உடைத்த சம்பவங்களும் உண்டு. இந்த விஞ்ஞானத்தை வீட்டில் செய்தால் வூடு கட்டிவிடுவார்கள் என்பதால் பள்ளியில் வைத்து செய்ய, பள்ளிக்கூடம் போகும் போதே கொஞ்சம் அரிசியை அள்ளிக்கொண்டு போவேன். இப்படி உடைக்கும் போது, லைட்டா பசி எடுக்கும் ஆகையால், வீடு திரும்பும்போது, அரிசியில் பாதிதான் இருக்கும்.

இந்த குஞ்சியோட ஸ்பெஸாலிட்டியே அஞ்சு நாளைக்கு மேல் உயிரோட இருக்காது. அதற்கு மேல் இருந்தால் பெரிய்ய ஆச்சர்யம்/திறமை/யோகம்.....தான். என்னோட முதல் குஞ்சில் ஒரு குஞ்சு, வாங்கி வந்த ரெண்டாவது நாளே இறந்துவிட்டது. பச்சை கலர் குஞ்சி என்பதால் பெரிய துக்கம் ஏற்படவில்லை. ஒருவேளை, பிங்க் செத்திருந்தால் பச்சையை நானே கொன்டிருப்பேன். அம்புட்டு பாசம் ‘’பிங்கி’’ மேல். ஆம் அது தான் அவள் பெயர்.  பச்சைக்கு என்ன பெயர் வைத்தேன் என்று ஞாபகம் இல்லை. ஒரு வேளை பெயர் வைப்பதற்கு முன்போ போய் சேர்ந்திருக்கலாம்.

பச்சை குஞ்சு செத்தபின்னாடி, எல்லோரும் பிங்கியும் செத்துவிடுவாள் என்றார்கள். அதற்கு காரணம், கலர் குஞ்சுகள் ஜோடியாகவோ அல்லது கூட்டமாகவோ இருந்தால்தான் உயிரோட இருக்குமாம். தனியாக இருந்தால் உடனே செத்துவிடும் என்பார்கள். அதனால்தான் இந்த கோழிக்குஞ்சுகளை வாங்கும்போது இரண்டாகவோ, மூன்றாகவோ வாங்குவார்கள்.

பூனை, காக்கா, அக்கா...... என எல்லோரிடமிருந்தும் என் பிங்கியை காப்பாற்ற படாத பாடு படவேண்டும். இந்த குஞ்சிகளுக்கு அதிகமா குளிரும் ஆகாது, அதிக வெயிலும் ஆகாது. நாம குஞ்சி வாங்குன சமயத்துலதான் வராத ‘’வர்தா’’ புயல் எல்லாம் வரும், ‘’அக்னி நட்சத்திரம்’’ ரி ரிலீஸ்ஸாகி ஓடும். என் கூட்டத்தில் எல்லோரிடமும் இந்த கலர் குஞ்சிகள் இருக்கும். டெய்லி ஒவ்வொருத்தன் வீட்டிலும் ஒரு இரங்கல் கூட்டம் நடக்கும்.

கொஞ்ச நாட்களுக்கு அப்புறம், வீட்டிற்குள் எங்கு போனாலும் என் பின்னாடியே வரும். பூனையிடமிருந்து தப்பித்து அந்த சின்ன காலால் குதித்து குதித்து உசுருக்கு பயந்து ஓடி வந்தது,  கோபத்தில் பூனையை அடிக்க கிளம்பி குப்புற விழுந்தது, நண்பனோட குஞ்சை காக்கா தூக்கிச் சென்றபோது, பத்து தெருவரை காக்காவை துரத்திச் சென்றது என எல்லாமே கண்முன் நிற்கிறது.

இதுதான் பிராய்லர் கோழி என்று தெரிந்திருக்கவில்லை. இது தனி இனம், வளர்ந்த பின்னாடியும் பிங்க் கலராகவே இருக்கும் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன். பிங்கி கொஞ்சம் வளர்ந்த பின்பு, சாயம் வெளுக்க ஆரம்பித்தது. அதற்கு பின்பாகத்தான் இது வளர்ந்த பின்பு பிராய்லர் கோழியாக வரும் என்ற உண்மை தெரிந்தது. சாயம் போகப் போக பிங்கியும் வளர்ந்தாள், சாயம் மொத்தமாக போன பின்னாடி ‘’பிங்கி’’ என்று அழைக்கமுடியாது, ஆகையால் ‘’வெள்ளச்சி’’ என்ற பெயரும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பிங்கி வளர்ந்து பெரியவளா ஆனபின்பு பிராய்லர் கோழியாகத்தான் வருவாள் என்று தெரிந்த பின்பு, மூளையில் பிஸினஸ் ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பித்தது. அப்போது பிராய்லர் கோழியின் விலை கிலோ 50 ரூபாய். இன்னும் ஐந்து மாதம் பிங்கியை வளர்த்தால் எப்படியும் ஒரு கிலோ தேரிவிடுவாள், அப்படியென்றால், ஐந்து மாதத்தில் லாபம்  47 ரூபாய். இதையே பத்து பிங்கி வாங்கினால் பிங்கி பிங்கி பாங்கி...............என்று லாபக் கணக்கை கைகொண்டு எண்ணி ‘’சொக்கா’’ ‘’சொக்கா’’ என சந்தோசம் அடைந்தேன். கனவில் பெரிய காரில் வந்து இறங்குவது போலவும், கதவை திறக்க ரெண்டு பாடிசோடாக்கள், குளிர்சாதன அறையில் என் பெரிய சேருக்கு பின்னால் பெரிய சைஸ் பிங்கியின் போட்டோ....................என கனவு கன்னா பின்னாவென்று கரைபுரண்டு ஓடியது.

