புதன், நவம்பர் 07, 2012

அப்பன் சொன்ன கதை.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

ஒவ்வொருத்தனுக்கும் போறாத காலமுன்னு ஒன்னு வரும், சில பேருக்கு மட்டும் அந்தகாலம் போய்கிட்டும், வந்துகிட்டும் இருக்கும். அது தலைவிதியின் அடிப்படையிலானது. வரனும்னு இருந்தா வந்துதான் ஆகும், படனும்னு இருந்தா பட்டுத்தான் ஆகனும். இதுமாதிரியான போறாத காலத்துல, தன்னுடைய தலையில எழுதியிருக்கும் விதியைப் பற்றி எங்க அப்பா சொன்ன கதை இது.

முன்னொரு காலத்துல ஒரு மந்திரவாதி இருந்தான். அவனுக்கு மனிதர்களுடைய தலையெழுத்த பற்றி தெரிஞ்சிக்கனும்னு ரொம்ப நாளா ஆராய்சி பண்ணிக்கொண்டிருந்தான். இதற்காக அடிக்கடி சுடுகாட்டிற்கு சென்று அங்க இருக்கும் மண்டை ஓட்டின் சில பகுதிகளை எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டேயிருப்பான்.

நிறைய நாட்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு, தலையில எழுதியிருப்பதை படிக்ககூடிய அளவிற்கு அவனுக்கு வெற்றிகிடைத்தது. அதை வைத்துக் கொண்டு, எல்லா மண்டை ஒட்டையின் தலை எழுத்தினை படிக்க ஆரம்பித்தான். ஒவ்வொருத்தனுடய கஷ்டங்களும், சோதனைகளும் அவர், அவர் தலையில் எழுதியிருந்தது. எல்லா மண்டை ஓட்டின் இறுதியிலும் “கஷ்டங்கள் முடிந்தது” என்று எழுதியிருந்தது. ஆனால் ஒரே ஒரு மண்டை ஓட்டுல மட்டும் “கஷ்டம் இன்னும் இருக்கிறது” என்று எழுதியிருந்துச்சு.

மந்திரவாதிக்கு ஒரே குழப்பம், “என்னடா இது, நாம ஆராய்ச்சி செய்த மண்டை ஓட்டுகளிலேயே, இந்த மண்டை ஓட்டுடைய மனிதனுக்குத்தான் அதிக, அதிகமான கஷ்டம் இருந்திருக்கிறது, ஆனாலும் செத்தபின்னாடியும், கஷ்டம் தொடரும்னு எழுதியிருக்கே? அது எப்படி சாத்தியம்?. செத்த பின்னாடியும் இவன் என்ன கஷ்டத்தை அனுபவிக்கப் போகிறான்?” என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டு, விடை கிடைக்காமல் போக, சரி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு சென்று அங்க வச்சி ஆராய்ச்சி பண்ணலாம் என்று வீட்டிற்கு எடுத்துச் சென்றான்.


வீட்டுல் இதற்காக ஒரு தனி அறையை உருவாக்கி, அதில் அந்த மண்டை ஓட்டைப் பற்றி ஆராய்ச்சி செய்யத்தொடங்கினான். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல், ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறை சென்று ஏதாவது மாற்றம் நிகழ்கிறதா? என்று பார்த்துக் கொண்டே இருந்தான்.

இவனுடய நடவடிக்கைகளை பார்த்துவிட்டு, மந்திரவாதியின் மனைவி இவன் மேல் சந்தேகப்பட்டு, இவன் இல்லாத ஒரு நாளில், பக்கத்து வீட்டுக்காரியை அழைத்துக் கொண்டு அந்த அறைக்குள் போய் பார்க்கும் போது, இந்த ஒரு மண்டை ஓடு மட்டும் இருந்தது.

“என்னக்கா இது, இந்த மண்டை ஒட்டையையா இப்படி ரகசியமா பாதுகாத்துகிட்டு இருக்காரு? அப்படி யாருடையதா இருக்கும்?” என்று பக்கத்துவீட்டுக்காரியிடம் மந்திரவாதியின் மனைவி கேட்க.

“அடி போக்கத்தவளே, இது கூடவா தெரியல, இது உன் புருசனோட கள்ளக்காதலி மண்டஓடுடி, அதுனாலதாண்டி உன் புருசன் உனக்கு தெரியாம, அவ ஞாபகம் வரும் போதெல்லாம் பார்த்துட்டு, பார்த்துட்டு போறான், இது இருக்குற வரைக்கும் உன் வாழ்க்கை நல்லா இருக்காதுடி, பார்த்துக்கோ” என்று ஏத்திவிட.

