ஞாயிறு, ஜூலை 31, 2016

ரஜினி.

சென்னை பெருவெள்ளத்தின் போது ‘’கன்னட நாய் ரஜினியே....’’ என தூற்றியவர்களை, கபாலி படத்தின் முதல் காட்சிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து படம் பார்க்கவைத்ததுதான் ரஜினி பவர். கண்டிப்பாக இது வேற எந்த நடிகனுக்கும் கிடைக்காத ஒரு வரம். மத்தப்படி ஒரு படத்தைப் பற்றி விமர்சனம் செய்வது என்பது அவர் அவர் விருப்பம். குத்துப்பாட்டை எதிர்பார்த்து ஏமாந்து குத்துவாங்கிய ஒருவன் கண்டிப்பாக படம் ‘நல்லா இருக்கிறது’ என்று எழுதப்போவது இல்லை. அதேவேலையில், முந்திய நாளில் லிங்காவைப் பார்த்துவிட்டு, இந்த படத்தை ‘மொக்கை’ என்றும் எழுதப்போவதில்லை. எல்லோரும் ‘’சூப்பர்’’னு சொல்லுறமாதிரி படம் பண்ணனும்னா அப்ப அஜித் நடிச்ச ‘ஆஞ்சிநேயா’வைத்தான் ரஜினியைவைத்து மறுபடியும் எடுக்கணும். 

மெட்ராஸ் படத்தை முதல் தடவை பார்க்கும் போது எனக்கு அந்த படம் சுத்தமாக பிடிக்கவில்லை. மரண மொக்கைன்னு பலபேரிடம் சொன்னேன். பிற்பாடு அந்த படத்தின் அரசியலை பொதுவெளியில் தெரிந்துகொண்டு பார்த்தபின்புதான் அது படமில்லை சிலரது வாழ்க்கைன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அணுவணுவா ரசிச்சேன். ஜானி கேரக்ட்டருக்கே மாறி மாறி பார்த்த படம். என்னைய மாதிரியேதான் இங்க பலபேர் கபாலியை புரிந்துகொண்டது. யார் யாருக்கு ரஜினியை, ஆண்டனியோட மோதற பாட்ஷாவாக பார்க்கப்பிடிக்குமோ அவர்களுக்கு கண்டிப்பாக  இந்த கபாலி பிடிக்காது. எனக்கு ‘’ஆறில் இருந்து அறுவது வரை’’ ‘’எங்கயோ கேட்ட குரல்’’ ‘’முள்ளும் மலரும்’’ ரஜினியைத்தான் பிடிக்கும். அதுனால எனக்கு கபாலியை ரொம்ப இல்லாட்டியும், பிடிச்சிருந்தது.

நேற்றுவரை ரஜினியை பிடிந்திருந்த உங்களுக்கு, ‘’மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேக்காது’’ என்று பாடிக்கிட்டு வரும் ரஜினியை பிடிக்கவில்லை என்றால், தப்பு ரஜினி மேல இல்ல, ரஜினியையும் தாண்டி உங்களுக்கு வேற ஒன்னு புடிச்சியிருக்குன்னு அர்த்தம். ரஜினியின் கெட்டப்பிற்காகவே இந்த படத்தை பார்க்கனும்னு முடிவுபண்ணியிருந்தேன். மம்முடி, அமிதாப்... என சீனியர் நடிகர்கள் எல்லாம் அவர்களோட வயதுக்கு ஒப்பான கதாபாத்திரத்தில் வெற்றிபெற முடியும் என்றால், ஏன் ரஜினியால் முடியாது? என பலநாட்கள் எனக்குள்ளே நான் கேட்டுக்கொண்டது. எப்படியோ ரஜினிக்கும் கேட்டுவிட்டது போல. கள்ள பிரிண்ட்ல பார்த்துவிட்டே, தன் மகளையும், தன் மனைவியையும் அடையாளம் காணும் இடத்தில் எனக்கு கண்ணுல இருந்து ஜலம் வந்திடுச்சின்னா, தியேட்டர்ல பார்த்திருந்தா கதறி அழுதிருப்பான் இந்த கைப்புள்ள.

ரஜினி என்ற ஒரு மகா நடிகனை, ‘’உங்க மாஸ் என்ன? உங்க வேலீவ் என்ன? உங்க லெவல் என்ன?’’ என்ற இன்ன பிற என்ன? என்ன?க்கு இரையாக்கிவிட்டோமேன்னு நினைக்கும் போது, வருத்தம்தான். இந்த படத்தில இருக்குற குறைகளை / லாஜிக் மிஸ்டேக்கை சுட்டிக்காட்டி படம் சரியில்லை என்று சொல்லுபவர்களுக்கும், வசனத்தையும், பாடலையும் சுட்டிக்காட்டி படம் சரியில்லை என்று சொல்லுபவர்களுக்கும் வித்தியாசம் என்ன என்று சொல்லித்தர தேவையில்லை.

