வியாழன், ஜூன் 15, 2017

வனஜா டீச்சர்.

தென்காசிக்கு போவதாக இருந்தால், போகும் போது பஸ்ஸில் வலது புறமும், திரும்பும் போது இடது புறமும் உட்காரும்படியாக பார்த்துக்கொள்வேன். எங்க ஊரில் இருந்து ஏழு கிலோ மீட்டரில் . கி.பி 1888ல் ஆரம்பித்த அந்த பள்ளிக்கூடத்தில் தான் நான் படித்தேன். சினிமா கிராபிக்ஸ்ஸை மிஞ்சும் இயற்கையான எளில்மிகு லோக்கேஷனில் அமைந்திருக்கும்.. பள்ளிக்கு பின்னாடி சின்ன ஓடை. முன்னாடி ஒரு ஆலமரம் அதன் அடியில் சின்ன புள்ளையார் கோவில். பக்கத்தில் உலகத்தில் எங்கயுமே கிடைக்காத நாலே நாலு திண்பண்டங்கள் கொண்ட ஒரு குட்டி பெட்டிக்கடை. எதிர்புற வலது பக்கத்தில் கரடிமாட சாமி, தெற்கில் சுடலைமாட சாமி என காவல் தெய்வங்கள், அதை ஒட்டி விளையாட்டு மைதானம் என்ற பெயரில் ஒரு புதர்காடு. சாலை இருபுறமும் புளியமரம் என இயற்கை சூழ் ரம்மியமான இடம். 
பின்னாடி இருக்கும் அந்த சின்ன ஓடையில் ஒரு நாளைக்கு 10.30, 1.00, 3.30 என்ற மூன்று வேளைகள் மட்டுமே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். முனிசிபாலிட்டியில் திறந்துவிடுவதாக நினைக்க வேண்டாம், அதுதான் எங்கள் இண்டெர்வெல் பிரீயெட். அந்த ஓப்பன் ஏரியாவில் வானத்தைப் பார்த்துக்கொண்டு உச்சா போகுற சுகமே தனி. புள்ளையார் கோவிலில் அடிக்கடி பூஜை நடக்கும். ஆனால், புளியோதரையோ, பொங்களோ, பிரசாதமோ கொடுத்துப் பார்த்ததே இல்லை. அந்த காண்டு புள்ளையாருக்கே இருந்திருக்கும் போல, ஊரே ‘’புள்ளையார் பால் குடிக்குறாரு’’ ‘’புள்ளையார் பால் குடிக்குறாரு’’ன்னு பூரித்த நாட்களில், டீச்சர்கள் ஆர்வத்தோடு தூக்குச் சட்டியில் கொண்டுவந்த பாலை துப்பி அனுப்பிவிட்டார். ‘’புள்ளையார் கோவமா இருக்காரு’’ன்னு புரிந்து அன்று நாள் மட்டும் சக்கரை பொங்கள் தந்தார்கள்.
ஒருநாள் தென்காசிக்கு போகும்போது பஸ்ஸில் பயங்கர கூட்டம், இடைகாலில் எங்க எட்டாம் வகுப்பு கிளாஸ் டீச்சர் ஏறினாங்க. அவங்க பெயர் வனஜா. பார்த்துவிட்டு பயங்கர சந்தோசம். ‘’என்னய ஞாபகம் இருக்குமா?, ஞாபகம் இல்லன்னா என்னா?, நான் உங்க ஸ்டூடண், இஞ்சினியரா இருக்கேன்னு சொல்லுவோம். ச்சே, ச்சே இஞ்சினியர்ன்னு சொல்ல வேணாம், நம்ப மாட்டாங்க. நான் நல்லா இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா டீச்சர்’’ன்னு கேட்கலாம்னு ஒரு ஸ்டெப் முன்னாடி எடுத்து வச்சேன். ‘’ஏய், அறிவிருக்கா இப்படி இடிச்சுக்கிட்டு நிக்க, கொஞ்சம் தள்ளி போவேண்டியதுதானே.........’’ “நவளு நவளுன்னா இங்க என்ன நாலு செண்ட் இடமா கெடக்கு...””என பக்கத்தில் இருந்த பெண்ணிடத்தில் கத்தி சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட 20 வருசத்துக்கு முன்னால ‘’எல இத மட்டும் நீ நாளைக்கு படிக்காம வா, அப்பிருவேன் அப்பி’’ என கோவத்துல கத்துன அதே கம்பீர குரல் இன்னும் அப்படியே இருந்தது. ஒரு வேளை நான் குருடனாக இருந்திருந்தால் கூட குரலைவைத்து ‘’வனஜா டீச்சர்’’தான்னு சொல்லியிருப்பேன். டீச்சரோடு சரிக்கு சமமா சண்டை போட்ட பெண் ஆஜான பாகுவா, அமரேந்திர பாகுபலியையும், பல்வால் தேவனையும் ஒன்றாக கட்டிவைத்தது போல் இருதார். டீச்சரைப் பார்க்க ஒன் ஸ்டெப் முன்னாடி சென்ற நான், அந்த பெண்ணை பார்த்தபின்பு டூ ஸ்டெப் பின்னாடி வந்துவிட்டேன். டீச்சரிடம் குசலம் விசாரிப்பதை பார்த்துவிட்டு. இறங்கும் போது டீச்சர் மேலுள்ள கோவத்தையெல்லாம் ஆஜான பாகு என் மீது இறக்கிவிட்டால்????????. நினைத்த போதே ஒரு பக்க ஷோல்டர் இறங்கியது போல இருந்தது.