ஒரு முறை, கதவு பக்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கையில் பிங்கியின் ஒரு கால் நஞ்சிவிட்டது. களத்தூர் கண்ணம்மா கமல் மாதிரி தத்தித் தாவி நடந்த பிங்கியை 16 வயதினிலே சப்பாணி கமல் மாதிரி விஸ்கி விஸ்கி நடப்பதைப் பார்த்து கண்ணில் ஜலம் வச்சுட்டேன்.

எனக்கு ஒரு முறை காய்ச்சல் வந்த சமயம், பக்கத்து வீட்டு தாய் கிழவி அம்மாவிடம், ‘’தைலத்தை நல்லா ஆவி பறக்க தேச்சுவிட்டு, கணத்த போர்வையால நல்லா வேக்கும் வரை மூடி தூங்க வையு, மறுநாள் பேய்க் காய்ச்சனாலும் பின்பக்கமா ஒடிரும்’’ ன்னு சொல்லிச்சு, அதேமாதிரி காலையில் காய்ச்சலும் காணாமல் போச்சு. அதே முறையில் ‘’குணப்படுத்துறேன் பார்’’ என்று இருக்குற ‘கோடரி தைலம்’, ‘மீசைக்கார தைலம்’, ‘டைகர் பாம்’ என எல்லாத்தையும் எடுத்து பிங்கிக்கு தேய்த்துவிட்டேன். போர்வையால் பிங்கியை மூட முடியுமா? அதனால் ஒரு சின்ன பானையை வைத்து மூடினேன். ‘காற்று போகாமல் இருந்தால் தானே வேர்வை வரும்’ என்பதை யோசித்து பானைக்கு மேல் ஒரு 2 கிலோ எடைப் படியையும் வைத்துவிட்டு தூங்கினேன்.

மறுநாள் காலை, பிங்கி மர்கயா.

ப்பிங்கிய்.................ன்னு நான் கத்தும்போது கனவில் என் சீட்டிக்குப் பின்னால் இருந்த பிங்கியின் போட்டோ சைடாக தொங்கியது, பாடி சோடாக்கள் திறந்த கதவு மூடியது, வந்த கார் பின்னாடி நோக்கிச் சென்றது. ஸோ சாட். பிங்கியை எங்கள் வீட்டு தொழுவத்தில் புதைக்கும் போது, கோழி வியாபாரத்தில் கோடிஸ்வரனாகும் ஒருவனின் கனவும் சேர்ந்து புதைந்து போனது. KFC கடைகளைப் பார்க்கும் போதெல்லாம் ‘’பிங்கி மட்டும் இருந்திருந்தா இவனுங்க எல்லாம் இந்தியாவுக்குள்ள காலெடி எடுத்து வச்சிருக்க முடியுமா?’’ என்ற எண்ணம் வரும்.  ம்ம்ம்.........

இப்பவும் எங்காவது கரண்ட்/கலர் குஞ்சுகளைப் பார்க்கும் போதெல்லாம் பிங்கி ஞாபகமாகம் வரும். அதை தூக்கி தலையில் வைத்துக்கொள்வேன். அந்த பிஞ்சு கால் நகங்கள், வரண்ட என் தலையை வருடும்போது, இருண்ட இந்த உலகின் இனிமையான நினைவுகளை கிளரிக் கொடுக்கும்.
--------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

புதன், நவம்பர் 23, 2016

வழுக்கத்தலை வாலிபர் சங்கம்.

தலையில் முடியில்லாதவனோட வலி, இன்னொரு முடியில்லாதவனுக்குத்தான் தெரியும்.

என் வயது ஆண்கள் எல்லாம் இணையதளத்தில் எதை எதையோ தேடும் போது, நான் மட்டும் எனக்கு பொருத்தமான கெட்டப்பை தேடியே பல ஜி.பி டேட்டாக்களை காலி செய்திருக்கிறேன். இது இன்று அல்ல, இணையதளம் எனக்கு அறிமுகம் ஆன காலம் தொட்டு நடக்கும் நொஸ்டால்ஜிக் (Nostalgic) கதை. படிக்கும் காலங்களில், நிறம், உயரம், எடை போன்ற அம்சங்களை கொடுத்தால் நமக்குத் தேவையான தோற்றத்தை திரையில் காட்டும் இணையதளங்களை என் இமெயிலைவிட அதிகமாக ஓப்பன் செய்து பார்த்திருக்கின்றேன்.

ஊரே ஒன்று கூடி கம்யூட்டர் லேப்பில் வண்ணத்திரை நடிகைகளை வடியவிட்டு (வாயில்) பார்க்கும் அதே நேரத்தில்தான் கார்னர் ஓரத்தில் இருக்கும் கம்யூட்டரிடம் என் சோகத்தைச் சொல்லி, அழகு தோற்றம் பெற ஆலோசனைகள் கேட்பேன். அதை ஆலோசனை என்று கூற முடியாது, காளிதாஸ் படத்தில் காளியாயிடம் ‘’அறிவும், புத்தியும் கொடு, அது என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா?’’ என கேட்கும் சிவாஜி கணேசன் போல வேண்டி, ‘’யார் தருவார் இந்த அரியாசணம்’’ என்ற சக்ஸஸ் ரிசல்ட்டிற்காக கிடந்த தவம் என்றுதான் சொல்ல வேண்டும். 
   
