செவ்வாய், டிசம்பர் 31, 2013

'தேம்ம' செய்யதுவும், காலித் vs பாத்திமாவும்.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

எனக்கு ஒரு பிளாக் இருக்குதுங்குறதே அடிக்கடி மறந்து போயிடுது. ஏதாவது ஒரு நல்லவுள்ளம், ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நான் கிறுக்கினத படிச்சி கமெண்ட் எழுதும் போது, அது நம்மளோட மெயிலுக்கு வரும். அத பார்த்தபின்னாடிதான், “ஆத்த்தி நாமளும் பிளாக் வச்சிருக்கோம்ல”ன்னு ஞாபகம் வரும். இன்னைக்கு கூட அப்படித்தான் ஏதோ பழைய போஸ்ட பார்த்து பாராட்டி வந்த மெயிலில் புண்ணியத்தில நினைவு திரும்பியது.

பேஸ்புக் வந்தபின், புது பொண்டாட்டி பின்னாடி அலையுற புது மாப்பிள்ளை மாதிரி ஆகிடுச்சு. அதனால பிளாக்கை ஏற்றெடுத்துகூட பார்க்கமுடியவில்லை. பிளாக்னா கம்பராமாயணம் மாதிரி கத கதையா எழுதனும், அந்த கஷ்டம் பேஸ்புக்குகு இல்ல திருவள்ளுவர் மாதிரி ரெண்டே ரெண்டடியில சொன்னா போதும். பத்து கமெண்டு (எதுவும் நல்லவிதமா இருக்காது), பதினைந்து லைக்குன்னு அலப்பரபண்ணலாம்.

இப்பெல்லாம், பேஸ்புக்குல ரெண்டு லைன் போஸ்ட் போடுறதுக்கே வக்கத்து போய் திரியவேண்டியதாயிருக்கு, இதுல பிளாக்குல என்ன எழுத? எங்கூடி எழுத?. ஒரு காலத்துல கற்பனைத்திறனும், கவித்திறனும் கரைபுரண்டு ஓடுச்சு, இப்ப கஞ்சிக்கு வழியில்லாம காய்ஞ்சிபோய் கிடக்குது. ஆனாலும் எழுதனுமேன்னு எழுதுறதுதான் இது. அதையும் நீங்க படிக்கனுமேன்னு படிச்சிக்கிட்டு இருக்கீங்க.

“தேம்ம செய்யது” ன்னு ஒரு ஆளு எங்க ஊருல இருந்தாராம், அவரைப்பற்றிய கதைகள் எங்க ஏரியாவில் ரொம்ப பிரபலம். அது உண்மையான கேரக்டரா? இல்ல நம்மாளுங்க உருவாக்குனதா? என்பது எல்லாம் நமக்கு தேவையில்லை. ஏரியாவுக்கு ஏரியா அந்த பெயர் மாறியிருக்கும் ஆனா கதை ஒன்னாத்தான் இருக்கும். அவருக்கு வேலை வெட்டின்னு எதுவுக் கிடையாது, சும்மா தேம்மேன்னு இருப்பாரு. இதுதான் ‘செய்யது’ “தேம்ம செய்யது” ஆன கதை.

இந்தமாதிரி சும்மா இருக்குற ஆளுங்களுக்குத்தான் ஊருல நடந்த, நடக்குற, நடக்கப்போகுற அனைத்து விசயமும் தெரியும். கிட்டத்தட்ட அவர் எங்க ஊரின் என்சைக்லோபிடியா. இந்த வீட்டுல யார் யாரு இருக்கா, என்ன என்ன செய்யுறாங்க என எல்லா டீட்டெய்ல்லும் அத்துபடி. இம்புட்டு திறமை இருக்குற ஒரு ஆளு சும்மா இருக்குறது எங்க ஊரு இன்னொரு பெருசுக்கு பொறுக்கல, தேம்ம செய்யதுகிட்ட போய் அவருடைய திறமையை எல்லாம் எடுத்து சொல்லி, “நீ ஏன் ஒரு கல்யாண புரோக்கரா ஆகக்கூடாது? கல்யாணம் பண்ணிவச்சதுமாச்சி, உனக்கு புரோக்கர் கமிசன் கிடச்சதுமாச்சி” என ஆலோசனையை வழங்க, தேம்ம செய்யதுக்கு ‘ச்சே, நமக்குள்ள இம்புட்டு திறம இருந்தும் தேம்மேன்னு இருந்துட்டோமே” ன்னு எண்ணி, புரோக்கரா உருவாகிட்டாரு.

முதல் ஆர்டர், கைத்தரி ஆலிமூசா மகன் காலித். பல இடத்துல சுத்தி, தேம்ம செய்யது புரோக்கரா புரமோட் ஆனத கேள்விப்பட்டு, அவர்கிட்ட வந்து நின்னிருக்கானுங்க. கல்யாண மாலை புரோக்கிராமுல வர்றது மாதிரி ஆலிமூசா தன்னுடைய பைய்யனைப் பற்றி “என் பையன் பேரு காலித், 10ம் வகுப்பு காலாண்டு பரீட்சை வரை படிச்சிருக்கான், அழகான, மாமனார், மாமியாரை அனுசரிச்சு போகுற பெண்ணா எதிர்பார்க்குறோம்” ன்னு சொல்லுறதுக்கு முன்னாடியே, “இவ ஓ புள்ள காலித்துதாண, போனவாரம் சந்தனக்கூடு விழாவுல, 10வது தெருல 12ம் நம்பர் வீட்டு புள்ளய கையப்புடிச்சி இழுத்து அடிவாங்குனவந்தான” என புள்ளிவிவரத்தை சொல்ல, மிரண்டுபோச்சு மாப்பிள்ளை வீடு,

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கனும், ஆனா முதல் கஸ்டமர் என்பதால் கூட ஒரு பூஜ்ஜியத்தை கடைசியில் சேர்த்து, அல்லாப்பிச்ச மகள் பாத்திமாவுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டார். அதுல இருந்து தேம்ம செய்யது ரொம்ப அதிகமா பிரபலம். குறைந்த காலத்தில் செஞ்சூரி அடிச்ச விராத் ஹோலி சாதனையை எல்லாம் நம்மாளு அந்தக்காலத்துல தூக்கி எறிஞ்சவருக்கு, மனசுல சின்ன உருத்தல் மட்டும் இருந்துக்கிட்டே இருந்தது.

அது என்னன்னா, முதலில் கல்யாணம் பண்ணிவச்ச காலித்-பாத்திமா ஜோடிக்கு வயித்துல ஒரு புளூ, பூச்சி உண்டாகலையேன்னு தான். இருந்தாலும் அவரு அதை பெரிசுபடுத்தல. தேம்மே செய்யதுவின் வரவால், மிரண்டு வரண்டு போன புரோக்கர்கள் அவரை காணும் இடமெல்லாம் அதை சொல்லிச் சொல்லியே கடுப்பேத்திக் கொண்டிருந்தார்கள்.பல நேரங்களில் பொறுமையாக இருந்தவர், அன்று, அதிகாலை தொழுகை முடித்துவிட்டு சாயக்கடையில் சாய குடித்துக்கொண்டிருந்த போது, மேரேஜ் அசம்பிளர் சங்க தலைவர், சுமார் நூறு பேர் கூடியிருந்த அந்த சபையில் “என்னப்பா செய்யது, நீ முதல்முறையா செஞ்சுவச்ச கல்யாண ஜோடிக்கு புள்ள இல்லாம ஆயிடுச்சே?” என தேம்ம செய்யதுவை சீண்டியிருக்கிறார்.

“இங்க பாரு, கரைசேராததுக்கும், காலங்கழிஞ்சு போனதுக்கு கல்யாணம் பண்ணிவைச்சதே பெருசு, கல்யாணம் பண்ணி வைக்குறதோட என் வேலை முடிஞ்சுது, அவனுக்கு புள்ள இல்லங்குறதுக்காக, ராத்திரி அவன் ரூமுக்குல்ல உக்காந்துக்கிட்டு “எல காலித்து நீ கைலிய தூக்கு, எலா பாத்துமா நீ பாவடைய தூக்கு” ன்னாடா சொல்லிக்குடுக்கமுடியும்.” ன்னு பொங்கி எழுந்துட்டாரு.

விவேகானந்தரின் ஐ.நா சபை சொற்பொழிவும், அண்ணாவின் பாராளுமன்ற பேச்சும் எவ்வளவு பிரசித்தியோ அதுமாதிரி தேம்ம செய்யதுவின் அந்த எதுகை மோனை பேச்சு அவ்வளவு பிரபலம் எங்க ஏரியாவுல.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

செவ்வாய், நவம்பர் 19, 2013

பங்காராம்


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

என் நினைவு சரி என்றால் அது 2006, பெங்களூரில் வேலை செய்துகொண்டிருந்தேன். அங்கு இரண்டு தெலுங்கு இஞ்சினியர்களும் இருந்தார்கள். ஆனால் அதில் ஒருத்தன் தான் நம்ம தோஸ்த். அவனுக்கும், எனக்கும் ஒரு ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட் இருந்தது, என்னன்னா, அவன் எனக்கு தெலுங்கு கற்றுக்கொடுக்கவேண்டும், அதற்கு பதிலா நாம என்ன இங்கிலீஸையா கத்து கொடுக்கமுடியும், தமிழ்தான். அவனுக்கு ஏற்கனெவே குஞ்சும், குஞ்சும் தமிழ் தெரியும், அதற்கு காரணம் அவன் எம்.டெக் சென்னையில் படித்திருந்ததால். குஞ்சம் குஞ்சம் தமிழ் என்றால், டேய் ஸ்......, பொறம்போக்கு, தே.....லே, போட்டாங்க்..... மாதிரியான சங்க இலக்கிய சொற்கள் மட்டுமே. எனக்கு அது கூட தெரியாது (தெலுங்கில்). பாய்ஸ் படத்தில் வரும் “தெங்கனா கொடுக்கா”வின் அர்த்தமே அவன் சொல்லிக்கொடுத்துத்தான் தெரிந்தது.

