திங்கள், செப்டம்பர் 12, 2011

கண்ணாம் பூச்சி ரே, ரே.....

கோலி குண்டு, டிப்பி, சீட்டுக் கட்டு, தெலுக்கா, கம்பு தூக்கி, 7 ஸ்டோன்.... இந்த மாதிரியான  விதவிதமான் விளையாட்டுகள் எல்லாம் இந்த காலத்துப் பசங்களுக்கு ரொம்ப தூரமாகப் போய்க்கொண்டிருக்கின்றது. இந்தமாதிரியான விளையாட்டுகளில் நானும், எனது சக நண்பர்களும், சோறு, தண்ணிரெல்லாம் மறந்து ஒன்னோடு ஒன்னா பின்னிக் கிடந்தோம்.

மேல சொன்ன விளையாட்டுகளில் இப்போது நான் என் அக்கா பிள்ளைகள் மூலமாக சாகாமல் கண்டது, கோலி குண்டு மட்டும் தான். மற்ற விளையாட்டைப் பற்றி கேட்டால், பத்திரிக்கைகாரன் கேள்விக்கு மன்மோகன் சிங் பதில் தெரியாம முழிப்பாரே அது மாதிரி முழிக்குதுங்க. என்ன மாதிரித்தான் உங்களில் பல பேரும், உங்கள் ஊர்களில் கண்டிருக்கலாம், இவையாவும் எல்லா ஊர்களிலும் விளையாடக் கூடிய ஒரு விளையாட்டு, பேர்கள் தான் திரிந்திருக்குமேயொழிய, விளையாட்டு என்னமோ ஒன்றாகத்தான் இருக்கும்.

டிப்பின்னு நான் மேல சொன்னது கூல்டிரிங்ஸ் பாட்டில் மூடி, 7அப்னா, கோக்க கோலா தான் அதிக மதிப்புள்ளது, அதற்கு குறைந்தது காளி மார்க், ஐஸ்வர்யா.... போன்ற கூல்டிரிங்ஸ் வகைகள். இந்த மாதிரியான டிப்பிகளை கலெக்ட் பண்ண, தெருத்தெருவா, கடைகடையாக அலைந்ததுண்டு. 7அப் எல்லாம் அப்ப வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்தால் தான் கிடைக்கும், அதற்காகவே ஏதாவது சொந்தக்காரனுங்க வாரானுங்களானு வாசலயே பார்த்துக் கொண்டு இருப்போம். வந்துட்டா போதும், எங்கப்பா சொல்லுறாறோ இல்லயோ, கடைக்கு சிட்டா பறந்து போய் 2 பேருக்கு 1 வீதம் 3 வாங்கிட்டுவர்றது. இப்படி வங்கிவிட்டு வருகிற நேரத்துல, சொந்தக்காரங்க போய்ட்டா......., அப்பா திரும்ப கொடுக்கச் சொல்லிருவாரேன்னு எண்ணி கடக்காரன்கிட்டயே உடச்சி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வருவோம் (அப்பவே கிரிமினலா வேல பாத்திருக்கோம்ல).

இப்படியா ரொம்ம கஷ்டப்பட்டு சேர்த்து வச்சது எல்லாம், முதல் நாள் அட்டத்துலயே புஸ்ஸாகிடும் (அது தான் தோற்றுவிடும்). மறுபடியும் என்ன.............,    எந்த சொந்தக்கார பயபுள்ளய்ங்க வாரனுங்கனு தேமேன்னு வாசலேயே பார்கவேண்டியது தான்.

இத மாதிரித்தான் சீட்டும். சீட்டுன்னு சொன்ன உடனேயே நீங்க ரம்மி, மங்காத்தான்னு எல்லாம் தப்பா நினச்சிடக்கூடாது. சிகரெட் அட்டக்கித்தான் இந்த பேரு. டிப்பில இருந்தது மாதிரி இதுலயும் பல கிரேடு இருக்கு, சிசருக்கு ஒரு ரேஞ்சு, பனாமாக்கு ஒரு ரேஞ்சுனு பல வகை இருக்கு, அதுல வில்ஸ்க்குத்தான் அப்ப அதிக மவுசு. இந்த அட்டைக்காக புகைப்பவர்களிடம் அதிக நட்பு ஏற்படுத்திக் கொண்டதுன்டு, புகைபழக்கம் இல்லாதவரிடம் "உங்க அழகுக்கு நீங்க சிகரெட்டு குடிச்சிங்கன்னா எப்படி இருக்கும் தெரியுமா?" ரஜினிகாந்து மாதிரி இருக்குமுன்னு ஏத்திவிட்டு, சீட்டு அட்டையை ஆட்டயப்போட்டதுன்டு.

அப்ப எல்லாம் சிகரெட் பிடிச்சாலே பொண்ணு கிடைக்காது (இப்ப தண்ணியடிச்சலே கிடைக்குது), அவ்வளவு பெரிய தெய்வ குத்தம். அப்படியே அவங்க வீட்டுக்கு தெரிஞ்சி, அவங்க அப்பாக்கள் கேட்டா "ச்சீ, ச்சீ அண்ணன மாதிரி வருமா.....".ன்னு எங்க சுயநலத்துக்காக பொய் சொன்னதுண்டு (நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவும் தப்பில்ல). இது என்ன, எங்க வீட்டுலயே, என் அண்ணன் சிகரெட் அடிப்பதைக் கூட, என் வீட்டில் சொன்னதில்லை. நான் சொல்லிவிட கூட்டாதுன்னுதான், ஒரு வேளை வெரும் அட்டைகளை விட்டுவிட்டு பொயிருப்பானோன்னு இப்பா தோனுது.

தெலுக்கா, இத தான் எப்படி சொல்லனும்னு தெரியல, இது ஒரு வகையான கொட்டை, எதிலிருந்து கிடைக்கும்னு எல்லாம் தெரியாது, ஆனா காசு கொடுத்தா கடையில கிடைக்குங்கிறது மட்டும் தெரியும். இந்த தெலுக்கா காலம் வரும் போது மட்டும் எங்கப்பாவிற்கும், என் அம்மாவிற்கும் சண்டை அடிக்கடி வரும், எதுக்கா....

என்னய கேக்காம, கழட்டிப் போட்ட சட்டயில இருந்து ஏன் காச எடுத்த?,
அய்யோ.............................. நான் எடுக்கலயே!!!!!!!!!!!!!...
பிறகு யாரு உங்கப்பனா வந்து எடுத்தான்.
இங்க பாருங்க என் குடும்பத்த இழுக்காதிங்க.......

இப்படியான சண்டயிக்கு நடுவே, நம்ம எடுத்த காசு, கடைக்கு போயி, நம்ம கையில தெலுக்காவாகி, அடுத்த ஒரு மணி நேரத்துல அடுத்தவ கையிக்கு கைமாறி போயிரும். துக்கம் தாங்காம, சோகமா வீட்டுக்கு வந்தா, அப்பவும் சண்ட ஓய்ந்திருக்காது, அட சண்ட போடதிங்க ஏட்டய்யா...ன்னு எங்கப்பாவை சமாதானப் படுத்தி, அடுத்து எங்கடா சட்டய மாட்டப் போறாருன்னு நோட்டம் விட்டுகிட்டே இருக்கனும். இந்த தெலுக்காவிற்காக மட்டும் களவை, (அதிகமாக) கற்று, கற்று, மறந்திருக்கின்றேன்.

பம்பரம், குச்சி தூக்கி, செல்லாங்குச்சி (கில்லி) ... இந்த மாதிரியான பலவகை விளையாட்டுகள், இன்று காணாமல் போய் கொண்டிருப்பது ரொம்ப வருத்தமளிக்கின்றது. என் பேரன் காலங்கள் எல்லாம் வரும் போது, என்னிடம் "ஹவ் வாஸ் பம்பரம்?" .னு கேட்டா, சின்ன கவுண்டர் படத்துல, விஜயகாந்த், சுகன்யாவை படுக்கபோட்டு விடுவாரே (....ச்சி அசிங்கமா எதயாவது கற்பனை பன்னாதிங்க, நான் பம்பரத்தை தான் சொன்னேன்) அதைத்தான் எடுத்துப் போட்டு காட்ட வேண்டும்.

கண்ணாம் பூச்சி ரே, ரே.....கண்டு பிடி யாரு.. சின்ன வயசுல இது எங்களோட இன்னொரு தாலாட்டாக இருந்தது. என்னோட சின்ன வயசுல எங்க தெருவில் மட்டுமே 4 கிரிகெட் டீம் இருந்தது, ஆனா இப்போ எங்க ஏரியாவிலே , டீமுன்னா, தேடித்தான் பார்கனும் போல. இப்பவுள்ள பயலுங்க எல்லாம், கிரிகெட், புட் பாலை எல்லாம் கம்பியூட்டரில் விளையாட ஆரம்பித்துவிடுகின்றான்.

அதுபோக, விடியோ கேம் வேற, வீட்டுக்குள்ள போனாலே ஏதோ ஆப்கானிஸ்தானுக்கு போன ப்பீலிங், டமால், டுமீல்னு, துப்பாக்கி, குண்டு சப்தம் தான். அந்தா அங்க வந்திட்டான், அவன் தலையில குண்டப் போடு, இங்க கன்னி வெடிய செட் பன்னுன்னு அவன சுத்தி சக நண்பர்களின் கமென்ட் வேற, உலகம் எங்கோ போய் கொண்டிருப்பது மட்டும் தெரிகின்றது.

எங்க ஊருக்கார பயலுக ஜாலியா இருக்குறத பார்த்துவிட்டு, அப்பாவ எப்படியாவது சமாளித்து, 9ம் வகுப்புக்கு, நம்ம ஊருக்கு வந்து படிக்கனும்னு ஆசை. 8ம் வகுப்பு முடிந்தவுடன், அடுத்து அதே ஊரில் இங்க தான் சேர்க்கப்போகிரேனு எங்கப்பா கைகாட்டியதும், உங்க பேச்ச நான் எப்படிப்பா தட்டுவேன்னு, பா.மா.க ஸ்டைல்ல, அந்தல் பல்டி அடிச்சதுக்கு ஓரே காரணம் அந்த பள்ளியுடைய விளையாட்டு மைதானம் மட்டுமே. பள்ளிக்கு உள்ளே காலை எடுத்துவைத்தவுடன் வருவது, பேட்மிட்டன் கோர்ட். அடுத்தது பேஸ்கட் பால் கோர்ட்....இதயெல்லாம் கடந்துதான், வகுப்பறைக்கே செல்லவேண்டும். இந்த மாதிரியான ஸ்கூல விட்டுவிட எப்படி மனசு வரும்.

அப்ப எல்லாம் வாரத்திற்கு 2 கிளாஸ் விளையாட்டு நேரம் இருக்கும். இப்ப எல்லோரும் படிப்புக்கு மட்டுமே, கவனம் செலுத்துவதால், பேருக்கு மட்டுமே P.T வகுப்பு, ஆனால் அந்த நேரத்தில் ஏதாவது கெமிஸ்ரி வாத்தியார் எக்ஸ்ரா வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பார்.