எல்லா வெப்சைட்களும் சொல்லிவைத்தது போல, ‘’வழுக்கைத் தலைக்காரர்கள் தாடி வைத்தால் அழகாக இருக்கும்’’ என்றே சொல்லியது. முன்-சொட்டை என்றால், முழுதாடி. பின்-சொட்டை என்றால், பிரஞ்ச் பியர்ட் என்ற பஞ்சதந்திர தாடி என வகை வகையான தாடிகளை கம்யூட்டரில் கண்டு காண்டாகிக் கொண்டிருந்த காலம் அது. அந்த காலத்தில், ‘மீசை’க்காக  முக்கிக்கொண்டிருந்த நான், தாடிக்கு எங்கு போவேன்? யாரைக் கேட்பேன்?. இதுபோன்ற கொடுமையான நரக வேதனை, எனக்கு பெண் பார்த்து கட்டிவைத்தவர்களுக்குக்கூட வரக்கூடாது.

‘’ஒல்லியான உடல், 53 கிலோ எடை, வழுக்கை என்றோ இல்லை என்றோ உறுதிப் படுத்த இயலாத தலையுடைய சிம்மராசிக்கார்களே........’’ என்று ஆருடம் சொன்ன வெப்சைட்டை நம்பி மீசை எடுக்கத் தீர்மானித்தேன். ஆம், முதல் மீசை ஷேவிங். காலேஜ் முதல் வருடம், மீசையோடு இருப்பவர்களை தேடிப் பிடித்து ஷேவிங்க் செய்வதையே பார் டைம் ஜாப்பாக சில மாணவர்கள் செய்துகொண்டிருந்தார்கள். கடா மீசை வைத்திருந்தவனை எல்லாம், மீசை இல்லாமல் பார்ப்பது என்பது ரெக்கை படத்தில் லெட்சுமி மேனனை குளோசப்பில் பார்ப்பது போன்ற ஹாரர்ரான விஷயம். 

‘’மீசை எடுத்த பின்பு சும்மா ஹிந்தி ஹீரோ மாதிரி இருந்தேன்’’. என்று சொன்னால் நம்பவா போகுறீர்கள்?. இருந்தேன். ராசியான நம்பர் ஒன்பது என்று அங்கயும் இல்லாம, இங்கயும் இல்லாம. மீசை எடுத்த பின்புதான் ஞாபகம் வந்தது நாலு நாள் லீவிற்கு ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது. மீசை இல்லாமல் எப்படி ஊருக்கு போவது?. ‘’ஊரே, செத்த விட்டிற்கு துஷ்டி கேட்க வருவதுபோல கிழவிகள் எல்லாம் சீலையால் மூக்கை பொத்திக்கொண்டு வருமே’’ என மனதில் எழுந்த பல கேள்விகளுக்கு பதில் தெரியாமலேயே பஸ் ஏறினேன்.

‘’என்றா, நம்ம வீர் வம்ச மீச எங்கடா?’’ என அப்பா கேட்கும் முன்பே, ‘’காலேஜ்ல சீனியர்ஸ் மீசை வைக்கக்கூடாதுன்னு சொன்னதால எடுத்திட்டேன்பா’’ என்று சமாளித்தேன். மீசை இல்லாமல் வெளியே போய் அசிங்கப்பட வெட்கப்பட்டு, நான்கு நாளும் வீட்டிலேயே இருந்தேன். அதைப் பார்த்த அம்மாவும், அக்காவும் ‘’புள்ள நம்மள நெனச்சு ஏங்கிப் போய் கெடந்திருக்கு, அதான் வீட்டையே சுத்தி சுத்தி வருது’’ என்ற பெருமை பீத்தல் வேறு. லீவு முடிந்து காலேஜ் செல்ல தயாரான போது அப்பாவும் என்னோடு வர ரெடியானார். விசாரித்த போது, ‘’எங்க காலேஜ்ல ராக்கிங் எல்லாம் கிடையாதுன்னு உங்க பிரின்ஸ்பால் பெரிய்ய இவனாட்டம் சொன்னான், இது மட்டும் என்னவாம்?’’ என மீசையைக் காட்டி நியாயம் கேட்க நின்றார்.

''நியாயம்டா'', ''நேர்மைடா'', ''நாக்கப் புடுங்குறமாதிரி கேட்பேண்டா''.... என நாட்டமை விஜயகுமார் மாதிரி விரைப்பாக நின்றவரைப் பார்த்து, அடுத்த வாரத்திற்கும் சேர்த்து ‘ஆய்’ வருவது போல வயிறு கலக்கியது. கபாலம் கலங்கியது. ‘’உங்க பையன் பெரிய ’இஞ்சினியர்’ ஆகி பக்கத்து கிராமத்துக்கு இலவசமா வைத்தியம் பார்க்கனும்னா, இத நீங்க பொருத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்’’ என அப்பாவின் அறிவு விளக்கில் எண்ணெய் ஊற்றி, ஞான ஜோதியை எரியவிட்டு பஸ் ஏறுவதற்குள், தலையில் இருந்த கொஞ்ச முடியும் விழுந்துவிட்டது.

‘’பின் வழுக்கை விழுந்தவர்களுக்கு தாடி இருந்தால் அழகாக இருக்கும்’’ என்ற சொட்டகிரஸ் விதிப்படி, உரம் போட்டு தாடி வளர்ந்து நிமிர்ந்தால், பின் வழுக்கை முன்னேறி முன் வழுக்கையாக மாறி இருக்கும். ‘’முன் வழுக்கையை மறைப்பது எப்படி?’’ என்ற அகழ்வாராய்ட்சியில் இறங்கினேன். ‘’சைடில் நன்றாக முடியை வளர்த்து அதை முன்பக்கமாக கொண்டு வந்து நிற்க வைக்க வேண்டும்’’ என்பதை கண்டறிந்து, கண்ணாடியில் சைடைப் பார்த்தால், சைடிஷ்ற்கு தொட்டுத் திண்ணும் அளவிற்குத்தான் இருந்தது. மிஸன் கேன்சல்.
  
ஆராய்ச்சி ஒரு புறம் நடந்த்கொண்டிருந்தாலும், காலம் என்னை கல்ஃபிற்கு (Gulf) கொண்டுவந்து சேர்த்திருந்தது. வளைகுடாவில் இந்த தலையுடன் வெளியே எங்காவது சென்றால், தெரிந்தவன் எல்லாம் ‘’கல்ஃப் கேட்’’டிற்கு போகச் சொன்னார்கள். நான் ‘கல்ப் கேட்’ என்றால் ஏதோ ‘இண்டியன் கேட்’ போல ஒரு இடம் அங்கு எவனாவது வழுக்கைக்கு லேஹியம் கொடுப்பான், வாங்கி நக்கிக் கொண்டு வரலாம் என்று நினைத்தேன். பின்புதான் தெரிந்தது அது ‘’விக்’’ வைக்கும் இடமென்று. ‘’தேவையானி புருசன் ராஜ்குமார்’’ என்று கேள்விப்பட்டதற்கு பின்பு, அன்றைக்குத்தான் இரண்டாவதாக அந்த வார்த்தையைச் சொன்னேன் ‘’ஆண்டவா இது என்ன சோதனை’’.

வழுக்கையாக இருக்கும் ஹாலிவுட் நடிகர்களைப் பார்த்து அவர்களைப் போல் நாமும் மாறிவிடலாம் என முடிவுசெய்து புரிந்த, புரியாத ஆங்கிலப் படங்களை எல்லாம் பார்த்தேன். அதில் அகப்பட்டவர்தான் நடிகர் ‘’வின் டீசல்’’. அவரைப் போல் நானும் மொட்டையடித்து, ஷேவிங் எல்லாம் செய்து கண்ணாடி முன்னாடி நின்றால், வின் டீசலை டீசல் ஊற்றி கொழுத்திப்போட்டது போன்று இருந்தது. வி.டீசலுடய தலையையும், முகத்தைப் பார்த்த நான் அந்த கட்டுடலில் வீங்கி இருக்கும் சதைப் பிண்டங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதன் விளைவு அது. நமக்கும் அது போன்ற வீக்கங்கள் வேண்டும் என்றால் பத்து பேர் கும்மினால் ஜிம்மிற்கு செல்லாமலேயே வரும். அதோடு வின் டீசல் கெட்டப் விண்ணுலக பதவி பெற்றது.

‘’ஜாசன் ஸ்டாத்தம்’’ மெக்கானிக் படத்தில் வரும் ஹீரோ. இவரும் நம்ம வ.வ.சங்க உறுப்பினர்தான். வின் டீசல் அளவிற்கு பழனி படிக்கட்டுகள் இருக்காது, ஆனாலும் கொஞ்சம் கட்டுமஸ்தான ஆளாகவே இருப்பார். இவர்தான் நமக்கு சரி என்று முடிவு செய்தேன். இவர் முதலாமவரைப் போல வழு வழு மொழு மொழு என்று இல்லை. 2 மி.மீட்டர் அளவிற்கு தலையிலும், கன்னத்திலும் முடிவைத்திருப்பார். ஆள் பார்க்க பேரழகாக இல்லாவிட்டாலும் அளவாக அம்சமாக இருப்பார். இவர் கெட்டப்பை பின்பற்ற கொஞ்சம் உடம்பு இளைக்கவேண்டியது இருந்தது.

பொதுவாக வழுக்கை உள்ளவர்கள் ரொம்ப ஒல்லியாகவோ, ரொம்ப குண்டாகவோ இருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்காது. எனக்கு அப்போது 78 கிலோ. ஜாசன் ஸ்டாத்தம் போன்று ஆக வேண்டும் என்றால் என் உயரத்திற்கு எடையை சுமார் 60 கிலோவாக குறைக்க வேண்டும். அப்போது பேலியோ மருத்துவ நூல்கள் எட்டிப்பார்க்காத காலம். 18 கிலோ குறைப்பது என்பது சோதனை, அதை சாதனையாக்கி காட்ட, ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டும், இரண்டு மாதம் டார்கெட். என்று பக்காவாக பிளான் செய்து, ஜாக்கிங்க் ஷீ, ஜெர்ஸி எல்லாம் போட்டுக்கொண்டு ஓடினேன், ஓடினேன் அபுதாபியின் எல்லைக்கே ஓடினேன்.

முதல் வாரம் எல்லாமே ஷேமமாக நடந்தது, ஆனால் உடல் எடை குறையவில்லை. அடுத்த வாரங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. எடை இல்லை, ஓடும் தூரம். ஆம், 5 கி.மீட்டர் 4 ஆகி, 3 ஆகி இறுதியில் ஓட்டப் பயிற்சிற்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. உணவு கட்டுப்பாட்டின் மூலமாக எடையை குறைக்க, சோற்றை விட்டு பர்கர் சாப்பிட்டேன். பன் ஐட்டங்கள் சாப்பிட்டதால் வயிறு சுருங்கியது ஆனால் ‘’பம்’’ பெருத்துவிட்டது. பாக்கிஸ்தானியர்கள் இருக்கும் கேம்பில் பெருத்த ‘பம்’முடன் இருந்தால், ‘’பம்’’ பப்படமாகிப் போகும். அதற்குப் பயந்தே மறுபடியும் பல முயற்சிகள் செய்து 65 கிலோவாக இழைத்தேன். ‘’ஜாசன் மாதிரி ஆகிவிட்டாயா?’’ என்று கேட்பவர்கள் மெயில் ஐ.டி அனுப்பவும், ஆல்பத்தை அனுப்புகிறேன்.

என்னதான் நாம் சில ஹேர் ஸ்டைல்களை கற்பனை செய்து வைத்திருந்தாலும் முடி வெட்டுபவனிடம் ‘’கிர்தாவை மேலே தூக்கு, மீசையை கீழா இறக்கு’’ என்றால் கத்தியை கழுத்தில் இறக்கிவிடுவானோ? என்ற மரண பீதி படுத்தி எடுக்கும். புதிதாக ஏதேனும் ஸ்டைலில் முடிவெட்ட வேண்டும் என்றால், ஊருக்குப் போகும் போது மட்டுமே முயற்சி செய்வேன். அங்கு ஒரு பார்பர் இருக்கிறார், வீடு வீடாக வந்து சிகை சேவை செய்வார். நம்முடைய கற்பனையை கத்திரிக்கோலில் உதவியால் கச்சிதமாக செய்துகாட்டுவார். கட்டணமும் பெரியதாக இருக்காது. ஒரு செண்ட் பாட்டில் மட்டும் அதிகமாக கொடுக்கவேண்டும்.

முதல் முதலாக அவரிடம் வெட்டும் போது, பாரதிராஜா படம் போலவே இருந்தது. வீட்டின் முற்றத்தில் தரையில் உட்கார்ந்தவுடன், கையில் கண்ணாடியை கொடுத்து பார்த்துக்கொள்ளச் சொன்னார். கரெக்சன் சொல்லும் அளவிற்க்கு எந்த குறையும் இல்லை. முடி வெட்டியபின்பு கையை தூக்கச் சொன்னார். நான் முருகன் அருள் வழக்குவது போல, மணிக்கட்டை மடித்து கையை உயர்த்தினேன். தூப்பாக்கியை தூக்கிக்காட்டும் போது கையை தூக்குவது போல தூக்கச்சொன்னார். “எதுக்கு?” என்று யோசிப்பதற்குள், கத்தி அக்குளிள் பாய்ந்துவிட்டது. ‘’யோவ், உன்ன யார்யா அங்க எல்லாம் முடிய எடுக்கச் சொன்னா?’’ என கோவத்தில் திட்டிவிட்டேன். (அங்கு முடியை எடுத்தால்தான் அவருக்கு ஒரு ஆத்ம திருப்தியாம்).

நான் சீரியசாக திட்டினாலும், அவர் ரொம்ப கூலாக ‘’சரி தம்பி எந்திச்சு, வேஷ்டிய........’’ என்று சொல்லி முடிப்பதற்குள் “யோவ், நான் கம்முக்கட்டுல கத்திய வச்சதுக்கே கடுப்புல இருக்கேன், நீ என்னடான்னா வேற எங்கயோ....... ’’ என நான் முடிப்பதற்கு முன்பாக சிரித்துக்கொண்டே ‘’இல்ல தம்பி, எந்திரிச்சு வேஷ்டிய உதருங்க, முடி கிடி ஒட்டியிருக்குமுன்னு சொல்ல வந்தேன்’’ என்றார். மூன்றாவதாகச் சொன்னேன் ‘’ஆண்டவா இது என்ன சோதனை””.
--------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

                

சனி, நவம்பர் 12, 2016

வாழ்த்துக்கள் மோடி.

இந்தியாவின் தற்போதய நிலவரப்படி 15% குறைவானவர்களுக்கே வங்கிகளின் மூலமாக சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகின்றது. மிச்சம் இருக்கும் 85% பேர்களின் வருமானம் வங்கி சார்ந்தது இல்லை. அவர்கள் ஒரு தினக்கூலியாகவோ, விவசாயியாகவோ, குறுந் தொழில் செய்பவராகவோ, வண்டியில் காய்கறி விற்பவராகவோ, உயிரைப் பணயம் வைத்து சாக்கடை சுத்தம் செய்பவனாகவோ இருக்கலாம். நம் நாடு வலிமை பெற இரண்டு நாட்கள் கஷ்டங்களைப் பொ’றுத்துக்கொள்ள அறிவுரை  வழங்கும் மெத்தப்படித்த மேதாவிகள் வேறு யாரும் அல்ல, மேலே சொன்ன 15%ல் ஒருவனாக இருக்கக்கூடும். சாப்பிட்டுவிட்டு காசு அட்டையையோ அல்லது கடன் அட்டயையோ தேய்ப்பவனுக்கு, 500 ரூபாய் கொடுத்து சாப்பிட்டு மீதி சில்லரை வாங்கிச் செல்பவனின் கஷ்டம் தெரியாது. கம்பெனி கால் டாக்ஸிகளில் நோகாமல் பயணிப்பவனுக்கு, ஷேர் ஆட்டோக்காரனிடம் சில்லரைக் காசுக்களை தேடிக்கொடுப்பவனின் கஷ்டம் கண்டிப்பாகத் தெரியாது. மாத தவணையில் வீட்டிற்கே பால் பாக்கெட் வரும் அப்பார்ட்மெண்ட் அப்பாட்டக்கர்களுக்கு, லைனில் நின்று காசுக்கு பால் வாங்குபவனின் கஷ்டத்தை தெரிந்துகொள்ள முடியாது. 

500, 1000 ரூபாய் தடை செய்த இந்த திட்டம் நல்லதா? கெட்டதா? என்பது ‘’கபாலி’’ நல்ல படமா? மொக்கப் படமா? என்கிற குழப்பமான மன நிலையிலேயேதான் நான் இன்னும் இருக்கின்றேன். சிலர் சொல்லுவதைப் போல, ‘’இப்போதுதான் டாஸ் போட்டிருக்கிறார்கள், இனி பேட்டிங்க் பண்ணனும், பவுலிங்க் போடனும், பீல்டிங்கெல்லாம் செய்யனும் அப்புறம்தான் வெற்றியா, தோல்வியா என்பது தெரியும்’’ என்று கூறி நாலு மாசம் வெயிட் பண்ணச் சொல்வதால், நானும் நாலுமாதம் இல்லை, மிச்சம் இருக்கிற இரண்டரை வருடம் வரை வெயிட் செய்யலாம் என முடிவு செய்துவிட்டேன்.

இந்த திட்டம் பற்றிய என்னுடய நிலைப்பாடுதான் மேலே சொன்னவை. ஆனால், திட்டத்தை நடைமுறைப்படுத்திய விதம் அபத்தத்தின் உச்சம். ஒரு நாட்டைப் பற்றி அறியாத, நாட்டு மக்களின் நிலை பற்றிய அறிவு இல்லாத ஒருவன் செய்த செயலாகவே நினைக்கின்றேன். இந்தியா இன்னும் 50% மேலாக படிப்பறிவு இல்லாத நாடு. நாம் இன்னும் வளரும் நாடுதான். திட்டத்தை நடைமுறைப்படுத்திய விதம் ஏதோ வளர்ந்த நாடுகளில் செய்வதுபோல செய்வது சிறுபிள்ளைத்தனம். ‘’வாழும் லீ குவான் மோடி’’யாம் ......க்காளி நமக்கு இந்தியா பத்தியும் தெரியல, சிக்கப்பூர் பத்தியும் தெரியலடா.

இந்த திட்டத்தில் மூலமாக எப்படி பணக்காரர்கள் பாதிக்கப்படப்போவது இல்லையோ அதே போலத்தான் பரம ஏழையும் (500 ரூபாய்க்குகூட வழியில்லாதவன்). பாதிப்பு என்பது நடுத்தர வர்க்கத்திற்கு மட்டுமே. விரிவாக சொல்ல வேண்டும் என்றால் சின்னதாக மலிகைக்கடை வைத்திருப்பவன், டீக்கடை வைத்திருப்பவன், காய்கறி வியாபாரம் செய்பவன், தினசரி வியாபாரி போன்றவர்கள்தான். அவர்களுக்கான முதலீடு, சொத்து, கையிருப்பு என எல்லாமே ‘’ஐந்து லட்சம்’’தான். அந்த பணத்தைத்தான் அவர்கள் திரும்ப திரும்ப முதலீடு செய்து, கிடைக்கும் லாபத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டியாக வேண்டும். அவர்களால் அந்த பணத்தை பேங்கில் போட முடியாது, கையில்தான் வைத்திருக்க வேண்டும்.

எங்க ஏரியா மீன்கார பெண்மனி இரண்டு லட்சத்தை வைத்துக்கொண்டு அதிகாலையில் மீன்வாங்குவார். மாலையில் வியாபரம் ஆனபின்பு கிடைக்கும் ஆயிரம், ஐநூறு லாபத்தை எடுத்துவிட்டு, மறுநாள் அதிகாலை அதே இரண்டு லட்சத்தைக்கொண்டு மீன்வாங்கச் செல்வார். இப்படி தின வியாபரம் செய்பவரிடம் சென்று, ‘’அந்த இரண்டு லட்சத்தையும் பேங்கில் போடுங்கள், பின்பு புது நோட்டாக திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்று சொல்வது கேலிக்கூத்து. அதன் நடைமுறைச் சிக்கலைப் பார்க்கவேண்டும். இரண்டு லட்சத்தை பேங்கில் போடவே நான்கு நாட்கள் ஆகும் (ஒரு நாளைக்கு 49,000ம்தான் போடமுடியும்). அதை திரும்ப எடுக்க எத்தனை வாரம் தேவை? (வாரத்திற்கு 20,000 மேல் எடுக்கமுடியாது). அந்த காலகட்டங்களில் அவர்களால் எப்படி தொழில் செய்யமுடியும்?

அதே நிலைமைதான் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவைனிலிருந்து டீக்கடை வைத்திருப்பவன் வரை. இவர்களைப் போன்றவர்களை அதிகம் கொண்டிருப்பதுதான் நம் நாடு. அது அல்லாமல் பேஸ்புக்கில் ‘’நாடு வலிமை பெற மூன்று நாள் சோறு திங்கலைன்னா ஒன்னும் செத்துரமாட்டீங்க’’ என போஸ்ட் போடுபவர்கள் அல்ல. ‘’மடியில் கனமில்லை என்றால் நீங்கள் ஏன் பயப்படவேண்டும்’’ என வாய் கிழிய பேசுறவன் எவனும் பேங்கில் பணம் மாற்ற லைனில் இல்லை. அவர்களால், குறைந்தது அவர்களைச் சுற்றி இருக்கும் படிப்பறிவில்லாதவர்களுக்கோ, முதியவர்களுக்கோ பணத்தை மாற்றிக்கொடுக்க உதவி செய்வார்களா?. லைனில் நிற்பனை பார்த்தவாரே ஆபிஸ் சென்று பேஸ்புக்கில் ‘’எவரித்திங்க் கோயிங்க் குட், பாரத் மாத்தாக்கீ ஜே’’ என வடை சுடுவார்கள்.

இன்னும் சொல்கிறேன் இது நல்லதிட்டமாகக்கூட இருக்கலாம். அதை நடைமுறைப்படுத்தியவிதம் முட்டாள் தனமானது. ஒரு ஜனநாயக நாடு என்பது, அரசை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்கும் நிலையில் இருப்பது. நல்ல ஜனநாயக நாடு என்பது, மக்களின் கேள்விக்கு அரசு பதிலளிக்கும் நிலையில் இருக்கவேண்டும். இப்படி பல் இழித்துக்கொண்டு இருக்கக்கூடாது. ‘’மோடி கொண்டுவந்த திட்டம் என்பதற்காகவே இதை எதிர்க்கிறார்கள்’’ என்று கொதிப்பவர்களிடம், மோடி முன்பு கொண்டுவந்த மேக் இன் இண்டியா, டிஜிட்டல் இண்டியா, சுச்சா பாரத்....................... ரிசல்ட்டைப் பற்றி கேட்டால், ஆசான வாயையும் சேர்த்து மூடிக்கொள்கிறார்கள்.

மோடி அல்லாது, ராகுல்காந்தி பிரதமராக இருந்து இந்த திட்டத்தை இப்படி நடைமுறைப் படுத்தியிருந்தால் அது வேறு. ராயல் குடும்பத்தில் பிறந்த ஒருவரால் நடுத்தர இந்திய மக்களின் பிரட்சனையோ / வாழ்க்கையோ தெரிந்திருக்காது என்று எண்ணிக்கொள்ளலாம். ஆனால் மோடியோ, டீக்கடை வைத்து வாழ்க்கையில் முன்னேறியவர். அவருக்குகூடவா ஒரு டீக்கடைக்காரனின் தினசரி வாழ்க்கை, வருமானம் பற்றி தெரியாமல் போனது?. மோடி டீக்கடை வைத்திருந்தபோது முதலீடு, லாபம் அனைத்தையும் பேங்க் மூலமாகத்தான் செய்துகொண்டிருந்தாரா?. சில்லரைகளை செக் போட்டுக்கொடுத்தாரா?. அவர் டீக்கடை வைத்திருந்ததற்கும், இப்போது டீக்கடை வைத்திருப்பவனுக்கும் என்ன பொருளாதார முன்னேற்றம் வந்துவிட்டது?.

‘’பிச்சைக்காரன்’’ படத்தில் வரும் ஒரு காட்சியை வைத்துக்கொண்டு மோடியின் இந்த முடிவை ‘’ஆஹா’’ ‘’ஓஹோ’’ என்று புகழ்பவர்கள் உடனடியாக பஜன்லால் சேட்டிடம் அடகுவைத்த மூளையை மீட்டுக்கொண்டு வருவது நலம். அந்த  காட்சியில் வரும் பிச்சைக்காரன் 500, 1000 ரூபாயை தடைபண்ணத்தான் சொல்லியிருப்பான், மோடிபோல பழய 500, 1000 ரூபாய்களுக்கு புது நோட்டுக்களைக் கொடுக்கச் சொல்லவில்லை. ‘’500, 1000 ரூ நோட்டுக்களை தடைசெய்வதால், பணக்காரர்களால் கள்ளப்பணத்தை இனி பெரிய பண்டிலாக கட்டிக்கொண்டு போக முடியாது’’ என்று சொல்பவர்களிடம், எதற்காக 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படுகிறது என்று கேட்டால், ‘’பாக்கிஸ்தானுக்கு போ’’ என்பது பொருத்தமான பதிலா?.

என்னைப் பொருத்தவரை புழக்கத்திலுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் தடைசெய்ததின் மூலம் நடுத்தர வர்க்க மக்களுக்கும் வங்கிகளுக்குமான உறவு அதிகரிக்கும். தேவைக்கு அதிகமான இருப்பை கையில் வைத்திருப்பதை விட வங்கிகளில் போட்டுவைக்கும் மனப்பாங்கு மக்களிடம் அதிகரிக்கும். கள்ளப் பணம் என்றாலும் கையில் வைப்பது பற்றிய பயம் இருக்கும். நடுத்தர மக்களின் பணப் புழக்கம் கூடும். இதற்காக மட்டும் இந்த திட்டத்தை நம்மால் ஆதரிக்க முடியும். அதற்காக மோடிக்கு வாழ்த்துக்கள். அதே நேரத்தில் ‘’எங்கே பேங்கில் போட்டுவைத்திருக்கும் பணத்தை மல்லையாவிற்கு கடன் கொடுத்துவிடுவார்களோ?’’ என்ற மக்களின் பயத்தை அரசு நீக்கவேண்டும்.

மற்றப்படி, பஜனை கோஷ்டிகள் சொல்வதுபோல கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவருவது, கள்ள நோட்டை தடுப்பது என்பது எல்லாம், கல்யாண வீட்டில் மாப்பிள்ளை சீப்பை மறைத்துவைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்பது போன்ற அபத்தம். இன்னும் நாம் சினிமாக்களில் காட்டுவது போல கள்ள ணங்கள் கட்டுக்கட்டாக பூஜை அறைக்கு அடியிலும், பெட்டுக்கு அடியிலும் மறைத்துவைக்கப்பட்டிருக்கும், கண்டெய்னர் பணமும், ரயிலில் களவாடப்பட்ட பணமும் இன்றுவரை கத்த கத்தையாக நோட்டாகவே இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருப்போமேயானால், நாம் அரை நூற்றாண்டு பின்தங்கியே இருக்கிறோம்.

இந்தியாவில் இருக்கும் மொத்த ரூபாய் நோட்டுக்களில் 80% 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள்தான். அதை தடைசெய்துவிட்டு 20% மட்டுமே இருக்கும் 100,50,10 நோட்டுக்களால் எப்படி நிலையை சமாளிக்கமுடியும். இதை எல்லாம் யோசித்துதான் செய்தார்களா? என்று குழப்பமாகவே இருக்கிறது. 500ம் 1000மும் பணக்காரர்களிடம்தான் இருக்கும் என்றால் அப்போ இந்தியாவில் 80% பணக்காரர்களா என்ன?.

10 லட்ச ரூபாய் வீட்டுமனைக்கு 6 லட்சம் கைட்லைன் வேல்யூ என்றால், மீதம் 4 லட்சம் கருப்பு பணம்தான். அந்தமாதிரியான கருப்பு பணம், மோடியை எதிர்ப்பவர்களிடம் மட்டுமல்ல, ஜி.பி.எஸ் வசதிகொண்ட 2000 ரூபாய் நோட்டுக்கு சப்போர்ட் செய்பவர்களிடமும் உண்டு. சொந்த மனை இருக்கும் அனைவரிடமும் இந்த கருப்பு பணம் இருக்கும். இந்த கருப்பு பணத்திற்கு மக்களா காரணம்? 10 லட்சம் மதிப்புள்ள மனையை 6 லட்சம் என்று சொல்வது மக்களா? அரசா?. கட்சிகளுக்கு வரும் பணத்திற்கு வரி கட்டச் சொல்லும் போது கட்சி சார்பு இல்லாமல் அதை எதிர்க்கும் அரசியல்வாதிகள், மக்களுக்கு வரியைப் பற்றியும், கள்ளப்பணம் பற்றியும் பாடம் எடுப்பது இந்த நாட்டின் சாபம்.    

என்னிடம் 25 லட்சம் கள்ளப்பணம் இருந்தால், என் உறவினர் 10 பேரின் அக்கவுண்ட்டில் போட்டுவிட்டு திரும்ப எடுத்துவிடமுடியும். என்னைப் போல சாதாரண ஒருவனாலேயே 25 லட்சத்தை மாற்றிவிட முடியும் என்றால், பத்து கோடி பணமாக பதுக்கியவன் ஒன்றும் மங்கூனியாக இருக்கமாட்டான். கள்ளப்பணத்தில் 2% அரசுக்கு வந்தாலே பெருயவிஷயம் ஆனால் அதற்காக மக்கள் படும் அவஸ்தை அதைவிட அதிகம். கள்ளப்பணத்தை மீட்க இவ்வளவு ஆர்வம் இருக்கும் மத்திய அரசு, அதை வைத்திருக்கும் 100 பேர்களின் பட்டியலை வெளியிட ஏன் மறுக்கிறதுய. பனாமா விவகாரத்தில் வாய் திறக்க மறுப்பது ஏன்?. 

எமர்ஜென்ஸி ஹாஸ்பிடல் செலவிற்காக எங்கள் வீட்டில் எப்போதும் ஒரு லட்சம் தனியாக இருக்கும். இப்போது அதை இரண்டு தவணையாக பேங்கில் போட்டாகிவிட்டது. அது திரும்ப வரும் வரை என் அம்மாவிற்கு கால்வலியோ, கற்பமாக இருக்கும் என்மனைவிக்கு வேறு எதுவுமோ நடக்காமல் இருக்க ஆண்டவனிடம் வேண்டும் அதேவேளையில் மேக் இன் இண்டியா திட்டத்தில் உருவான 251 ரூபாய் ஸ்மார்ட் போன் படுதோல்வியைப் போல அல்லாமல், இந்த திட்டமாவது வெற்றி பெற துவா செய்கிறேன்.

ஜனவரி 1ல் மோடி கண்டிப்பாக மக்களிடம் வானொலியில் ‘’கருப்பு பணம் ஒரு லட்சம் கோடி அரசிற்கு கிடைத்துவிட்டது’’ என்று பீத்துவார். அதற்கு ‘’ஆதரம் தாருங்கள்’’ என யாராவது பதில் எதிர்பார்பீர்களேயானால் அவர் பாரிசுக்கு கிளம்பிவிடுவார். மற்றப்படி என் நண்பர்கள் சொல்லுவது போலவும், உலகப் பொருளாதார மேதை எஸ்.வி.சேகர் சொல்வது போலவும் ஒரு அமெரிக்க டாலர் மூன்று ரூபாயாக வரும் நாளை எதிர் நோக்கியே காத்திருக்கிறேன். 

இந்தமுறை எதிர்ப்பு அதிகமாக இருக்கக் காரணம், ‘’நாய்க்கு பேர் வெச்சியே, சோறு வச்சியாடா?’’ என்று கடந்தகால திட்டங்கள் எல்லாம் பெயர் அளவிலேயே பப்படமானதுதான். ‘’ஊழல்’’, ‘’கருப்பு பணம்’’ ஆகியவற்றில் பி.ஜே.பியும் காங்கிரஸும் ஒன்றுதான். என்ன, காங்கிரஸை எதிர்த்து கேள்விகேட்டபோது என்னை ‘’இந்தியன்’’ என்றவர்கள் இப்போது ‘’பாக்கிஸ்தானி’’ என்கிறார்கள்.  பாக்கிஸ்தானுக்குப் போய் ஆலு புரோட்டா திண்பதற்கு பதிலாக பேசாமல் நானும் பக்தாளாக மாறிலாம்னு முடிவுபண்ணிண்டேன். எங்க எல்லாரும் கோரஸா சொல்லுங்கோ ‘’ஹர ஹர மகா தேவிக்கீய்............’’

------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.