எட்டாம் வகுப்பில் அவங்கதான் எங்க கிளாஸ் டீச்சர். லேட்டா வருகிறவன், வீட்டுப் பாடம் செய்யாதவன், டீச்சர் இல்லாத நேரத்தில் பேசுகிறவன்.........என எல்லோருக்கும் 25 காசு ஃபைன். என் கூட படிஞ்ச 90% மாணவர்களுக்கு 25 காசு என்பது பெரிய விசயம். காசு எல்லாம் கிளாஸ் லீடரிடம் இருக்கும், தினமும் டீச்சரிடம் கணக்கு காட்ட  வேண்டும். அந்த காசு எல்லாத்தையும் மொத்தமாக சேர்த்து வருட கடைசியில் அதிகமாக முதல் மூன்று ரேங்க் எடுத்தவர்கள், தமிழில் அதிகம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, பேனா, பென்ஸில், ஸ்கேல்......என பரிசு வழங்குவார். எனக்கு ஒரு பேனா, இரண்டு பென்சில் கிடைத்ததாக ஞாபகம்.
5 நாள் சுடலைமாட சாமி கோவில்கொடை. 5 நாள் கரடிமாட சாமி கோவில்கொடை என வருடத்தில் அந்த 10 நாட்கள் மட்டும் பாடம் எதுவும் நடக்காது. நடக்காது இல்லை நடத்த விட மாட்டார்கள். பெரிய பெரிய கூம்பு ஸ்பீக்கர் எல்லாம் பள்ளி முன் இருக்கும் மரத்தில்தான் இருக்கும். பள்ளியில் கடவுள் வாழ்த்து முடிந்தவுடன் ஸ்பீக்கரில் சாமிப் பாட்டு ஆரம்பமாகிவிடும். அவர்கள் வைக்கும் சவுண்டிற்கு, சில மாணவர்களுக்குள் சாமியே இறங்கி ஆடியிருக்கிறார்.
இதுமாதிரியான ஒரு திருவிழா நாளில்தான், அப்பா பள்ளிக்கூடத்திற்கு வந்து ‘’பையன் எப்படி படிக்கிறான்’’ன்னு டீச்சரிடம் கேட்க, ‘’படிப்பெல்லாம் நல்லாத்தான்  படிக்கிறான், கடையநல்லூர் குசும்புதான் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு’’ன்னு சொல்லிடுச்சு. இதுதான் சந்தர்ப்பம்னு எங்கப்பா வீட்டுல இருந்து எழுதி எடுத்துட்டு வந்த மொத்த டயலாக்கையும் மூச்சுவிடாம சொல்லிட்டாப்புல. அதுல ஒன்னு, எங்கப்பா படிக்கிற போது எங்க தாத்தா அவர் கிளாஸ் டீச்சர்ட சொன்ன அந்த டயலாக் ‘’முட்டிக்கு கீழ விட்டு வெளுத்துருங்க டீச்சர்’’. சொல்லிவிட்டு பெரிய மனுஷன் திரும்பி போகவும், ஸ்பீக்கரில் ‘’கோட்டய விட்டு வேட்டைக்குப் போனா சுடலமாடசாமி, சுடலமாட சாமியும் நீதான்........’’ன்னு பாட்டு ஒலிக்கவும் சரியாக இருந்தது. அதுவரைக்கும் கையால அடிச்ச டீச்சர், அந்த சம்பவத்துக்கு அப்புறமா பிரம்பால பின்னி எடுக்கும்.
இப்படி ராஜமாதா சிவகாமிதேவி மாதிரி இருந்த எங்க வனஜா டீச்சரயே நிலைகுலையச் செய்து நாற்காலியில் தடுக்கி விழும்படி ஒரு சம்பவம் நடந்தது. அவன் பெயர் முத்துச்சாமி. அவன நாங்க செல்லமா சுருக்கி ‘’முச்சாமி’’ன்னு கூப்பிடுவோம். அவன் மூன்று நாள் ஸ்கூலுக்கு வரல. நாலாவது நாள் வனஜா டீச்சர் கேட்டுச்சு ‘’எ மூதி மூன்னாள்ளு வர்ல, எங்க கிளிக்க போன’’. முச்சாமி ‘’புண்ணு டீச்சர்’’ன்னு சொன்னான். ‘’மைனருக்கு, எந்த எடத்துல புண்ணு’’ன்னு டீச்சர் கேட்டுச்சு. ‘’அந்த இடத்துல டீச்சர்’’ன்னு முச்சாமி சொல்ல டீச்சருக்கு புரியல. ‘’அதுதான் மூதேவி எந்த இடத்துல’’ன்னு கொஞ்சம் சவுண்டா கேட்க, முச்சாமி ரொம்ப மெல்லுசா ‘’அந்த்த்த்த்த.....இடத்த்த்துல டீச்சர்’’ன்னு காலை ஒடிக்கு வைத்துக்கொண்டு இடுப்பை லைட்டா ஆட்டிச் சொன்னான்.
டீச்சருக்கு ‘’இடம்’’ புரிஞ்சு போச்சு. இருந்தாலும் முத்துச் சாமி மேல நம்பிக்கை இல்லை. பொய் சொல்லுவதாக நினைத்து ‘’அப்படியா, காட்டுடா, புண்ண பாக்கலாம்’’ன்னு டீச்சர் சொல்ல, அவனும் ‘’வேணா டீச்சர்’’ன்னு ரெண்டு, மூனு தடவ வெக்கம் கலந்த சோகமா சொன்னான். டீச்சர்க்கு கோவம் அதிகமாகி எழுந்து ‘’பொய் சொல்லுதியோ, அவுருல பாப்போம்’’ன்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள, முச்சாமி டவுசரை ..................... (எஸ் யூ ஆர் ரைட்). டீச்சர் பதறிப் போய் முகத்தை திருப்பிக்கொண்டு ‘’பரதேசி, பரதேசி, நம்புதேன், மூடுல மொதல்ல’’ன்னு சொல்லியவாரே நாற்காலியில் தடுமாறி விழுந்துவிட்டார். எங்களுக்கு அதைப் பார்த்து (அய் மீன், அந்த சம்பவத்தை பார்த்து) சிரிப்பு வந்தாலும் 25 காசு போய்விடுமே என்று பயந்து அடக்கிக்கொண்டோம். அடுத்த ஒரு வாரம் வனஜா டீச்சர் ‘’எப்ப என்ன நடக்குமோ’’ங்குற மாதிரியான பீதியான மனநிலையிலேயே இருந்தார்.
விசயம் அதோடு முடியவில்லை,
மதியம் பாடவேலையில் சாந்தி டீச்சர் கணக்கு பாடம் எடுக்க வந்தது. அல்ஜிப்ராவோ, ஏதோ ஒரு கணக்கு பாடம். எடுத்துக்கொண்டிருக்கும் போது ‘’முதல் கூட்டுத்தொகையை, ரெண்டாவது கூட்டுத்தொகையால் வகுக்க வேண்டும்’’ன்னு சொல்லிவிட்டு
‘’என்னடா முச்சாமி புரிஞ்சிச்சா, ‘’வகுக்க’’னும்டா ‘’வகுக்க’’னும், ‘’அவுக்க’’னும் இல்ல’’ என சொல்ல மொத்த கிளாஸும், வனஜா டீச்சர் சம்பவத்துக்கும் சேர்த்து சிரித்தது. (சாந்தி டீச்சர் கிளாஸுக்கு 25 பைசா ஃபைன் கிடையாது). பாவம் முச்சாமி சூம்பிப் போனான், ஏன்னா அவனுக்கு உண்மையிலேயே புண் இருந்தது. ‘’அது எப்படி உனக்கு தெரியும்?’’னு கேட்காதீங்க. உச்சா போகும் போது எல்லா நாளுமா வானத்தைப் பார்பார்கள்? சில சமயங்களில் கண்ணு அங்க இங்க போகத்தான் செய்யும்.
-----------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், ஜூன் 06, 2017

பாக்கிஸ்தானி ஜிந்தாபாத்.

ராகுல் டிராவிட் என்னைக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாரோ, அன்னையில இருந்து கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் கொறஞ்சு போச்சு.  ஆனா என்னைக்கு ‘வி. வி. எஸ். லட்சுமனனை’யெல்லாம் 20-20க்கு செலக் செஞ்சானுங்களோ அன்னைல இருந்து ‘’இந்த கிரிக்கெட்டெல்லாம் அழிஞ்சாத்தான் என்ன?’’ன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு
எங்க ஆபிஸில் ஒரு பாக்கிஸ்தானி இருக்கிறான். அவன் சொல்லித்தான் அன்று இந்தியா-பாக்கிஸ்தான் மேட்ச் என்பதே தெரியும். முன்னாடியெல்லாம் இந்தியா-பாக்கிஸ்தான் மேட்ச் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ‘’ஸ்கூல எப்படி கட் அடிக்கலாம்’’, ‘’எந்த தாத்தாவ சாவடிக்கலாம்’’.....என பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ரெடியாவோம். இப்போது அதுமாதிரியான பெரிய இண்டிரஸ்ட் யாருக்குமே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
பழைய கம்பெனியில் நான் கேம்பில் தங்கியிருந்தேன். என்னோட புராஜெக்ட்டில் அன்சர்னு ஒரு பாக்கிஸ்தானி இருந்தான். என்னய பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு அனாத புள்ளய பாக்குறது மாதிரி ஆதரோவோடு பார்ப்பான். பேசும் போது கேன்ஸர் பேசண்டிடம் பேசுறமாதிரி ரொம்ப கருணையா பேசுவான்.   முதலில்,  ‘’நாம துபாய்க்கு புதுசுங்குறதுனால இப்படி ஆதரவா இருப்பதாக’’ நினைத்தேன்.
ஒரு நாள் என்னுடய கேபினுக்கு வந்தான். ஆதரவு ஐந்து கிலோவை, கருணை கால் கிலோவோடு பிசைந்து (எப்போதும் போல) பேசினான். அவன் பேசும் தோணியைப் பார்த்த போது, ஏதோ என்னிடம் கேட்பதற்கு தயங்கி நிற்பதுபோல் தெரிந்தது. கொஞ்ச நேரத்திற்குப் பின்பு அவனாகவே கேட்டான். ‘’உனக்கு எப்படி இந்த சின்ன வயதில் சொட்டை விழுந்தது?’. ‘’அதே கேள்வி’’ நான்கு திசைகளிலிருந்தும் எக்கோ அடித்தது.  எந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாம, இந்தியாவுல இருந்து ஓடி வந்தேனோ அதே கேள்வி. ‘சிவாஜி’ பட வசனம்போல ‘’இன்னும் எத்தனவாட்டிடா இந்த கேள்விய கேப்பீங்க”ன்னு என்னை நானே நொந்துகொள்வேன். ‘’எங்க வீட்டில் எல்லோருக்கு இப்படித்தான், எங்க தாத்தா, அப்பா, அண்ணன்....’’ என சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலைக்கு அடுத்தது  எனது பரம்பரை பாரம்பரியம்தான்னு சொன்னேன்.
‘’நீ ஏன் விக்கு வைக்கக்கூடாது?’’ என்று கேட்டான். ‘’இல்லடா, விக்கு எல்லாம் சரிப்பட்டு வராது, அலர்ஜி பயம் இருக்கிறது, அதுமட்டுமல்ல எந்த இடத்திலாவது விக் கழண்டு விழுந்தால் ரொம்ப அவமானமாகப் போகும்’’ என்று கூறினேன். ‘’அப்படியெல்லாம் இல்லை, அலர்ஜி எல்லாம் வராது, கிளிப் டைப் விக் எல்லாம் இருக்கிறது, அது எங்கயும் கழறாது..’’ என கூறிக்கொண்டே ஆள் காட்டி விரலை அவனது காது பக்கத்தில் அழுத்தி விக்கை தூக்கிக் காட்டினான். ஆடிப் போனேன். யாரோ என் பிரடியில் விரகுக் கட்டையால் அடித்தது போன்று இருந்தது.
அப்பதான் தெரிந்தது அந்த ஷண்டாலன் கண்ணில் தெரிந்தது கருணை இல்லை அத்தனையும் குரூரம் என்று. அவன் ஒரு கிரிக்கெட் பைத்தியம். பாக்கிஸ்தான் உள்ளூர் மேட்ச்சைக் கூட விடாமல் பார்த்துவிட்டு, என்னிடத்தில் கமெண்டரி பண்ணிக்கொண்டிருப்பான். பக்கத்து ரூம் வேறு. இந்தியா-பாக்கிஸ்தான் மேட்ச் என்றால் பிரியாணி சமைத்து வைத்து உலக பாக்கிஸ்தானிகளை எல்லாம் அழைத்து வந்து பெரிய கும்பலாக மேட்ச் பார்ப்பான்.
பாக்கிஸ்தான் தோற்றுவிட்டால், ஒரு குயர் நோட்டு, பேனாவுடன் அவன் ரூம் பக்கத்தில் நின்று கொண்டால் போதும். உருது, ஹிந்தி மொழிகளிலுள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் எழுதிவிடலாம். ‘’தற லோக்கல்’’ கெட்ட வார்த்தை தெரிந்துகொள்ளவும் ஒரு வழி உண்டு. ‘’இவன எதுக்கு எடுத்தோம்’’னு செலக்சன் போர்டுக்கும் தெரியாம, ‘’நம்மள எதுக்கு எடுத்தானுங்க’’ன்னு அவனுக்கும் தெரியாம ‘முஹம்மது கைப்’ மாதிரி கொஞ்சப் பேர் பாக்கிஸ்தான் டீமிலும் இருப்பான். அவனப் பத்தி அந்த நேரத்தில் அன்சரிடம் லைட்டா கிளறிவிடவேண்டும். நமக்கு சுட சுட ‘’தற லோக்கல்’’ கெட்டவார்த்தை டேட்டா பேஸ் தயார்.
இப்ப இருக்குற கம்பெனியில் ஒரு பாக்கிஸ்தானி இருப்பதாக சொன்னேன்ல, அவன் பெயர் நவீத். அவன் தான் என்னுடய அரபி டிரான்ஸ்லேட்டர். சில சமயங்களில் நான் பேசும் ஆங்கிலம் எதிர்தரப்பு அரபிக்காரனுக்கு புரிந்து ‘’ஒகே. ஒகே’’ என்பான். அந்த ‘’ஒகே ஒகே’’வைக்கூட நவீத் எனக்கு மொழிபெயர்த்து ‘’ஒகே ஒகே’’ என்பான். அந்த அளவிற்கு வெகுளி. நிறைய பாக்கிஸ்தானிகள் வெகுளிகள் தான் (நான் பார்த்தவரை). கொஞ்சம் வயதானவர்களை ‘’சாச்சா” (சித்தப்பு) என்றோ ‘’ஜனாப்’’ (உயர்திரு) என்றோ கூப்பிட்டுவிட்டால் ரொம்ப குஷியாகிவிடுவார்கள். தனியா ஒரு பாக்கிஸ்தானி சாப்பிட்டு பார்த்ததில்லை. ஒரு ரொட்டி என்றாலும் நாலு பேர் சுத்தி இருந்துதான் சாப்பிடுவார்கள்.
இங்கு முக்கால்வாசி டாக்ஸி டிரைவர்கள் பாக்கிஸ்தானிகள் தான். பெரும்பாலானவர்களுக்கு இந்தியாவில் ‘’மதராஸி’’ என்றால் தெரியவில்லை. எல்லோருக்கும் ரஜினிகாந்த்தை தெரிந்திருக்கிறது, ஆனால் அவர் படம் பார்த்ததில்லையாம். ‘’ஏக் து ஜே கேலியே’‘ படம் தெரிகிறது ஆனால் அதில் நடித்தவர்தான் கமல் என்று தெரியவில்லை. ‘’அந்த படத்தில் கமல் பேசுவாறே அந்த பாஷைதான் எங்க பாஷை’’ என்பேன்.  ‘’இல்ல இல்ல’’ என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்பார்கள் (அந்த படத்தில் கமல் அதிகமாக ‘’இல்ல இல்ல’’ன்னுதான் சொல்லுவாராம்)
நவீத், நிறைய விசயங்கள் பேசுவான். எல்லா நாட்டு செய்திகளைப் பற்றியும் தெரியும். என்னோட மேனஜெர் ஒரு ஜோர்டானி. அவரிடம் பேசும் போதுகூட அந்த நாட்டு அரசியலைப் பற்றி அவருக்கு தெரியாத சில விசயங்களைச் சொல்லுவான். ஜோர்டான் பற்றி தெரிந்து வைத்திருப்பவன் பக்கத்து நம் நாட்டைப் பற்றி தெரிந்து வைத்திருக்க மாட்டானா?. சர்ஜிகல் ஸ்ட்ரைக், டிமானிடேசைசேசன், மாட்டுக்கறி.......என எல்லாத்தைப் பற்றியும் கேட்பான்.
ஒருமுறை ‘’சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியதில், எங்க நாட்டுமேல உங்களுக்கு பயங்கரமா கோவம் இருக்குமே?’’ன்னு கேட்டேன். ‘’எங்க கோவத்தை விடு, உங்க நாட்டுலேயே சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்ததுக்கான ஆதரம் கேட்டும் கொடுக்க முடியாம மோடி கோவமா இருக்காறாமே?’’ன்னு திருப்பிக் கேட்டான். ‘’இது எப்ப.......???’’ன்னு தெரியாம பேந்த பேந்த முழுத்தேன்.
‘’இந்தியாவில், மாட்டுக்கறி மேட்டரில் முஸ்லீம் அல்லாதவர்கள் கூட நிறைய போராட்டம் செய்கிறார்கள். அதுமாதிரி அவங்களோட பிரட்சனைக்கு முஸ்லீம்கள் நீங்க போராடுவீங்களா?’’ன்னு கேட்டான். ‘’பாலுங்குறது உங்க பேரு, தேவர்ங்குறது நீங்க வாங்கின பட்டமா?’’ன்னு கேட்டுவுடனே பொழேர் பொழேர்னு அறை விழுமே. அதுமாதிரி இருந்துச்சு எனக்கு, ஆனா பதில் சொல்லியாகனுமே.
‘’நாங்களும்..........போர்ராட்டம்........ பண்னுவ்வோம்ம்ம், ஆனா போலிஸ் எங்களை மட்டும் துறத்தி துறத்தி அடிக்கும்’’ன்னு இழுத்து சொன்னேன்.
 ‘’எதுக்கு?’’ன்னு கேட்டான்.
‘’ஆமா , அவர்களுக்கு பிரட்சனைன்னா குரான், ஹதீஸ்ஸை ஆராய்ந்து, உலமாக்கள் சபை, ஜமாத் எல்லாத்தையும் கலந்து ஆலோசித்து போராட்டம் பண்ண சென்றால்........., ‘’ஏண்டா போராட்டம் முடிஞ்சு ஒரு வாரம் ஆகுது இப்ப எங்கடா வந்திங்க’’ன்னு கேட்டு போலிஸ் ஓட ஓட விரட்டி அடிக்கத்தானே செய்யும்’’ன்னு சொன்னத கேட்டு ரொம்ப நேரம் சிரிச்சான்.
நவாப் ஷெரீப் ஆட்சி பற்றி கழுவி கழுவி ஊற்றுவான். அரசை விமர்சிக்கும் போது, யாரும் ‘’ஆன்டி பாக்கிஸ்தானி, இந்தியாவுக்கு போ’’ன்னு சொல்லமாட்டாங்களான்னு கேட்டேன். ‘’ஆண்டி ஆண்டிதான் அதுல என்ன பாக்கிஸ்தான் ஆண்டி, இந்தியா ஆண்டி’’ன்னு கண்ணடித்தான்.
இந்த விஷயத்துல பூராப் பயலும் நம்மள மாதிரியே..............

---------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.