புதன், நவம்பர் 23, 2016

வழுக்கத்தலை வாலிபர் சங்கம்.

தலையில் முடியில்லாதவனோட வலி, இன்னொரு முடியில்லாதவனுக்குத்தான் தெரியும்.

என் வயது ஆண்கள் எல்லாம் இணையதளத்தில் எதை எதையோ தேடும் போது, நான் மட்டும் எனக்கு பொருத்தமான கெட்டப்பை தேடியே பல ஜி.பி டேட்டாக்களை காலி செய்திருக்கிறேன். இது இன்று அல்ல, இணையதளம் எனக்கு அறிமுகம் ஆன காலம் தொட்டு நடக்கும் நொஸ்டால்ஜிக் (Nostalgic) கதை. படிக்கும் காலங்களில், நிறம், உயரம், எடை போன்ற அம்சங்களை கொடுத்தால் நமக்குத் தேவையான தோற்றத்தை திரையில் காட்டும் இணையதளங்களை என் இமெயிலைவிட அதிகமாக ஓப்பன் செய்து பார்த்திருக்கின்றேன்.

ஊரே ஒன்று கூடி கம்யூட்டர் லேப்பில் வண்ணத்திரை நடிகைகளை வடியவிட்டு (வாயில்) பார்க்கும் அதே நேரத்தில்தான் கார்னர் ஓரத்தில் இருக்கும் கம்யூட்டரிடம் என் சோகத்தைச் சொல்லி, அழகு தோற்றம் பெற ஆலோசனைகள் கேட்பேன். அதை ஆலோசனை என்று கூற முடியாது, காளிதாஸ் படத்தில் காளியாயிடம் ‘’அறிவும், புத்தியும் கொடு, அது என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா?’’ என கேட்கும் சிவாஜி கணேசன் போல வேண்டி, ‘’யார் தருவார் இந்த அரியாசணம்’’ என்ற சக்ஸஸ் ரிசல்ட்டிற்காக கிடந்த தவம் என்றுதான் சொல்ல வேண்டும். 
   
எல்லா வெப்சைட்களும் சொல்லிவைத்தது போல, ‘’வழுக்கைத் தலைக்காரர்கள் தாடி வைத்தால் அழகாக இருக்கும்’’ என்றே சொல்லியது. முன்-சொட்டை என்றால், முழுதாடி. பின்-சொட்டை என்றால், பிரஞ்ச் பியர்ட் என்ற பஞ்சதந்திர தாடி என வகை வகையான தாடிகளை கம்யூட்டரில் கண்டு காண்டாகிக் கொண்டிருந்த காலம் அது. அந்த காலத்தில், ‘மீசை’க்காக  முக்கிக்கொண்டிருந்த நான், தாடிக்கு எங்கு போவேன்? யாரைக் கேட்பேன்?. இதுபோன்ற கொடுமையான நரக வேதனை, எனக்கு பெண் பார்த்து கட்டிவைத்தவர்களுக்குக்கூட வரக்கூடாது.

‘’ஒல்லியான உடல், 53 கிலோ எடை, வழுக்கை என்றோ இல்லை என்றோ உறுதிப் படுத்த இயலாத தலையுடைய சிம்மராசிக்கார்களே........’’ என்று ஆருடம் சொன்ன வெப்சைட்டை நம்பி மீசை எடுக்கத் தீர்மானித்தேன். ஆம், முதல் மீசை ஷேவிங். காலேஜ் முதல் வருடம், மீசையோடு இருப்பவர்களை தேடிப் பிடித்து ஷேவிங்க் செய்வதையே பார் டைம் ஜாப்பாக சில மாணவர்கள் செய்துகொண்டிருந்தார்கள். கடா மீசை வைத்திருந்தவனை எல்லாம், மீசை இல்லாமல் பார்ப்பது என்பது ரெக்கை படத்தில் லெட்சுமி மேனனை குளோசப்பில் பார்ப்பது போன்ற ஹாரர்ரான விஷயம். 

‘’மீசை எடுத்த பின்பு சும்மா ஹிந்தி ஹீரோ மாதிரி இருந்தேன்’’. என்று சொன்னால் நம்பவா போகுறீர்கள்?. இருந்தேன். ராசியான நம்பர் ஒன்பது என்று அங்கயும் இல்லாம, இங்கயும் இல்லாம. மீசை எடுத்த பின்புதான் ஞாபகம் வந்தது நாலு நாள் லீவிற்கு ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது. மீசை இல்லாமல் எப்படி ஊருக்கு போவது?. ‘’ஊரே, செத்த விட்டிற்கு துஷ்டி கேட்க வருவதுபோல கிழவிகள் எல்லாம் சீலையால் மூக்கை பொத்திக்கொண்டு வருமே’’ என மனதில் எழுந்த பல கேள்விகளுக்கு பதில் தெரியாமலேயே பஸ் ஏறினேன்.

‘’என்றா, நம்ம வீர் வம்ச மீச எங்கடா?’’ என அப்பா கேட்கும் முன்பே, ‘’காலேஜ்ல சீனியர்ஸ் மீசை வைக்கக்கூடாதுன்னு சொன்னதால எடுத்திட்டேன்பா’’ என்று சமாளித்தேன். மீசை இல்லாமல் வெளியே போய் அசிங்கப்பட வெட்கப்பட்டு, நான்கு நாளும் வீட்டிலேயே இருந்தேன். அதைப் பார்த்த அம்மாவும், அக்காவும் ‘’புள்ள நம்மள நெனச்சு ஏங்கிப் போய் கெடந்திருக்கு, அதான் வீட்டையே சுத்தி சுத்தி வருது’’ என்ற பெருமை பீத்தல் வேறு. லீவு முடிந்து காலேஜ் செல்ல தயாரான போது அப்பாவும் என்னோடு வர ரெடியானார். விசாரித்த போது, ‘’எங்க காலேஜ்ல ராக்கிங் எல்லாம் கிடையாதுன்னு உங்க பிரின்ஸ்பால் பெரிய்ய இவனாட்டம் சொன்னான், இது மட்டும் என்னவாம்?’’ என மீசையைக் காட்டி நியாயம் கேட்க நின்றார்.

''நியாயம்டா'', ''நேர்மைடா'', ''நாக்கப் புடுங்குறமாதிரி கேட்பேண்டா''.... என நாட்டமை விஜயகுமார் மாதிரி விரைப்பாக நின்றவரைப் பார்த்து, அடுத்த வாரத்திற்கும் சேர்த்து ‘ஆய்’ வருவது போல வயிறு கலக்கியது. கபாலம் கலங்கியது. ‘’உங்க பையன் பெரிய ’இஞ்சினியர்’ ஆகி பக்கத்து கிராமத்துக்கு இலவசமா வைத்தியம் பார்க்கனும்னா, இத நீங்க பொருத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்’’ என அப்பாவின் அறிவு விளக்கில் எண்ணெய் ஊற்றி, ஞான ஜோதியை எரியவிட்டு பஸ் ஏறுவதற்குள், தலையில் இருந்த கொஞ்ச முடியும் விழுந்துவிட்டது.

‘’பின் வழுக்கை விழுந்தவர்களுக்கு தாடி இருந்தால் அழகாக இருக்கும்’’ என்ற சொட்டகிரஸ் விதிப்படி, உரம் போட்டு தாடி வளர்ந்து நிமிர்ந்தால், பின் வழுக்கை முன்னேறி முன் வழுக்கையாக மாறி இருக்கும். ‘’முன் வழுக்கையை மறைப்பது எப்படி?’’ என்ற அகழ்வாராய்ட்சியில் இறங்கினேன். ‘’சைடில் நன்றாக முடியை வளர்த்து அதை முன்பக்கமாக கொண்டு வந்து நிற்க வைக்க வேண்டும்’’ என்பதை கண்டறிந்து, கண்ணாடியில் சைடைப் பார்த்தால், சைடிஷ்ற்கு தொட்டுத் திண்ணும் அளவிற்குத்தான் இருந்தது. மிஸன் கேன்சல்.
  