ஒருவன் ‘’மணி சார் அளவிற்க்கு பா.ரஞ்சித்திற்கு ரஜினியை பயன்படுத்த தெரியவில்லை’’ என்று கமெண்ட் எழுதுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனுடய கருத்து நூறு சதமானம் உண்மைதான், தளபதி ரஜினிக்கு பக்கத்தில் நிற்க்கக்கூட கபாலி ரஜினிக்கு தகுதியில்லை. ஆனால், அந்த கருத்தில் ஒரு அரசியல் இருப்பதை உங்களால் உணரமுடிகிறதா?. இல்லை என்றால். தெரிந்துகொள்ளுங்கள். மணிக்கு பின்னால் வரும் ‘சார்’ பா.ரஞ்சித்திற்கு பின்னால் வராததுதான் அந்த அரசியல்.

ரஞ்சித்தினுடய நேர்காணலை நீங்கள் பார்த்தீர்களேயானால், கபாலி கண்டிப்பாக ரஜினியின் படம் இல்லை என்பதை உங்களால் உணரமுடியும். ஆனால் ரஞ்சித்தையும் மீறி ரஜினியின் பெயர் வெளியே தெரிவதற்கு காரணம், தன்னுடய பாணி படம் இல்லை என்று தெரிந்தும் அதில் தன்னை இணைத்துக்கொண்டதற்கான ரஜினியின் வெற்றி அது. ஒரு நேர்காணலில் ரஞ்சித்திடம் கேள்வியாளர் ‘’இந்த படத்தில் சில அரசியலை பேசியிருக்குறீர்கள், அது மக்களிடம் ரீச் ஆனதாக நினைக்கின்றீர்களா?’’ என்று கேட்டதற்கு, ‘’கண்டிப்பா, அதனாலதான் கொஞ்சப்பேரு என்ன ரொம்ப திட்டிக்கிட்டு இருக்கானுங்க”” என ரொம்ப இயல்பா பதில் சொன்னார். பாலுமகேந்திரா, பாலச்சந்தருக்கு அடுத்ததாக ஒரு இயக்குனரிடம் இருந்து இவ்வளவு முதிர்ச்சியான இண்டர்விய்யூவை நான் பார்த்த்தே இல்லை.

கபாலி படத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கலாம், அல்லது ஓட்டையில் கபாலிப்படம் இருக்கலாம். அதையும் மீறி இதை பலபேர் கொண்டாடக் காரணம் ரஜினி என்ற ஒரு மிகப் பெரிய சக்திதான். படம் திரைக்கு வருவதற்கு முன்பாக மார்க்கெட்டிங்க் என்ற பெயரில் தாணு செய்த அழுச்சாட்டியங்கள் ரெம்ப அதிகம் என்ற போதிலும், ரஜினிக்காக அனைத்தும் மன்னிக்கப்பட்டது.

படத்தின் குறையாக சில பேர், குமுதவள்ளியை தேடிப் போகும் காட்சியை சொல்கிறார்கள். கண்டிப்பா அவனுங்க எல்லாம் பொண்டாட்டி மடியில தலை வச்சிக்கிட்டு, லேப்டாப்பில் டைப்பண்னுனவனுங்களா இருப்பானுங்க. குடும்பத்த பிரிஞ்சு பல வருசம் வெளியில இருந்துட்டு வீட்டுக்கு வருபவனுக்குத்தான் தெரியும் தனிமையோட வலி என்னன்னு. தன்னோட பொண்ணுகிட்ட ‘’நான்தான் உங்கப்பான்னு தெரியும்ல, பின்ன ஏம்ம என்ன வந்து பார்க்கல?’’ என்று சொல்லும் போதும், பொண்டாட்டிய பார்க்கப் போகுற ராத்திரியில் ‘’என்ன செய்றாளோ, எப்படி இருக்காளோ?’’ என ஏங்கும் காட்சியிலயும் சரி 25 வருசம் ஜெயில்ல இருந்த தனிமையின் வலியை அப்படி பிரதிபலிக்கும். இன்னும் எவனாவது குமுதாவைத் தேடிப்போனதுனாலத்தான் கபாலி எனக்கு பிடிக்கலன்னு சொன்னா, என்னோட பக்கத்து ரூமுக்கு ஆள் தேவைப்படுது, பயபுள்ளய புடுச்சி சவுதிக்கு அனுப்புவையுங்க.

மாய நதி பாடலில் வரும், நீ செத்துட்டேன்னு நெனச்சேன் வசனமும், அதில் வரும் முதிர்ச்சியான் காதல் விளையாட்டுகளும் சரி ‘’வந்திட்டாரு சொல்லு, திரும்ப ரஜினி வந்திட்டாருன்னு சொல்லு, முள்ளும் மலரும்ல எப்படி போனாரோ அப்படியே திரும்ப வந்திட்டாருன்னு சொல்லு’’ன்னு சொல்லத்தோணுது.

-----------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

திங்கள், ஜூலை 25, 2016

வந்துட்டேண்ணு சொல்லு.

என்னோட கல்யாணத்திற்கு நான் ஊருக்கு போயிருந்த சமயம், சொந்தக்காரங்க யார்? யாருக்கு நான் நேரப் போய் அழைக்கவேண்டும் என்ற லிஸ்டை எங்க அப்பா எங்கிட்ட கொடுத்தாங்க. ‘’நான் இன்னாருடய பையன், எனக்கு கல்யாணம், எல்லோரும் வந்து சிறப்பிக்கனும்’’ என்று சொல்லிய முக்கால்வாசி வீட்டில் ‘’என்னது? அவரோட பையனா? நான் இதுவரைக்கும் உன்ன பார்த்ததே இல்லையப்பா?’’ என்ற ரியாக்சன்தான் வந்தது. அமைதின்னா அம்புட்டு அமைதி, இத எதுக்கு சொல்லுறேன்னா....

இந்தமுறை ஊருக்கு சென்ற முதல் நாளில் இருந்து, டாக்ஸி பிடித்து திரும்ப போகும்வரை ‘’உன் பையன் எம்புள்ளய குத்திட்டான், கைய கடிச்சிட்டான், முடிய பிடிச்சு இழுத்துட்டான், கண்ண நோண்டிட்டான், நகத்த வச்சி கீரிட்டான்.....’’ என்று என் பையனைப் பற்றி சொந்தம், அக்கம் பக்க வீட்டு புகாருக்கு காது கொடுக்கவே நேரம் சரியாக இருந்தது. தட் ‘’அந்த தெய்வத்தின் மகனா இவன்.....? நெவர்’’ பீலிங்க்.

முன்னாடியெல்லாம், வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவன் ஊருக்கு வந்தால், அவனைப் பார்க்கவரும் முதல் ஆட்கள், சொந்த பந்தங்களாகத்தான் இருப்பார்கள். ஆனா இப்போ, புரோக்கர்கள்தான் முன்னாடி வந்து நிற்கிறார்கள். ‘’அந்த ஏரியாவுல ஒரு பிளாட் வருது’’ என சொன்னவருடன் சென்று பார்த்தால், நாங்கள் கிரிகெட் விளையாடிய குளம்!, என்னங்க குளத்த காட்டுறீங்க? என்று கேட்டாள், அதுதான் சொன்னல்ல தம்பி இது ‘’ஏரி’’யான்னு என்று தலையை சொரிந்தவாரே பதில் வருது. சரி, கடையநல்லூரிலேயே ஹாட்டான இடத்தில் ஒரு பிளாட் இருக்குன்னு சொன்னீங்களே அத காட்டுங்கன்னு கேட்டா, சுடுகாட்டை காட்டுறானுங்க. இதை எல்லாம் பார்க்கும்போது

‘’எனது புறநகர் குடியிருப்பு
வயல்களின் சமாதி என்று
நினைவுபடுத்தியவை
தவளைகளே!’’
கவிஞர் சுகுமாரின் கவிதைதான் ஞாபகம் வருது.

ஒருநாள் மதுரைக்கு போயிருந்தேன். பஸ்ஸில் ஸ்மார்ட் போன் இல்லாதவன் முகம் எல்லாம் அவ்வளவு பிரகாசமா இருந்தது. ஸ்மார்ட் போன் வச்சிருக்குறவன் எல்லாம் கொஞ்சம் உர்ர்ர்ர்ன்னே இருந்தானுங்க. சுவாதி மேட்டரோ, ஒய்.ஜி மகேந்திரனோ, குண்டுவெடிப்போ பெரும்பாலனவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தெரிந்தவர்கள் எவரும் பொதுவெளியில் விவாதிப்பதாக தெரியவில்லை. புதிய விடியலுக்காக திருநீரோடு அந்த அதிகாலையிலும் தான் உண்டு, தன் வேலயுண்டு என்று உலகம் பரபரப்பாகவே இருந்தது. பேஸ்புக் காட்டும் உலகத்திற்கும், நிஜமான உலகத்திற்கும்தான் எவ்வளவு வேறுபாடு?.