அது சரி........... பெங்களூருல போய் கன்னடத்தை கத்துக்குறத விட்டு விட்டு நீ எதுக்குடா, தெலுங்கு கத்துக்க ஆசைப்பட்டன்ன நீங்க கேக்கலாம். ஆனா நான் சொல்லமாட்டேன், அப்படின்னு சொன்னா நீங்க மிச்சத்தையும் படிக்கமாட்டீங்க என்பதால் சொல்லுறேன். அதுக்கு 2 காரணம் ஒன்னு, அப்ப சிவில் இஞ்சினியர்களுக்கு பெங்களூரை விட்டா, ஹைதராபாத், விசாகப்பட்டினத்தில் தான் வேலை வாய்ப்பு அதிகமா இருந்தது. பெங்களூர் ரொம்ப பிடித்த நகரம் என்றாலும், காவிறியில தண்ணி வந்தாலும், அவன் கக்கூஸ்ல தண்ணி வரலைன்னாலும் ஒருவாரத்துக்கு வெளி இடத்துல தலைகாட்டமுடியாது. அடுத்த காரணம், அப்போது மலையாளத்தை விட கில்மா படம் எல்லாம் தெலுங்குலதான் அதிகமா வந்துகொண்டிருந்தது. அந்த படத்துக்கெல்லாம் வசனமாடா முக்கியம்னு நீங்க முக்குறது தெரியுது, ஆனாலும் எனக்கு வசனத்தோட படம் பார்த்தாத்தான் கொஞ்சம் இது. சரி மறுபடியும் டியூசன் மேட்டருக்கு வருவோம்

நாம கொடுத்த டிரெய்னிங்கில் அவனிடம் சரஸ்வதி சம்பளம் போட்டு உட்கார்ந்துவிட்டாள். ஆனா நாம கொஞ்சம் வீக்கு (கத்துக்குறதுல). ஒரு நாளுக்கு, பத்துவார்த்தை உதாரணத்தோடு சொல்லித்தருவான், மறுநாள் மறந்திடும். அதுக்கு காரணம் சைடுல இன்னொருத்தன் கூட இதேமாதிரியா டீலிங்க் வச்சி ஹிந்தியும் கற்றுக்கொண்டிருந்தேன். அதுனால என்னாச்சின்னா, தெலுங்கு சேனல் வரவேண்டிய நேரத்துல ஹிந்தி சேனல் ஓப்பன் ஆகிடும், ஹிந்தி சேனல் வரவேண்டிய இடத்துல, தெலுங்கு சேனல் ஓப்பன் ஆகிடும். அப்படி இருந்தும், அவனுடைய தீவிரமான பயிற்சியில படிச்சதுதான் ‘பாகவுண்ணாரா’ ‘போஜ்ஜனமாயிந்தா’ ‘தெல்லேது’ ‘தெலுசு’ ‘சம்பிஸ்தானு’..... போன்றவார்த்தைகள். நான் சினிமா பைத்தியம் என்பதை கண்டுகொண்டு, தெலுங்கு படம் பார்த்தால் தெலுங்கு சீக்கிரம் கத்துக்கொள்ளலாம் என்றான். நானும் அதுவரைக்கும் எந்த தெலுங்கு சினிமாவும் பார்க்காததால் டபுள் ஓ.கே சொல்லிவிட்டேன்.

அதுக்கும் காரணம் இருந்தது, அந்தகால கட்டங்களில் தான் நடிகர் விஜய் தெலுங்கில் ஹிட்டான கில்லிகாரு, வசிகராகாரு.... போன்ற படங்களை தமிழில் விட்டு வெற்றிபெற்றுக்கொண்டிருந்தார். “பங்காராம்’ இதுவும் தரணி இயக்கிய படம், தெலுங்கில் எடுத்தபின்பு தமிழில் ‘தங்கம்’ என்ற பெயரில் எடுப்பதாக இருந்தது. இந்த விவரத்தை எல்லாம் என்னிடம் என் நண்பன் சொல்லி, படம் பார்க்க சம்மதிக்கவைத்தான். சரி நாமளும் தமிழில் ரிலீஸ்ஸாவதற்கு முன்பு பார்த்தமாதிரி இருக்கும் என்று சம்மதித்தேன். ஆந்திரா நண்பன் பவன் கல்யாணின் தீவிர ரசிகன். பவன் ‘அப்படி ட்ரஸ் பண்ணியிருப்பாரு, இப்படி ஸ்டைலா இருப்பாருன்னு’ என்கிட்ட வந்து ரொம்பதடவை டார்ச்சர் பண்ணுவான். எனக்கு பவன் கல்யாண் எல்லாம் யாருன்னு தெரியாது, தெரிஞ்சது சிரஞ்சீவி மட்டும்தான் என்று சொன்னாலும், விடாமல், ‘சிருவோட (சிரஞ்சீவி) சொந்த தம்பிதான் பவன்’னு ஹிஸ்டரி, ஜாக்கிரபி எல்லாம் சொல்லுவான்.

கிடைக்கிற ஒரு நாள் லீவுலதான் நான் நல்லா தூங்குவேன், ஞாயிற்றுக்கிழமைன்னா 11.30க்குத்தான் எழுந்திருப்பது. ஷோ டைம் 11.00 மணி என்று சொன்னதால், அவனுக்காக 10.க்கு அலாரம் வைத்துவிட்டு தூக்கியிருந்தேன். திடிரென ஒரு குரல் ‘ஏமிரா, ஒஸ்தாவா? லேதா?’, யாருன்னு பார்த்தா, நம்மாளு பவன் ஸ்டார் கெட்டப்புல நின்னுகிட்டு இருந்தான். அலாரம் அடிக்காம ரொம்ப நேரமா தூக்கிட்டோமோன்னு நினைச்சு மணிய பார்த்தா, 7.00. வந்துச்சே கோபம், எனக்கு தெரிஞ்ச ஒரே ஒரு தெலுங்கு கெட்டவார்த்தையை டிஜிட்டெல் சவுண்டுல கத்தி திட்டுனேன். 

“இப்பவே போனாத்தான் 11.00 மணி காட்சிக்கு டிக்கெட் இருக்கும் ராடா” ன்னு போர்வையை இழுத்துகொண்டிருந்தான். ‘சரிடா, போர்வையை ரொம்ப இழுக்காதே பிறகு வேற படம் பார்க்குறமாதிரி ஆகிடும், நீ போய் ஹால்ல உட்காரு நான் வர்றேன்’னு சொல்லி அனுப்பினேன். 8.00 மணிகு தியேட்டருக்கு போனா அடேய்ய்ய்ய்ங்கப்பா, நிக்குறானுங்க நாலு தெருவுக்கு. அந்த நேரத்துல என் நண்பனோட, நண்பனும் படத்துக்கு வந்திருந்தான் ரெண்டு பேரும் தெலுங்குல என்னோமோ பேசிக்கிட்டனுங்க. கூட நின்ன எனக்கு ஜெமினி டிவியில செய்தி பார்த்தமாதிரி இருந்துச்சு. அவங்கிட்ட பேசினபின்னாடி என் நண்பன் பயங்கரமா திட்ட ஆரம்பிச்சிட்டான். ‘பாரு அவன் மதியம் 1.30 ஷோவுக்கு இப்பவே வந்திட்டான், உன்னாலதாண்டா லேட்டு, இன்னைக்கு மட்டும் படம் பார்க்கல, உன்னை சும்மாவிடமாட்டேன்’னு தெலுங்குலேயே திட்டினான், இத எல்லாத்தையும் நான் ‘ஜம்பிஸ்தானு’ங்குற ஒரு வார்த்தையைக் கொண்டு கண்டுபிடிச்சேன்.

யாரு செஞ்ச புண்ணியமோ, அன்னைக்கு டிக்கெட் கிடைத்தது. உள்ள போனா, எல்லா சேரும் ஃபிரியா இருக்கு, எல்லா பக்கிகளும் நின்னுக்கிட்டே படம் பார்த்தானுங்க. சும்மா சொல்லக்கூடாது, ஹீரோ, வில்லன், காமெடியன் என எவனுக்கும் பாகுபாடு பார்க்காம ஹோ, ஹோன்னு கத்துனானுங்க. “யாருடா ஹீரோ?, இவனா?, இவனா?’ ன்னு கேட்டு கேட்டு ஓஞ்சுபோன எனக்கு ‘கதை என்னடான்னு கேக்குறதுக்கு என் உடம்புல தெம்பு இல்லை”. படம் ஆரம்பிக்கும் போது, தி.மு.க காரனுங்கமாதிரி ஹோ, ஹோ, ஹொன்னவனுங்க, ஒவ்வொரு தொகுதி நிலவரம் வரும் போது கலவரம் ஆனதுமாதிரி, கப்சிப்புன்னு அடங்கிட்டானுங்க. படம் பப்படம் மாதிரி நொறுங்கிடுச்சு. இடைவெளியின் போது ஒரு பய வாய்திறக்கல. படம் நல்லா இல்லைங்குறதுனால நமக்கு கிடைக்கவேண்டிய கூல்டிரிங்ஸ்ஸும், முருக்கும் போச்சு. “பர்லேதுடா, செகண்ட் ஆஃப் பாகவுந்தி’ ன்னு அவனை தைரியப்படுத்தினேன். அதுக்கப்புறம் தான் கோன் ஐஸ் வாங்கி கொடுத்தான்.

முதல் ஆஃப் பாக்கும்போதே தெரிஞ்சு போச்சு எனக்கு, செகண்ட் ஆஃப் வேலைக்காகாதுன்னு. அதேமாதிரித்தான் நடந்தது. அவனுக்கு இருந்த அந்த கொலவெறியில எனக்கு கேட்கனும்னு தோணுன அந்த கேள்விய மட்டும் நான் கடைசிவரை கேட்கவே இல்லை.

அது என்ன கேள்வின்னா ‘இ படத்துலு நானு தெலுங்கு கத்துக்குறதுக்கு ஏமிடா உந்தி?’

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

புதன், ஆகஸ்ட் 28, 2013

வேதியியல் (கெமிஸ்ட்ரி) வாத்தியார்.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
இவர் இன்ன பாடம்தான் எடுக்கிறார் என்று வாத்தியார்களின் முகத்தைப்பார்த்தே கண்டுபிடிச்சிடலாம். கணக்கு வாத்தியார் என்றால் முகத்தில் கொஞ்சம் தெய்வகடாச்சனம் தெரியும், தமிழ்வாத்தியார் என்றால் மீசை கொஞ்சம் பெரிய சைசில் இருக்கும், அறிவியல் வாத்தியார் என்றால் கொஞ்சம் சிரிச்சமுகமாக இருப்பார். வரலாறு வாத்தியார் முகம் மோனோலிசா ஓவியம் மாதிரி ஒரு சிறு கவலை ஒட்டிக்கொண்டிருக்கும், ஆங்கிலவாத்தியார் என்றால் கிளீன் ஷேவ்வாக இருப்பார். நான் சொல்கிறது 80% பொருந்தும், சில சமயங்களில் மாறுதலுக்குட்பட்டது. ஆனால், 100% உத்திராவதம் கொடுத்து சொல்லுவேன், எந்தகாலத்திலும் மாறாத, மாறவும் போகத ஒரு முகத்தோற்றம் உண்டு என்றால் அது வேதியல் வாத்தியார்களுடயதுதான், வேப்பங்க்கொட்டய திண்ணவனுங்க மாதிரி மூஞ்சி ‘உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ன்னு இருக்கும்.

‘இதுதான் எங்க கெமிஸ்ட்ரி சார்’, ‘இவர் எங்க கெமிஸ்ட்ரி வாத்தியார்’, ‘அங்க நிக்குதுபாரு அதுதான் எங்களுக்கு கெமிஸ்ட்ரி எடுக்குது’ இப்படி பல நண்பர்களின் கெமிஸ்டரி வாத்த்தியார்களைப் பார்த்த அனுபவத்தில் சொல்லுகிறேன். வேண்டும் என்றால் உங்களது வாத்தியாரை கொஞ்சம் கண்ணை மூடி நினைத்துப்பாருங்கள் (கண்டிப்பா யாரும் அந்த முகத்தை மறந்திருக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன்) நான் சொன்னது உண்மையென விளங்கும். ஏன்னா, குழந்தைங்க பொய் சொல்லமாட்டாங்க. பள்ளிக்கூடத்துல, எங்க வாத்தியார்களுக்கு எங்களது உடலின் ஒவ்வொரு பகுதியையும் பிரித்துகொடுத்துவிடுவோம். உயிரியல் டீச்சருக்கு, காது. கணக்கு மேடத்துக்கு கை, பிஸிக்ஸ் வாத்தியாருக்கு தலை (கொட்டி கொட்டியே தலை கொட்டாங்குச்சி அளவுக்கு வீங்கிடும்), ஆங்கில வாத்தியாருக்கு கக்கா போற ஏரியா, இந்த லிஸ்டில் கெமிஸ்ட்ரி சாருக்கு கன்னமும், அதைச் சார்ந்த இடமும்.

அடி ஒன்னும் இடி மாதிரி விழும். கன்னம் என்று கரெக்டா சொல்லிவிட முடியாது. அவரது உள்ளங்கை கன்னத்திலும், பெருவிரல் கண் புருவத்திலும், நடுவிரல் காது மேல்செவிலிலும் இருக்கும். சொன்னது மாதிரி, உங்க வலதுகையை இடது கன்னத்தில் வச்சிப்பாருங்க ஏரியா உங்களுக்கு புரியும். கிட்டத்தட்ட பாதி முகத்தை கவர்பண்ணிருவாரு. கை விரல் ஒன்னு ஒன்னும் அத்தித் தண்டியிருக்கும். மற்ற ஆசிரியர்கள் அனைவரும் அடி விழும்போதே, எதுக்கு அடிக்கிறோம், ஏன் அடிக்கிறோம் என்பதை சொல்லி சொல்லி அடிப்பார்கள். ஆனால் எங்க கெமிஸ்ட்ரி சார் மட்டும்தான், பேப்பர் கொடுக்கும்போதும் சரி, தப்பு செய்துவிட்டு தண்டனைக்கு நிற்கும் போதும் சரி, 5 நிமிடம் பொறுமையாக காரணத்தை சொல்லிவிட்ட பின்புதான் அடிப்பார், ஏன் என்றால் அவரிடம் அடிவாங்கியபின்பு அரை மணிநேரத்துக்கு காது, கேக்காது. அரைமணி நேரம் கழித்த அடுத்த 10 நிமிசத்துக்கு ‘கொய்ய்ய்ங்ங்’ன்னு ஒரு சப்தம் வரும். இப்படி பார்ட் பை பார்ட்டாக வேதியல் மாற்றங்கள் எல்லாம் நடந்து முடிந்து இயல்பு நிலைக்கு வருவதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆகும்.

‘சல்பேட்’ க்கும் ‘சல்ஃபைடு’ க்கும் எனக்கு வித்தியாசமே முதலில் தெரியாது. ‘இரண்டும் ஒன்றுதான், புக் பிரிண்ட் அடிக்கிறவன் போதையில இருக்கும்போது தப்பாக போட்டுட்டான்’னு நினைத்ததுண்டு. பின்பு மேலே சொன்ன ஒரு மணிநேர டிரீட்மெண்டுக்கு அப்புறம், ரெண்டு கன்னத்திலும் கையைவைத்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஆழமாக புரிந்துவிட்டது. எவ்வளவு பெரிய இரும்பு மனசுனாலும், எஃகு உடம்புனாலும் அவரு கை தான் கவிதை வாசிக்குமே அன்றி கம்புல கை வைத்து பார்த்ததே இல்லை. ‘வெற்றிவேல், வால்த்தர் வெற்றிவேல்’ மாதிரி இவர் ‘சக்திவேல், கெமிஸ்ரி சக்திவேல்’. இவர் +1, +2க்கு மட்டும்தான் பாடம் எடுப்பார். அதே ஸ்கூலில் தான் நான் 9ல் இருந்து படித்துக்கொண்டிருந்தேன், ஆகையால் அவரைப்பற்றிய போதுமான பயம் எனக்கு அப்போதே இருந்தது.
ஸ்கூல் முடிந்து பஸ்ஸுக்காக பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது, +1, +2 மாணவர்கள் அவரைப்பற்றி பேசுவதை கேட்கும்போதே ‘13ம் நம்பர் வீடு’ படம்பார்த்த மாதிரி த்திர்ல்லா இருக்கும். ‘இந்த வாத்திக்காகவே நாம +1, +2 வேற ஸ்கூலுக்கு போயிறனும்’ என்று முடிவெடுத்திருந்தேன். ஆனா, எங்க அப்பா சம்மதிக்கவில்லை. பத்தாவது முடிந்து, மார்க் ஸீட் வாங்கி நேராக அடுத்த கவுண்டரில் போய் நின்றார். “என்னால இங்க படிக்கமுடியாது, தயவுசெய்து நம்ம ஊருல சேத்திருப்பா” ன்னு துடிச்சேன், துள்ளினேன், கத்துனேன் கதருனேன். ம்ம்ம்ம்கும் பெரிய மனுசருக்கு மனசு இறங்கலை. இந்த ஸ்கூல்லதான் சேர்ப்பேன்னு முடிவா சொல்லிட்டாரு. ‘சரி அப்படின்னா ஒரு டீலு, அதுக்கு சம்மதித்தால், இந்த ஸ்கூல்ல படிக்கிறேன்’ என்று அப்பாவிடம் சொன்னேன். ‘என்னல டீலு?, சொல்லு?’ னு கேட்டார். ‘இந்த ஸ்கூல்லேயே படிக்கிறேன், ஆனா ஹிஸ்டரி குரூப்தான் எடுப்பேன், சரியா?”. ‘யல நீ அப்பனா?, நா அப்பனா?, ரொம்ப பேசுத, சமட்டி, சங்குல மிதிச்சிருவேன், நீ டாக்டர் ஆகனும், அதுக்கு முதல் குருப்தான் எடுக்கனும்’ ன்னு கண்டிப்போடு சொன்னார். “அதுக்கு நான் பேசாம, படிக்காம முதலமைச்சர் ஆயிடுறேன்?, முதல் குரூப் என்றால் இந்த ஸ்கூல் வேணாம்பா” என்று கெஞ்சி கூத்தாடினேன். ஆனால் என் கண்ணீருக்கு மதிப்பில்லாமல், கட்டாயத்திருமணம் மாதிரி அந்த நிகழ்வு நடந்திருச்சு.

முதல் ஒரு வாரம் ஏர்வாடியில சேர்த்த சேது மாதிரி போகுறது வருகிறது என்றுதான் இருந்தது. ஒரு வாரத்துக்கு அப்புறமாக கொஞ்சம் தெம்பு வந்திருந்தது, அதற்கு காரணம், பத்தாவது வகுப்பு வரை மற்ற ஸ்கூலில் படித்துவிட்டு, +1, +2 படிக்கிறதுக்கு இந்த ஸ்கூலுக்கு வந்த சில அடிமைகளின் நட்புதான். முக்கியமானது, முஹம்ம்பது அலி, களஞ்சிய சுந்தரம், அருன்குமார், டைட்டஸ், சண்முகசுந்தரம், செல்வராஜா, பைரோஸ்தீன், முருகேசன்”. இவங்களை எல்லாம் “பக்கீங்க அடிவாங்குறதுக்குன்னே பஸ்ஸேரி வந்திருக்குங்க பாரு” ன்னு நினைத்து, நினைத்து ஆரம்பகாலத்தில் மனதுக்குள் அதிகமா சிரித்திருக்கிறேன். முதல்முறையாக கெமிஸ்ரி சாரிடம் அடிவாங்கும் போது எனக்கு எந்த ஒரு உணர்ச்சியுமே இல்லை, உண்மையை சொல்லப்போனால் கொஞ்சம் சிரிப்புதான் வந்தது. நானாவது பரவாயில்லை 400 மார்க், அடிவாங்குறதுக்கு எனக்கு முன், வரிசையில நின்றது எல்லாம் மேல் கூறிய பிரஸ்பதிகள்தான். அவர்கள் மார்க் 480, 475, 450, 485.... கெமிஸ்ரி சார் மாணவர்களை மட்டும் தான் அடிப்பார், மாணவிகளை தொடமாட்டார் என்று கேட்டவுடன், ‘ச்சே பேசாமா, பொம்பள புள்ளையாவாவது பிறந்திருக்கலாம், இல்லன்னா பாம்பேல போய் ஆப்ரேசன் பண்ணிக்கலாம்’ என்ற எண்ணமெல்லாம் இருந்தது. ஆனால், அடிக்குப் பதிலாக, அவர் திட்டுற திட்டு இருக்கே........அதுக்கு பேசாம அவரு பொண்ணுங்கன்னுகூட பார்க்காம தூக்கிப்போட்டு ரெண்டு மிதி அதிகமா மிதிச்சிருக்கலாம். அந்த திட்டு எல்லாத்தையும் காதால கேட்டதுக்கு அப்புறம் ‘அப்பாட பாம்பே போற செலவுமிச்சம்” ன்னு தோணுச்சு.
    
பத்தாவது படிக்கிறவரை வேதியியல் என்றால், ‘பியூரட்’ ‘பிப்பட்’ CO2’ ‘H2O’ மட்டும்தான். +1க்கு வந்த பின்பு ‘ஆர்கானிக்’ ‘இன்ஆர்கானிக்’ என்று ஏது ஏதோ சொல்ல ‘ஒரு பூகம்பம் வராதா? பூமாதேவி சிரிக்கமாட்டாளா? பூமிக்குள்ள போயிறமாட்டோமா?’ என்ற லெவலுக்கு தற்கொலை என்னமெல்லாம் மேலோங்கிவிட்டது. அதுவும் கெமிஸ்ரி லேப் எல்லாம் ரொம்ப கொடுமை. ‘பியூரெட்ட எடு, சொட்டு சொட்டா ஊத்து, பிப்பட்ட வச்சு உறிஞ்சு, குவளையை சூடாக்கு, குடுவையை கலக்கு” என்கிற வார்த்தைகளை எல்லாம் இன்னும் கேட்டால் ஒரு நடுக்கம் வரும். ஏதோ ஒரு ஆக்ஸைடை எடுத்து ஏதேதோ அமிலத்துடன் சேர்த்து, என்னவெல்லாமோ செய்து கடைசியா கலர் மாறுவதற்கு குடுவையை, சூடான டீயை கையில்வைத்து ஆற்றுவது போல, சுற்றிக்கொண்டிருக்கையில் “என்ன யாஸிர் ரிசல்ட் வத்திருச்சா?” என்பதை ‘ஜுராசிக் பார்க் படத்தில திடிரென டைனசோர் வந்து கத்தும் குரலில் கேட்பார், கேட்டமாத்திரத்தில் பதற்றத்தில் கையில இருந்த குவளையை தரையில விழுந்து உடைந்துவிடும், “மாடு, மாடு, அறிவுகெட்ட மாடு. ஒரு ரிசல்ட ஒழுங்க கொண்டுவரத்தெரியல, நீயெல்லாம் எங்க உருப்படப்போற, நீ எல்லாம் எரும மாடு மேய்க்கத்தான் லாயிக்கு’ ன்னு அர்ச்சனை எல்லாம் நடக்கும். இப்படியா பல குவளைகள், பியூரெட்டுகள், பிப்பெட்டுக்கெல்லாம் காசு கெட்டினாத்தான் +2 மார்க்சீட்டை தருவேன் என்று சொல்ல இறுதியில் பைசா பாக்கியில்லாமல் பைசல் செய்யப்பட்டது.
கெமிஸ்ரி புக் கடைசி 10 பக்கத்துல, உப்பு என்ற பெயரில் ஒரு பெரிய வேதியியல் அட்டவனை இருக்கும் அதை படி படின்னு சொல்லி உயிரெடுத்துட்டாரு. கொடுமை என்னவென்றால், அந்த அட்டவனையில் முதல் இரண்டுபக்கத்தை படித்துவிட்டு மூன்றாவது பக்கத்திற்கு போனால், முதல்ல படிச்ச இரண்டுபக்கமும் மறந்திடும். அட்டவனையோடு கட்டி புரண்டு, எழுதி, எழுதிப் பார்த்து மனப்பாடம் செய்துவிட்டு, அவர் முன்னாடி போய் நின்றால், சம்பந்தமே இல்லாம புதுஷ்ஷா ஒன்னு கேப்பாரு, ‘நம்மளை முட்டாளாக்கப் பாக்குறாரு’ ன்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டே ‘இது அவுட்டாஃப் சிலபஸ் சார்’ என்று சொல்லிமுடிக்குறதுக்குள்ள. “அட்டவனை பக்கம் 5, பகுதி எண் 12” ன்னு சொல்லிமுடிச்சதுக்கப்புறம். காதுல கொய்ய்ய்ய்ய்ங்ங்க்க்க்க்க். கன்னத்த தடவிக்கொண்டே வீட்டுக்கு வந்து அட்டவனையை திருப்பி பார்த்தா, அதை படிச்ச மாதிரித்தான் இருக்கும், ‘ச்சே! கேள்விய சரியா புரிஞ்சிக்கலை, இல்லன்னா சரியா பதில் சொல்லியிருப்பேன், அடுத்த முறை கேள்வியை நல்லா புரிஞ்சி பதில் சொல்லனும்’ என்று முடிவெடுத்து போய் நின்றால், ரெண்டு முறை கேள்வியை கேட்டபின்பும், கேள்வி ரொம்ப புதுசா இருக்கும் “என்ன சார், இன்னொரு தடவ சொல்லுங்க?”ன்னு கேட்பேன் “இன்னொரு தடவ சொல்லிட்டாமட்டும் பதில் சொல்லி கிழிச்சிருவியாக்கும், மாடு, மாடு” ன்னு சொல்லிட்டு எக்ஸ்ட்ராவாகவும் திட்டுவார், அப்படி எக்ஸ்ட்ராவா திட்டுறது எதையும் நான் காதுகொடுத்து கேட்பதே இல்லை, ஏன்னா, கொய்ய்ய்ய்ங்ங்ங்க்க்க்.

அவர் அடில இருந்து மட்டும் எவ்வளவு பெரிய மன்னாதி மன்னன் என்றாலும் தப்பிக்க முடியாது. அவரது வலது கையை ஓங்குவாரு, நாம தப்பிக்குறதுக்கு முகத்தை இடது பக்கம் திருப்பினால், முழுசா திருப்புறதுக்கு முன்னாடியே இடதுபக்கத்தில் அடி விழுந்திருக்கும். ஆச்சிரியப்பட்டு நிமிர்ந்துபார்த்தால் வலதுகன்னத்தில் கையிருக்கும். “சொத்”ன்னு சின்னதாகத்தான் சவுண்ட் வரும், ஆனா, அம்மக்கட்டு வந்தவன் மாதிரி கன்னம் எல்லாம் வீங்கிப்போகும். காலேஜ் படிக்கும் போது ஒரு முறை அவரை பார்க்க நேர்ந்தது, அதிக மரியாதையுடனும், ஒரு சின்ன பயத்துடனும் வணக்கம் வைத்தேன், ‘என்னப்பா நல்ல இருக்குறியா?” என்பதைக்கூட “நீயெல்லாம் எங்க நல்லா இருக்கப்போற” என்ற தோரணையிலேயே கேட்டார். வேலைக்கு எல்லாம் சென்றபின்பு அவரைப் பற்றிய ஞாபகம் வர, என் நண்பனிடம் அவரைப் பற்றி கேட்டேன், அவர் பள்ளியை விட்டு சென்றுவிட்டதாகவும், விருதுநகரில் ஒரு கல்லூரியில் வேலை செய்வதாகவும் சொன்னான். நான் காலேஜ் விருதுநகரில் படித்திருந்ததால் அங்குள்ள கல்லூரிகளைப் பற்றி தெரிந்திருந்ததால்  ‘விருதுநகரிலா? எந்தகாலேஜ் டா?” என்று நண்பனிடம் விசாரித்தேன். நண்பன் அந்த கல்லூரி பெயரைச் சொன்னதும், நான் மூச்சை இழுத்துவிட்டேன். இனிமேல் அவரைப்பற்றிய கவலை நமக்கு வேண்டாம், இனி அந்த மாணவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று சாந்தமாகிவிட்டேன். கேண்டினில் இருக்கும், உளுந்த வடையில ஓட்டை இருக்குது, பருப்பு வடையில ஏன் ஓட்டை இல்லை என்ற கருத்தாழமிக்க ஒரு ஆய்வுக்காக காலவரையின்றி கல்லூரியை மூடவைத்த மாண்புமிகு மாணவர்கள், கண்டிப்பாக எனது வாத்தியாரை நல்லபடியாக பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


என்னுடய +2 மொத்த மதிப்பெண்களில், கெமிஸ்ரியில் தான் மார்க் மிக அதிகம். அதற்காக நான் கொடுத்த விலையும் (கொய்ய்ய்ய்ங்ங்ங்க்) ரொம்ப அதிகம்.

________________________________________________________________________________________யாஸிர். 

திங்கள், ஆகஸ்ட் 26, 2013

பலமொழித் திறமை-1.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.
நான் பள்ளிப்படிப்பை தமிழ்வழியில்தான் படித்தேன். அதுவரையில் எனக்கு மற்றமொழிகளைப் பற்றிய அறிவு பெரியதாக இருந்ததில்லை. ஆங்கிலம் உற்பட (ஆங்கில அறிவை அறிய, முந்தய பதிவுகளை பார்த்து அறி(திர்)ந்துகொள்ளலாம்). “தமிழ் அம்மா” தான் எங்களுக்கு தழிழ் வகுப்பு எடுத்தது, அன்னை தெரசாவுக்கும் எங்க தமிழ் அம்மாவுக்கும் பெரியவேறுபாடு எல்லாம் கண்டுபிடிக்கமுடியாது. பூமிக்கு வலிக்குமேன்னு நினைத்து மெதுவாத்தான் நடக்கும். பவர் ஸ்டாரை பக்கத்துல போய் குளோசப்ல, பார்க்கச் சொன்னாலும் பொறுமையா பார்க்கும். பொறுமைன்னா அப்படி ஒரு பொறுமை. ‘என்னுடைய 30 வருச சர்வீஸில், உன்னைய மாதிரி ஒரு மாணவனை நான் பார்த்ததே இல்லை, இவ்வளவு மோசமா தமிழை எவனாலும் வாசிக்கமுடியாது. ஒரு பக்கத்தை வாசிக்கிறதுல இத்த்த்த்தனை தப்புவிடுற, நீ எல்லாம் எப்படி +2க்கு வந்த?, சங்கரேஸ்வரிய பாரு, 10 வகுப்பு வரை இங்கிலீஸ் மீடியத்துல படிச்சிட்டு வந்தாலும் எவ்வளவு நல்லா தமிழ்வாசிக்குது, முட்டாள், முட்டாள், என் கண்ணுமுன்னாடி நிக்காத, புக்க தூக்கிட்டு கிளாஸை விட்டு வெளியே போ.............”ன்னு சொல்லிடுச்சு. எனக்கு அப்படியே ‘தாலி காத்த காளியம்மன்’, ‘ராஜகாளியம்மன்’ பட கிளைமாக்ஸ பாக்குறமாதிரி இருந்துச்சு. சூலாயுதத்துக்கு பதிலா தமிழம்மா கையில பிரம்ப வெச்சிக்கிட்டு சாமி ஆடிருச்சு. இந்த ஒரே ஒரு சம்பவத்தின் மூலம், ‘தமிழ் அம்மா பொறுமையையே சோதிச்சவன்’ ‘தமிழ் அம்மா பொறுமையையே சோதிச்சவன்’ என்று பெயரில் பள்ளிக்கூடம் முழுவதும் அனைவருக்கும் தெரிந்த முகம் ஆகிப்போனேன்.

தாய்மொழி அறிவே இப்படின்னா, மற்றமொழியெல்லாம் கேட்கனுமா என்ன?. கலேஜுக்கு போனவுடன் எல்லாமே இங்கிலீஸ், +2 வரை, ஒரு பக்க எஸ்ஸேயை (Easy)  மக்கப்பண்ணுறதே ஏழுமலையான் புண்ணியம், இதுல புக்கு புக்கு, பக்கத்துக்கு பக்கம் இங்கிலீஸ்னா என்னபண்ணுறது. முதல் நாள் பகல் கிளாஸ் முடிந்து சாப்பிட ஹாஸ்டல் போகும் போது பக்கத்துல இருக்குறவனிடம் “அடேங்கப்பா... பெரிய்ய்ய காலேஜ்லதாண்டா சேர்ந்திருக்கோம், இங்கிலீஸ்க்கு மட்டுமே 4 வாத்தியார்னா பாரேண்”ன்னு சொன்னேன். “டேய் பொறம்போக்கு, இங்கிலீஸ்ல பாடம் நடத்துனா எல்லோரும் இங்கிலீஸ் டீச்சரா?, அவங்க எல்லாம் கம்யூட்டர், கெமிஸ்டிரி, மெக்கானிக், மேத்ஸ் வாத்தியாருங்கடா, இங்கிலீஸ் டீச்சர் மதியம் 2 வது கிளாஸுக்கு வருவாங்க.”ன்னு கோபமா சொல்லிட்டு கிளம்பிட்டான். ரொம்ப அறிவாளியா இருக்கான், இவன நம்ம பக்கத்துல வச்சிக்கிடனும்னு, சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்தா, பயபுள்ள பத்து பென்ஞ்ச் தள்ளிபோய் உட்கார்ந்திருந்தான். ஆங்கிலத்தில் அசிங்கப்பட்டதை எழுதிக்கொண்டே போனால் ஒரு முடிவுக்கு வருவது கஷ்டம்

இந்த இரண்டுமொழிகளுக்கு அடுத்ததாக, புதுசா இரண்டு மொழிகள் ஒரே நேரத்துல நம்ம வாழ்க்கையில வந்தது. ஒன்னு ஹிந்தி, இரண்டாவது கன்னடம். கல்லூரி முடித்தபின்பு, பெங்களூரில் வேலை கிடைத்தது. இண்டர்வியு முடிந்து பெங்களூரில் வேலை என்று சொன்னபோது, ‘சார், போஸ்டிங் சென்னையில இருந்தா நல்லா இருக்கும்’ என்று தயங்கி, தயங்கி கேட்டேன்’ ‘என்ன ஆளுய்யா நீ, பெங்களூர போய் வேணாங்குற, கிளைமேட் எல்லாம் சூப்பரா இருக்கும், அங்க உள்ள பிகருங்க அதவிட சூப்பரா இருக்கும்’ என்று சொன்ன உடனேயே ‘எப்ப சார் ஜாயிண்ட் பண்ணனும்?’னு கேட்டுவிட்டு அடுத்தவாரமே ஜாயிண்ட் பண்ணினேன். ஹிந்தி பேசுறவர்களும், கன்னடம் பேசுகிறவர்களும் அங்கு வேலை செய்ததால் இந்த இரண்டு மொழிகளையும் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது. என்னுடன் வேலைபார்த்த அனைத்து இன்ஞ்சினியர்களும் தமிழர்களே, ஒருவனைத்தவிற. அவன் பெயர் நேரு பாபு, அவன் ஆந்திராக்காரன். முதல் மூன்று நாட்கள் கண்ணகெட்டி காட்டுல விட்டமாதிரி இருந்துச்சு. ஒரு குரூப் வரும், டிராயிங்க வச்சிக்கிட்டு எதையோ பேசுவானுங்க, அப்புறம் அவனுங்களே போயிருவானுங்க. அடுத்த குரூப் வரும் அவனுங்களும் எதையோ சொல்லுவானுங்க. ‘ஒகே சார்’னுட்டு போயிறுவானுங்க. என்னோட கவலை, எதைப் பற்றி பேசுனானுங்க என்பது அல்ல, என்ன பாஷை பேசுனானுங்க என்பதுதான். இப்படியா வருகிறவன் போகிறவன், ஹிந்தி பேசுறானா? இல்ல கன்னடம்? பேசுறானான்னு தெரிஞ்சிக்கிறதுக்குள்ள 3 மாசம் ஓடிருச்சு.
இனிமேலும் சும்மா இருந்தா மோசம்போயிறுவோம் என்று எண்ணி, ‘30 நாளில் ஹிந்தி கற்றுக்கொள்வது எப்படி?’, ‘30 நாளில் கன்னடம் கற்றுக்கொள்வது எப்படி?’ என்ற புத்தகத்தை வாங்கி, பத்தே நாளில் படித்துமுடித்து ஹிந்தி, கன்னடம் பேச ஆரம்பித்தேன். ‘ஹெஸ்ரேனு?” என்று எவனாவது கன்னடத்தில் ‘உன் பெயர் என்ன?’னு கேட்டா ‘மேரா நாம் யாஸிர் ஹே’ன்னு ஹிந்தில பதில் சொல்லுற அளவுக்கு இரண்டு பாஷைகளும் நம்ம வாழ்க்கையில ஒன்றாக கலந்திடுச்சு. பாஷையை நல்லா படிக்கனும்னு வீம்புக்குன்னு ரெண்டு லேபர உட்கார வச்சு, சொந்த கதை, சோகக் கதை எல்லாம் பேசுறது. சில சமயம் நாம பேசுறத கேலிபண்ணி சிரிப்பானுங்க, நானும் சிரிச்சிக்கிட்டே அவன புகழ்றது போல ‘போடாங்க்.... த்தா, நாயே, மொள்ளமாறி’ என்று வஞ்சனயை தீர்த்துக்கொள்வதும் உண்டு. தமிழையும், இங்கிலீஷையும் கலந்து ‘தமிலீஷ்’ பேசுவது போலத்தான், தமிழையும் ஹிந்தியையும், கலந்து ‘தமிந்தி’ யாக பேசிக்கொண்டிருந்தோம் (இப்பவரையில் அப்படித்தான்). ‘என்னப்பா, அவனுங்க இப்படி மெதுவா வேல பார்க்குறானுங்க, போயி, வேகமா வேலையை பார்க்கச்சொல்லு’ன்னு சொல்லிட்டு புராஜெக்ட் மேனஜர் போயிருவாரு. எனக்கு எப்படி சொல்லுறதுன்னு தெரியாது. எடுப்பேன் கையில 30 ஹி.ப.எ?. வேகமான்னா ஹிந்தியில ‘ஜல்தி’ வேலைக்கு ‘காம்’ பாருங்கடாக்கு என்ன?ன்னு தேடுனா கிடைக்காது. சரி இருக்குறத வச்சிக்கிட்டு ஒப்பேத்துவோன்னு, கோபமா மூஞ்சிய வச்சிக்கிட்டு “ஜல்தி காம் பாருங்கடா” ‘ம்ம்ம் காம் ஜல்தி பாருங்கடா” ன்னு மூச்சப்போட்டு தொலைக்கனும். அப்புறம் கொஞ்ச நாள் கழித்து ‘பாருங்க’க்கு ‘கரோ’ ங்குறது தெரிவந்தது. அப்புறம் என்ன “வேகமா காம் கரோங்கடா’, ‘ஜல்தி கரோங்கலேண்டா’ தான்.

கன்னடம் என்னைய ரொம்பவெல்லாம் படுத்தி எடுக்கல. ‘ஏனெப்பா, செனாஹிதியா?’ ‘ஊட்டா ஆய்த்தா?’ (நல்லாயிருக்கியா?, சாப்பிட்டாச்சா?) இந்த ரெண்டு பார்மல் கேள்விக்கு அப்புறம் தமிழ்லதான் பேசுறது. பெரும்பாலும் அவர்களுக்கு புரிந்துவிடும். அப்ப, அப்ப மானே, தேனே பொன்மானே, மாதிரி அங்க அங்க ஒன்னு ரெண்டு கன்னடவாக்கியங்களை போட்டு பேசிவிடுவதால் பெரிய கஷ்டம் எல்லாம் இருந்ததில்லை. இருந்தாலும் கன்னடக்காரர்களுக்கு அவங்க மொழிமேல ரொம்ப பற்று. ‘ஏனு சார், கன்னடத்தல்லி, மாத்தாடுத்தாயில்லா நீவு’ (என்ன சார் நீ, கன்னடத்துல பேசவே மாட்டேங்குற?) என்று சில சமயம் என் மேல செல்லமா கோவப்படுவார்கள். ‘என்னடா இப்படி கேட்டுட்டீங்க, உங்களுக்கு கன்னடத்துலதானடா பேசனும், நான் பாட்டே பாடுறேன் பாரு?”ன்னு சொல்லி ♪♫” உட்டிதரே கன்னடதல்லி உட்டாபேக்கு, மெட்டிதரே கன்னடதல்லி மெட்டபேக்கு............♫♫♪ன்னு கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பாட்டை பாடுனதும் ரெம்ப சந்தோசமாயிடுவானுங்க. “இங்க தமிழ், கன்னடர் கலவரம் அடிக்கடி வரும், அந்த நேரத்துல உசுருக்கு பங்கம்வந்திருச்சுன்னா இந்த பாட்டை பாடி தப்பிச்சிக்கோ” ன்னு ஒருத்தன் சொல்லிக்கொடுத்தது, இந்த பாசப்பிறவிகளுக்காக பயன்பட்டது. ‘பிறந்தால் கன்னடனாக பிறக்கவேண்டும், தின்றால் கன்னட சோற்றை தின்னவேணும்’ என்பதுமாதிரியான ஒரு மொழிப்பற்று பாடல் அது.

இந்தமாதிரியான கண்ணாம்பூச்சி விளையாட்டு எல்லாம் தொழிலாளர் வர்க்கத்தில் மட்டும்தான் செல்லுபடியானது. எங்களுடைய கிளைண்ட் இஞ்சினியர்கள் (client engineer) அனைவரும் கன்னடர்கள். நான் பொதுவாக அவர்களிடம் ஆங்கிலத்தில்தான் அலவுவது. நான் பில்லிங்க் இஞ்சினியர் என்பதால் மாதம், மாதம் முதல்வாரம் பில்லைக்கொண்டு நீட்டி பணம் வாங்கவேண்டும். அப்போ கிளண்ட் (client) இஞ்சினியர்கள் 4 பேர் இருந்தார்கள். கொண்டுப்போகுற பில்லை 4 பங்காக பிரித்து எல்லோரும் திருத்தி அப்ரூவ் செய்வார்கள். அதில் 3 பேருக்கு தமிழ் நன்றாக தெரியும், ஒருத்தருக்கு சுத்தமாக தெரியாது. நான் கன்னட அடிமைகளிடம் பேசுற அப்பாட்டக்கர் கன்னடத்த பார்த்த அந்த மனுசன், ‘எங்கிட்டயும் நீ கன்னடத்துல பேசனும், அப்படின்னா மட்டும் பில்லை திருத்துவேன், இல்லன்னா, பில்லை திருத்தமாட்டேன், கொண்டு ஓடிப்போயிரு’ ன்னு சொல்ல மிரண்டுட்டேன். ‘இந்த நேரம்னு பார்த்தா செய்யாத வேலைக்கும் சேர்த்து 5 லட்சத்துக்கு பில்ல போடுவேன். நாம பேசுற கன்னடத்துல கடுப்பாகி, செய்த வேலைக்கு உண்டான 10 லட்சத்தையும் தரலண்னா என்ன செய்ய?’ என்று மனதுக்குள் எண்ண ஓட்டம். அதுக்கு முன்னாடியெல்லாம் அவரிடம் நான் என்னுடய ஓட்டை இங்கிலீஸைக் கொண்டு விளக்கம் கொடுப்பேன், அதை அவருடய பெரிய்ய்ய்ய ஓட்டை இங்கிலீஸை வைத்து அர்த்தம் புரிந்து கொண்டு அப்ரூவல் செய்வார்.
அவருக்கு சப்போர்ட்டாக மற்ற இஞ்சினியர்களும், ‘இந்த முறை ஜெகனாத் கிட்டயே எல்லாத்துக்கும் அப்ரூவல் வாங்கிடு, நீ கன்னடத்துல பேசுறத நாங்க பார்க்கனும்’ சொல்லி சுத்தி உட்கார்ந்து கொண்டார்கள். வேற வழியே இல்ல, கன்னடத்துலதான் பேசியாகனும். நான் அவர்கிட்ட பேச, பேச சுத்தியிருக்குற மற்ற இஞ்சியர்கள் விழுந்து, விழுந்து சிரிச்சானுங்க, எனக்கு ஒரே ஆச்சர்யம், ‘நாம கன்னடத்துல காமெடி பண்ணுற அளவுக்கு டெவலப் ஆகிட்டோமேன்னு’ பெருமையா இருந்தது. பேச ஆரம்பித்து ரெண்டாவது நிமிசத்துலேயே, ஒரு பைசாவைக்கூட கட் பண்ணாம, எல்லா பில்லையும் அப்ரூப் பண்ணிட்டு, கிளம்பு, ரொம்ப சந்தோசம்னு, பெருய கும்பிடு போட்டு அனுப்பிட்டாரு. எனக்கு என்ன நெனச்சு நெனச்சு ஒரே பூரிப்பு. அதுல இருந்து கூடவேலை பார்த்த தமிழ் இஞ்சினியர்களிடம் கூட கன்னடத்தல்லினே மாத்தாடுது. கன்னட இஞ்சினியரில் ஒருவர் பெயர் நாராயனப்பா. அவரிடம் மறுநாள் “ஏனு சார், செனஹிதிரா?’ (என்ன சார், நல்லாயிருக்குறீங்களா?)ன்னு கேட்டதுதான் தாமதம் பாய்ந்து வந்து அடுத்த கேள்விய கேக்குறதுக்குள்ள வாய பொத்திகிட்டு தனியா தள்ளிக்கிட்டு போயிட்டாரு.

‘டேய், எனக்குத்தான் தமிழ் தெரியுமே, நேற்றுவரை தமிழ்ல தானே எங்கிட்ட பேசுன, இன்னைக்கு என்ன செனாஹிதிரா?, தமிழ்லேயே பேசு போதும்.’

‘ஏனு சார், ஈத்தர மாத்தாடுத்தாயிதிரா?’

‘டேய் உன்ன கொன்னே போட்டுருவேன். ஒழுங்க தமிழ்லேயே பேசிரு’

‘என்னசார், இப்படி பேசுரீங்க?, கன்னடத்துல பேசுறது நல்லதுதானே, எனக்கு கன்னடம் தெரிஞ்சமாதிரி இருக்கும். நேற்றுமட்டும், சிரிச்சு, சிரிச்சு ரசிச்சீங்க.’

‘நேற்று அவர்கிட்ட என்ன பேசுன, அத தமிழ்ல சொல்லு?’ ன்னு நாராயணப்பா கேட்டாரு.

அவர் கேட்டபின்பு, எனக்கு ஒரே குழப்பம், நேற்று பக்கத்துல இருந்து கேட்டவருக்கு அதுக்குள்ள எப்படி மறந்துச்சு. எதுக்கு மறுபடியும் தமிழ்ல கேட்குறாருன்னு குழப்பத்துக்கு முடிவுதெரியாமல் நான் நேற்று கன்னடத்தில் சொன்னதை திரும்ப தமிழில் சொன்னேன் ‘உங்களைப் பற்றி எனக்கு தெரியும், நீங்கள் ரொம்ப நல்லவர், என்னுடய எல்லா பில்லையும் சீக்கிரம் அப்ரூவ் பண்ணிவிடுவீர்கள்..................................’ என்று மூன்றாம் வகுப்பு மாணவன் கணித வாய்ப்பாடு சொல்லுறமாதிரி சொல்லிக்கொண்டிருந்தேன்.

‘நீ சொல்ல நினைத்தது அது, ஆனால் நீ கன்னடத்தில் சொன்னது அப்படியல்ல’ என்று நாராயணப்பா சொல்ல, ‘என்ன சார் சொல்லிறீங்க, அப்ப நான் என்னதான் சொன்னேன்?’ பரிதாபமாக கேட்டேன்.

‘உன்னப்பத்தி எனக்கு தெரியாதா? நீ நல்லவனா? என்னுடய எல்லா பில்லையும் சீக்கிரம் அபேஸ் பண்ண நினைச்சியா?........................’ என்று அவர் சொல்ல சொல்ல எனக்கு அந்த குளிரிலும் அப்படி வேர்த்துக்கொட்டியது. ‘இப்படி கேள்விக்குறியா கேட்டு, நம்ம வேலையே கேள்விக்குறியாடுச்சே, கண்டிப்பா இன்னைக்கு அக்கவுண்ட செட்டில் பண்ணிருவானுங்க’ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. மற்ற இஞ்சினியர்கள் எல்லாம் நான் கூறவந்ததைக் கூற, அவரும் புரிந்து கொண்டு, அந்த விசயத்தை அப்படியே விட்டுவிட்டார். ஆனால் ‘அடுத்த மாசத்துக்கும் அவர்கிட்டத்தான பில்லக்கொண்டு போகனும், எப்படி அவர் மூஞ்சில முழிக்கிறது’ என எனக்கு சங்கோஜமாக இருந்தது.

அடுத்தமாசம்

‘வாப்பா யாஸிர், என்னே இந்தேமாசம் எத்னே கோடி பில்லு இருக்குதுஉ?’ என விஜயகாந்த் பட ஆப்கானிஸ்தான் வில்லன் மாதிரி ஜெகனாதன் தமிழ்லில் கேட்க எனக்கு ஒரே ஆச்சர்யம், ‘தமிழ் தெரிஞ்சிக்கிட்டே நம்மகிட்ட தெரியாதமாதிரி இவ்வளவு நாளா நடிச்சிருங்காரு’ன்னு மனதில் நினைத்தது அவருக்கு கேட்டுவிட்டது போல. ‘ஏனு நீ மட்டு தான் எங்கே பாஷையை கொல்லை (கொலை) பண்ணுவியா, நான் உங்கே பாஷையை பண்னேக்கூடாதா, ஸோ, நா தமிழ் காத்துக்க (கற்றுக்கொள்ள) ஆரம்பிச்சிட்டேன்’ என்று சொல்ல, அன்னையில இருந்து கனவுல என்னை வள்ளுவர் வாளோடு துறத்துராரு.


________________________________________________________________________________________________யாஸிர்.

வியாழன், ஆகஸ்ட் 22, 2013

சலூன் கடை.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
ஒருத்தன் எவ்வளவுதான் பெரிய வீரனாக இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்துக்கு போகுறதுக்கு அல்லு கலரும். எனக்கு, பள்ளிக்கூடம் படிக்கும் போது ஆங்கில வகுப்பு, காலேஜ் படிக்கும் போது கம்யூட்டர் லேப், இந்தமாதிரியா, லிஸ்ட் ரொம்ப நீளம். இப்படிப்பட்ட நீளமான லிஸ்டில முதல் இடத்துல இருக்குறதுதான் சலூன் கடை. பல பேருக்கு “அய்யோ முடிவளரமாட்டேங்குதே”ன்னு கவலை, எனக்கு “ஏண்டா முடிவளருது”ன்னு கவலை. நம்ம தலையில முடி வளர்கிறது என்பது அங்கொன்னு, இங்கொன்னு கேட்டகரியிலதான் வளரும்
.
கல்யாணத்துக்கு முன்னாடிவரை, “அச்சச்சோ, இப்டி ஆயுடுத்தே” என்று நினைச்சு, நினைச்சு விஜிகாந்த் கண்ணுமாதிரி ரெட் ஆகுறவரை அழுதிருக்கேன். கல்யாணத்துக்கு அப்புறம் அந்த கவலையே போயிருச்சு, ஏன்னா, இப்போது என்னை நினைத்து அதை என் மனைவி அழுதுகொண்டிருக்கிறாள். ஊருல இருக்கும் போது ஏதோ இழவு வீட்டுல துக்கம் விசாரிக்க வந்தவனுங்க மாதிரி “என்ன தம்பி இப்படி ஆயிடுச்சு?, போனதடவ பார்க்கும் போதெல்லாம் நல்லாத்தான இருந்துச்சு, எப்போ இந்தமாதிரி?, டாக்டர பார்க்கலியா?....”ன்னு கேட்டு கேட்டு கேவலப்படுத்துவானுங்க. எங்க நம்ம நண்பன், அவனுடய நண்பனை அறிமுகப்படுத்தி வச்சிருவானோன்னு வாழ்கை திகிலா போயிக்கிட்டு இருக்கும். “டேய், இது என் நண்பன் கதிர்”ன்னு நம்ப நண்பன் அவன் நண்பணை அறிமுகப்படுத்தி வைப்பான், நாமளும் சந்தோசமாக “ஹாய் பாஸ், நான் யாஸிர்”ன்னு கையகுலுக்குவேன். அடுத்த கேள்வி “எப்ப ப்ரோ உங்களுக்கு இதுமாதிர் ஆச்சு”ன்னு கேட்பான். “முந்தாநாள்தாண்டா முட்டாப்........”ன்னு வாயிலவருவதை மென்னு வயித்துக்கு அனுப்பிவைப்பேன். “கல்ஃப் கேட்டுக்கு போய்பாருங்க” “ஹேர் டிரான்ஸ்பிளாண்டேசன் செய்ங்கன்னு” நம்ம மேல அம்புட்டு அக்கரையையும் அன்னைக்கே காட்டுவானுங்க.

காலேஜ் படிக்கும் போது, இவனுங்க என்னமோ தலய சீவிட்டு ரோட்டுல இறங்கினா, பஸ்ட் இயர் பொண்ணுங்கல்ல இருந்து பைனல் இயர் பொண்ணுங்க வரைக்கும் மடில விழுந்துகிடக்கும்னு நெனப்பு, பொண்ணுங்க எதிர்த்தாப்புல வந்தா, “பாய் சீப்பு இருக்கா?”ன்னு கேட்டு நம்மகிட்ட ஹியூமர் வேற. இவனுங்க அக்கப்போருக்கு அஞ்சி, கிளாஸுக்கு போகும்போதும் சரி, கிளாஸ் முடிஞ்சபின்னாடியும் சரி தனியாகத்தான் போறது, வர்றது. கையோட இன்னைக்கு கூட்டிகிட்டு போகனும்னு ரூம்ல வந்து உட்கார்ந்து இருப்பானுங்க, குளிச்சி முடிச்சிட்டு வந்தவன், இவங்கள பார்த்தபின்னாடி “ஆயி போக மறந்திட்டேன், நீங்க போங்க நான் பின்னாடி வாரேன்”னு வாளிய தூக்கிட்டு மறுபடியும் பாத்ரூமுக்கு ஓடுவேன். கிளாஸ் முடிஞ்சா “கொஞ்சம் எழுத வேண்டியிருக்கு”, “டிராயிங்க் போடவேண்டியது இருக்குன்னு” வண்டி வண்டியா பொய் சொல்லி அவனுங்ககிட்ட இருந்து தப்பி பிழைப்பேன். சில சமயங்களில் மந்தையில சேர்றமாதிரி ஆகிடும், “1. தல முடிய தூக்கிவிடுறது, 2. மயிற முன்னாடி இழுத்து விடுறது, 3. இந்த சீப்பு கேக்குறது, இதயெல்லாம் பண்ணக்கூடாது” ன்னு சூடம் ஏத்தி சத்தியம் வாங்கிட்டுத்தான் சேர்ந்து நடப்பேன். ஒரு கை பேண்ட் பாக்கெட்டிலும், இன்னொரு கை புத்தகத்தை தூக்கிக்கொண்டும் இருக்கும். அர்னால்ட் படம் முதல் அல்போன்ஸா நடித்த பிட்டு படம்பற்றி நல்லாத்தான் பேசிக்கிட்டு வருவானுங்க, திடீரென கையில இருந்த புத்தகம் அக்குலுக்கு இடம் மாறும், ரெண்டு கையாலும் தலையை விஸ்கு, விஸ்குனு கோதிவிடுவானுங்க. “என்னடா எலி திடீர்னு அம்மணமா ஓடுது”ன்னு எதிர்ல பார்த்த, அங்க இருந்து ரெண்டு மூணு பாவட போட்ட எலிகள் எதிர்லவரும். என்னோட வருத்தம் எல்லாம் ஒரு நல்ல பிகருக்கு செஞ்சாலும் பரவாயில்லை, உலக லெவல்ல ஆடிசன் வச்சாலும் அந்த மாதிரி அட்டு பிகர பாக்கவேமுடியாது, அதுக்கு இவனுங்க அந்த முடியை வச்சிக்கிட்டு பண்ணுற அலப்பரை இருக்கே சடயாண்டி முனீஸ்வரனுக்கே பொருக்காது. இதயெல்லாம் அவனுங்க வாங்கிக்கொடுக்கும் ஆரிப்போன டீய குடிக்குறதுக்காக பொருத்துக்கொண்டு பின்னாடியே போகனும்.
ஒவ்வொருத்தனும் அவங்களுடைய சிறுவயது போட்டோவைக் காட்டிகொண்டிருந்தார்கள், “அப்ப விட இப்போ கொஞ்ச கருத்துட்ட மச்சி”, “கையில அப்பவே அந்த தழும்பு இருந்திருக்குடா” “ம்ம்ம்ம் அப்பவும் பிகருங்க கூடத்தான் நிக்குற” “உன்னய தூக்கிவச்சிருக்குறது யாருடா?” இப்படியாக பல கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் என்னுடய பள்ளிப்பருவத்து போட்டோவைக்காட்டினேன். “யாருடா, உன் தம்பியா?”, “டேய், அது நான்தாண்டா”. “பொய் சொல்லாத யாஸிரு, சாமி கண்ண குத்திரும்”, “அடப்பாவி, சத்தியமா நான் தாண்டா அது” எல்லோரும் ஒன்னு கூடி ஒருதடவைக்கு ரெண்டுதடவ பார்த்திட்டு “பாய் அப்பெல்லாம் முடி இருந்திருக்குடா?” என்று சொல்லவும் “அமுல் பேபி மாதிரி இருக்கடா” “ரொம்ப குயூட்டா இருக்கடா” என்ற பதிலை எதிர்நோக்கி காத்திருந்த எனக்கு எப்படி இருந்திருக்கும். “நான் என்னடா பிறவிக் குருடு மாதிரி பிறவிச் சொட்டையாடா? நீங்கெல்லாம் ஹைட்ரோசீல் நோய் வந்துதாண்ட சாவீங்க” சாபம் விட்டுட்டு ♪♫♫”தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான் போல வந்தவனே யார் அடிச்சாரோ, யார் அடிச்சோரோ…..♫♫♪ சோகபாட்டை பாடிக்கிட்டே போட்டோவ தூக்கிகிட்டுவந்திட்டேன்.

இப்படியாக பல பல சோகக்கதைகள், எல்லாத்தையும் இங்க போட்டம்னா “கன்னித்தீவு” ரிகார்ட் எல்லாம் காணமல் போய்விடும். முடிவெட்டவேண்டும் என்ற நிலை வந்துவிட்டால், சலூன் கடையை செலக்ட் செய்யவே ஒரு மாதம் எடுத்துக்குவேன். முதல் வாரத்துல 3 கடைய செலக்ட் பண்ணி அடுத்த வாரத்துல, அந்த 3 கடையில ஒரு கடைய முடிவு பண்ணி, அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் அந்த கடைய பற்றி தெரிந்துகொண்ட பின்புதான் அங்க போயி முடியே வெட்டுவேன். கடயைப்பற்றி தெரிஞ்சுக்கிறதுன்னா “யாரு ஓனர்?” “ஒரு நாள் சம்பாத்தியம் எவ்வளவு” “வேறு எங்க எங்க பிரான்ஞ் இருக்கு” “பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் யார் யார்?”இப்படின்னு நீங்க நெனச்சா அது தப்பு, நான் தெரிந்துகொள்வது எல்லாம் “எந்த நேரத்துல கூட்டம் இருக்காது” “எந்த நேரத்துல முடிவெட்டுறவன் கேள்வி எதும் கேட்காமல் முடிவெட்டுவான்” இது ரெண்டுமட்டும் தான். எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி ஒரு சுபயோக சுபதினத்தில் போய் உட்கார்ந்து முடியவெட்டிட்டு வருவேன்.

குண்டுவைக்குறத விட அதிகளவு, சிரமப்பட்டு வேவுபார்த்து, நாம் திரட்டிய விசயங்களைக்கொண்டு தீட்டிய திட்டம், சில நேரங்களில் பெரும் திண்டாட்டத்துல போய் முடியும். எவனும் இருக்கமாட்டான் என்று நாம குறித்த நேரத்துலதான், நேர்த்திக்கடனை நிறைவேற்றவந்தவர்கள் மாதிரி லைன் கட்டி நிப்பானுங்க. எனக்கு சலூன் கடையில கூட்டத்தைப் பார்த்தால், கை, கால் எலாம் உதறி, கண்ணைக் கெட்டிவிடும். அதுக்கு காரணம், பாக்கிஸ்தான்காரன் இந்திய கிரிகெட் டீமில செலக் ஆனமாதிரி வெறிச்சுப் பாப்பானுங்க. சிலர் பார்க்குற பார்வை ஏதோ சோத்துக்கு இல்லாத அனாதையைப் பார்ப்பது போல ரொம்ப பரிதாபமாக இருக்கும், அது என்னை ரொம்ப சங்கடப்படுத்தும். இந்த மயித்துக்குத்தான் நான் கூட்டம்இருக்குற சலூனுக்கு எல்லாம் போறது இல்லை. நம்ம தலையில இன்னும் என்ன கேவலப்படுத்த இருக்குன்னு நெனச்சு, கேவலமா வெட்டுனாலும் பரவாயில்லைன்னு, புதுசா கத்திபுடிக்கிறவனை எல்லாம் நம்பி உட்கார்ந்த சம்பவங்கள் ஏராளம். சலூன் கடையில, அந்த சேர்ல உட்கார்ர வரைதான் கொஞ்சம் டெரர்ரா இருப்போம். உட்கார்ந்த பின், துணியைமூடி தலையில தண்ணி அடித்தவுடன் ஒரு சொக்கு, சொக்கும், அவ்வளவுதான் அப்படியே தூங்கிருவேன். அதுக்கு பின்னாடி முடிவளர, முடிவெட்டுகிறவன் சொல்லும் “கத்தாள தேய்ங்க சார்” “செம்பருத்தி, சீயக்காய் நல்லா அரச்சி...... தேய்ங்க’, “கேசவர்த்தினி எண்ண தேய்ங்க” “அமேசான்காடுகளில் இருந்து தயாரித்த எர்வோமேட்டின உபயோகிச்சு பாருங்க”................ன்னு எடுபட்டவனுங்க சொல்லுற எல்லாத்தையும் எட்டாம் வகுப்பு படிக்குறப்ப இருந்தே கேட்டு கேட்டு புளிச்சுப்போனது. அதை எல்லாம் லிட்டர் கணக்காகவும், டன் கணக்காகவும் உபயோகப்படுத்திவிட்டு, கடைசியா இப்போது இந்துலேகா எண்ணெயில வந்து நிக்குது.
பெரிய சலூன், நல்லா வெட்டுவான்னு எவங்கிட்டயாவது போனா, “எந்தமாதிரி வெட்டனும்”னு கேட்டு ஹோட்டல் மெனுகார்டு மாதிரி ஒன்னு குடுப்பானுங்க, அந்த அளவிற்கு என் இனத்தை எவனும் அசிங்கப்படுத்தமுடியாது. கடைசியா வெட்டிடோ, வழிச்சிட்டோ போகும்போது, தனியா அவன கூப்பிட்டு, “மூஞ்ச நல்லா பார்த்துக்கோ, அடுத்த தடவ வரமாட்டேன், அதையும் மீறி வேற வழியில்லாம வந்திட்டா, இந்த கேட்டலாக தயவுசெய்து கொடுத்துறாத”ன்னு புத்திமதி சொல்லி பத்து ரூபா டிப்ஸ் கொடுத்துட்டு அங்கிருந்து நகருவேன். எதுக்கு உள்ளூருல அசிங்கபடனும், முகம்தெரியாதவன் கிட்டபோய் அசிங்கபடுவோம்னு பெரும்பாலும் 10 ரூபா முடிவெட்ட, 25 ரூபாய்க்கு டாக்ஸி புடிச்சு, பக்கத்து ஊருக்கு போய்விடுவேன்.

“எந்தமாதிரி வெட்டனும்” “எப்படி வெட்டனும்” இந்த கேள்வியை கேட்கும்போது, அரிவாள எடுத்து அவன் கழுத்திலேயே வெட்டணும்னு தோணும். எங்க ஊருல முடிவெட்டுகிறவர் இருக்கிறார். அவரப்பார்த்து மற்றவர் எல்லாம் திருந்தனும். அவர் முடிவெட்டிவிட வீட்டுக்கே வந்திருவார், ஊருக்கு போனா அவரைத்தவிற பெரும்பாலும் எவங்கிட்டயும் முடிவெட்டுறது கிடையாது. முடிவெட்டனும்னு சொன்னா போதும், “தரயில உக்காருங்க” என்ற ஒருவார்த்தைக்கு அப்புறம் “முடிஞ்சிருச்சு எந்திரிங்க” என்ற இரண்டே வார்த்தைமட்டும்தான் வரும். இந்த நிலத்துல இதுதான் வளரும், இப்படித்தான் வளரும், இங்கிட்டுத்தான் வளரும், இவ்வளவுதான் வளரும், இதத்தான் அருவடைசெய்யமுடியும்னு அவனுக்கு தெரிந்திருக்கிறது என்னைப்பொருத்தவரையில் அவன் கலைஞன். அறகுறை கத்துக்குட்டிகள் சில கத்திரியை கையில புடிச்சிக்கிட்டு காட்டுற படத்த பாக்குறதுக்கு, பேசாம தலைவாவையே பத்துதர பாத்திரலாம்.

பத்து புள்ளைய பெத்தவங்கிட்ட போய், புள்ளய எப்படி பெத்துக்குறதுன்னு கேட்கலாம், பட்டப்படிப்பு படிச்சவங்கிட்ட பத்தாம்வகுப்பு பாஸாக ஐடியா கேட்கலாம், ஆனா சில ..............னுங்க, எங்கிட்ட வந்து “முடியெல்லாம் கழியுது என்னடா பண்ண?”ன்னு கேட்டா நான் என்ன சொல்லுறது. “ஆங்.....மூட்டப்பூச்சு மூத்திரத்தை எடுத்து மூஞ்சில தேயி”ன்னு கடுங்கோபத்துல பல்லக்கடிச்சிக்கிட்டு ரைம்மிங்ல சொன்னா. “போடாங்ங்......தலையில முடி வளர மூஞ்சில எதுக்குடா தேய்க்கணும், தலையிலதாண்டா தேய்க்கனும் லூஸு” ன்னு அறிவாளியா திட்டிக்கிட்டு போவானுங்க. “கவரிமான் பரம்பரை” பழமொழி, “தலைக்கு மேல பிரட்சனை” போன்ற சீரியஸ் வசனங்களைக் கூட ஆதித்யா சேனல பாக்குறமாதிரி பாக்குறது “வாட் கைண்ட் ஆஃப் சமுதாயத்துல நாம லிவ்விங்” என்ற எண்ணத்தயே ஏற்படுத்துகிறது.

__________________________________________________________________________________யாஸிர்.

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

ஒரு கடிதம் இன் இங்கிலீஷ்.

நம் அனைவரின் மீதும், இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

பள்ளிக்கூட வாழ்க்கை முழுவதும் தமிழ், தமிழ், தமிழ் தான். ஆங்கிலத்துக்கும் நமக்கும், ஆகவே ஆகாது. என்ன மாதிரியே எங்க கிளாஸ்ல 45 பேர் இருந்தோம். என் கிளாஸ்ல மொத்த மாணவர்களும் 45 பேர்தான். தமிழ் அம்மாவைப் பார்த்தா சாஷ்டாங்கமா வணக்கம் வைப்போம், அதே நேரத்துல இங்கிலீஸ் சாரைப் பார்த்தா எரிச்சலா வரும், ஏன்னா அவருக்கு இங்கிலீஸ்ல தான் வணக்கம் சொல்லனும். இதனாலயே அவரு அப்படிக்கா வந்தா, நாங்க இப்படிக்கா ஓடிருவோம். வணக்கத்துல என்னடா வந்திரப் போகுதுன்னு நீங்க கேக்கலாம், ஆக்சுவலா எங்களுக்கு, “குட் மார்னிங்க்” காலையில சொல்லுறது என்பது மட்டும்தான் தெரியும், இந்த “குட் ஆஃப்டர் நூன்”, “குட் ஈவினிங்க்” எப்ப சொல்லனும்னே தெரியாது, இந்த குழப்பத்துல தப்பா சொல்லிட்டா, அம்டுத்தேன், சாரு, சார சாரயா உட்கார்ர இடத்துல எஸ்ஸே எழுதிடுவாரு. அரசாங்க ஆஸ்பித்திரியில் அரிசி, பழம், 500 ரூபாயும் வாங்கிட்டு வருகிற தோனியில எவனாவது இடுப்ப புடிச்சிக்கிட்டு, குனிஞ்சி நடந்து வந்தா, இங்கிலீஸ் சாரைப் பார்த்துட்டு வந்திருக்காருன்னு எண்ணிக்கிடனும். “தமிழ் எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் மூச்சு” இப்படியாக நாங்க நீட்டி நிமிர்ந்து முழங்குனதுக்கு காரணம் தமிழ் மேல் கொண்ட பற்று அல்ல, ஆங்கிலத்தின் மேல் கொண்ட வெறுப்பு.

ஷேக்ஸ்பியர் கையில கெடச்சா, செருப்பாலயே அடிப்பேன்னு, ஷூவ கழட்டி காட்டின காலம் அது. ஆங்கிலம் எல்லாம் பெரிய மேட்டரே இல்லன்னு சொன்ன ஒரு மகானிடம் (அப்ப அப்படித்தான் தெரிந்தாரு) “அண்ணே!, இந்த எஸ்ஸே (Essay), பொயட்டரி (Poet), பேரகிராஃப் (Paragraph) எல்லாம் நான் மக்கப்பண்ணிருவேன், ஆனா லெட்டர் எழுதுறது மட்டும் என்னால புரிஞ்சிக்கவே முடியல, அது மட்டும் புரிஞ்சு நல்லா எழுதிட்டா ஒரு 10 மார்க் கிடைக்கும், எப்படியாவது எனக்கு அதமட்டும் சொல்லிக்கொடுங்க” ன்னு கெஞ்சுவேன். “அடப்பாவி!!!!!!!!! ஆங்கிலத்துல ரொம்ப ரொம்ப ஈஸியானது லெட்டர் எழுதுறதுதாண்டா, வா நான் சொல்லிக்கொடுக்கிறேன்” ன்னு சொல்லி உட்கார வச்சு சொல்லிக்கொடுத்தாரு. “யாருக்கு எழுதனும்னு கேள்வியிலேயே இருக்கும், அத அப்படியே எடுத்து ‘டு’ ல எழுது, ‘ஃப்ரம்’ ல உன்னோட விலாசத்த எழுது, இதுக்கே உனக்கு 5 மார்க் வந்திடும், அப்புறமா ‘ஹாய்’ னு ஆரம்பிச்சு நான் இங்க நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க, அங்க எல்லோரும் சுகமா? ன்னு எழுதிட்டு, மறுபடியும் கேள்வித்தாள்ல இருக்குற எது சம்பந்தமான விசயமோ அதை எடுத்து அப்படியே எழுதிரு. கடைசியில உங்கள் உண்மையுல்ல, அன்புடன்னு முடிச்சிடு, அவ்வளவுதான்”.

அது ஒரு மாதாந்திர தேர்வு, மொத்தம் 20 மார்க்குத்தான், ரெண்டே கேள்வி தான் ஒன்னு “எஸ்ஸே (Essay) ” அதுக்கு பத்து மார்க், இரண்டாவது “லெட்டர்” அதுக்கும் பத்து மார்க். எல்லா பரீட்சையைப் போலவும் நான் படிச்சிட்டு போன எஸ்ஸே (Essay) வரவில்லை. ஆனா அண்ணன் சொல்லிக்கொடுத்த லெட்டர் வந்திருந்தது. அவர் சொன்னமாதிரியே கேள்வித்தாளில் ‘யாருக்கு’, ‘என்ன காரணத்திற்காக?’ எல்லாம் அதுலேயே இருந்ததுகண்டு ஒரே மகிழ்ச்சி, அந்த கணம் அண்ணன் தெய்வமா தெரிஞ்சாரு. இனிமே இங்கிலீஸ் பரீட்ச்சைக்கு மட்டும் “அண்ணன் துணை” போட்டதுக்கு பின்னாடிதான் பரீட்சையே எழுதனும்னு எல்லாம் முடிவுபண்ணியாச்சு. அவர் சொன்னமாதிரியே, அனுப்புனர், பெறுனர், ஹாய், நீங்க நல்லா இருக்கீங்களா, நான் நல்லா இருக்கேன் எல்லாத்தையும் எழுதிவிட்டு, கேள்வித்தாளில் இருந்த காரணத்தையும் அப்படியே எழுதி, அன்புடன் எல்லாம் போட்டுவிட்டு லெட்டரை முடித்தேன்.

பரீட்சை முடிச்ச பின்பு, நண்பர்களோடு சேர்ந்து, எழுதுனதுக்கு மார்க் போட்டு பார்க்குறது வழக்கம், “உனக்கு எத்தணடா வரும்?” என்று நண்பன் கேட்க “எஸ்ஸே நம்மளை கவுத்திருச்சுடா, இருந்தாலும் சங்கர சுப்புவைப் பார்த்து அப்படி இப்படின்னு எழுதியிருக்கேன், அதுக்கு 8 மார்க் கிடைக்கும், அப்புறம் லெட்டர் சூப்பரா எழுதியிருக்கேன் அதுக்கு கண்டிப்பா 10 விழுந்திரும், அது குறையுறதுக்கு சான்ஸே இல்ல. எப்படியும் 20க்கு 18 மார்க் வரும்டா” ந்னு பெருமையா சொன்னேன். “டேய்.........18ன்னா 11001நூற்றுக்கு 90 மார்க்காடா?” ன்னு ஏங்கிப்போயிட்டான் என் நண்பன். ‘உனக்கு இங்கிலீஸ்ல மட்டும் மார்க் வராது, இப்ப அதுலயும் 90ன்னா இந்த தடவ நீதாண்ட முதல் ரேங்க், பாவம் ஜேம்ஸ் இந்த தடவ இரண்டாவது இடத்துக்கு போயிறுவான்” என்று மற்றொரு நண்பனின் பக்கவாத்தியம் வேறு. ஹைய்யோ, ஹைய்யோ ஒரே குஷ்டமப்பா!!!!!!!

மறுநாள், மதியம் கணக்கு பரீட்சை, பெரும்பாலும், மதியம் பரீட்சை இருந்தால், காலையில வகுப்புகள் நடத்தாமல், மதிய பரீட்சைக்கு படிக்கச் சொல்லிருவாங்க. ஆனா அன்று, ஆங்கில வகுப்பு இல்லை என்றாலும் கூட, அறிவியில் வகுப்பை கடன் வாங்கிவிட்டு, இங்கிலீஸ் சார் நேற்று நடந்த பரீட்சை பேப்பரை திருத்திக் கொண்டு வந்தார். பேப்பர் கொடுக்கப் போகிறார் என்றது எனக்கு ஆர்வம் அதிகமாகியது, காரணம் நேற்று ஜேம்ஸ்ஸும் மார்க் போட்டுப்பார்த்த போது அவனுக்கும் 90 மார்க் வந்தது. யார் முதல்மார்க் என்று காண கிளாஸே காத்திருந்தது. அவர் எப்போதும் கடைசி மார்க் எடுத்தவர்களில் இருந்துதான் ஆரம்பிப்பார். முதல் மார்க் வாங்கியவனுக்கு கடைசியாகத்தான் கிடைக்கும். சார் எப்போதும், 70 மார்க்குக்கு மேல் வாங்கியவர்களை ஒன்றும் செய்வதில்லை. அதற்கு கீழ் வாங்குபவர்களுக்கு மார்க்கின் அடிப்படையில் குண்டியில் வீக்கம் இருக்கும்.

45 பேர்களில் 40 பேருக்கு பேப்பரை கொடுத்தாச்சு அதில் 35 பேருக்கு கு. வீங்கியும் போனது. அதுவரையில், எனது, ஜேம்ஸ் மற்றும் இன்னும் மூன்று பேர்களின் பேப்பர் வரவில்லை. அடுத்து அடுத்து மற்ற மூன்று பேர்கள் வர, இறுதியாக எனது பேப்பரும், ஜேம்ஸ் பேப்பரும் பாக்கி, அந்த நேரத்தில் ஆபிஸ் பாய் வந்து தலைமை ஆசிரியர் கூப்பிடுகிறார் என்று சொல்ல, சார் பேப்பரோடு 5 நிமிடத்தில் திரும்ப வருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். அவ்வளவுதான், ஒற்றுமையா இருந்த கிளாஸ் இரண்டாக பிரிந்தது, பாதிப்பேர் ஜேம்ஸ்ஸுக்காகவும், மீதிப் பேர் எனக்காகவும் பரிந்து பேசிக்கொண்டிருந்தார்கள். கடைசியாக கொடுத்தவனின் மார்க் 85, எப்படி பார்த்தாலும் நாம 85க்கு மேலதான். பார்த்திரலாம் இந்த பாட்ஷாவா இல்ல அந்த ஆட்டணியா ன்னு கிளாஸ்ஸே ஆவலாக இருந்தது. சார் வந்தார்.

அடுத்து யார் பேர சொல்லப்போகிறாரோ அவன் தோல்வி, “ஆண்டவா, உனக்கு 25 பைசா நத்தஹர் பள்ளிவாசல் உண்டியல்ல போடுறேன், கடைசி நானாகத்தான் இருக்கனும்” என்று கண்ணை மூடிக்கொண்டு வேண்டிக்கொண்டிருந்தேன். அடுத்து சார் கூப்பிட்ட பேர் ‘ஜேம்ஸ்’.

இறைவா!!!!!!!!!!!!!!!!!!!!!!!! உன் கருனையே கருணை, என்று இறைவனுக்கு நன்றி கூறினேன். கிளாஸே என்னைப் பார்த்து உதட்டை மூடி, தலையை வலதுபுறமாக மேல் நோக்கி தூக்கி ‘ம்ம்ம்ம்” என்று சொல்ல, அடடா என்ன ஆனந்தம், பேரானந்தம் அது.  ஜேம்ஸ் பேப்பரோடு என் பக்கத்தில் வந்தான், அவனது மார்க் 92. அப்படின்னா நாம 92க்கும்  மேல. "உன்னால மட்டும் எப்படிடா யாஸிர்னு"  மனசுக்குள்ள நினச்சுக்கிட்டேன்.

இன்னும் ஒரே ஒருத்தனுக்குத்தான் பேப்பர் வரல இல்லையா, யாரு அது?” ன்னு சார் கேட்க, ஒட்டுமொத்த வகுப்புமே “யாஸிர்” ன்னு கத்துச்சு. அது எனக்கு என்னமோ குத்துச்சண்டயில கு.சண்டை வீர்ர் மேடைக்கு வரும் போது அவர் பேரை சொல்லுவது போல “யாஸிர்.....யாஸிர்......யாஸிர்......” என்று கேட்டது. நான் போய் சார் முன்னாடி புன்னகையுடன் நின்றேன்.

வட்டு எறிதலில் எப்படி உடம்பை வழைத்து வட்டை எறிவார்களோ, அதே மாதிரி, உடலை வழைத்து கையை முறிக்கிக்கிட்டு ஓங்கி ஒரு அறை செவில சேத்து உட்டாரு. “அப்பத்தான்ன்ன்ன்னு” அஞ்சு பெஞ்ச் தாண்டி பறந்து போய் விழுந்தேன். விழுந்தவன் காதை புடிச்சு தூக்கி, பிரம்பால பின்னு பின்னுன்னு பின்னி எடுத்திட்டாரு. மற்றவன் குண்டி எல்லாம் ‘சுமால் (Small)” “மீடியம்(Medium)” “லார்ஜ் (Large)” லேவலுக்கு வீங்கி இருக்க எனது பெட்டக்ஸ் மட்டும் “XXL” “XXXXXL” லெவலுக்கு வீங்கிடுச்சு.

ஏண்டா, சாலை, தெருவிளக்கு வசதி கோரி கலெக்டருக்கு, லெட்டர் எழுதுடாண்ணா, ஹாய், ஹவ் ஆர் யூ, அயம் ஃபைன் (hi, how are you, I am fine) னாடா எழுதுற, காவாளிப்பயல! உனக்கு கலெக்டர் குடும்பத்தோட அவ்வள்வு நெருக்கமோ “ஹவ் இஸ் யுவர் பேமிலி” (how is your family) ன்லா எழுதியிருக்க” என்று சொல்லி சொல்லி அடி பிருத்திட்டாரு.

இதெல்லாம் மன்னிச்சிருவேன், ஆனா.......

அய்யய்யோ இன்னுமா???????? ன்னு மனசுக்குள்ள நினச்சிக்கிட்டு, அடுத்த ரவுண்டுக்கு ரெடியானேன்.

எல்லாத்தயும் மன்னிச்சுருவேன், ஆனா கடைசில நீ எழுதுனதத்தாண்டா என்னால தாங்கிக்க முடியல” ன்னு சொல்லி அடுத்த 15 நிமிசம் நான் ஸ்டாப் கொண்டாட்டம்......

புரியுது, புரியுது......உங்க ஆர்வம் எனக்கு புரியுது. அந்த கடைசி வார்த்தை தானே....

Yours Lovely

Yasir