ஆராய்ச்சி ஒரு புறம் நடந்த்கொண்டிருந்தாலும், காலம் என்னை கல்ஃபிற்கு (Gulf) கொண்டுவந்து சேர்த்திருந்தது. வளைகுடாவில் இந்த தலையுடன் வெளியே எங்காவது சென்றால், தெரிந்தவன் எல்லாம் ‘’கல்ஃப் கேட்’’டிற்கு போகச் சொன்னார்கள். நான் ‘கல்ப் கேட்’ என்றால் ஏதோ ‘இண்டியன் கேட்’ போல ஒரு இடம் அங்கு எவனாவது வழுக்கைக்கு லேஹியம் கொடுப்பான், வாங்கி நக்கிக் கொண்டு வரலாம் என்று நினைத்தேன். பின்புதான் தெரிந்தது அது ‘’விக்’’ வைக்கும் இடமென்று. ‘’தேவையானி புருசன் ராஜ்குமார்’’ என்று கேள்விப்பட்டதற்கு பின்பு, அன்றைக்குத்தான் இரண்டாவதாக அந்த வார்த்தையைச் சொன்னேன் ‘’ஆண்டவா இது என்ன சோதனை’’.

வழுக்கையாக இருக்கும் ஹாலிவுட் நடிகர்களைப் பார்த்து அவர்களைப் போல் நாமும் மாறிவிடலாம் என முடிவுசெய்து புரிந்த, புரியாத ஆங்கிலப் படங்களை எல்லாம் பார்த்தேன். அதில் அகப்பட்டவர்தான் நடிகர் ‘’வின் டீசல்’’. அவரைப் போல் நானும் மொட்டையடித்து, ஷேவிங் எல்லாம் செய்து கண்ணாடி முன்னாடி நின்றால், வின் டீசலை டீசல் ஊற்றி கொழுத்திப்போட்டது போன்று இருந்தது. வி.டீசலுடய தலையையும், முகத்தைப் பார்த்த நான் அந்த கட்டுடலில் வீங்கி இருக்கும் சதைப் பிண்டங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதன் விளைவு அது. நமக்கும் அது போன்ற வீக்கங்கள் வேண்டும் என்றால் பத்து பேர் கும்மினால் ஜிம்மிற்கு செல்லாமலேயே வரும். அதோடு வின் டீசல் கெட்டப் விண்ணுலக பதவி பெற்றது.

‘’ஜாசன் ஸ்டாத்தம்’’ மெக்கானிக் படத்தில் வரும் ஹீரோ. இவரும் நம்ம வ.வ.சங்க உறுப்பினர்தான். வின் டீசல் அளவிற்கு பழனி படிக்கட்டுகள் இருக்காது, ஆனாலும் கொஞ்சம் கட்டுமஸ்தான ஆளாகவே இருப்பார். இவர்தான் நமக்கு சரி என்று முடிவு செய்தேன். இவர் முதலாமவரைப் போல வழு வழு மொழு மொழு என்று இல்லை. 2 மி.மீட்டர் அளவிற்கு தலையிலும், கன்னத்திலும் முடிவைத்திருப்பார். ஆள் பார்க்க பேரழகாக இல்லாவிட்டாலும் அளவாக அம்சமாக இருப்பார். இவர் கெட்டப்பை பின்பற்ற கொஞ்சம் உடம்பு இளைக்கவேண்டியது இருந்தது.

பொதுவாக வழுக்கை உள்ளவர்கள் ரொம்ப ஒல்லியாகவோ, ரொம்ப குண்டாகவோ இருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்காது. எனக்கு அப்போது 78 கிலோ. ஜாசன் ஸ்டாத்தம் போன்று ஆக வேண்டும் என்றால் என் உயரத்திற்கு எடையை சுமார் 60 கிலோவாக குறைக்க வேண்டும். அப்போது பேலியோ மருத்துவ நூல்கள் எட்டிப்பார்க்காத காலம். 18 கிலோ குறைப்பது என்பது சோதனை, அதை சாதனையாக்கி காட்ட, ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டும், இரண்டு மாதம் டார்கெட். என்று பக்காவாக பிளான் செய்து, ஜாக்கிங்க் ஷீ, ஜெர்ஸி எல்லாம் போட்டுக்கொண்டு ஓடினேன், ஓடினேன் அபுதாபியின் எல்லைக்கே ஓடினேன்.

முதல் வாரம் எல்லாமே ஷேமமாக நடந்தது, ஆனால் உடல் எடை குறையவில்லை. அடுத்த வாரங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. எடை இல்லை, ஓடும் தூரம். ஆம், 5 கி.மீட்டர் 4 ஆகி, 3 ஆகி இறுதியில் ஓட்டப் பயிற்சிற்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. உணவு கட்டுப்பாட்டின் மூலமாக எடையை குறைக்க, சோற்றை விட்டு பர்கர் சாப்பிட்டேன். பன் ஐட்டங்கள் சாப்பிட்டதால் வயிறு சுருங்கியது ஆனால் ‘’பம்’’ பெருத்துவிட்டது. பாக்கிஸ்தானியர்கள் இருக்கும் கேம்பில் பெருத்த ‘பம்’முடன் இருந்தால், ‘’பம்’’ பப்படமாகிப் போகும். அதற்குப் பயந்தே மறுபடியும் பல முயற்சிகள் செய்து 65 கிலோவாக இழைத்தேன். ‘’ஜாசன் மாதிரி ஆகிவிட்டாயா?’’ என்று கேட்பவர்கள் மெயில் ஐ.டி அனுப்பவும், ஆல்பத்தை அனுப்புகிறேன்.

என்னதான் நாம் சில ஹேர் ஸ்டைல்களை கற்பனை செய்து வைத்திருந்தாலும் முடி வெட்டுபவனிடம் ‘’கிர்தாவை மேலே தூக்கு, மீசையை கீழா இறக்கு’’ என்றால் கத்தியை கழுத்தில் இறக்கிவிடுவானோ? என்ற மரண பீதி படுத்தி எடுக்கும். புதிதாக ஏதேனும் ஸ்டைலில் முடிவெட்ட வேண்டும் என்றால், ஊருக்குப் போகும் போது மட்டுமே முயற்சி செய்வேன். அங்கு ஒரு பார்பர் இருக்கிறார், வீடு வீடாக வந்து சிகை சேவை செய்வார். நம்முடைய கற்பனையை கத்திரிக்கோலில் உதவியால் கச்சிதமாக செய்துகாட்டுவார். கட்டணமும் பெரியதாக இருக்காது. ஒரு செண்ட் பாட்டில் மட்டும் அதிகமாக கொடுக்கவேண்டும்.

முதல் முதலாக அவரிடம் வெட்டும் போது, பாரதிராஜா படம் போலவே இருந்தது. வீட்டின் முற்றத்தில் தரையில் உட்கார்ந்தவுடன், கையில் கண்ணாடியை கொடுத்து பார்த்துக்கொள்ளச் சொன்னார். கரெக்சன் சொல்லும் அளவிற்க்கு எந்த குறையும் இல்லை. முடி வெட்டியபின்பு கையை தூக்கச் சொன்னார். நான் முருகன் அருள் வழக்குவது போல, மணிக்கட்டை மடித்து கையை உயர்த்தினேன். தூப்பாக்கியை தூக்கிக்காட்டும் போது கையை தூக்குவது போல தூக்கச்சொன்னார். “எதுக்கு?” என்று யோசிப்பதற்குள், கத்தி அக்குளிள் பாய்ந்துவிட்டது. ‘’யோவ், உன்ன யார்யா அங்க எல்லாம் முடிய எடுக்கச் சொன்னா?’’ என கோவத்தில் திட்டிவிட்டேன். (அங்கு முடியை எடுத்தால்தான் அவருக்கு ஒரு ஆத்ம திருப்தியாம்).

நான் சீரியசாக திட்டினாலும், அவர் ரொம்ப கூலாக ‘’சரி தம்பி எந்திச்சு, வேஷ்டிய........’’ என்று சொல்லி முடிப்பதற்குள் “யோவ், நான் கம்முக்கட்டுல கத்திய வச்சதுக்கே கடுப்புல இருக்கேன், நீ என்னடான்னா வேற எங்கயோ....... ’’ என நான் முடிப்பதற்கு முன்பாக சிரித்துக்கொண்டே ‘’இல்ல தம்பி, எந்திரிச்சு வேஷ்டிய உதருங்க, முடி கிடி ஒட்டியிருக்குமுன்னு சொல்ல வந்தேன்’’ என்றார். மூன்றாவதாகச் சொன்னேன் ‘’ஆண்டவா இது என்ன சோதனை””.
--------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

                

சனி, நவம்பர் 12, 2016

வாழ்த்துக்கள் மோடி.

இந்தியாவின் தற்போதய நிலவரப்படி 15% குறைவானவர்களுக்கே வங்கிகளின் மூலமாக சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகின்றது. மிச்சம் இருக்கும் 85% பேர்களின் வருமானம் வங்கி சார்ந்தது இல்லை. அவர்கள் ஒரு தினக்கூலியாகவோ, விவசாயியாகவோ, குறுந் தொழில் செய்பவராகவோ, வண்டியில் காய்கறி விற்பவராகவோ, உயிரைப் பணயம் வைத்து சாக்கடை சுத்தம் செய்பவனாகவோ இருக்கலாம். நம் நாடு வலிமை பெற இரண்டு நாட்கள் கஷ்டங்களைப் பொ’றுத்துக்கொள்ள அறிவுரை  வழங்கும் மெத்தப்படித்த மேதாவிகள் வேறு யாரும் அல்ல, மேலே சொன்ன 15%ல் ஒருவனாக இருக்கக்கூடும். சாப்பிட்டுவிட்டு காசு அட்டையையோ அல்லது கடன் அட்டயையோ தேய்ப்பவனுக்கு, 500 ரூபாய் கொடுத்து சாப்பிட்டு மீதி சில்லரை வாங்கிச் செல்பவனின் கஷ்டம் தெரியாது. கம்பெனி கால் டாக்ஸிகளில் நோகாமல் பயணிப்பவனுக்கு, ஷேர் ஆட்டோக்காரனிடம் சில்லரைக் காசுக்களை தேடிக்கொடுப்பவனின் கஷ்டம் கண்டிப்பாகத் தெரியாது. மாத தவணையில் வீட்டிற்கே பால் பாக்கெட் வரும் அப்பார்ட்மெண்ட் அப்பாட்டக்கர்களுக்கு, லைனில் நின்று காசுக்கு பால் வாங்குபவனின் கஷ்டத்தை தெரிந்துகொள்ள முடியாது. 

500, 1000 ரூபாய் தடை செய்த இந்த திட்டம் நல்லதா? கெட்டதா? என்பது ‘’கபாலி’’ நல்ல படமா? மொக்கப் படமா? என்கிற குழப்பமான மன நிலையிலேயேதான் நான் இன்னும் இருக்கின்றேன். சிலர் சொல்லுவதைப் போல, ‘’இப்போதுதான் டாஸ் போட்டிருக்கிறார்கள், இனி பேட்டிங்க் பண்ணனும், பவுலிங்க் போடனும், பீல்டிங்கெல்லாம் செய்யனும் அப்புறம்தான் வெற்றியா, தோல்வியா என்பது தெரியும்’’ என்று கூறி நாலு மாசம் வெயிட் பண்ணச் சொல்வதால், நானும் நாலுமாதம் இல்லை, மிச்சம் இருக்கிற இரண்டரை வருடம் வரை வெயிட் செய்யலாம் என முடிவு செய்துவிட்டேன்.

இந்த திட்டம் பற்றிய என்னுடய நிலைப்பாடுதான் மேலே சொன்னவை. ஆனால், திட்டத்தை நடைமுறைப்படுத்திய விதம் அபத்தத்தின் உச்சம். ஒரு நாட்டைப் பற்றி அறியாத, நாட்டு மக்களின் நிலை பற்றிய அறிவு இல்லாத ஒருவன் செய்த செயலாகவே நினைக்கின்றேன். இந்தியா இன்னும் 50% மேலாக படிப்பறிவு இல்லாத நாடு. நாம் இன்னும் வளரும் நாடுதான். திட்டத்தை நடைமுறைப்படுத்திய விதம் ஏதோ வளர்ந்த நாடுகளில் செய்வதுபோல செய்வது சிறுபிள்ளைத்தனம். ‘’வாழும் லீ குவான் மோடி’’யாம் ......க்காளி நமக்கு இந்தியா பத்தியும் தெரியல, சிக்கப்பூர் பத்தியும் தெரியலடா.

இந்த திட்டத்தில் மூலமாக எப்படி பணக்காரர்கள் பாதிக்கப்படப்போவது இல்லையோ அதே போலத்தான் பரம ஏழையும் (500 ரூபாய்க்குகூட வழியில்லாதவன்). பாதிப்பு என்பது நடுத்தர வர்க்கத்திற்கு மட்டுமே. விரிவாக சொல்ல வேண்டும் என்றால் சின்னதாக மலிகைக்கடை வைத்திருப்பவன், டீக்கடை வைத்திருப்பவன், காய்கறி வியாபாரம் செய்பவன், தினசரி வியாபாரி போன்றவர்கள்தான். அவர்களுக்கான முதலீடு, சொத்து, கையிருப்பு என எல்லாமே ‘’ஐந்து லட்சம்’’தான். அந்த பணத்தைத்தான் அவர்கள் திரும்ப திரும்ப முதலீடு செய்து, கிடைக்கும் லாபத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டியாக வேண்டும். அவர்களால் அந்த பணத்தை பேங்கில் போட முடியாது, கையில்தான் வைத்திருக்க வேண்டும்.

எங்க ஏரியா மீன்கார பெண்மனி இரண்டு லட்சத்தை வைத்துக்கொண்டு அதிகாலையில் மீன்வாங்குவார். மாலையில் வியாபரம் ஆனபின்பு கிடைக்கும் ஆயிரம், ஐநூறு லாபத்தை எடுத்துவிட்டு, மறுநாள் அதிகாலை அதே இரண்டு லட்சத்தைக்கொண்டு மீன்வாங்கச் செல்வார். இப்படி தின வியாபரம் செய்பவரிடம் சென்று, ‘’அந்த இரண்டு லட்சத்தையும் பேங்கில் போடுங்கள், பின்பு புது நோட்டாக திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்று சொல்வது கேலிக்கூத்து. அதன் நடைமுறைச் சிக்கலைப் பார்க்கவேண்டும். இரண்டு லட்சத்தை பேங்கில் போடவே நான்கு நாட்கள் ஆகும் (ஒரு நாளைக்கு 49,000ம்தான் போடமுடியும்). அதை திரும்ப எடுக்க எத்தனை வாரம் தேவை? (வாரத்திற்கு 20,000 மேல் எடுக்கமுடியாது). அந்த காலகட்டங்களில் அவர்களால் எப்படி தொழில் செய்யமுடியும்?

அதே நிலைமைதான் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவைனிலிருந்து டீக்கடை வைத்திருப்பவன் வரை. இவர்களைப் போன்றவர்களை அதிகம் கொண்டிருப்பதுதான் நம் நாடு. அது அல்லாமல் பேஸ்புக்கில் ‘’நாடு வலிமை பெற மூன்று நாள் சோறு திங்கலைன்னா ஒன்னும் செத்துரமாட்டீங்க’’ என போஸ்ட் போடுபவர்கள் அல்ல. ‘’மடியில் கனமில்லை என்றால் நீங்கள் ஏன் பயப்படவேண்டும்’’ என வாய் கிழிய பேசுறவன் எவனும் பேங்கில் பணம் மாற்ற லைனில் இல்லை. அவர்களால், குறைந்தது அவர்களைச் சுற்றி இருக்கும் படிப்பறிவில்லாதவர்களுக்கோ, முதியவர்களுக்கோ பணத்தை மாற்றிக்கொடுக்க உதவி செய்வார்களா?. லைனில் நிற்பனை பார்த்தவாரே ஆபிஸ் சென்று பேஸ்புக்கில் ‘’எவரித்திங்க் கோயிங்க் குட், பாரத் மாத்தாக்கீ ஜே’’ என வடை சுடுவார்கள்.

இன்னும் சொல்கிறேன் இது நல்லதிட்டமாகக்கூட இருக்கலாம். அதை நடைமுறைப்படுத்தியவிதம் முட்டாள் தனமானது. ஒரு ஜனநாயக நாடு என்பது, அரசை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்கும் நிலையில் இருப்பது. நல்ல ஜனநாயக நாடு என்பது, மக்களின் கேள்விக்கு அரசு பதிலளிக்கும் நிலையில் இருக்கவேண்டும். இப்படி பல் இழித்துக்கொண்டு இருக்கக்கூடாது. ‘’மோடி கொண்டுவந்த திட்டம் என்பதற்காகவே இதை எதிர்க்கிறார்கள்’’ என்று கொதிப்பவர்களிடம், மோடி முன்பு கொண்டுவந்த மேக் இன் இண்டியா, டிஜிட்டல் இண்டியா, சுச்சா பாரத்....................... ரிசல்ட்டைப் பற்றி கேட்டால், ஆசான வாயையும் சேர்த்து மூடிக்கொள்கிறார்கள்.

மோடி அல்லாது, ராகுல்காந்தி பிரதமராக இருந்து இந்த திட்டத்தை இப்படி நடைமுறைப் படுத்தியிருந்தால் அது வேறு. ராயல் குடும்பத்தில் பிறந்த ஒருவரால் நடுத்தர இந்திய மக்களின் பிரட்சனையோ / வாழ்க்கையோ தெரிந்திருக்காது என்று எண்ணிக்கொள்ளலாம். ஆனால் மோடியோ, டீக்கடை வைத்து வாழ்க்கையில் முன்னேறியவர். அவருக்குகூடவா ஒரு டீக்கடைக்காரனின் தினசரி வாழ்க்கை, வருமானம் பற்றி தெரியாமல் போனது?. மோடி டீக்கடை வைத்திருந்தபோது முதலீடு, லாபம் அனைத்தையும் பேங்க் மூலமாகத்தான் செய்துகொண்டிருந்தாரா?. சில்லரைகளை செக் போட்டுக்கொடுத்தாரா?. அவர் டீக்கடை வைத்திருந்ததற்கும், இப்போது டீக்கடை வைத்திருப்பவனுக்கும் என்ன பொருளாதார முன்னேற்றம் வந்துவிட்டது?.

‘’பிச்சைக்காரன்’’ படத்தில் வரும் ஒரு காட்சியை வைத்துக்கொண்டு மோடியின் இந்த முடிவை ‘’ஆஹா’’ ‘’ஓஹோ’’ என்று புகழ்பவர்கள் உடனடியாக பஜன்லால் சேட்டிடம் அடகுவைத்த மூளையை மீட்டுக்கொண்டு வருவது நலம். அந்த  காட்சியில் வரும் பிச்சைக்காரன் 500, 1000 ரூபாயை தடைபண்ணத்தான் சொல்லியிருப்பான், மோடிபோல பழய 500, 1000 ரூபாய்களுக்கு புது நோட்டுக்களைக் கொடுக்கச் சொல்லவில்லை. ‘’500, 1000 ரூ நோட்டுக்களை தடைசெய்வதால், பணக்காரர்களால் கள்ளப்பணத்தை இனி பெரிய பண்டிலாக கட்டிக்கொண்டு போக முடியாது’’ என்று சொல்பவர்களிடம், எதற்காக 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படுகிறது என்று கேட்டால், ‘’பாக்கிஸ்தானுக்கு போ’’ என்பது பொருத்தமான பதிலா?.

என்னைப் பொருத்தவரை புழக்கத்திலுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் தடைசெய்ததின் மூலம் நடுத்தர வர்க்க மக்களுக்கும் வங்கிகளுக்குமான உறவு அதிகரிக்கும். தேவைக்கு அதிகமான இருப்பை கையில் வைத்திருப்பதை விட வங்கிகளில் போட்டுவைக்கும் மனப்பாங்கு மக்களிடம் அதிகரிக்கும். கள்ளப் பணம் என்றாலும் கையில் வைப்பது பற்றிய பயம் இருக்கும். நடுத்தர மக்களின் பணப் புழக்கம் கூடும். இதற்காக மட்டும் இந்த திட்டத்தை நம்மால் ஆதரிக்க முடியும். அதற்காக மோடிக்கு வாழ்த்துக்கள். அதே நேரத்தில் ‘’எங்கே பேங்கில் போட்டுவைத்திருக்கும் பணத்தை மல்லையாவிற்கு கடன் கொடுத்துவிடுவார்களோ?’’ என்ற மக்களின் பயத்தை அரசு நீக்கவேண்டும்.

மற்றப்படி, பஜனை கோஷ்டிகள் சொல்வதுபோல கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவருவது, கள்ள நோட்டை தடுப்பது என்பது எல்லாம், கல்யாண வீட்டில் மாப்பிள்ளை சீப்பை மறைத்துவைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்பது போன்ற அபத்தம். இன்னும் நாம் சினிமாக்களில் காட்டுவது போல கள்ள ணங்கள் கட்டுக்கட்டாக பூஜை அறைக்கு அடியிலும், பெட்டுக்கு அடியிலும் மறைத்துவைக்கப்பட்டிருக்கும், கண்டெய்னர் பணமும், ரயிலில் களவாடப்பட்ட பணமும் இன்றுவரை கத்த கத்தையாக நோட்டாகவே இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருப்போமேயானால், நாம் அரை நூற்றாண்டு பின்தங்கியே இருக்கிறோம்.

இந்தியாவில் இருக்கும் மொத்த ரூபாய் நோட்டுக்களில் 80% 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள்தான். அதை தடைசெய்துவிட்டு 20% மட்டுமே இருக்கும் 100,50,10 நோட்டுக்களால் எப்படி நிலையை சமாளிக்கமுடியும். இதை எல்லாம் யோசித்துதான் செய்தார்களா? என்று குழப்பமாகவே இருக்கிறது. 500ம் 1000மும் பணக்காரர்களிடம்தான் இருக்கும் என்றால் அப்போ இந்தியாவில் 80% பணக்காரர்களா என்ன?.

10 லட்ச ரூபாய் வீட்டுமனைக்கு 6 லட்சம் கைட்லைன் வேல்யூ என்றால், மீதம் 4 லட்சம் கருப்பு பணம்தான். அந்தமாதிரியான கருப்பு பணம், மோடியை எதிர்ப்பவர்களிடம் மட்டுமல்ல, ஜி.பி.எஸ் வசதிகொண்ட 2000 ரூபாய் நோட்டுக்கு சப்போர்ட் செய்பவர்களிடமும் உண்டு. சொந்த மனை இருக்கும் அனைவரிடமும் இந்த கருப்பு பணம் இருக்கும். இந்த கருப்பு பணத்திற்கு மக்களா காரணம்? 10 லட்சம் மதிப்புள்ள மனையை 6 லட்சம் என்று சொல்வது மக்களா? அரசா?. கட்சிகளுக்கு வரும் பணத்திற்கு வரி கட்டச் சொல்லும் போது கட்சி சார்பு இல்லாமல் அதை எதிர்க்கும் அரசியல்வாதிகள், மக்களுக்கு வரியைப் பற்றியும், கள்ளப்பணம் பற்றியும் பாடம் எடுப்பது இந்த நாட்டின் சாபம்.    