மந்திரவாதியின் மனைவி, மண்டை ஓட்டை எடுத்து, உரலில் போட்டு, உலக்கையால் குத்து, குத்து என குத்துவதை அங்கு வந்த மந்திரவாதி காண, பதறிப்போய் மனைவியை தள்ளிவிட்டு, நொருங்கி கிடந்த மண்டை ஓட்டை ஒட்டவைத்து பார்த்தபோது, அதில் எழுதியிருந்தது “கஷ்டங்கள் முடிந்தது” என்று. அதுமாதிரித்தான் என் விதியும்.. நான் இன்னும் கஷ்டங்களை அனுபவிக்கனும்னு இருக்கு. அனுபவிச்சுத்தான் ஆகனும் என்று சொல்ல, கதையை கேட்டவன், என்னவோ அவன் தலையில் உலக்கையால் குத்துவாங்கியது போல ஃபீல் பண்ணிக்கொண்டு வெளியேறிவிட்டான்.

எங்கப்பா எப்போதும் தொழுதபின்பு பிராத்தனை செய்யும் போது, “இறைவா, எனக்கு சோதனைகளையும், கஷ்டங்களையும் கொடுத்துவிடாதே” என்று கேட்பதற்கு பதிலாக “இறைவா, சோதனைகளையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டு, அதிலிருந்து மீளுகின்ற மன உறுதியை தருவாயாக” என்று பிராத்தனை செய்துகொள் என்றே கூறுவார்.

ம்ம்ம்ம்ம்.......எவ்வளவோ பார்துட்டோம், இத பார்திடமாட்டமா என்ன????????

“இறைவா, சோதனைகளையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டு, அதிலிருந்து மீளுகின்ற மன உறுதியை தருவாயாக"

-------------------------------------------------------------------------------------யாஸிர்.

வியாழன், நவம்பர் 01, 2012

சொந்த ஊரில் பிறந்த நாள்.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
"என்ன யாஸிர், துபாயில் இருந்து எப்ப வந்த?"

"ஒரு வாரம் ஆச்சு?"

"எத்தன நாள் லீவு?"

"இல்ல்ல்ல்ல்ல….முடிச்சிட்டு வந்திட்டேன்?"

“என்ன்ன்ன்ன முடிச்ச்ச்ச்சிட்ட்ட்டுடுடு வந்திட்டியா……………?” இந்த ரியாக்சன் என் அப்பாவோட ரியாக்சன் இல்ல, எங்க அப்பாவோட பிரண்டோட ரியாக்சன்.

பொதுவா அவர் வீட்டு முன்னாடி உள்ள ஒரு திண்டில் தான் நண்பர்கள் ஒன்று கூடுவோம். இந்த ரியாக்சன் கொடுத்தபின்னாடி அவரின் அறிவுரைகளைக் கேட்ட பின்பு, அவர் எப்பவெல்லாம் வீட்டில் இருக்கமாட்டார் என்பதை தெரிந்து கொண்டு மறைமுகமாக ஒன்று கூடிக்கொண்டிருக்கின்றோம். இந்திராக்காந்தி எமர்ஜென்ஸி காலத்தில் தி.மு.க காரன் வாழ்க்கை மாதிரி ஆகிடுச்சு, எங்க வாழ்க்கை.

ஒரு உண்மையைச் சொல்லக்கூட வழியில்லாமல் போயிடுச்சு. இவர்கிட்ட என்ன வந்திரப்போகுதுன்னு எண்ணி “கத்தாரில் எனக்கு வேலை கிடச்சிடுச்சு, என்னுடைய சர்டிஃபிக்கெட்டை அந்த நாட்டு எம்பசியில் அட்டஸ்டட் பண்ண கொடுத்திருக்கிறேன், வந்தவுடனே கிளம்பிவிடுவேன்னு” சொன்னேன். இதைக் கேட்டுவிட்ட பின்பு அவருடைய முகத்தை பார்த்த போதே தெரிந்துவிட்டது அவர் என்னை நம்பவில்லை என்று. என்னடா இது நாம உண்மையைச் சொன்னாலும் நம்பாம இருக்காறேன்னு வருத்தத்துல வந்து நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கத்து உறுப்பினர்களிடம் சொல்ல “எப்படி நம்புவாரு, எப்படி நம்புவாருங்குறேன், நீ சொன்னதத்தான் அவர்கிட்ட 5 வருசமா மண்ட மகன் சொல்லிக்கிட்டு இருக்கான், பின்ன உன்னை எப்படி நம்புவாரு?”

“ஓ, இந்த படம் 5 வருசத்துக்கு முன்னாடியே ரிலீஸ் ஆகிடுச்சா?” என நானே நொந்துகொண்டேன்.

வளைகுடா நாட்டில் இருக்கும் போது, ஒரு வருசம் ஓடுறதே தெரியாது. ஆனா இங்க ஒரு மாசத்துக்கு மேல இருக்கமுடியல, கரண்ட் கட்டை சமாளிக்க இன்வெர்ட்டர் மாட்டினா, ச்சார்ச் ஆகுறதுக்கு கூட கரண்ட் இல்ல. மழையில்லாம குற்றாலத்துல தண்ணியில்ல, மழை பெய்த பின்பு, குற்றாலத்துல ஏற்பட்ட வெள்ளத்துனால குளிக்குறதுக்கு அனுமதியில்ல. இப்படி வாழ்க்கை இல்ல, இல்லன்னே போய்கிட்டு இருக்கு.

இவ்வளவு துன்பத்துக்கு இடையிலும், பிறந்த நாள் அன்றைகாவது சந்தோசமாக இருக்க பக்காவா பிளான் பண்ணிவச்சிருந்தேன். “கல்யாண நாளை மறந்தாலும் மறப்பனே ஒழிய, உங்க பிறந்த நாளை மட்டும் நான் மறக்கவே மாட்டேன்.” என்று என் மனைவி போன பிறந்த நாளில் (கல்யாணத்துக்கு முன்னாடி) சொன்ன போது “இறைவா யு ஆர் கிரேட், எனக்கு இப்படி ஒரு மனைவியை கொடுத்ததுக்கு நன்றி, நன்றி, நன்றி” ன்னு பிளக்ஸ்ல அடிச்சு ஒட்டாத குறைதான். ஆனா இன்றைக்கு, பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவா, சொல்லுவான்னு காலையில இருந்து பின்னாடியே சுத்துரேன், ம்ம்ம்ம் ஒன்னும் நடக்கல. எப்போதும் எக்ஸ்ட்ராவா (extra) திட்டுறவ, இன்னைக்குன்னு பார்த்து எக்ஸ்ட்ராடுனரியா (extraordinary) திட்டுறா. வீட்டுல இருக்குறவங்க நான் பிறந்ததையே மறந்துட்டாங்க, பிறந்த தேதியையா ஞாபகம் வச்சியிருக்க போறாங்க, ஆகையால் அதை நான் எதிர்பார்க்கவேயில்லை.
யாரு சொன்னாலும், சொல்லலைன்னாலும் என் நண்பர்கள் சொல்ல மறக்கமாட்டானுங்க என்ற நம்பிக்கையில், பேஸ்புக்கை பார்க்க, கரண்ட் எப்படா வரும் என்று எதிர்நோக்கி காத்திருந்து, பேஸ்புக்கை ஓப்பன் பண்ணினா, “இறைவா, யு, ஆர் டபுள் கிரேட், பொண்டாட்டி விசயத்துல கொஞ்சம் என்னை சுரண்டிப் பார்த்துட்டாலும், நண்பர்கள் விசயத்துல கைவிடல”. இதுவரைக்கும் “ஹாய்”ன்னு சொல்லாத நண்பர்கள் கூட “பாய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று போட்டு என்னை தேம்பி, தேம்பி அழவைத்துவிட்டார்கள்.

“பக்ரீத் அன்று நான் மட்டன் சாப்பிட்டேன்” னு பேஸ்புக்கில் போஸ்ட் பண்ணினா, அத பாடகி சின்மயி பார்த்துட்டு போலிஸுல போய் புகார் கொடுத்திடுமோன்னு பயந்து, பேஸ்புக் அக்கவுண்டையே தூக்கிறலாமுன்னு தோன்றிய எனக்கு, பிறந்த நாள் வாழ்த்துக்களை கண்டவுடன், இந்த மாதிரியான நண்பர்களின் வாழ்த்துக்களை பெற, குண்டா சட்டத்துல கூட கைது ஆகலாமுன்னு முடிவுபண்ணிட்டேன். காலேஜில படிக்கும் போதுதான் நான் பிறந்த நாளை கொண்டாட ஆரம்பித்தேன். அதுவும் எனக்காக அல்ல, நண்பர்களுக்காக. ஆம், நண்பர்களின் பிறந்த நாள் டிரீட்டில் முதல் பந்தியில் உட்கார்ந்து, கடைசி பந்தியில் எழும் நான், “நான் எல்லாம் பிறந்த நாள் கொண்டாடமாட்டேன், எனக்கு அதுவெல்லாம் பிடிக்காதுன்னு” சொன்னா அவ்வளவுதான், எல்லா பிராண்ட் செருப்பு நகல்கள் என் மூஞ்சியில் இருக்கும். அதுக்கு பயந்தே பிறந்த நாளை கொண்டாடினேன்.

இந்த பிறந்த நாள்த்தான் என் நண்பர்கள் சுற்றியில்லாமல் இருக்கும் பிறந்த நாள். நண்பர்கள் சுற்றியிருந்துட்டா ஒவ்வொரு நாளும், நமக்கு பிறந்த நாள் தான்.

------------------------------------------------------------------------யாஸிர்.