செவ்வாய், மார்ச் 10, 2015

ஒரு புலம்பல்

5 வருசத்துக்கு முன்னாடி, தினமும் ஏதாவது எழுதவேண்டும் என்ற கொடிய கொள்கையோடுதான் இந்த பிளாக் ஆரம்பிக்கப்பட்டது. முதல் மூன்று நாட்களுக்கு மோசம் இல்லை, அப்புறம் வாரத்திற்கு ஒரு பதிவு என்றாகி பின்பு மாதத்திற்கு ஒன்று என்று பரிணாம வளர்ச்சியடைந்து, இறுதியாக ‘’எப்பவாவது’’ என்ற மோட்ச நிலையில் நிலைகொண்டிருக்கின்றது. பிளாக்கில் தொடர்ந்து இருக்கலாமா? வேண்டாமா? என்பது ப.சிதம்பரம் காங்கிரஸில் இருக்கும் நிலைபோல பரிதாபத்துக்குரியதாகவும், பெரிய கேள்விக்குறியாகவும் இருக்கிறது.

‘’ஏண்டா இப்பவெல்லாம் பிளாக் எழுதுறது இல்ல?’’ என்று ஒருவன் கேட்டுவிட்டான், ‘’அதுவும் கடைசியா எழுதிய சீன் பதிவு செம சூப்பர்’’ என்ற பாராட்டு வேறு. ‘’சீன்’’ பதிவா? இருக்காதே...... நாமதான் நல்ல பேமிலியில் பிறந்த பையனாச்சே? என்ற பல கேள்விகளோடு, கடைசியாக போட்ட பதிவை, பதிமூன்றாம் நூற்றாண்டு ஓலைச்சுவடியை பொருமையாக படித்து ஆராய்வது போல ஆராய்ச்சி செய்தேன். நடிகை நதியா கவர்ச்சிக் கன்னி என்றால் சில்க் ஸ்மிதாவையெல்லாம் என்னவென்று சொல்வது?. அதை ‘சீன்’ பதிவு என்று சொன்னவனுக்கு சத்தியமாக சன்னி லியோன் என்றால் யாரென்றே தெரிந்திருக்காது. இருந்தாலும் ‘’ஏண்டா எழுதுற? என்ற பல கேள்விகளுக்கிடையில் ‘’ஏண்டா எழுதல?’’ என்று கேள்விகேட்ட அந்த அந்நியன் அம்பிக்காக...........

‘’எட்டு நாள் லீவில் சொந்த ஊருக்கு சென்றிருந்தேன்’’ என்றவுடன் உங்களுக்கு புரிந்திருக்கும், நாளுக்கு பத்து பதிவு வீதம், எண்பது பதிவு வரப்போகிறது என்று. ஆனால் அம்புட்டையும் எழுதினால் மற்றுமொரு ‘’மாதொருபாகன்’’ ஆகிவிடும். அந்த ஊர்காரர்களோடு ஒப்பிட்டால் எங்க ஊர்காரனுங்க ரொம்ப மோசம், வூடுகட்டி அடிச்சாக்கூட தாங்கிக்கொள்ளலாம், ஆனால் வூடு புகுந்து அட்வைஸ் பண்ணியே கொல்லுவானுங்க. இம்முறை சொந்த ஊருக்கு எதுக்கு போனேன் என்றால் @@@@@@@@@ (ஒரு சின்ன பிளாஸ்பேக்.......)

என்னோட பக்கத்து ஆபிஸில் ஒரு பாக்கிஸ்தானி பெண், ரொம்ம்ப அழ்ழ்ழகா பேசும், அதுவும் நான் என்றால் அந்த பெண்ணுக்கு அவ்வளவு பிரியம். நான் எங்கடா இருக்கேன்னு தேடி வந்து மொக்க ஜோக்கா சொல்லும், அதுவும் ஹிந்தியில். தலைவி தமன்னாவுக்கு தமிழ் தெரிஞ்ச அளவுக்கு சற்று குறைவாகவும், இலியானாவின் இடையளவுக்கு கொஞ்சம் அதிகமாகவும்தான் எனக்கு ஹிந்தி தெரியும். கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்த தமிழ் ஜோக்கை, பாக்கிஸ்தானில் நேத்து நடந்ததாக சொல்லும், அதையும் நான் முதல் மரியாதை சிவாஜி ‘கிருக்குபயபுள்ள’ ரேஞ்சுக்கு கேட்டு சிரிப்பேன்.

எங்களுக்குள் ஹிந்தியில்தான் கம்யூனிகேசன் கேப் அதிகம். அதையும் மீறி எங்களுக்குள் ஒரு ஒற்றுமை இருந்தது, ஆம், ஆங்கிலத்தில் நாங்க ரெண்டு பேருமே, கேப்டன் கட்சி. ‘’முதல் தடவை பார்த்தப்ப நான் உங்களை அரபி என்று நினைத்தேன்’’ என்று அவள் சொன்னபோது நெஞ்சோடு.... இல்லை நெஞ்சு மட்டுமே வலித்தது. பதிலுக்கு நாமளும் ஏதாவது சொல்லனுமே என்று ‘நீ இங்கிலீஷ் பேசுறதை கேட்டபோது உன்னை அமெரிக்கனோன்னு நினைச்சேன்’’ என்று சொல்லித் தொலைத்துவிட்டேன். அதுக்கு ‘’கிழக்கே போகும் ரயில்’’ படத்தில்வரும் ராதிகா மாதிரியே அப்படி ஒரு சிரிப்பு. இப்படி எல்லாம் ஷேமமாக சென்றுகொண்டிருந்தது நவம்பர் 2 வரை.

அந்த நாள் நவம்பர் 3.

‘’எனக்கு பையன் பொறந்திருக்கான், சாக்லேட் எடுத்துக்க’’ என சாக்லைட்டை நீட்ட

‘’க்க்க்க்க்கியா? ப்ப்பச்சா? ப்ப்ப்பச்சா உவா? சாதீ ஓஹி?’’ என்று பதட்டமானாள். எப்போதும் பெண்களின் முகத்தைப் பார்த்து பேசியே பழக்கப்பட்ட (?!?!) எனக்கு அவளின் முகத்தில் படர்ந்திருந்த பதட்டத்தில் அரைகுறையாக வரும் ஹிந்தி அலைவரிசை சுத்தமாக ஆஃப்வாகிவிட்டது.

‘ஹிந்தி புரியல ஹே, இங்கிலீஸில டெல்’’ என்றதும். அவள் அப்படியே ஆங்கிலத்தில் டெல்லியது டமிழில்

‘‘எஎஎன்ன்னது? ப்ப்பையனா? ப்ப்பையன் பிறந்திருக்கா? கல்யாணம் ஆயிடுச்சா?’’.

‘’அட பக்கி, அட பக்கி, பையன் பிறந்திடுச்சு, கல்யாணம் ஆயிடுச்சு இல்ல, கல்யாணம் ஆனதால பையன் பிறந்திடுச்சு’’ என்று அவள் டிசண்டிங்க் ஆர்டரில் சொன்னதை அசண்டிங்க் ஆடரில் கூறி புரியவைத்தேன். அவ்வளவுதான். அப்புறமாக ஒரு ஹாய் கூட இல்லை. ##### (பிளாஸ்பேக் ஓவர்).

இப்படி, பிறந்த முதல் நாளே அப்பனுக்கு கிடைத்துக்கொண்டிருந்த அற்ப சந்தோசத்தில் ஆப்பு வைத்த, எனது புதல்வனைக் காணத்தான் ஊர் சென்றேன். ஊர் எப்போதும் போல அப்படியே.......

மூன்று நாளுக்கு ஒரு முறை ‘’நிலவேம்பு கசாயம்’’ காய்ச்சி கொடுக்கின்றார்கள். விசாரித்ததில் அதை குடித்தால் பன்றி காய்ச்சல் வராதாம். (குடித்தபின்பு அந்த காய்ச்சலே வந்திருக்கலாம் போலிருந்தது). வயல்வெளிகளில் கட்டிய வீட்டின் கழிவுநீர்கள், எதிர் மனையில் தேங்கிக் கிடக்கின்றது. கசாயத்திற்கான காசில் கால்வாய் அமைத்திருக்கலாம்.

நபி வழித் திருமணம் எனும் பெயரில் திருமணச் சடங்குகள் எளிமையாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சர்தார்ஜி ஏரியாவில் சலூன் கடை வைக்க, ஐடியா கொடுத்த அதிபுத்திசாலி ஒருவனின் அறிவுறைப்படி, கோடிக்கணக்கில் ஜமாத் கல்யாண மண்டபத்தை கட்டிமுடிக்க இன்னும் கால் நூற்றாண்டு தேவைப்படும். ஜமாத் பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கைவிகிதம் பல் இழித்துக்கொண்டிருக்கிறது, அதுபற்றிய கவலை கடுகளவுகூட எவரிடமும் இல்லை.

தமிழ்/திராவிடத்திற்கு அடுத்தபடியாக இங்குதான் இயக்கங்கள் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு குரூப்பிற்கென்று ஒரு ஆட்டோ ஸ்டாண்ட், ஒரு ஆம்புலன்ஸ். சேவை என்பதை சேட்டு கடையில் அடகுவைத்த இவ்வியக்கங்கள் புகழுக்காக போஸ்டரும், பேனர்களும் வைத்துக்கொண்டிருக்கின்றன.

சுவரெங்கும் ‘’காமகொடூறர்களின் கண்டுபிடிப்பு இந்த காதலர் தினம்’’ என்ற போஸ்டர். கணக்கெடுத்துப் பார்த்ததில் கூட்டிக்கொண்டு ஓடியவர்களில் பல பேர் இயக்கத்தின் அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டவர்கள். கேட்டால் ‘உண்மைக்காதல் என்றால் உயிர் கொடுப்பர்களாம்’ பேச்செல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியின் பாய்கள் பேரவை மாதிரி இருந்தது. 

‘’பேச்சில் கண்ணியம் பேணல்’’ என்ற தலைப்பில் ஹதீசை கேட்டாலே காதில் ரத்தம் வந்துவிடுகிறது. பத்து வருசத்துக்கு முன்னாடி, எங்களது வீட்டு பின்புறத்தில் நின்று இமாம்களின் பயானை எங்கள் வீட்டுப்பெண்கள் கேட்க முடியும், ஆனால் இப்போது நாலாபுறமும் இருந்து ஒரே இரைச்சல். (எங்க இருந்துடா புடிக்கிறீங்க உங்களுக்கென்று அந்த ஸ்பீக்கர?). எந்த பள்ளிவாசல்? என்ன சொல்கிறார்கள்? என எதுவும் விளங்காது.

தனி ஜமாத்துக்காக தலைகீழாக நின்று தண்ணி குடித்துக்கொண்டிருக்கும் தாலிபான்கள், முக்குக்கு மூன்று பள்ளிவாசல் நிறுவிக்கொண்டிருக்கின்றார்கள். ‘’எங்கள் கொள்கை அப்படி’’ என்று வீரமுழக்கம் வேறு. இடுகாட்டுக்கு இறந்தவரை அடக்கம் செய்யும் போது மட்டும் அவர்களின் கொள்கை குப்புற விழுந்துவிடும். மையவாடியுடன் புதிய பள்ளிவாசல் கட்டுவோம் என்று மூன்று வருடத்திற்கு முன்பு ஒருவர் கூறியபோது, ‘‘ரோசக்காரனுங்க’’ என்று நினைத்தேன். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக யாரும் உணவில் உப்பு சேர்த்துக்கொள்வதில்லை போல.

இவ்வளவு பேசிறியே செவ்வாள.............. நீ மட்டும் என்ன யோக்கியமா? என்று நீங்க கேட்கலாம். அப்படி நீங்க கேட்டீங்கன்ன என்னோட பதில்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.