என்னிடம் 25 லட்சம் கள்ளப்பணம் இருந்தால், என் உறவினர் 10 பேரின் அக்கவுண்ட்டில் போட்டுவிட்டு திரும்ப எடுத்துவிடமுடியும். என்னைப் போல சாதாரண ஒருவனாலேயே 25 லட்சத்தை மாற்றிவிட முடியும் என்றால், பத்து கோடி பணமாக பதுக்கியவன் ஒன்றும் மங்கூனியாக இருக்கமாட்டான். கள்ளப்பணத்தில் 2% அரசுக்கு வந்தாலே பெருயவிஷயம் ஆனால் அதற்காக மக்கள் படும் அவஸ்தை அதைவிட அதிகம். கள்ளப்பணத்தை மீட்க இவ்வளவு ஆர்வம் இருக்கும் மத்திய அரசு, அதை வைத்திருக்கும் 100 பேர்களின் பட்டியலை வெளியிட ஏன் மறுக்கிறதுய. பனாமா விவகாரத்தில் வாய் திறக்க மறுப்பது ஏன்?. 

எமர்ஜென்ஸி ஹாஸ்பிடல் செலவிற்காக எங்கள் வீட்டில் எப்போதும் ஒரு லட்சம் தனியாக இருக்கும். இப்போது அதை இரண்டு தவணையாக பேங்கில் போட்டாகிவிட்டது. அது திரும்ப வரும் வரை என் அம்மாவிற்கு கால்வலியோ, கற்பமாக இருக்கும் என்மனைவிக்கு வேறு எதுவுமோ நடக்காமல் இருக்க ஆண்டவனிடம் வேண்டும் அதேவேளையில் மேக் இன் இண்டியா திட்டத்தில் உருவான 251 ரூபாய் ஸ்மார்ட் போன் படுதோல்வியைப் போல அல்லாமல், இந்த திட்டமாவது வெற்றி பெற துவா செய்கிறேன்.

ஜனவரி 1ல் மோடி கண்டிப்பாக மக்களிடம் வானொலியில் ‘’கருப்பு பணம் ஒரு லட்சம் கோடி அரசிற்கு கிடைத்துவிட்டது’’ என்று பீத்துவார். அதற்கு ‘’ஆதரம் தாருங்கள்’’ என யாராவது பதில் எதிர்பார்பீர்களேயானால் அவர் பாரிசுக்கு கிளம்பிவிடுவார். மற்றப்படி என் நண்பர்கள் சொல்லுவது போலவும், உலகப் பொருளாதார மேதை எஸ்.வி.சேகர் சொல்வது போலவும் ஒரு அமெரிக்க டாலர் மூன்று ரூபாயாக வரும் நாளை எதிர் நோக்கியே காத்திருக்கிறேன். 

இந்தமுறை எதிர்ப்பு அதிகமாக இருக்கக் காரணம், ‘’நாய்க்கு பேர் வெச்சியே, சோறு வச்சியாடா?’’ என்று கடந்தகால திட்டங்கள் எல்லாம் பெயர் அளவிலேயே பப்படமானதுதான். ‘’ஊழல்’’, ‘’கருப்பு பணம்’’ ஆகியவற்றில் பி.ஜே.பியும் காங்கிரஸும் ஒன்றுதான். என்ன, காங்கிரஸை எதிர்த்து கேள்விகேட்டபோது என்னை ‘’இந்தியன்’’ என்றவர்கள் இப்போது ‘’பாக்கிஸ்தானி’’ என்கிறார்கள்.  பாக்கிஸ்தானுக்குப் போய் ஆலு புரோட்டா திண்பதற்கு பதிலாக பேசாமல் நானும் பக்தாளாக மாறிலாம்னு முடிவுபண்ணிண்டேன். எங்க எல்லாரும் கோரஸா சொல்லுங்கோ ‘’ஹர ஹர மகா தேவிக்கீய்............’’

------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.  

வியாழன், நவம்பர் 10, 2016

குஷ்பு குஷ்புதான்.

‘’உடல் மண்ணுக்கு உயிர் சிம்ரனுக்கு’’ என நாங்கள் வயதுக்குவந்த காலங்களில் முழங்கியபோது, குஷ்புவோ, காலம் எனும் பேராற்றங்கரையில் கரை ஒதுங்கிய (நாட்டுக்)கட்டை போல் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டிருந்தார். என்னதான் ‘’சிம்ரன்’’ ‘’ரம்பா’’ என மனது குரங்குபோல தாவித் தாவி ஓடினாலும், குஷ்பு பெயரைக் கேட்டாலே பழத்தைப் பார்த்த குரங்குபோல ஒரே இடத்தில் நிற்கும். ஹன்ஸிகா, கீர்த்தி சுரேஷ் என பலர் வந்தாலும் கூட  ‘’குஷ்பு குஷ்புதான்’’ என்பதை அறிந்தேயிருக்கிறோம்.

கேப்டன் மகளில் ‘’ஏதோ உன்னிடம் இருக்கிறது....'' பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஒரு ‘’இது’’ வரும் அந்த ‘’இது’’தான் குஷ்புவிற்கு கோவில்கட்டும் வரை என் அண்ணன்மார்களை இழுத்துச்சென்றது. ‘’குஷ்புவிற்கு கோவில் கட்டியவன் முட்டாள்’’ என்று வாதிடுபவன் கண்டிப்பாக பாண்டித்துரையில் வரும் ‘’மல்லியே சின்ன முல்லையே........’’ பட பாடலையை (கேட்ட அல்ல)  பார்திருக்க மாட்டான் என்றே நினைக்கிறேன். அதைக் காணாத கண்கள் அவிஞ்சி போனால்தான் என்ன?. பார்த்தால் அவர்களும் சொல்லுவார்கால் ‘’குஷ்பு குஷ்புதான்’’.

குஷ்புவை பிடிக்கக் காரணம் குஷ்புதான். ‘’கல்யாண்’’ பிரபுவை பிடிக்காமல் போகக் காரணமும் குஷ்புதான் என்பதை சொல்லத்தேவையில்லை. சச்சின் இருந்தால் இந்தியா வெற்றி உறுதி என்ற சம காலத்தில்தான் குஷ்பு இருந்தால் ஹிட் உறுதி என்ற நிலையும் தமிழகத்தில் இருந்தது.. ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்துவரும் ஜாக்கெட்டுக்காக மொத்த குடும்பமும் டி.வி முன் காத்திருக்கும் போது, எங்களுக்கோ ஜாக்கெட் இல்லையென்றாலும் (அய் மீன் சுடிதாரில் வந்தாலும்) ‘’குஷ்பு வந்தா மட்டும் போதும்’’ என்று பைத்தியமாய் இருந்தோம்.
 
குஷ்பு அரசியலுக்கு வருகிறார் என்றவுடனே, அவர் காங்கிரஸ் கட்சியில்தான் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அழகிரியின் செல்ல மிரட்டலில் தி.மு.கவில் இணைந்தார் என்பது நம்மில் எத்தினி பேருக்கு தெரியும்?. பிரபுவால் கைவிட்டு, தி.மு.க பொதுக்குழுவில் இடுப்பில் கைவிட்டு, தேர்தலில் சீட் கொடுக்காமல் கைவிட்டு.................இப்படியாக பலர் கைவிட்டு கைவிட்டு காலம் இறுதியில் ‘கை’க்கே கொண்டுவந்து விட்டது. இடையில் (அந்த ‘இடை’ இல்லை) திருச்சி விமானநிலையத்தில் செருப்படி வேறு. 

கற்பு விஷயம் முதல் தலாக் விஷயம் வரை குஷ்புவைச் சுற்றி எப்போதுமே பிரட்சனைகள் & சர்ச்சைகள் இருந்துகொண்டே இருக்கும். சிலர் தவறான கருத்தை சொல்லும்போது அதை எதிர்த்து கண்ணியமான முறையில் பதிலளிக்கும் அமைப்புகள், சினிமாக்காரர்கள் என்றால், அவர்கள் வீட்டிற்கு முன்பாக விளக்குமாற்று போராட்டம், சாணி கரைப்பு போராட்டம் நடத்துவது ஏன்னெற்றே தெரியவில்லை. இப்போது சில இஸ்லாமிய அமைப்புகள் குஷ்புவை கழுவி ஊற்றுவதைக் கண்டு மனம் சகிக்கவில்லை. ஏன் என்றால்? எங்களுக்கு ‘’குஷ்பு குஷ்புதான்’’.

அழகா இருக்கிற எல்லோரும் சரியான கருத்தைத்தான் சொல்லவேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இவ்வளவு ஏன்? நானே சில நேரங்களில் தவறான கருத்துக்களை சொல்லியிருக்கிறேன்.?!?!?!. (லாஸ்ட் வரியை சைடில் விடவும்) குஷ்பு சொன்ன கருத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை அதற்காக கழிசடை, விபச்சாரி...........என்ற மூன்றாம் தர தாக்குதல்கள் மிகவுக் கண்டிக்கத்தக்கது. இப்படி செய்வதின் மூலமாக தலாக், பலதார திருமணம் பற்றிய குஷ்புவின் தவறான எண்ணத்தை மாற்றிவிட முடியுமா என்ன?. மாறாக ‘’இவனுங்க இப்படி பேசுறானுங்கன்னா குஷ் சொன்னது உண்மையாகத்தான் இருக்கும்’’ என்ற தவறான எண்ணத்தையே பலரிடம் விதைக்கும்.

நீங்களெல்லாம் என்னத்த நபியின் வாழ்க்கையை படித்தீர்களோ?, சரித்திரத்த கொஞ்சம் திருப்பிப் பாருங்க. இஸ்லாமிய வளர்ச்சியே இஸ்லாத்தின் எதிர்ப்பினை சரியான முறையில் எதிர்கொண்டதுதான். எங்கெல்லாம் விமர்சனங்கள், எதிர்ப்புகள் வருகிறதோ அங்கெல்லாம் அவர்கள் இஸ்லாத்தில் அதற்கான காரணத்தையும், உண்மையையும் கண்ணியத்துடன் விளக்கிக்கூறி விளங்க வைத்தமைதான். இப்போது சிலர் செய்வதைப் போலவே முஹம்மது நபியும் ‘’கழிசடை’’, ‘’கபோதி’’, ‘’கம்னாட்டி’’ என திட்டியிருந்தால், முஹம்மது நபி இறக்கும் போதே இஸ்லாமும் இல்லாமல் போயிருக்கும்.

‘’சேலையை அவிழ்த்துக்காட்டும் குஷ்புவிற்கு இஸ்லாத்தைப் பற்றி பேச அருகதையில்லை’’ என ஒரு ஆலிம் அழுகிறார். நான் பார்த்த வகையில் 27 குஷ்பு படத்தில் சேலை அவிழ்க்கும் சீன்கள் (காட்சிகள்) வருகிறது, அதிலும் ‘’முத்துக்குளிக்க வாரிகளா’’ படம் பிரமாதம். எனக்கு அந்த ஆலிமிடம் இரண்டு கேள்விகள்தான். ஒன்று, ஆலிம் எந்த படம் என்பதை தெளிவாகக் கூறவேண்டும். அடுத்ததாக குரானில், சேலை அவிழ்ப்பவர்கள் இஸ்லாம் பற்றி தெரிந்துகொள்ளவோ அல்லது பேசவோ கூடாது என்று எங்கு கூறியிருக்கிறது?. ஆலிமின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த பலபேர் குஷ்பு கோவிலுக்கு கல் சுமந்திருக்கக்கூடும், ஏனென்றால் கை தட்டல் ரொம்ப கம்மியாகவே இருந்தது.

குஷ் போலவே இங்கு பலபேர், இஸ்லாம் நான்கு பெண்களை திருமணம் செய்யச் சொல்கிறது என்று நினைக்கின்றார்கள். ஆனால், இஸ்லாம் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்துகொள்ளலாம் என்றுதான் கூறுகிறது. அதாவது சலுகைதானே தவிற கட்டாயம் கிடையாது. ஏற்கனவே திருமணம் ஆனவரை கட்டிக்கொள்ள அந்த பெண்ணும் சம்மதிக்க வேண்டும். பெண் விருப்பமின்றி கல்யாணம் என்பது பாவச் செயல், ஒரு பெருங் குற்றம். ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம், ரெண்டாயிரம் பொய் சொல்லி ரெண்டாம் கல்யாணம் என்ற பேச்செல்லாம் கிடையாது.

நாலு மனைவிகள் என்றால், நால்வரிடமும் ஒரே போல் நடந்துகொள்ளவேண்டும், வேறுபாடு காட்டலாகாது. அனுஷ்கா வீட்டில் ஆறு நாள், அருக்கானி வீடென்றால் ஒரு நாள் என்பதெல்லாம் நாட் அலவ்ட். ஒருவன் நான்கு திருமணம் செய்யவேண்டும் என்றால் அவர்களுக்கு தாம்பத்தியம் முதல் மற்ற பிற தேவைகளையும் பூர்த்தி செய்பவனாக இருக்கவேண்டும். நான்கு அல்ல ஒரு திருமணத்திற்குகூட ஆணுக்கு என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும் என்று இஸ்லாமில் ஒரு டேட்டா பேஸ்ஸே இருக்கிறது. நான்கு திருமணத்திற்கான ரூல்ஸ் & ரெகுலேசனைப் படித்தால் ‘’இதுக்கு பேசாம, பத்து நிமிடம் பாத்ரூம் போய்விட்டு கைகழுவிவிட்டு வந்துவிடலாம்’’ என்று கூட தோன்றும்.

‘’அடங்காதவனுக்கு நாலு பொண்டாட்டியில்லை, நாலாயிரம் பொண்ணாட்டி கட்டினாலும் அடங்காது’’ என்ற பழமொழி உண்டு.   இன்றய சூழலில்,  ஒன்றைச் சாமாளிக்கவே பலர் பத்து மணிக்குமேல் கேப்டன் டிவி பார்த்து லேகியம் ஆர்டர் செய்யும் நிலையில், நாலு பேர் என்றால்.............???? ‘’சேகர் செத்துருவான்’’.

அடுத்ததாக, அவசரத்தில் விவாகரத்து செய்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழவேண்டும் என்றால் அந்த பெண் வேறு ஒருவனை திருமணம் செய்து, கண்டிப்பாக செக்ஸ் வைத்து, அவன் தலாக் சொல்லிய பின்புதான் முதல் கணவனுடன் இணையமுடியும்’’ என்ற கருத்து பேஸ்புக்கில் காணக்கிடைக்கிறது. இது முற்றிலும் தவறு. இதுபோல் ஒன்று இஸ்லாத்தில் கூறியிருந்தால், பலபேர் ‘’இங்கு சிறந்த முறையில் முதல் கணவனுடன் சேர ஆவனசெய்யப்படும்’’ என போர்டு வைத்து கடை திறந்து விடுவார்கள்.

இஸ்லாத்தின் படி, விவாகரத்து செய்த ஜோடிகள், தமிழ் பட கிளைமாக்ஸில் வருவது போல ஓடும் ரயிலில் ஹீரோ நின்றுகொண்டு ஓடி வரும் ஹீரோயினை தூக்கிக்கொண்டு செல்வதுபோல திரும்ப இணையமுடியாது. விவாகரத்து என்பதே திருமண முறிவுதான். அவர்கள் மீண்டும் இணைய ஆசைப்பட்டால், மறுபடியும் திருமண முறைகள் பின்பற்றி திருமணம் செய்யவேண்டும். இந்த இரண்டாவது திருமணமும் விவகாரத்தில் முடிந்து, மீண்டும் இணைய ஆசைப்பட்டால், மறுபடியும் (எத்தனவாட்டி?) மேற்சொன்ன திருமண முறைகளின் படி ஒன்று சேரலாம். இவ்வாறாக இரண்டு முறை மீண்டும் இணைந்து கொள்ள அனுமதியுண்டு. மூன்றாவதாக விவாகரத்து நடைபெற்ற பின்பும் மீண்டும் ஒன்று சேரவேண்டும் (மறுபடியும் முதல்ல இருந்தா..........) என்றால் மட்டுமே முடியாது*. (* கண்டிஷன்ஸ் அப்ளை).

இதை விடுங்கள், நாம் குஷ்பு மேட்டருக்கு வருவோம். (எவனாவது ‘’குஷ்புவே……..’’ன்னு ஆரம்பிச்சீங்க பிச்சு, பிச்சு)

குஷ்பு அழகியா? பேரழகியா? என்று விவாதிப்பதை விட்டுவிட்டு முஸ்லீமா? இல்லையா? என்பதெல்லாம் ஒரு பஞ்சாயத்தாடா?. இன்று ‘’முஸ்லீமே இல்லை’’ என்று சொல்லும் முஸ்லீம்கள், நாளை குஷ்பு பி.ஜே.பியில் சேர்ந்து அதை அழிக்க தன்னுடய உடல், பொருள், ஆவி எல்லாத்தையும் அர்பணிக்கும் போது மூஞ்சை எங்கு கொண்டுபோய் வைத்துக்கொள்வீர்கள்?. ஏதோ, ‘’தாலி புதுசு’’ படத்தில் மூன்று கணவர்களுக்கு பொண்டாட்டியாக நடித்ததை வைத்துக்கொண்டு பலதார திருமணம் பற்றி தெரியாமல் சொல்லியிருப்பார். அதை உங்கவீட்டுப் பிள்ளையாக நினைத்து மன்னித்துவிட்டுங்கள்.

மேலும் நாட்டாமை படத்தில் குழந்தை இல்லாத பெண்ணாக வரும் குஷ்புவை நினைத்து கொஞ்சம் கருணையோடு எடுத்துக்கூறுங்கள். எச் ராஜா, தமிழிசை போன்றவர்களுக்குத்தான் இதை புரியவைப்பது கஷ்டம், ஆனால் குஷ்புவிடம் எடுத்துச் சொன்னால் அவர் கேட்டுக்கொள்வார்.  ஏனென்றால் ‘’குஷ்பு குஷ்புதான்’’.
------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா. 

செவ்வாய், நவம்பர் 01, 2016

பொது சிவில் சட்டம்.

எனக்கு சன்னி லியோன் (யார்? என்று கேட்பவர்கள் அப்படியே ஓடிவிடுங்கள்) பற்றி தெரிந்த அளவிற்குக் கூட சன்னி முஸ்லீம் சட்டங்கள் பற்றித்தெரியாது. தலாக் பற்றிய எனது முந்தய கட்டுரையை வைத்துக்கொண்டு ஏதோ முஹம்மது நபியின் முப்பத்தி மூன்றாம் வாரிசு போல என்னிடம் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களைக் கேட்கிறார்கள். சிலர் ‘’சூப்பர்’’ என உசிப்பேத்தி அடுத்த ‘’மன்னை சாதிக்’’காக மாற்ற முயற்சிக்கின்றார்கள். இந்த ரெண்டுல எது நடந்தாலும் உலகம் அழிஞ்சிரும். 

பொது சிவில் சட்டத்தில் தலாக் வெறும் ஐந்து மார்க் கொஸ்டின். ஆனால் இன்னும் பொ.சி சட்டம் பற்றிய T.V விவாதங்களில் தலாக் பற்றி ‘’கைய புடிச்சு இழுத்தியா?, என்ன, கைய புடுச்சு இழுத்தியா?’’ என்றே விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பல பேர் பொ.சி.சட்டம் என்றால் ''தலாக் சட்டத்தை ஒழிப்பது'' என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மோடி கூட அவருடய முஸ்லீம் சகோதரிகள் தலாக்கினால் பாழும் கிணற்றில் தள்ளப்படுவதாகக் கூறி தலாக்கை முன்னிருத்தியே பொ.சி.சட்டம் பற்றி பேசுகிறார். அதே மோடி, குஜராத்தில் முப்பது வருடத்திற்கும் மேலாக ‘’என் கிணற்றைக் காணோம்’’ என்று தேடும் பெண்ணிற்காக வருத்தப்படாமல் இருப்பது துரதிஷ்டம். 

பொது சிவில் சட்டம் என்பதே உத்திர பிரதேச தேர்தல் ஜூஜிலிப்பாதான். ‘’பொ.சி. சட்டத்தை முஸ்லீம்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள்’’ என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தி வெற்றிபெற நினைக்கின்றார்கள். தேர்தல் முடிந்தவுடன், ‘’பொ.சி.சட்டம் என்னாச்சு?’’ என்று கேட்டுப்பாருங்கள், ‘’அடுத்த தேர்தல் வரட்டும்னு காத்துக்கிட்டிருக்கோம்’’ என்றுதான் பதில் வரும். ஏனென்றால் பொ.சி. சட்டம் பற்றிய பிரட்சனையின் ஆழம் அவர்களுக்குப் புரியாமல் இல்லை.

மோடி உண்மையிலேயே பொ.சி.சட்டத்தைப் பற்றி கவலைப்படுபவறாக இருந்திருந்தால், அரசியல் அமைப்புச் சட்டம் 370யை நீக்குவோம் என்று காஷ்மீர் தேர்தலில் முழங்கியிருக்க வேண்டும். கேரளா தேர்தலில் பசு வதை பற்றியும், பசு மாமிசம் பற்றியும் கருத்து தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் மோடியோ ‘’ராசாத்தி ரேடியோஸ்’’ வீட்டு பின்பக்கமாக தெரித்து ஓடிய மொக்கச்சாமி போல்லல்லவா ஓடினார்.

அகோரி சாமியார்களிடம் சென்று, ‘’பொதுவெளியில் நிர்வாணம் குற்றம் ஆகையால் ஆலயா வேஷ்டிகள் சட்டைகள் அணிந்துகொள்ளுங்கள்’’ என்று மோடியால் கூறமுடியுமா?. இது முஸ்லீம்களுக்கான பிரட்சனை மட்டும் அல்ல, மற்ற மதம், இனம், மொழி, ஜாதி என எல்லாவற்றின் ஒட்டுமொத்த பிரட்சனை. அகோரி சாமியார்கள் முதற்கொண்டு இட ஒதுக்கீட்டிற்கு வேட்டுவைப்பது வரை ஒட்டுமொத்த இந்திய மக்களின் பிரட்சனை.

ஒரு மாநிலத்திற்கும் பக்கத்து மாநிலத்திற்குமே சில சட்ட திட்டங்களில் வித்தியாசம் உண்டு, அது அந்த மாநில மக்களின், கலாச்சாரம், வாழ்க்கை முறையைப் பொருத்தது. வரி கூட வித்தியாசம் இருக்கிறது அதனால், தமிழ்நாட்டு பெட்ரோல் விலைக்கும், கர்நாடகா பெட்ரோல் வில்லைக்குமே வித்தியாசம் உண்டு. பன்முகம், பல கலாச்சாரம் என்று ஒரு மண்ணுமில்லை என்பவர்களுக்கு ஒரு உதாரணம் ஜல்லிக்கட்டு. தமிழன் ‘’இது எங்களின் பாரம்பரிய வீர விளையாட்டு’’ என்கிறான். ஆனால் வட நாட்டுக்காரன் ‘’காட்டுமிராண்டித்தனம்’’ என்கிறான். இப்போது இந்த பொடலங்காய் சிப்ஸ் சட்டத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும்?. பொ.சி.சட்டம் வந்தால் ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டுத்தான் என்று தீர்ப்பு வரும் என்றா நினைக்கின்றீர்கள்?. 

பன்முகத்தன்மை, பல கலாச்சாரம் என்று இருந்தாலும் பொதுவான சட்டத்தின் படி வாழ முடியாதா? என்று கேட்டால், முடியும். அது எப்போது நடக்கும் என்றால், ஒரு இந்து இஸ்லாம் பற்றி முழுமையாக தெரிந்து, ஒரு முஸ்லீம் இந்து மதம் பற்றி முழுமையாக தெரிந்து, இதைவிட உன் சட்டம் சிறந்தது, என் சட்டம் சிறந்தது என்ற முடிவிற்கு வரும் நாட்களில் நடக்கும். அந்த நாள் எப்போது வரும்? என்றால் மருதநாயகம் ரிலீஸூக்கு மறுநாள் வரும். இருக்கிற சட்டத்தைக் கொண்டு பக்கத்து மாநிலத்துக்கு தண்ணி திறக்கச் சொல்ல வழியில்லை. இவர்கள் வானம் ஏறி வைகுண்டத்திற்குப் போக வழி சொல்லுகிறார்கள்.

பொ.சி.சட்டம் தேவையில்லை என்பதை, இந்தச் சட்டம் தேவையா? இல்லையா? என்று இந்திய சட்டத்துறை கொடுத்திருக்கும் கேள்விப் படிவத்தின் மூலம் தெரிவிக்க சிலர் அறிவுருத்துகிறார்கள். அந்த கேள்விப் படிவம் எப்படி இருக்கிறது? ‘’நீ முட்டாள் என்பது உன் மனைவிக்கு தெரியுமா?’’ என்று கேட்டுவிட்டு, ‘’ஆம்’’, அல்லது ‘’இல்லை’’ என்ற இரண்டில் ஒன்றை பதிலாக எழுதவும் என்கிற ரேஞ்சில் இருக்கிறது. என்னுடய பதில் ‘’நான் முட்டாளே இல்லை’’ என்பதாக இருந்தால் அந்த படிவத்தில் என்னால் எப்படி விளக்கமுடியும்?.

முஸ்லீகளை விடுங்கள், ராணுவத்தில் சர்தாஜிகளின் டர்பனுக்கும், பொதுவெளியில் குருவாள் வைத்துக்கொள்வதற்கு என்ன செய்யப்போகுறீர்கள்?. இந்துக்களின் கூட்டுக்குடும்ப வரிச்சலுகைக்கான சட்டத்தை என்ன செய்வீர்கள்? ஜைன மதத்தின்படி பல நாட்கள் சாப்பிடாமல் இருந்து தற்கொலை செய்யும் பெண்ணுக்களுக்காக என்ன செய்யப்போகுறீர்கள்?. ஜெயின் நிர்வாண துறவியின் சட்டமற்ற சொற்பொழிவிற்கு எந்தச் சட்டம்? தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை என்ன செய்யப்போகுறீர்கள்? தனித் தொகுதி முறை என்னவாகும்? என்பதை விளக்கி மோடியால் ஒரு டிபாப்ட் காப்பி கொடுக்க இயலுமா?.

தனிச் சட்டத்தின் மூலமாக சமுதாயத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எந்த விதத்தில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது? என்பதை அரசு விளக்கவேண்டும். சயாரா பானு விஷயத்தில் கூட அவர் வழக்கு என்னெவென்றால், இஸ்லாமிய முறையில் விவாகரத்து வழங்கப்படாமல், ஒரு தபாலில் தலாக், தலாக், தலாக் என்று எழுதியதை வைத்துக்கொண்டு அங்குள்ள ஜமாத், விவாகரத்து வழங்கியதை ரத்து செய்யவேண்டும் என்பதுதானே தவிற, ஷரியா சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பது அல்ல. 
  
சட்டம் சரியாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அதை நீக்குவது தவறில்லையே என்ற கருத்து எழுகிறது. குமாரசாமியின் தீர்ப்பை வைத்துக்கொண்டு ஊழல் சட்டப்பிரிவு நீக்கப்படவேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்?. கற்பழித்தவனுக்கு 1000 ரூபாய் தண்டனையின் கீழ், அட்வான்ஸ் முறையில் கற்பழிப்பது இன்னும் சில கிராமப் பஞ்சாயத்துக்களில் நடக்கத்தான் செய்கிறது. அதற்காக, இந்திய கற்பழிப்பு தண்டனைச் சட்டம் செல்லுபடியாகாமல் போகுமா என்ன?. சட்டத்தை நிலைநாட்ட கூடுதல் சட்டங்கள் கொண்டுவாருங்கள். சட்டத்தை மீறிபவர்களுக்கும், சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் தண்டனையை கடுமையாக்குங்கள்.

அடுத்ததாக, இஸ்லாமிய சட்டங்களில் சீர்திருத்தம் வேண்டும் என்று சொன்னால் இங்கு சில இஸ்லாமியர்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சீர்திருத்தம் என்பது அன்ற காலகட்டத்திற்கு தேவையின் அடிப்படையில், அதே நேரத்தில் இஸ்லாத்தின் கோட்பாட்டிலிருந்து மாறாத வகையில் இருக்கவேண்டும். உதாரணமாக, முஹம்மது நபியின் ஆட்சியில் ஸகாத் (தானம்) தொகை கணக்கிடும் போது குதிரைகள் சேர்க்கப்படவில்லை. ஆனால் உமர் ஆட்சிக்காலத்தில் குதிரைகள் ஸகாத்தின் தொகையில் சேர்க்கப்பட்டன. நபியின் ஆட்சிக்காலத்தில் குதிரைகள் பயணத்திற்கும், சொந்த உபயோகத்திற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன, பின்பு உமர் காலங்களில் அவை வியாபார நோக்கில் பயன்படுத்தப்பட்டன என்ற அடிப்படியில் அந்த சீர்திருத்தம் இருந்தது. இதை புரிந்துகொள்ளாமல், முஹம்மது நபி சொல்லிச் சென்ற இஸ்லாத்தின் சட்டத்தை உமர் மீறிவிட்டார் என பொங்கி பொங்கல் வைக்கக்கூடாது.

மோடி அவர்களே, முஸ்லீம்களை வெறுப்பேற்றுகிறேன் என்ற பெயரில் அவர்களின் ஒற்றுமையை அதிகப்படுத்துகின்றீகளோ? என்ற சந்தேகத்துடன், பாக்கிஸ்தானின் ஸ்லீப்பர் செல்லாகக்கூட இருப்பீர்களோ? என்ற அய்யம் அதிகமாகிறது. அவர்களை சும்மா விட்டுவிட்டாலே, ‘’பக்ரீத் ஆட்டுத்தோலை எந்த அமைப்பு எடுப்பது?’’ போன்ற ஆயிரம் பிரட்சனையில் அவர்களாகவே நாசமாகிப் போவார்கள். ஸோ, டோண்ட் ஒரி பி ஹாப்பி.

-----------------------------------------------------------யாஸிர் அசனப்பா.