ஒருவன் அனுமார் வேடம் போட்டு பிச்சை எடுப்பதை பார்த்தேன், எவனும் காசு போட்டதுபோல் தெரியவில்லை. ஆனால், பேஸ்புக்கில் ஏதாவது அனுமார் கிராபிக்ஸ் போட்டு ‘’இதை பத்து செகண்டுக்குள் மற்றவர்களுக்கு ஷேர் செய்தால் உங்களுக்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் நல்ல செய்தி வரும்’’ என்ற போஸ்டை மாஸ்டர் டிகிரி படித்த பல பேர் ஷேர் செய்வதை பார்த்திருக்கிறேன். இந்த கேட்டகிரியில் என்னோட பிரண்ட் ஒருவர் இருக்கிறார், அவர் பண்ணிய ஷேருக்கு இந்நேரம் ‘’நல்ல செய்தி’’ நாலாயிரம் ஏக்கர்ல இருக்கணும் ஆனா பாருங்க எப்ப பேசினாலும் அவரோட கஷ்டத்தை கண்டெய்னர், கண்டெய்னரா வந்து இரக்குவார். இப்படித்தான் இன்னொருவன், ‘’இதுதான் பழைய மெக்கா’’ என்று ஒரு சதுர கட்டிடம், அதை சுற்றி ஒரு 30 ஆட்கள், ஒரு கிணறு இருக்கும் படத்தை போட்டிருந்தான். அனுமாரை பத்தி சொன்னால்தான் பஞ்சாயத்தாகும், இது நம்ம பங்காளிங்கதானன்னு நெனச்சு ‘’அப்ப கிணத்து பக்கத்துல நிக்குறதுதான் முஹம்மது நபியா?’’ன்னு கேட்டுட்டேன். ஒன்னு ஆமான்னு சொல்லனும் இல்ல, இல்லைன்னு சொல்லனும் அதவிட்டுவிட்டு என்னை காபிர் என்று சொன்னான். இங்க நாம உண்மையச் சொன்னாலோ அல்லது அவர்களுக்கு பதில் தெரியவில்லை என்றாலோ தேஷ்ஷ துரோகியாகவோ, காபிராகவோ மாறவேண்டியிருக்குது. இருந்தாலும் ‘லத்திக்கா’ பவர்ஸ்டார் படம், ‘லிங்கா’தாண்டா சூப்பர்ஸ்டார் படம்னு சொல்லுவது நமது கடமையில்லையா?.

சுவாதி கொலையக் கண்டித்து ‘’ஓ திறமையற்ற அரசாங்கமே...” என்று நீட்டி நிமித்தி ஒரு கட்டுரை எழுதி பிளாக்கில் போடுவதற்கு சற்று முன்பாக பிலால் மாலிக் என்ரியாகிவிட்டார். அந்த சூழ்நிலையில் அதை போஸ்ட் செய்தால், ‘’இவன் யார்?’’ என்று என் பேண்ட் ஜிப்பை அவிழ்த்துப்பார்க்கும் அவலம் நடந்திருக்கும். ஒரு வேலை பிலால் மாலிக் என்ரி இல்லாமல் இருந்து, என் போஸ்ட்டை பலபேர் படித்திருந்தால் அ.தி.மு.க அரசாங்கமே ஆட்டம் கண்டிருக்கும். இன்நேரம் பன்னீர் பதவி ஏற்று இருந்திருப்பார். என்ன சொல்ல, எல்லாம் பன்னீரின் போறாத காலம்.

இடைப்பட்ட காலங்களில் கொஞ்ச கட்டுரைகள் எழுதினேன். ஆனால், என்னுடய மெடிக்கல் இன்சூரன்ஸ், கை, கால் முறிவுக்கு கவராகாது என்று தெரிந்துகொண்டதால் அவற்றை போஸ்ட் செய்ய இயலவில்லை.

கொஞ்ச காலமாக வாழ்க்கை என்னை மூத்திர சந்துக்குள் வைத்து கும்மிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கையை எதிர்த்து நெஞ்ஞை நிமிர்த்தி நின்றால் அது குஞ்ஞிதபாதத்தில் எத்தி மிதித்து மீன்பாடி வண்டியில் ஏற்றி இப்போது சவுதி ஜித்தாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. பார்க்கலாம் என்று முடிவுசெய்துவிட்டேன். அதாவது வாழ்க்கை ஜெயிப்பதை ரத்தக்களரியோடு வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.

------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.