நான் 9ம் வகுப்பு சேர்ந்த பின்பு, கால அட்டவனை கொடுத்தவுடன் முதல் முதலில் பார்த்தது எப்படா P.T வகுப்புன்னுதான். அந்த நாளுக்கு இரண்டு நாள் முன்பே பேஸ்கட் பாலுக்கு மனதலவில் தயாராகிக் கொண்டிருந்தேன். எங்க P.T வாத்தியார் பெயர் திரு.நெல்லை நாயகம், இவருட்ட பிடித்தது, இவருடய ஆர்வத்தை மாணவர்களிடம் தினிப்பது இல்லை, அதே சமயம், அறிவுரை வழங்குவதுண்டு. எவனுக்கு என்ன விருப்பமோ, அதுக்காக அவர்களை தயார்

யார் யாருக்கு என்ன விருப்பம்னு, கேட்ட பின், பேஸ்கட் பாலுக்கு விருப்பமானவர்கள் எல்லாம், அதற்கான் கிரவுன்டுக்கு போங்கனு சொன்னது தான் தாமதம், கண்ணமூடிகிட்டு ஓரே ஓட்டம் ஓடுனா, கண்ண திரந்துகிட்டு ஓடி வந்த கூட்டம் எனக்கு முன்னாடி லைன் கட்டி நின்னுச்சு, வகுப்புல முக்காவாசிப்பேரு, என்ன மாதிரின்னு, அப்ப தான் தெரிஞ்சுது. எல்லோரயும் வரிசையா நிக்க வச்சு கூடையில போடச் சொன்னாரு, எவனும் போடவேயில்ல, என்னோட டெர்ன் வந்தது, என்ன பார்த்தவுடனேயே, "ஏன்டா முதல் பென்ஞ்ல முதல் ஆளே நீ தான், அப்படியிருக்கும் போது எப்படிடா பேஸ்கட் பால் உனக்கு சரிப்பட்டு வரும் (நான் கொஞ்சம் குள்ளம்), இருந்தாலும் என் ஆர்வத்த பார்த்துட்டு, குறுக்க நிக்காம,  சரி போடுன்னு சொன்னாரு, எவனுமே கரெக்டா போடாத போது நான் மட்டும், கரெக்டா போட்டேன்............
எங்கனு கேக்குறீங்களா?????????????????, வாத்தியார் மண்டையில தான்.

அடுத்த சீனுல, அய்யா வாலிபால் கோர்ட்டுல தான், தலைல வங்கின அடிய எல்லாம் மனசுல வச்சிக்காம, நல்ல முறையில டிரெனிங் கொடுத்து ஸ்கூல் ஜுனியர் டீமுக்கு கேப்டனாக எல்லாம் ஆக்கினாரு.எங்க மாவட்டத்துல பல ஊருக்கு, போட்டிகெல்லாம் கூப்பிடிடு போயிருக்காரு. கூப்பிட்டு போனங்க சரி, ஜெயிச்சியான்னு எல்லாம் கேக்க கூடாது (ஜெயிச்சிருந்தாததான் சொல்லாம விட்டுருப்போமா?) அவரு புன்னியத்துல தான் வாலிபாலுக்கு ஒரு 10 சர்ட்டிபிக்கேட் வச்சிருக்கேன்.

இப்ப கல்விக்கு இருக்கிற முக்கியத்துவத்துல கொஞ்சம் விளையாட்டுக்கும் கொடுக்கனும். P.T பிரியடுல, மாணவர்களை விளையாட மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற விசயங்களில் அரசாங்கம் தலையிட்டு, அடுத்த தலைமுறையை மனநோயாளிகளாக மாறாமல் இருக்க வழிவகை செய்யவேண்டும்.

இதுபோன்று விளையாட்டிற்கு முக்கியத்துவம் இல்லாமல், படிப்பை மட்டுமே, முக்கியம் என்று கருதினால் அடுத்த தலைமுறைக்கு கிரிக்கெட் விளையாடக் கூட ஆள் இருக்காது.

இன்று ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கப் பதக்கமாவது வாங்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாம்,  நாளை ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக விளையாட, யாராவது கிடைக்கமாட்டர்காளா? என்று ஏங்கும்படி ஆகாமல் நம்மை ஆண்டவன் காப்பாற்றுவானாக.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக