செவ்வாய், நவம்பர் 01, 2016

பொது சிவில் சட்டம்.

எனக்கு சன்னி லியோன் (யார்? என்று கேட்பவர்கள் அப்படியே ஓடிவிடுங்கள்) பற்றி தெரிந்த அளவிற்குக் கூட சன்னி முஸ்லீம் சட்டங்கள் பற்றித்தெரியாது. தலாக் பற்றிய எனது முந்தய கட்டுரையை வைத்துக்கொண்டு ஏதோ முஹம்மது நபியின் முப்பத்தி மூன்றாம் வாரிசு போல என்னிடம் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களைக் கேட்கிறார்கள். சிலர் ‘’சூப்பர்’’ என உசிப்பேத்தி அடுத்த ‘’மன்னை சாதிக்’’காக மாற்ற முயற்சிக்கின்றார்கள். இந்த ரெண்டுல எது நடந்தாலும் உலகம் அழிஞ்சிரும். 

பொது சிவில் சட்டத்தில் தலாக் வெறும் ஐந்து மார்க் கொஸ்டின். ஆனால் இன்னும் பொ.சி சட்டம் பற்றிய T.V விவாதங்களில் தலாக் பற்றி ‘’கைய புடிச்சு இழுத்தியா?, என்ன, கைய புடுச்சு இழுத்தியா?’’ என்றே விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பல பேர் பொ.சி.சட்டம் என்றால் ''தலாக் சட்டத்தை ஒழிப்பது'' என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மோடி கூட அவருடய முஸ்லீம் சகோதரிகள் தலாக்கினால் பாழும் கிணற்றில் தள்ளப்படுவதாகக் கூறி தலாக்கை முன்னிருத்தியே பொ.சி.சட்டம் பற்றி பேசுகிறார். அதே மோடி, குஜராத்தில் முப்பது வருடத்திற்கும் மேலாக ‘’என் கிணற்றைக் காணோம்’’ என்று தேடும் பெண்ணிற்காக வருத்தப்படாமல் இருப்பது துரதிஷ்டம். 

பொது சிவில் சட்டம் என்பதே உத்திர பிரதேச தேர்தல் ஜூஜிலிப்பாதான். ‘’பொ.சி. சட்டத்தை முஸ்லீம்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள்’’ என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தி வெற்றிபெற நினைக்கின்றார்கள். தேர்தல் முடிந்தவுடன், ‘’பொ.சி.சட்டம் என்னாச்சு?’’ என்று கேட்டுப்பாருங்கள், ‘’அடுத்த தேர்தல் வரட்டும்னு காத்துக்கிட்டிருக்கோம்’’ என்றுதான் பதில் வரும். ஏனென்றால் பொ.சி. சட்டம் பற்றிய பிரட்சனையின் ஆழம் அவர்களுக்குப் புரியாமல் இல்லை.

மோடி உண்மையிலேயே பொ.சி.சட்டத்தைப் பற்றி கவலைப்படுபவறாக இருந்திருந்தால், அரசியல் அமைப்புச் சட்டம் 370யை நீக்குவோம் என்று காஷ்மீர் தேர்தலில் முழங்கியிருக்க வேண்டும். கேரளா தேர்தலில் பசு வதை பற்றியும், பசு மாமிசம் பற்றியும் கருத்து தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் மோடியோ ‘’ராசாத்தி ரேடியோஸ்’’ வீட்டு பின்பக்கமாக தெரித்து ஓடிய மொக்கச்சாமி போல்லல்லவா ஓடினார்.

அகோரி சாமியார்களிடம் சென்று, ‘’பொதுவெளியில் நிர்வாணம் குற்றம் ஆகையால் ஆலயா வேஷ்டிகள் சட்டைகள் அணிந்துகொள்ளுங்கள்’’ என்று மோடியால் கூறமுடியுமா?. இது முஸ்லீம்களுக்கான பிரட்சனை மட்டும் அல்ல, மற்ற மதம், இனம், மொழி, ஜாதி என எல்லாவற்றின் ஒட்டுமொத்த பிரட்சனை. அகோரி சாமியார்கள் முதற்கொண்டு இட ஒதுக்கீட்டிற்கு வேட்டுவைப்பது வரை ஒட்டுமொத்த இந்திய மக்களின் பிரட்சனை.

ஒரு மாநிலத்திற்கும் பக்கத்து மாநிலத்திற்குமே சில சட்ட திட்டங்களில் வித்தியாசம் உண்டு, அது அந்த மாநில மக்களின், கலாச்சாரம், வாழ்க்கை முறையைப் பொருத்தது. வரி கூட வித்தியாசம் இருக்கிறது அதனால், தமிழ்நாட்டு பெட்ரோல் விலைக்கும், கர்நாடகா பெட்ரோல் வில்லைக்குமே வித்தியாசம் உண்டு. பன்முகம், பல கலாச்சாரம் என்று ஒரு மண்ணுமில்லை என்பவர்களுக்கு ஒரு உதாரணம் ஜல்லிக்கட்டு. தமிழன் ‘’இது எங்களின் பாரம்பரிய வீர விளையாட்டு’’ என்கிறான். ஆனால் வட நாட்டுக்காரன் ‘’காட்டுமிராண்டித்தனம்’’ என்கிறான். இப்போது இந்த பொடலங்காய் சிப்ஸ் சட்டத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும்?. பொ.சி.சட்டம் வந்தால் ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டுத்தான் என்று தீர்ப்பு வரும் என்றா நினைக்கின்றீர்கள்?. 

பன்முகத்தன்மை, பல கலாச்சாரம் என்று இருந்தாலும் பொதுவான சட்டத்தின் படி வாழ முடியாதா? என்று கேட்டால், முடியும். அது எப்போது நடக்கும் என்றால், ஒரு இந்து இஸ்லாம் பற்றி முழுமையாக தெரிந்து, ஒரு முஸ்லீம் இந்து மதம் பற்றி முழுமையாக தெரிந்து, இதைவிட உன் சட்டம் சிறந்தது, என் சட்டம் சிறந்தது என்ற முடிவிற்கு வரும் நாட்களில் நடக்கும். அந்த நாள் எப்போது வரும்? என்றால் மருதநாயகம் ரிலீஸூக்கு மறுநாள் வரும். இருக்கிற சட்டத்தைக் கொண்டு பக்கத்து மாநிலத்துக்கு தண்ணி திறக்கச் சொல்ல வழியில்லை. இவர்கள் வானம் ஏறி வைகுண்டத்திற்குப் போக வழி சொல்லுகிறார்கள்.

பொ.சி.சட்டம் தேவையில்லை என்பதை, இந்தச் சட்டம் தேவையா? இல்லையா? என்று இந்திய சட்டத்துறை கொடுத்திருக்கும் கேள்விப் படிவத்தின் மூலம் தெரிவிக்க சிலர் அறிவுருத்துகிறார்கள். அந்த கேள்விப் படிவம் எப்படி இருக்கிறது? ‘’நீ முட்டாள் என்பது உன் மனைவிக்கு தெரியுமா?’’ என்று கேட்டுவிட்டு, ‘’ஆம்’’, அல்லது ‘’இல்லை’’ என்ற இரண்டில் ஒன்றை பதிலாக எழுதவும் என்கிற ரேஞ்சில் இருக்கிறது. என்னுடய பதில் ‘’நான் முட்டாளே இல்லை’’ என்பதாக இருந்தால் அந்த படிவத்தில் என்னால் எப்படி விளக்கமுடியும்?.

முஸ்லீகளை விடுங்கள், ராணுவத்தில் சர்தாஜிகளின் டர்பனுக்கும், பொதுவெளியில் குருவாள் வைத்துக்கொள்வதற்கு என்ன செய்யப்போகுறீர்கள்?. இந்துக்களின் கூட்டுக்குடும்ப வரிச்சலுகைக்கான சட்டத்தை என்ன செய்வீர்கள்? ஜைன மதத்தின்படி பல நாட்கள் சாப்பிடாமல் இருந்து தற்கொலை செய்யும் பெண்ணுக்களுக்காக என்ன செய்யப்போகுறீர்கள்?. ஜெயின் நிர்வாண துறவியின் சட்டமற்ற சொற்பொழிவிற்கு எந்தச் சட்டம்? தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை என்ன செய்யப்போகுறீர்கள்? தனித் தொகுதி முறை என்னவாகும்? என்பதை விளக்கி மோடியால் ஒரு டிபாப்ட் காப்பி கொடுக்க இயலுமா?.

தனிச் சட்டத்தின் மூலமாக சமுதாயத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எந்த விதத்தில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது? என்பதை அரசு விளக்கவேண்டும். சயாரா பானு விஷயத்தில் கூட அவர் வழக்கு என்னெவென்றால், இஸ்லாமிய முறையில் விவாகரத்து வழங்கப்படாமல், ஒரு தபாலில் தலாக், தலாக், தலாக் என்று எழுதியதை வைத்துக்கொண்டு அங்குள்ள ஜமாத், விவாகரத்து வழங்கியதை ரத்து செய்யவேண்டும் என்பதுதானே தவிற, ஷரியா சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பது அல்ல. 
  
சட்டம் சரியாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அதை நீக்குவது தவறில்லையே என்ற கருத்து எழுகிறது. குமாரசாமியின் தீர்ப்பை வைத்துக்கொண்டு ஊழல் சட்டப்பிரிவு நீக்கப்படவேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்?. கற்பழித்தவனுக்கு 1000 ரூபாய் தண்டனையின் கீழ், அட்வான்ஸ் முறையில் கற்பழிப்பது இன்னும் சில கிராமப் பஞ்சாயத்துக்களில் நடக்கத்தான் செய்கிறது. அதற்காக, இந்திய கற்பழிப்பு தண்டனைச் சட்டம் செல்லுபடியாகாமல் போகுமா என்ன?. சட்டத்தை நிலைநாட்ட கூடுதல் சட்டங்கள் கொண்டுவாருங்கள். சட்டத்தை மீறிபவர்களுக்கும், சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் தண்டனையை கடுமையாக்குங்கள்.

அடுத்ததாக, இஸ்லாமிய சட்டங்களில் சீர்திருத்தம் வேண்டும் என்று சொன்னால் இங்கு சில இஸ்லாமியர்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சீர்திருத்தம் என்பது அன்ற காலகட்டத்திற்கு தேவையின் அடிப்படையில், அதே நேரத்தில் இஸ்லாத்தின் கோட்பாட்டிலிருந்து மாறாத வகையில் இருக்கவேண்டும். உதாரணமாக, முஹம்மது நபியின் ஆட்சியில் ஸகாத் (தானம்) தொகை கணக்கிடும் போது குதிரைகள் சேர்க்கப்படவில்லை. ஆனால் உமர் ஆட்சிக்காலத்தில் குதிரைகள் ஸகாத்தின் தொகையில் சேர்க்கப்பட்டன. நபியின் ஆட்சிக்காலத்தில் குதிரைகள் பயணத்திற்கும், சொந்த உபயோகத்திற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன, பின்பு உமர் காலங்களில் அவை வியாபார நோக்கில் பயன்படுத்தப்பட்டன என்ற அடிப்படியில் அந்த சீர்திருத்தம் இருந்தது. இதை புரிந்துகொள்ளாமல், முஹம்மது நபி சொல்லிச் சென்ற இஸ்லாத்தின் சட்டத்தை உமர் மீறிவிட்டார் என பொங்கி பொங்கல் வைக்கக்கூடாது.

மோடி அவர்களே, முஸ்லீம்களை வெறுப்பேற்றுகிறேன் என்ற பெயரில் அவர்களின் ஒற்றுமையை அதிகப்படுத்துகின்றீகளோ? என்ற சந்தேகத்துடன், பாக்கிஸ்தானின் ஸ்லீப்பர் செல்லாகக்கூட இருப்பீர்களோ? என்ற அய்யம் அதிகமாகிறது. அவர்களை சும்மா விட்டுவிட்டாலே, ‘’பக்ரீத் ஆட்டுத்தோலை எந்த அமைப்பு எடுப்பது?’’ போன்ற ஆயிரம் பிரட்சனையில் அவர்களாகவே நாசமாகிப் போவார்கள். ஸோ, டோண்ட் ஒரி பி ஹாப்பி.

-----------------------------------------------------------யாஸிர் அசனப்பா. 

4 கருத்துகள்: