செவ்வாய், ஜூலை 25, 2017

அவர் பீட்டி (P.T) வாத்தியார்.

எவ்வளவு அவசர வேலையாக வெளியே சென்றாலும் சரி, ஏதாவது ஒரு விளையாட்டுத் திடலைக் கண்டால் ஒரு நொடியாவது நம்முடய வேகம் தடைபடும். அங்கு யாராவது விளையாடினால், 5 நிமிடமாவது பார்க்கத் தோன்றும். அதுவும், நாம் விரும்பும் விளையாட்டு என்றால் ‘’ஸ்கோர் என்னாச்சு தல?’’ என்று கேட்டுவிட்டு நம்மை அறியாமலேயே அரை மணி நேரமாவது ரசித்து நிற்போம். எனக்கு, ஜித்தாவில் ரொம்ப பிடித்த விஷயமே ஒரு ஏரியாவில் குறைந்தது 4 புட்பால் திடலாவது இருக்கும். சாயங்காலங்களில் வயது வித்தியாசமே இல்லாமல் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
உடல் எடையை குறைப்பதற்காக மாலை நேரங்களில் ஜாக்கிங்க் போகிறேன். போகும் வழியில் இருக்கும் கிரவுண்டில் அரபிக்காரர்கள் புட்பால் விளையாடுவார்கள். ‘’பார்ப்பதற்கே மனசுக்கு சந்தோஷ் சுப்ரமணியமா இருக்கே, கொஞ்ச நேரம் விளையாடினால் மனசு லேசா லேசாகுமே’’ என ஏங்கிய நாட்கள் உண்டு. அன்று, ஜாக்கிங்க் போகும் போது பந்து மைதானத்தை விட்டு பறந்து என் பக்கத்தில் வந்தது.  பந்தை தூக்கிப் போடும்படி ஒரு அரபி பையன் சைகை காட்டினான். நானும் ரொம்ப சந்தோசமாக பந்தை உதைத்தப் பின், கால் ரொம்ப லேசாக இருந்தது. “அதெப்படி? மனசுதானே லேசாகனும்’’னு நீங்க யோசிப்பது புரிகிறது. பட், பறந்தது பந்து அல்ல என்னோட வலது கால் ஷு (SHOE). கடைசியில் நான் பந்தை கையில் எடுத்துக்கொண்டு போய் கொடுக்க, அவன்  ஷுவை எத்தி தள்ளினான். அந்த வரலாற்று நிகழ்வுக்குப் பின்பு, அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை.
எல்லாப் பள்ளிகளிலும் மைதானம் இருக்கும் ஆனால் நான் 9 டு 12 வரை படித்த பள்ளிமட்டும்தான் மைதானத்திற்கு உள்ளே இருந்தது. எங்க விளையாட்டு வாத்தியார் பெயர் நெல்லை நாயகம். பல மாணவர்களோட ஆதர்ச நாயகன். எங்க செட்டிலும் சரி, எங்கள் முன்னாடி செட்டிலும் சரி +2 முடித்தபின்பு, குறைந்தது 4 மாணவர்களாவது விளையாட்டு வாத்தியாருக்கு (Physical Training) படித்தார்கள் என்றால் அது, இவருடய இன்ஸ்பிரேசனால் தான். பெரிய சைஸ் கடாயை கவுத்தி வைத்தது போல இருக்கும் அவர் வயிறு. சிம்பிளாகச் சொல்ல வேண்டும் என்றால், தும்பிக்கையில்லா புள்ளையார் மாதிரி இருப்பார்.  ஆனால், குனிந்து முட்டி மடங்காமல் கால் விரலைத் தொட்டு விடுவார். கெட்ட வார்த்தை பேசினால் அவருக்கு பிடிக்கவே பிடிக்காது, ஏனென்றால் அனைத்து கெட்டவார்த்தையையும் அவர் மட்டும்தான் பேசுவார்.
பாடங்களை முடிக்கவில்லை என்பதற்காக, பீட்டி வகுப்புகளை யாருக்கும் கொடுக்க மாட்டார். ‘’போன மாசம் எவனும் நல்லா விளையாடல, அதனால உங்க கிளாஸ தாங்கன்னா, உ கெமிஸ்ட்ரி வாத்தியான் தருவானால? பெற என்ன மயித்துக்கு அவனுக்கு நாங் குடுக்கனும்?’’ என்று கெத்தாக பேசக்கூடிய மனிதர். கெமிஸ்ட்ரி வாத்தியாருக்கு பீட்டி பிரியடை கொடுக்கமாட்டார் என்பதைத் தாண்டி, இவரை கொண்டாட ஒரு மாணவனுக்கு வேறு என்ன காரணம் வேண்டும். நாங்கலெல்லாம் கொண்டாடினோம் அந்த மனிதரை. மழைக் காலங்களில் கூட யாருக்கும் தன்னுடய கிளாஸை கொடுப்பதில்லை. மழை நாட்களில் கிளாஸ் ஈஸா தியான மண்டபமாக இருக்கும். நிறைய அட்வைஸ் கொடுப்பார், விளையாட்டு சம்பந்தமாக பேசுவார். ‘’ஒரு நாளைக்கு இங்கிலீஷ்ல ஒரு வார்த்தை படி, வருச கடைசில உனக்கு 365 வார்த்தை கிடைக்கும், அவ்வளவுதாம்ல இங்கிலீஷு’’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அப்படிக் கத்துக்கொண்டதுதான் ‘’ஏக் காவ்மே ஏக் கிஸான் ரெஹதாத்தா’’
அந்த ஸ்கூலில் பெரிய பேஸ்கட் பால் கிரவுண்ட் உண்டு. சேர்ந்த பல மாணவர்கள் அந்த கிரவுண்டைப் பார்த்து அதில் விளையாடுபவர்களைப் பார்த்து சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும். நான் உட்பட. 9ம் வகுப்பு சேந்த புதிதில் யார், யாருக்கு எந்த விளையாட்டில் இஷ்டம் என்று தெரிந்து கொண்டு, லிஸ்ட் எடுத்தார். கிளாஸில் எல்லோரையும் உயரப்படிதான் உட்கார வைப்பார்கள். 9டி கிளாஸில் முதல் பெஞ்சில் நான் இரண்டாவது ஆள், அப்போ நான் கொஞ்சம் குள்ளமா இருப்பேன் (“இப்பவரைக்கும் நீ அப்படித்தானடா இருக்க?”ங்குற உங்களோட மைண்ட் வாய்ஸ் கேட்சிங்). என்னவிட குள்ளமா இருந்தவன் பெயர் மகாராஜா. பேஸ்காட் பால் விளயாட கை தூக்கினான். ‘’எந்திச்சு நிக்க வக்கில்லாதவனுக்கு வப்பாட்டி வக வகயா கேக்குதாம்’’ன்னு சொல்ல, அவனைப் பார்த்து கை தூக்க நினைத்தவன் அப்படியே கையை இறக்கிவிட்டேன். என்னவென்றே தெரியாமல் வாலிபாலுக்கு பெயர் கொடுத்தேன்.
வாலிபாலுக்கு எங்கள் பள்ளியில் முன்பாகவும், பின்பாகவும் இரண்டு கிரவுண்ட் உண்டு. பின்னாடி இருக்கும் கிரவுண்டில் மேடைபோன்ற திண்டு இருக்கும். அதில் இருந்துதான் நாங்கள் விளையாடுவதைப் பார்ப்பார். அவர் வயிறு இருக்கும் சைசிற்கு, பத்து மீட்டருக்கு சுத்தி கீழே என்ன இருந்தாலும் தெரியாது. அந்த திண்டின் மீது ஏறினால் 100 மீட்டர் சுற்றளவிற்கு எதுவும் தெரியாது. ஒரு தடவ சுந்தர்ராஜன் என்பனை கூப்பிட்டார்.  கூப்பிட்டு முடிப்பற்குள் திண்டின் பக்கத்தில் போய்விட்டான். சாரோட வயிரு சுந்தர்ராஜனை மறைக்க, அவன் நிர்பது தெரியாமல், மறுபடியும் ‘’அந்த அருதலிய வரச் சொல்லுல’’ன்னு சொல்ல, நாங்க எல்லோரும் ‘’அவ கீழதான் சார் நிக்கான்’’ன்னு சொன்னோம். ‘’மூதி, கூப்புட்டா, கண்ணு முன்னாடி வந்து நிக்கனும், அதவுட்டுட்டு காலு முன்னாடி, பூ# (18+) முன்னாடி வந்து நிக்கக்கூடாது’’ என்ற செம்மதுர தமிழோசை இன்னும் காதில் தேனாக சொட்டுகிறது.
‘’காலும், கையும் நம்ம இடத்தில் இருந்தாலும், கண்ணு மட்டும் எதிரி இடத்தில் எப்போதும் இருக்கனும்’’, ‘’கண்ணு ஒருத்தன பார்க்கனும், ஆனா கை, மூளை சொல்லுறத கேட்டு பந்த இன்னொருத்தங்கிட்ட அனுப்பனும்’’.......என பல டெக்னிக் எல்லாம் சொல்லுத் தருவார். அதை எல்லாத்தையும் கேட்டுவிட்டு கரெக்டா தப்பு பண்ணுவோம். சுத்தி இருக்கும் எல்லா ஊர் ஸ்கூலுக்கும் கூட்டிப் போய் மேட்ச் ஆடவைப்பார். மூன்று பிரியட் பெர்மிஷன் கேட்டுச் சென்றாலும் முதல் பிரியட் முடிவதற்குள் அடிச்சு துவச்சு மீன்பாடி வண்டில ஏத்திவிட்டுருவானுங்க. தோத்துப் போன பின்னாடி சார் திட்டுவாரோன்னு பயந்து போய் நின்னா ‘’விடுங்கல, ஜெயிச்சிட்டா அதுல கத்துக்க ஒன்னு இருக்காது, தோல்விலதாம்ல நெறய பாடம் தெரிஞ்சிக்கலாம், அடுத்த வாரம் வடகர மேட்சுல பாத்துக்கலாம்’’ என ஆருதல் சொல்லுவார்.  மூனு நாளு கழித்து கூப்பிட விடுவார் ‘’மேட்சுப் %&$%@& யாடா விளையாண்டிங்க, சூப்பிப் போனவ %*&%#க்கு எண்ண தடவுன மாதிரி.....................’’ன்னு ‘’டோட்டல் பேமிலி டேமேஜ்’’ஆகுற மாதிரி அர்ச்சனை நடக்கும்
எந்த ஊரு மேட்ச்சுக்குப் போனாலும், சாப்பாடில் மட்டும் குறையே இருக்காது. ஆம்லேட் என்றால் டபுள் ஆம்லேட்தான், புரோட்டா என்றால் கொத்து புரோட்டாதான். ஒவ்வொரு ஸ்கூலும் காலாண்டு இடைவெளியில், இவ்வளவு போட்டி நடத்த வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் போட்டி நடத்தாமலேயே அவர்களுக்குள்ளாகவே, நீங்க வின்னர், நீங்க ரன்னர் என முடிவெடுத்து கல்வி விளையாட்டுத் துறையில் இருந்து சர்டிபிக்கேட் வாங்கிவிடுவார்கள். அதை காலை பிரேயரில் வைத்து எல்லோரயும் கை தட்டச் சொல்லி கொடுப்பார்கள். அந்த மாதிரியான அசிங்கம் கலந்த ஆனந்தம் கூட  ஒரு விதமான அனுபவம்தான். எங்க பீட்டி சாருக்கு வாலிபாலை விட பேஸ்கட் பால் கேமில்தான் அதிக ஆர்வம். அவர்களுக்கு தனி கோச்சிங்க் எல்லாம் கொடுப்பார். இப்போது எப்படி என்று தெரியவில்லை, நான் படிக்கும் போது திருநெல்வேலி மாவட்டத்தில் பாஸ்கட் பால் ஸ்கூல் டீம் மொத்தம் பத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும். அதனால் அவர்களுக்கு டிஸ்டிக் லெவல் மேட்ச் எல்லாம் கிடைக்கும். அதுல நிறைய கப் வாங்கியிருக்கிறார்கள். வாலிபாலுக்கு எல்லாம் மேலே சொன்னா மாதிரி  ஏதாவது கிடைத்தால்தான் உண்டு. அவர் ரூமில் இருக்கும் கப்புகளை பார்க்கும் போது சொன்னார் “கப்பு வெயிட்டு கையோட நிக்கனும், தலைக்கு கொண்டு போனா, துதான் நம்ம கடைசி கப்பு”
வாலிபால் மேட்ச் என்றால் அதற்கு இரண்டு நாள் முன்பாக, ஸ்கூல் முடிந்தவுடன் சீனியருடனோ, அல்லது ஸ்டாப் டீம்வுடனோ பயிற்சி மேட்ச் நடக்கும். ஸ்டாப் டீமில் முருகன் சார்னு ஒருத்தர் இருந்தாரு. சத்தியராஜ் தோளில் ரகுவரன் ஏறி நின்றால் என்ன உயரம் இருக்குமோ அந்த உயரம். என்னோட உயரத்துக்கு நானெல்லாம் குறுக்கால கட்டியிருக்கும் நெட்டை டச் பண்ணாமலேயே அடுத்த கோர்ட்டிற்கு போய்விடுவேன். அவர்களோடு மேட்ச் ஆடச் சொல்லி கதற விடுவானுங்க. ‘’எத்தன பேருக்குள்ளது அத்துக்கிட்டு உருண்டு ஓடப்போகுதோ....’’ங்குற பீதிலேயே விளையாடுவோம். முருகன் சார் அவர் இருக்குற ஹைட்டுக்கு ஜம்ப் பண்ணி வேற அடிப்பாரு. 8000 கி.மீ ஸ்பீடுல பால் இறங்கும். அவரு ஜம்ப் பண்ண போறாருன்னு தெரிஞ்சுச்சுனாலே நாங்க கோர்ட்டுக்கு வெளியே போயிருவோம்.
என்னோட ஹைட்டுக்கு நான் ஒன்பதாவது வகுப்பில் இருந்து பனிரெண்டாவது வகுப்பு படிக்கும் வரை வாலிபால் ஜீனியர் டீமில்தான் விளையாடினேன். பனிரெண்டாவது படிக்கும் போது ஒன்பதாவது, பத்தாவது படிக்கிறவனுங்க கூட விளையாடனும். மேட்ச் எங்காவது போனால், நாயகம் சார் என்னை ஒன்பதாவது வகுப்பு மாணவன் என்றே பெயர் கொடுக்கச் சொல்லுவார். மற்றவர்களிடம் ‘’இவன ஒம்பதாப்புன்னு சொல்லித்தான் இறக்கியிருக்கேன், வெளயாடும் போது அண்ணே நொண்ணேன்னு கூப்பிட்டு என்னய மாட்டிவுட்டுராதியல’ன்னு சொல்லிவிடுவார். இதுதான் சந்தர்பம்னு, நேத்து வரை அண்ணன்னு கூப்பிட்ட பயலுக எல்லாம் ‘’எல’’, ‘’டேய்’’, ‘’மச்சி’’ன்னு கூப்பிட்டு வஞ்சம் தீர்ப்பானுங்க.
எங்களோட விளையாட்டு பீரியடுக்காக மற்ற வாத்தியார்களிடம் எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாதவர். யாரும் இவர், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி வாத்தியார்களிடத்தில் பேசிப் பார்த்ததே இல்லை. தனக்கான இருக்கையை ஸ்போர்ட்ஸ் ஸ்டோர் ரூமிலேயே போட்டு அவர்களிடமிருந்து தனியாகவே இருந்தார். நான் காலேஜ் படிக்கும் போது எதேச்சயாக விளையாட்டு வாத்தியாருக்கு படித்த என் ஸ்கூல் சீனியரை சந்தித்தேன். விழுப்புரம் பக்கத்தில் வேலை கிடைத்தவுடன் நெல்லை நாயகத்தை சந்தித்தபோது அவர் சொல்லியதைச் சொன்னார். ‘’ரொம்ப சந்தோசண்டே, சில மயிராண்டிய வந்து ஒம்ம கிளாச தாரும் சிலபஸ் கவர் பண்ணனும்னு வருவான், எந்த கூ$#யானுக்கும் கொடுக்காத’’

வி மிஸ் யூ சார். 
---------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

ஞாயிறு, ஜூலை 23, 2017

ஓவியா ஆர்மி :)

இப்போ தமிழ்நாட்டில் முக்கால்வாசிப் பேர் ‘’எண்டே மதர் டங் மலையாளம், எண்டே ஸ்டேட் கேரளா, எண்டே சீப் மினிஸ்டர் பினராயி விஜயன், எண்டே நடனம் கதகளி, தக்கிட தக்கதிமி தக்கிட தக்கதிமி..............’’ன்னுதான் ஆடிக்கிட்டிருக்கானுங்க. சமீப காலமாக ‘’கூட மேல கூட வச்சி...’’ பாடலைத்தான் முனுமுனுப்பேன், ஆனால் இப்போது ‘’ஓவியா உன் ஓரப்பார்வை என்னைத் தீண்டுதே...’’தான் ரிங்க்டோனே. பாடல் ரொம்ப நல்லா இருக்கு, லிரிக்ஸ் ரொம்ப நல்லா இருக்குன்னு யு-டூப்பில் வீடியோ பார்த்தேன். பாடல் முழுவதும் ஹீரோ ஒரு தண்ணி ட்ரம்பை உருட்டி உருட்டி விளையாண்டு கொண்டிருக்கிறார்.  
காலம்தான் எவ்வளவு கொடியது. என் வாழ்க்கையில், என் நாவு ‘’நமீதா வாழ்க’’ என்ற திருநாமத்தை அன்றி வேறொன்றையும் உச்சரிக்காது என்று இருந்தவனை ‘’பேசாம நீ அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி’’ என்று சொல்லவைத்துவிட்டது. இதை விதி என்பதா இல்லை கடவுளின் சதி என்பதா?. நமீதா பி.ஜே.பியில் சேரக் கூடும் என்ற வதந்தி கிளம்பியபோது கூட டபுள் ஜீரோ (00) டிரிபிள் ஜீரோவிற்கு (000) மிஸ்டுகால் கொடுத்து பிஜேபியில் சேர்ந்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். அந்த அளவிற்கு ரசிகனாயிருந்த நானா? இன்று கையிலிருந்த 50 ஓட்டுக்களையும் ஓவியாவிற்கே கொடுத்துவிட்டு வெரும் கையோடு நமீதாவை வேடிக்கை பார்த்து நிற்பது?. இனி, ஆப்பிள் ஐபோன் லோகோவைக் காணும் போதெல்லாம் ‘’இது நமீதா கடித்து பிரிஜ்ஜில் வைத்த ஆப்பிள்’’ என்று நினைவுகள் என் மனதை கொத்தித் திண்ணுமே, அய்யஹோ..... நான் என் செய்வேன்.
ஓவியாவை களவானி படத்தில் பார்த்த போதோ, மெரினாவில் (படத்தில்) பார்த்த போதோ பெரிதாக ஒரு ஈர்ப்பு ஏற்படவில்லை. ‘’இந்த பொண்ணுகிட்ட என்ன இருக்குன்னு இதெல்லாம் ஹீரோயினா நடிக்குது’’ன்னு நக்கல் பண்ணியிருக்கேன். ஆனால் கலகலப்பு படத்தைப் பார்த்த பின்பு “பாரேன்.... இந்த பொண்ணுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு...’’ன்னு மிரண்டு போனேன். ஹீரோயின்களில் விஜயசாந்தியை அடுத்து ஓவியாவிற்குத்தான் போலிஸ் டிரஸ் நச்சென்று பொருந்தி இருந்தது. இந்த மாதிரி போலிஸ் இருந்தா நான் எல்லாம் டெய்லி பிக்பாக்கெட் கேசில் கைதாவேன்.
ஜித்தாவில் எல்லா நாளும் தனிமைதான், ரூமிலும் ஆள் கிடையாது, பேச்சு துணைக்கென்று அக்கம் பக்கம் யாரும் இல்லை. ஜீலி பாணியில் சொல்வதென்றால் ‘’கட்டிப் புடிக்கக்கூட யாருமில்ல’’.  கிட்டத்தட்ட இதுவும் பிக்பாஸ் ரூம்தான்.    முதல் 15 நாட்கள் தொடர்ந்து பிக்பாஸ் பார்த்து வந்தேன். அந்த பதினைந்து நாட்களும் தூக்கத்தில் நானும் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போலவும், காயத்திரியும், ஆர்த்தியும் என்னை அடிமை போல் நடத்துவது போலவும் கனவு வரும். மனசு ஒரு விதமான பயந்த நிலையில் இருந்தது. பரணியை பொம்பள பொருக்கி ரேஞ்சில் கூடி நின்று பேசிய போது, என்னை பேசுவதுமாதிரியான மனோ நிலை இருந்தது. இதே ரேஞ்சில் சென்றால் மெட்ராஸ் ஜானியாக மாறிவிடுவேனோ என்ற பயம் வந்துவிட்டது. இப்போது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் கமல் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்காக பார்க்கிறேன்.
பிக்பாஸை பார்க்கவில்லை என்றாலும் டெய்லி என்ன நடக்கிறது என்பதை பலரின் போஸ்ட்களிலும், மீம்களிலும் பார்த்து தெரிந்து கொள்கிறேன். பிக்பாசின் இரண்டாவது நாளில் இருந்தே ஓவியாவைப் பிடித்துவிட்டது. இந்த பொண்ணு ரொம்ப உண்மையா இருக்குதே, நேர்மையா பேசுதே.............என பல ‘தே’க்கள்தான் ஓவியா உன் ஓரப்பார்வை என்னைத் தீண்டுதே மொபைல் ரிங்டோன். தமிழகத்தில் குடிசைகளே இருக்கக்கூடாது என்று ஓடி ஓடி கொளுத்தும் டாக்டர் அன்புமணி ஐ.ஏ.எஸ் என்னைக்கு ஓவியாவிற்கு கிடைத்த ஒன்னரை கோடி ஓட்டுக்களை எண்ணி காண்டானாரோ அன்னையில இருந்து ஓவியா ரசிகனாக இருந்த நான் ஓவியாவின் வெரியனாகவே மாறிவிட்டேன்.
 எனக்கு இரண்டு இ-மெயில் ஐடி உண்டு, ஓவியாவிற்கு ஓட்டுப் போடுவதற்காக மூன்றாவது ஐடியை ஓப்பன் செய்தேன். என் ஆபிசில் இருக்கும் பாக்கிஸ்தானியிடம் ஓவியாவின் அருமை பெருமைகளைச் சொல்லி, இந்தியாவின் அடுத்த பிரதமராகக் கூட வாய்ப்பிருக்கிறது. அப்படி பிரதமரானால் பாக்கிஸ்தானில் நாலு பள்ளிக்கூடம் கட்டித்தரச் சொல்லுகிறேன் படிச்சு பொழச்சுக்கோங்க, என்றெல்லாம் மண்டயக் கழுவி ஓட்டுப் போட வைத்துள்ளேன். இந்தவாரம் மட்டும் ஓட்டுப் போடும் வரை பக்கத்திலேயே இருந்து ஓவியாவிற்குத்தான் ஓட்டுப் போடுகிறானா? என்று கன்பார்ம் செய்துகொண்டேன். (நமீதா விசயத்தில் பாக்கிஸ்தானிகளை நம்ப முடியாது, அயோக்கியப் பயலுக).
ரெண்டு வாரத்திற்கு முன்னாடி, வீட்டம்மா போன் பண்ணிய போது ‘’மனசே சரியில்ல’’ன்னு சொன்னேன். தனிமையில் இருப்பதால் வீட்டை நினைத்து வருந்துவதாக நினைத்துக்கொண்டு ஏதேதோ ஆருதல் சொல்லி ‘’என்ன காரணம்?’’ன்னு கேட்டாள். நான் ‘’ஓவியாவ யாருக்கும் பிடிக்கமாட்டேங்குது, எவிக்சனில் அவள் பெயர் வந்திருச்சு’’ன்னு கவலை தோய்ந்த குரலில் சொன்னேன். சொன்னதுதான் தாமதம், விழுந்த வார்த்தைகளை வைத்துப் பார்த்தால், காயத்திரிக்கு கோவில் வைத்து கும்பிடலாம். கொஞ்ச நேரத்திற்கு அப்புறம் சந்திரமுகி போய் கங்காவா வந்தவுடன், திட்டியதற்கு பிராய்ச்சித்தமாக ஓவியாவிற்கு ஓட்டுப்போட சம்மதிக்க வைத்தேன். ஒரு வாரம், ரெண்டு வாரம்னா ஓகே. வார வாரம் ஓவியா பெயர் வருது. இந்த வாரமும் ஓவியா பெயர் வந்தால் அவ்வளவுதான். என் பொண்டாட்டி என்னை டைவர்ஸ் பண்ணிருவா. அப்புறம் பிக்பாஸில் இருந்து ஓவியா வெளியே வந்தவுடன், நேரா எங்க வீட்டுக்கு வந்து விளக்கு ஏத்துறமாதிரி ஆகிடும்.
இப்போது யாராவது ‘’தமிழ்தாய் வாழ்த்து சொல்லு?’’ன்னு கேட்டா, ‘’கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட...’’ன்னுதான் சொல்கிறேன். அந்த அளவிற்கு சிஸ்டம் கெட்டுப்போச்சு. ‘’அழுக வந்தா அழுதுடு, ஆனா அதுக்கப்புறம் அழவே கூடாது’’, ‘’வாங்குற ஒவ்வொரு அடியும் வாழ்க்கையில ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கும்’’, ‘’நடிக்கிரான்னு முடிவு பண்ணிட்டா நாம செத்தாக் கூட நடிப்புன்னுதான் சொல்லுவாங்க’’ இந்தமாதிரி டயலாக்கெல்லாம் கேட்டபின்பு கூட ‘’ஏண்டா ஓவியா ஓவியான்னு அலையிரீங்க’’ன்னு எவனாவது கேட்பான்?. சிலர் பிக்பாஸ் புரோகிராம் ரியாலிட்டி ஷோ இல்லை என்கிறார்கள். இருக்கலாம், நான் ஒரு சீரியல் பார்ப்பது போலத்தான் பார்க்கிறேன்.
இன்னொரு விஷயம், டிவியில் பார்க்கும் ஓவியாவை நாம் ரியல் வாழ்க்கையில் ரசிக்க முடியுமா??????. தனக்கு மட்டுமே உண்மையாக இருக்கும், கொடுத்த வேலையை தன் இஷ்டப்படி செய்யும், கொஞ்சம் சோம்பேரியான, யாருடனும் ஒத்துப்போகும் குணம் இல்லாத, தலமையை மதிக்காத, வெடுக் வெடுக்கென பேசும், எல்லாவற்றிலும் தான் தான் சரி என்று எண்ணும், தவறு என்றால் ஒரே ஒரு ‘’சாரி’’ சொல்லி கிளம்பும் கேரக்டர்கள் கொண்ட, நம்மோடு ஒட்டி வாழும் ஓவியாக்களை நம்மால் ரசிக்க முடியுமா?. என்னால் சத்தியமா முடியாது. ஒருத்தனோட வாழ்க்கையை டிவியில் பார்த்து கணிப்பதற்கும் (ரசிப்பதற்கும்), நேரில் பழகிப் பார்த்து கணிப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. யாருக்குத் தெரியும்?, நாம் வெறுக்கும் பலர், ஓவியாக்களாகக்கூட இருக்கலாம். நம்மைச் சுற்றி கேமராக்கள் இல்லாதவரை நம்மில் இருக்கும் காயத்திரி, ஜீலியை நம்மால் அறிந்துகொள்ளவே முடியாது.
நேற்று, கமல் தந்திரமாக ஜீலியை மாட்டிவிட்டு, காயத்திரியை காப்பாற்றி இருக்கிறார். இந்த வாரம் ஒருவேளை ஜீலியும், காயத்திரியும் எலிமினேசன் லிஸ்டில் வந்தால், காயத்திரியை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கலாம். என்ன எழவுனாலும் இருக்கட்டும், சினேகனை மட்டும் நல்லவனா காட்ட முயற்சிக்காதீங்க மிஸ்டர் கமல் வாந்தி வாந்தியா வருது. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
ஸாரி நமீதா.    

-------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், ஜூலை 04, 2017

பிக் பாஸ்

2006 என்று நினைக்கிறேன், நான் பெங்களூரில் வேலை பார்த்த போது எனது டெல்லிவாலா மேனாஜர் மூலமாகத்தான் பிக் பாஸ் (ஹிந்தி) எனக்கு அறிமுகம். அதுதான் இந்தியாவிலும் முதல் பிக் பாஸ் என்று நினைக்கிறேன். பிக் பாஸின் ரூல்ஸ், மற்றும் அதில் பங்கு பெற்றவர்கள் பற்றி அந்த மேனாஜர் என்னை டிவியின் முன்வைத்துச் சொல்லிக்கொண்டே இருப்பார். புரியவில்லை என்றாலும், இங்கிரிமெண்ட் டைம் என்பதால் ‘’வாவ்.... மெடிக்கல் மிராக்கிள்’’ என்று புகழ்ந்துகொண்டே இருப்பேன். சில வாரங்களுக்குப் பின்பு, மேனாஜர் என்னிடம் ‘’உனக்குப் பிடித்த கண்டெஸ்டண்ட் யாரு?’’ன்னு கேட்டார். நான் ‘’ராக்கி ஷவாத் (Rakhi Sawant)’’ன்னு சொன்னேன். அந்த பெயரைப் பார்த்தவுடனே கூகுள் சர்ஜ் பண்ணிப் பார்த்த உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும், நான் எதுக்கு அந்த பெயரைச் சொன்னேன் என்று. ஆக, அந்த வருஷ இங்கிரிமெண்ட் உ ஊ............
அன்று, 14 பங்கேற்பாளர்களையும் அறிமுகம் செய்த பின்புகூட, விஜய் டிவி பிக்பாஸை தொடர்ந்து பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. ஆனால், இன்று அடுத்த எபிஸோட் எப்ப வரும்?? என்று ஏங்கிக்கொண்டிருக்கக் காரணமே அந்த 15 வது பங்கேற்பாளர், ‘’நமீதா’’ தான். எனக்கு நமீதாவைப் பிடிக்கும் என்று சொன்னால், ஏனோ என் நட்பு வட்டாரங்கள் 90 வயது கிழவியை ரேப் செய்தவனைப் பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள். நானும் பல முறை எனக்கு நானே ‘’ஏன் நமீதாவைப் பிடிக்கும்?’’ என்று யோசித்துப் பார்த்துவிட்டேன். ஆனால், சுவாதி-ராம்குமார் கொலைவழக்கு போல் விடை ஏதும் இல்லை. சமீபத்தில் தொல்.திருமாவளவன் ரஜினியின் அரசியல் வரவு பற்றி பேசினார். அதில் அவர் தமிழ்நாட்டில் நடிகர்கள் நடிகைகளுக்கு இருக்கும் ஈர்ப்பைப் பற்றிச் சொல்லும் போது, ‘’கரிஷ்மா’’ என்ற ஒரு வார்த்தயைப் பயன்படுத்தினார். காரணமே இருக்காது, காரணமும் தெரியாது ஆனால் ஒருவரைப் பிடித்திருக்கும், அதற்குப் பெயர்தான் கரிஷ்மா. அதே கரிஷ்மா கபூர்தான் என்னையும் ‘’உடல் மண்ணுக்கு உயிர் நமிதாவிற்கு’’ என்று கூவச் செய்கிறது.
நமீதா பிக்பாஸில் கலந்து கொள்கிறார் என்றவுடன் எனக்கு மிகப் பெரிய ஆறுதல். இனி எவனாவது என் மூக்கில் கை நீட்டி ‘’உனக்கு ஏண்டா நமீதாவைப் பிடிக்கும்?’’ என்று கேட்டால், ‘’போடா, போய் பிக்பாஸ் வீட்டில் நமீதாவின் அனுகுமுறையை பாருடா’’ன்னு தைரியமா சொல்லுவேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது, பிக் பாஸ் முடியும் போது, ஒட்டு மொத்த தமிழ்நாடே நமீதாவைப் பற்றிய பெருமைகளைப் புரிந்து கொண்டு, ‘’சாரிடா யாஸிர்’’ன்னு என் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும். எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தும் (சைஸ் பற்றி சொல்லவில்லை), ‘டாய்லெட் கிளீன் பண்ணுவது எப்படி?’ என்று பாடம் நடத்தும் அந்த பரந்த மனம் யாருக்கு வரும்?. தண்ணி சிக்கனம், சுத்தம், சுகாதாரம் பற்றி அந்த அழகுத் தமிழில் அறிவுரை கூறுவதை கேட்பதற்கே அகத்தியர் மீண்டும் பிறவி எடுக்க அப்ளிகேசன் பார்ம் பில் செய்துகொண்டிருப்பார்.
பிக் பாஸில், நமீதாவிற்கு அடுத்ததாக எனக்குப் பிடித்தது ஓவியா. அவர் அளவிற்கு உண்மையா பேசுறது, நடப்பது எனக்கு தெரிந்து யாரும் இல்லை. ‘’இது ஒரு கேம், இங்க நான் விளையாட வந்திருக்கேன், ஜெயிக்க வந்திருக்கேன். ஒரு பேமிலி உருவாக்கவோ, இல்ல பிரண்ட்ஸ் உருவாக்குவதற்கோ வரவில்லை’’ என பொட்டில் அடித்தது போல் சொல்லும் தைரியம் அங்கு யாருக்குமே இல்லை. லீடர் எந்தமாதிரி இருக்கனும்னு சிநேகனுக்கு சொல்லுவது, ‘’வேலை இருந்தால் வேலை செய்வேன், அதுக்காக வேலை செய்யுறமாதிரி நடிக்க முடியாது’’ என கெத்து காட்டுவது, ‘’தவறு பண்ணுங்க, ஆனா அதுல இருந்து கத்துக்கங்க’’ என பிலாஸபி பேசுவது என மனதை கவர்கிறார். சோம்பேரிக்கான விருதை நிராகரிக்கும் முறை அமேசிங்க். ஆரவ் உடனான ஒரு வெட்கக் குழைவு ஆசெம்.
‘’கடுப்பேத்துரானுங்க மை லாட்’’ கேட்டகெரியில் சிநேகன், காயத்ரி ரகுராம், சக்தி, ஆர்த்தி. சத்தியமா முடியலடா. சிநேகன் இன்னும் ‘’என்னாச்சுமா உங்களுக்கு’’ பீலிங்க்ல இருந்து வெளிய வரவேயில்ல. லீடர்னு சொன்னதும் ஏதோ கேங் ஸ்டார் லீடர் தோரணையில் திரிவது பெரிய குஷ்டம். லீடர்ங்குற பேருல செய்கிற ஒவ்வொரு செயலும், உடல் மொழியும் ரொம்ப வெருப்பேற்றுகிறது. ‘எலிமினேட் செய்ய நான் யாரைச் சொல்லுவேன்’னு அழுவதை எல்லாம் நாங்க தங்கப்ப தக்கத்துலேய பார்த்துட்டோம் மிஸ்டர் சிநேகன். அனுயா வெளியே போகும் போது, சிநேகன் செயலில் மட்டுமில்லை, பார்வையிலேயே ஒரு விஷமத்தனம் இருப்பதாக சொன்னது அவ்வளவு உண்மை. புன்னகை மன்னன் பட பாடலுக்கு சிநேகன் ஆடியதைப் பார்தத பின்பு, ‘’இந்த வார எலிமினேசன் நான்தாண்டா’’ன்னு கமல் எந்திருச்சு போயிருவாருன்னுதான் நெனச்சேன். நானா இருந்தா சிநேகன் காஸ்டூமை பார்த்த உடனே பால்டாயில் குடிச்சிருப்பேன். இருந்தாலும் கமலுக்கு பொருமை ஜாஸ்தி.
‘’நாங்க சினிமாவில் எங்களை நிரூபித்தவர்கள், அதனால் பிக்பாஸில் மூலமாகத்தான் பிரபலமாக வேண்டும் என்ற நிலை எங்களுக்கு இல்லை’’ என காயத்ரி ரகுராம், ஜீலியாவிடம் சொல்லும் போது ‘’இவ என்னத்த சினிமாவில் நிரூபித்தாள்’’ன்னு யோசிச்சிக்கிட்டே இருக்கேன், எழவு ஒரு வாரமாகியும் ஒன்றும் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. ‘’நேத்து ராத்திரி யம்மா...’’ பாடலுக்கு டான்ஸ் ஆடியதை பார்த்த பின்பும், ‘’மாஸ்டர்’’ன்னு கூப்பிடுறவன் வாயில் ஆசிட் அடிக்கனும்னு தோணுது. ‘’இதுக்குத்தான் இந்த எச்சய்ங்க கூட வரமாட்டேன்னு சொன்னேன்’’னு ஒரு பொன்மொழி உதிர்க்கும். என்னமோ விஜய் டிவிக்காரன் ‘’நீங்க வந்தாத்தான் முடியும்’’னு அவங்க வீட்டில் போய் நின்னது மாதிரி. மூணு வேல ஓசி சோறு, 100 ரூபா பேட்டா காசு கிடைக்கும்னு வந்துட்டு, இது பேசுற பேச்சு தாங்க முடியல. இதையெல்லாம் கூட பொருத்துக் கொள்ளலாம், ஆனால் பரணியிடம் ‘’நான் உங்க அம்மாவா இருந்திருந்தா செத்துப்போன்னு சொல்லியிருப்பேன்’’ன்னு சொன்னதைக் கேட்டு, என்னை அறியாமல் ஸ்கீரினில் காரி துப்பிவிட்டேன். ஒன்னு இது ‘’அம்மா’’ என்றால் அப்பாவின் மனைவி என்று நினைக்கக்கூடிய ஜந்தாக இருக்கும். இல்லை என்றால், அம்மாவின் வயிற்றில் பிறக்காமல், பேக்டரியில் அசெம்பிள் செய்ததாக இருக்கும். இந்த லட்சனத்தில் இவுகதான் இந்தவார தலைவி. ஹரே ஓ சம்போ.        
பிக்பாஸ் வீட்டில் இருக்குறதுலேயே ரொம்ப பொய்யா வாழ்வது ஜீலியா தான். அண்ணா, அக்கான்னு அழைப்பதில் ரொம்ப செயற்கைத் தனம் தெரியுது. ‘’என்னய ஏன்ணே நீ புரிஞ்சிக்கல’’ன்னு சிநேகனை கட்டிப் புடிச்சி அழும்போது. கர்மம்டான்னு இருந்துச்சு. தேவையே இல்லாம சிரிச்சிக்கிட்டு, பெப்பரப்பேன்னு............. அங்கயும் இங்கயும் நடக்குறத பார்க்கும் போது ரொம்ப எரிச்சலாகுது. ஜீலியா எலிமினேசன் லிஸ்டில் இருந்தாலும், அவரை விஜய் டிவி வெளியே அனுப்பாது என்றுதான் எதிர்பார்தேன். அதே போல் நடந்தது. இந்த வாரம் கூட பரணி லிஸ்டில் இருந்தாலும், கஞ்சா கருப்புதான் வெளியே போவார். ஏனென்றால், ஜீலியா, பரணியை வைத்துத்தான் அங்கு இருப்பவர்களை வெருப்பேற்றி டி.ஆர்.பி ரேட்டை அதிகரிக்க முடியும். அதுமட்டுமல்ல, பரணி, ஜீலியா இருவரும் நன்றாக அழுகிறார்கள் என்பது அவர்களின் கூடுதல் பலம், விஜய் டிவிக்கு அதுதான் தேவை. எவ்வளவு சீக்கிரத்தில் ஜீலியானா எலிமினேட் ஆகுறாங்களோ அவ்வளவு தூரத்துக்கு இருக்குற கொஞ்ச நெஞ்ச பெயரையும் காப்பாத்திக்கலாம்.
ஆர்த்தி, பரணி, சக்தி மூவரும் கமலைக் கண்டவுடன் என்னவோ கடவுளைக் கண்ட ரியாக்சன் கொடுப்பதெல்லாம் டூ மச். அதுலயும் ஆர்த்தி ஓவர் ஆக்டிங். எல்லோரும் ஹாலில் ஷோபாவில் கூடும் போது, ஆர்த்தி மட்டும் படுத்திருக்கா, உட்கார்ந்திருக்கா என்று தெரியாது. இம்ச எல்லா ஆங்கிளிலும் ஒரே சைசில் இருக்கிறது. கேமராவில் பிக் பாஸிடம், என்னவோ புருசனிடம் பேசுவது போலத்தான் பேசுது. ஷக்தி பரணியிடம் ‘’நானும் ரவுடிதான்’’ ரேஞ்சில் ‘’நான் பழைய மாதிரி இருந்திருந்தா என்ன நடக்கும்னே தெரியாது....’’ என பேசுவது சுட்டி டிவி பார்ப்பது போலவே இருந்தது. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த உடன் ஆர்த்தி பிரிஜ்ஜை தேடினார், சிலர் பெட்ரூம், சிலர் பாத்ரூம் எங்கே? என தேட நடிகர் ஸ்ரீ மட்டும் வெளியே போக கதவைத் தேடினார். சாம்பு மகன் மாதிரி ‘’வாட் இஸ் தி புரசிஜர் டு எக்ஸிட் தி ரூம்’’ன்னே சொல்லிக் கொண்டிருந்தார். பாவம்.
இங்கு கமலைப் பற்றி சொல்லியாக வேண்டும். ரியாலிட்டு ஷோ என்றால், உண்மையில் நாம் எப்படியோ அப்படியே இருக்க வேண்டும். நடிக்கக்கூடாது. அது கண்டெஸ்டண்டிற்கு மட்டுமில்லை, ஹோஸ்ட் பண்ணும் கமலுக்கும் பொருந்தும். அமிதாப் பச்சனின் குரோர்பதி ஹிட்டுக்கு காரணமே, அமிதாப் நடிக்காமல் இருந்ததுதான். தமிழில் கூட பிரகாஷ் ராஜ் அப்படி இயல்பாக செய்திருந்தார். ஆனால் சூர்யாவோ ‘’ஓங்கி அடிச்சா ஒன்ர டன் வெயிட்ல..’’ ரேஞ்சில் சிலுப்பினார். பிக்பாஸ் முதல் நாளில் கமல், ஏதோ ஒரு படத்தில் கமல்ஹாசனாகவே நடிப்பது போல நடித்து வெருப்பேற்றினார். போன வாரம் முழுவதும் உட்கார வைத்து கிளாஸ் எடுத்திருப்பார்கள் போல, இந்த வாரம் கலக்கினார். இருந்தாலும், என்னவோ உலகத்திலுள்ள அனைத்து விஷயங்களையும் தான் நடித்த 200 படங்களிலும் சொல்லிவிட்டது போல, ‘’என்னோட தேவர் மகன் படத்துல கூட....., என்னோட விருமாண்டில கூட ஒரு டயலாக்........, நான் நடிச்ச விஸ்வரூபம்ல.......’’.என மேற்கோள் காட்டி பேசுவது பெரிய அபத்தம்.   
கஞ்சா கருப்பு, வையாபுரி, ரைசா, ஜீலியா, பரணி,  அடுத்தடுத்த வாரங்களிலும், சிநேகன், காயத்ரி, சக்தி, ஆர்த்தி விஷக் கிருமிகள் அவர்களுக்கு பின் வெளியேற்றப்படலாம். நமீதா, ஓவியா, ஆரவ், கணேஷ் இறுதிவரை ஒரு டப் பைட் கொடுக்கலாம் என்பது என் கணிப்பு. பொதுவாக நான் கணித்தால் தலைகீழாகத்தான் நடக்கும். பார்க்கலாம்.................  
--------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.