வியாழன், செப்டம்பர் 29, 2016

இஸ்மாயில் எனும் ஆட்டுக்குட்டி

ஈத் பெருநாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அப்பாவிடம் பேசும் போது ‘’ஆட்டுக்குட்டி பிடிக்கலியா?’’ என்று கேட்டேன். ‘’பிடிக்கனும்பா, பெருநாளுக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி புடிச்சா போதும்னு பார்க்கேன், பாக்குறதுக்கு ஆள் இல்லை, புல்லு, கீரை விலையெல்லாம் வேற ரொம்ப ஜாஸ்தி’’ என்று பதில் வந்தது. நானெல்லாம் சின்ன பிள்ளையாக, சாரி (இப்போதும் அப்படியே இருப்பதால்)............. ரொம்ப சின்னப் பிள்ளையாக இருக்கும் போது எங்களுக்கு ‘ஈத்துல் பித்ர்’, ‘ஈத்துல் அதா’ என்று பெருநாளுக்கு அரபி பெயர்களைச் சொன்னால் தெரியாது. தெரிந்தது எல்லாம் ‘’நோம்புப் பெருநாள்’’ ‘’ஆட்டுக்குட்டிப் பெருநாள்’’ அவ்வளவுதான். பேவரேட் பெருநாள் என்றால் அது ‘ஆட்டுக்குட்டி பெருநாள்’’தான்.

நோம்பு பெருநாள் முடிந்து 75 நாட்களுக்குள்ளாக ஆட்டுக்குட்டி பெருநாள் வந்துவிடும். முன்பு, பெரும்பாலான வீடுகளில் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஆடுகளை பிடித்துக்கொண்டு வந்துவிடுவார்கள். முன்னதாகவே வாங்கிவிட்டால் விலையும் மலிவாகக் கிடைக்கும், மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக இருந்ததால், ஆட்டுக்குத் தீணி போடுவதிலும் பிரட்சனை இருக்காது. மேய்ச்சலுக்கு கூட்டிக்கொண்டு போக, குளிக்க வைக்க என அனைத்தையுமே அந்த வீட்டுப் பசங்க தலையில் கட்டிவிடுவார்கள். அதை திணித்துவிடுவார்கள் என்றும் சொல்ல முடியாது, பசங்களாக அதை விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்.

ஒவ்வொரு வீட்டுப் பசங்களும், அதிகமாக ஒரு மாதம் வரை பொறுத்திருப்பார்கள், அதற்குள் ஆடு வீட்டிற்க்கு வரவில்லை என்றால், அப்பாக்களை நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பசங்களின் விருப்பத்திற்கு இல்லை என்றாலும், அவரகளின் தொந்தரவில் இருந்து தப்பிக்க குறைந்தது 20 நாட்களுக்கு முன்பாகவாவது ஆடுகள் வீட்டு முற்றத்தில் நிற்கும். எந்த வீட்டில் முதலில் ஆடு வருகிறதோ அந்த வீட்டுப் பையனுக்கு அத்தனை பெருமையாக இருக்கும். ஒவ்வொருத்தனுக்கும் அவன் வீட்டு ஆடுதான் ஒசத்தி. அப்பா ஆடு வாங்க போகும்போதே லிஸ்ட் போட்டு அனுப்புவார்கள். ‘கொம்பு பெருஸ்ஸா இருக்கனும்’, ‘வெள்ளையா இருக்கனும்’, ‘முடி அதிகமா இருக்கனும்’, ‘உயரமா இருக்கனும்’..... என  அந்த லிஸ்டில் பல இருக்கனும் இருக்கும்.

ஆனால், எல்லா அப்பாக்களுக்குமே தெரியும் எப்படியான ஆட்டை கூட்டிக்கொண்டு போனாலும் பசங்களுக்கு பிடிக்கும் என்று. ஆட்டைப் பார்த்துவிட்டால் லிஸ்ட் போட்ட பாய்ண்ட்ஸ் எல்லாம் மறந்துவிடும், அல்லது எல்லா பாயிண்டும் மேட்ச் ஆவது போல தோன்றும். ‘’குழந்தை இல்லாதவள் உண்டாகி இருந்தால், ஆண் பிள்ளை என்ன?, பெண் பிள்ளை என்ன?’’ அதுமாதிரித்தான். ஆடு வேண்டும். பசங்க எதை மறந்தாலும் ‘’கொம்பு’’ விசயத்தில் கறாராக இருப்பார்கள். ‘’என்னப்பா கொஞ்சம் கொம்பு பெரிசா புடிச்சிருக்கலாம்ல’’ என செல்லக் கோபப்படுதலும் இருக்கும். எவ்வளவு பெரிய்ய கொம்பான ஆட்டை கொண்டுவந்தாலும் அவர்களுக்கு அது கொஞ்சம் கம்மியாகத்தான் தோன்றும்.‘’எங்க ஆட்டுக்குட்டிக்கு ரெண்டு சுத்து கொம்பு’’ ‘’என்னோடதுக்கு மூனு சுத்து கொம்பு’’ என்பது பெருமையான விசயம்.

கொம்புதான், தன்னுடய நண்பர்களிடம் தன் ஆட்டைக்காட்டி பெருமைப்பட்டுக் கொள்ளும் அஸ்திரம். சின்ன கொம்பாக இருந்தால் ஊசிக் கொம்பாக இருக்கவேண்டும், அப்படியென்றால்தான் ‘’இந்த கொம்ப வச்சி வயித்துல குத்துச்சோ, கொடலெல்லாம் வெளிய வந்திரும்’’ என பீத்திக்க முடியும். பெரியவர்களுக்குத்தான் அது ‘வெள்ளாடு’, ‘பொட்டாடு’, ‘செம்பரியாடு’, ‘மயிலம்பாடி’, ‘காட்டாடு’ என்ற பெயர்கள். பசங்களுக்கு எல்லா ஆட்டுக்குட்டியுமே ‘’இஸ்மாயில்’’தான். இன்னும் சொல்லப்போனால் ஆடு என்ற உச்சரிப்பே வராது. இது ‘’அவன் இஸ்மாயில்’’, இது ‘’இவன் இஸ்மாயில்’’, ‘’உன் இஸ்மாயில்’’, ‘’என் இஸ்மாயில்’’ என்றுதான் பேசிக்கொள்வார்கள்.

இஸ்மாயில் நபியை அருத்து பலியிடும் நிகழ்வை முன்னிட்டு கொண்டாடப்படும் பெருநாள் என்பதால், எல்லா ஆடுகளுமே அவர் பெயர்தான். பசங்களுக்கு, ஆட்டுக்குட்டி இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற லிஸ்ட்டைப் போல், பெரியவர்களுக்கும் ஒரு சில செண்டிமெண்ட் விசயங்கள் இருக்கும். எங்க அப்பாவுக்கு, ஆட்டின் நெற்றியில் வெள்ளை கலர் இருக்க வேண்டும், அல்லது வெள்ளை தலை ஆட்டுக்கு, நெற்றியில் வேறு நிறத்தில் கலர் இருக்க வேண்டும். அப்படியான ஆடுகள் எங்க ராதாவிற்கு (அப்பாவின் அப்பா) பிடிக்கும் என்பதால் அந்த சிஸ்டம் இன்றும் தொடர்கிறது. சிலருக்கு காலில் கருப்பு கலர், பன அரிவாள் கொம்பு, ஆட்டுத்தாடி.....என செண்டிமெண்ட்ஸ் உண்டு.

எப்படா ஸ்கூல் முடியும்?, இஸ்மாயில மேய்க்க எங்கடா கூட்டிக்கொண்டு போக? என ஸ்கூலில் அந்த ஒரு மாச கடைசி பிரியடும் இப்படியே கழியும். அப்பா, ஆட்டுக் கயிறை கையில் கொடுக்கும் போது ‘’இப்போ 12 கிலோ இருக்கு, பெருநாள் அன்னைக்கு 25 கிலோ ஆயிரனும்’’ என சொல்லிக்கொடுத்த வார்த்தை ‘’சொல்லுங், சொல்லுங், சொல்லுங்...... நீங்க யாரு? யாரு? யாரு? பாம்பேய்ல என பண்ணீங்க?’’ என்று பாட்ஷா பட டைப்பில் எக்கோ அடிக்கும். வீட்டுக்கு வந்து பையை தூக்கி வீசி எறிந்துவிட்டு ஆட்டுக்குட்டி கயிறை அவிழ்த்து மேய்ச்சலுக்கு கூட்டிக்கொண்டு செல்லும் போது வரும் ஆனந்தத்தை ஆயிரம் மலையாள பட சிடிகளால்கூட ஈடுசெய்ய முடியாது.

நாம போகுறதுக்கு முன்பாகவே அண்ணன் அவிழ்த்துக்கொண்டு போயிருந்தால், அவ்வளவுதான் ‘’இன்னிக்கி அண்ணனுக்கு ரேங்க் கார்டு கொடுத்திருக்காங்க, 3 பாடத்துல பெயிலு’’ என அப்பாவிடம் போட்டுக்கொடுத்து ‘’அப்படியா சேதி, நீ ஆட்டுக்குட்டிய வாங்கிட்டு அவன வீட்டுக்கு வரச்சொல்லு’’ என்ற நல்ல செய்தியோடு வயக்காட்டை நோக்கி ஓட வேண்டும். இதற்கு பயந்தே எந்த வீட்டிலும், தம்பி இருக்கும் போது அண்ணன்கள் ஆடுப்பக்கம் அண்டுவதில்லை. வரப்பு புல் சாப்பிட்டால் குட்டி நல்லா கொழு கொழு என்று வரும் என்று அறிந்து, நெல்லு போட்டிருந்தாலும், வரப்பில் காவலாளிக்கு தெரியாமல் மேயவிடுவோம். நீள கயிற்றை கட்டி ஆட்டை மேய விட்டுக்கொண்டே, கிரிக்கெட் விளையாடுவோம். கேட்ச் பிடிப்பதுபோல் தெரிந்தால் ‘’காதரு உன் இஸ்மாயில் அத்துட்டு ஓடுது பாருல’’ என பொய் சொல்லி அவுட் ஆவதிலிருந்து தப்பிப்போம்.

கிட்டி செடியை சாப்பிட்டுவிட்டால், ஆட்டுக்கு வயித்தால போகும். புளுக்கைக்குப் பதிலாக, பீய்ச்சி அடிக்கும். அப்படி இருந்தும் ஆடு தெம்பாகவே இருக்கும், நமக்குத்தான் வயித்தால போனதுமாதிரி சோர்ந்து போய் உட்கார்ந்திருப்போம். டாக்டர்ட காட்டலாமா?, மருந்து எதுவும் கொடுக்கலாமா? என தெருவில் திருயும் அத்தனை கிளவிகளிடமும் அலோசனை செய்து ‘’நீ சும்மா இருந்தாலே நாளைக்கு சரியாகிடும்’’ என்ற உண்மையை அறிந்துகொள்வோம். கீரை, ஆட்டுக்கு பிடித்த உணவு என்று கேள்விப்பட்டு பெரியாரு வரை 2 கி.மீ நடந்து சென்று வெரும்கையோடு வீடு திரும்புவோம். அந்த நாட்களில், சாய்ங்கால டியூசன், மதரஸா என எதுவும் கண்ணுக்கு தெரியாது. தெரிந்தது எல்லாம் ஆட்டுக்குட்டி, புல், களனித் தண்ணி..... என ஆடும், ஆடு சார்ந்த விசயங்களும் மட்டுமே.

ஆடு வாங்கிக் கொடுப்பது மட்டுமே அப்பா வேலை, மற்றபடி மணி வாங்கி கட்டுவது, ஜில் ஜில் சிலங்கை வாங்கி கழுத்தில் கட்டுவது, குளுப்பாட்ட 501 பிராண்ட் சோப் வாங்குவது (அதில்தான் அழுக்கு நல்லா போகும், குளத்தில் ஆட்டுடன் குளிக்கும் போது அதே சோப்பையே நாங்களும் தேய்த்துக்கொள்வோம்), பொரி கடலை வாங்குவது, கொம்பில் தேய்த்துவிட எண்ணெய் என லொட்டு லொசுக்கெல்லாம் எங்க பாக்கெட் மணிதான். அது பத்தவில்லை என்றால் மணிக்காக அப்பா பாக்கெட்டில் கைவைப்போம்.

எங்க தாத்தா காலத்தில் மாடுகள் இருந்தபோது அதற்கு கட்டியிருந்த செம்பு கிலுக்கு மணி ஒன்று இன்றும் எங்கள் வீட்டில் உண்டு. அதுதான் காலங்காலமாக எல்லா ஆட்டுக்குட்டிகளுக்கும் கட்டி அழகுபார்ப்பது. இப்போது இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாக ஆடுகளை பிடிப்பதால் அது பயன்படாமலே இருக்கிறது. ‘’சாலாப்பேரி குளத்துல பாம்பு நிக்குது’’ என்று எவனாவது சொல்லிவிட்டால், ஆடுகளுக்கு தண்ணி காட்ட குளக்கரையிலேயே நிப்போம். அந்த வழியாக எவனாவது வந்து குளத்தில் கால் வைத்து, பாம்பு கடிக்கிறதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்பு ஆட்டுடன் இறங்குவோம். அரை மணி நேரத்திற்கு மேலாக, யாருடனாவது,  எங்காவது நின்றுவிட்டால் மனசு பூரா இஸ்மாயில் சிந்தனையாகவே இருக்கும். வீட்டுக்கு வந்தவுடன் ‘’இவ்வளவு நேரம் எங்கடா போயிருந்த’’ என அம்மா கேட்பது, ஆடே கேட்பது மாதிரி இருக்கும்.

கொஞ்சம் நன்றாக பழகிவிட்டால் கயிரை பிடித்துக்கொண்டு போகவேண்டிய தேவையே இல்லை. அதுவா பின்னாடி வரும். அதை பயன்படுத்தி ''பெரியம்மா வீட்டுக்கு போய்ட்டுவா'', ''மாமா வீட்டுக்கு போய்ட்டுவா'' என பஸ் பிடித்து அனுப்பும் இடத்திற்கெல்லாம் அம்மா, இஸ்மாயிலோடு நடக்கவும், ஓடவும் விட்டு எடுபிடி வேலைகளை வாங்கியிருக்கிறாள். அம்மா கொடுத்துவிட்ட மாவை வாங்கிக் கொண்டு ‘’ஆட்டுக்குட்டி நல்லா பழகிடுச்சு போல, உன் பின்னாலேயே வருதப்பா, அம்புட்டு அன்பு’’ என சொந்தக்கார் சொல்ல, ஏதோ ராக்கெட்டை தனியா கண்டுபிடிச்சு விண்வெளியில பரக்கவிட்ட சந்தோசம் வரும்.

பெருந்நாளுக்கு முன் இரவில்தான் ஒருவன் சொல்லுவான், ‘’நாளைக்கெல்லாம் இஸ்மாயில அருத்துருவானுங்க இல்ல?’’. அதுவரை எதுக்கு வளர்க்கிறோம் என்பது தெரியாமலையே பாசத்தை புல்லாகவும், கருணையை களணித் தண்ணியாகவும், அன்பை அகத்திக்கீரையாகவும் கொடுத்து வளர்த்திருப்போம். ஆட்டை உரிக்கும் போது குடலில் கழிவு நிற்கும் என்பதற்காக அன்றய இரவில் ஆடுகளுக்கு வீட்டில் இரை கொடுக்க விடமாட்டார்கள். நைட்டு எல்லாம் பசியில கத்தும், அந்த சப்தம் கேட்டு அழுக அழுகயா வரும். ''ஒன்னுக்கு போறேன்னு'' பொய் சொல்லி, யாருக்கும் தெரியாம கீரை அள்ளிப்போட்டுவிட்டு வந்து படுத்துக்கொள்வோம். பெருந்நாள் காலை எல்லோருக்கும் சந்தோசமாக விடியும், ஆட்டோடு கிடந்த எங்களைத் தவிர. பெயரளவிற்கு புது துணி உடுத்தி, தொழுகைக்கு போனாலும், மனசு என்னவோ இஸ்மாயில் மேலேயே இருக்கும்.

பெருநாளுக்கான சிறப்புத் தொழுகை முடித்தபின்பு, ஆட்டை அறுக்கும் முன் குளிப்பாட்டுவார்கள், பிடித்துக்கொள்ளச் சொல்லி கயிறை எங்களிடம்தான் கொடுப்பார்கள். ‘’உருவிக்கிட்டு ஓடிருடா இஸ்மாயிலு’’ என மனதில் சொல்லிக்கொண்டு கயிற்றை லூசாக பிடித்திருப்போம், பாசக்கார பயபுள்ள அப்பவும் நம்ம காலையே சுத்தி நிக்கும். ‘’அறுக்க ஆள் கிடைக்கவில்லை’’, ‘’உரிக்க ஆள் கிடைக்கவில்லை’’ என்ற செய்திகளின் மூலமாக இஸ்மாயிலின் மரணம் சற்று தாமதப்படும். அந்த சிறு காலதாமதம் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தாலும் நிலைக்காது. அருப்பதை பார்க்கப் பிடிக்காமல் வீட்டிற்குள் நின்று அழுதகாலங்கள் உண்டு. வெட்டி கூறுபோட்ட பின்பு, கண் திறந்தபடி, தலை மட்டும் தனியாகக் கிடக்கும். அந்த கண்ணின் வழியாக அதனுடம் இருந்த அந்த முப்பது நாள் சந்தோசம் தெரியும்.

‘’என்னோட இஸ்மாயில இப்படி கொன்னுட்டீங்களேடா கொலகார பாவிகளா, இனி நான், எம்டன் ‘’மகன்’’ இல்லை, நீ, சமுத்திரக்கனியின் ‘’அப்பா’’ இளையராஜா இல்லை’’ என்று கோபம் கொண்டு அழுதுகொண்டே படுத்தால் அடுத்த ஒரு சில மணி நேரம் கழித்து பிரியாணி மணம் வந்து மூக்கையே வட்டமடிக்கும். ‘’இஸ்மாயில பாசமா வளர்த்த எனக்கே நாலு பீஸ்ஸுதானா? கூட ரெண்டு பீஸ் வைங்கடா?’’ என சாப்பிடும்போதும் இஸ்மாயில் ஞாபகத்தோடவே சாப்பிடுவோம்.. அரை மணி நேரம் கழித்து மறுபடியும் ‘’அய்யய்யோ இஸ்மாயில கொன்னுட்டாகளே’’ தான். ஆனால் அதுவும் நைட்டு பசி எடுக்கும் வரை மட்டுமே. இது, பத்தாவது நாள் இஸ்மாயிலின் தலைக்கறியை வைத்து ‘’தக்கடி’’ செய்யும் வரை நீடிக்கும். கொன்னா பாவம், திண்ணா போச்சுன்னு சும்மாவா சொன்னானுங்க. 

இது எல்லாம் ஸ்கூல் படிக்கும் காலங்களில் நடந்தது. காலேஜ் போன பின்பாக ஆட்டுக்குட்டியில் ‘’ஆடு’’ கட்டாகி, ‘’குட்டி’’களின் பக்கம் கவனம் திரும்பிவிட்டது.


----------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

திங்கள், செப்டம்பர் 26, 2016

அரபி வீட்டுக் கல்யாணம்.

அன்வர், ஜித்தா ஆபிசின் பி.ஆர்.ஓ வாக இருக்கிறார். சௌவுதிக்காரர். அரபி மொழி தவிர்த்து அவருக்கு வேறு எந்த மொழியும் தெரியாது. ஆங்கிலத்தில் நான் ‘ஒன்’ என்றால், ‘ஷீ?’ (என்ன?) என்று எதிர் கேள்வி கேட்கும் ஆள். என்னுடய விசா சம்பந்தமாக அவரிடம் பேசுவதாக இருந்தால், இரண்டு எனர்ஜடிக் டிரிங்க்ஸ் வாங்கி வைத்துக்கொள்வேன். சவுதிக்கு வந்த நாள் என்பதை அவருக்கு புரியவைக்க கையை விமானம் போல் இறக்கி ‘’ஆதா சவுதி டர்ர்ர்ர்ர்’’ என்றும், துபாய்க்கு சென்ற நாள் என்பதை அதே போல மேலே தூக்கி காட்டி ‘’ஆதா துபாய் சர்ர்ர்ர்’’ என்று மோனாக்டிங்க் செய்யவேண்டும்.

இப்படி பல டர்ர்ர்ர், புர்ர்ர்ர்களை செய்து காட்டினாலும் ரிசல்ட் என்னவோ டுர்ர்ர்ர்தான். அரபியில், அவர் சொல்வதில் எனக்கு புரிந்தது, நான் சொல்வதில் அவருக்கு புரிவது இரண்டு உண்டு என்றால் அது ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ ‘வ அலைக்கும் அஸ்ஸலாம்’ மட்டும்தான். ‘நேத்து விசா ரினிவல் பண்ணனும்னு சொல்லிவிட்டு ஏன் வரவில்லை?’ என மோன்-ஆக்டிங்கில் அரை மணிநேரம் விசாரித்தால், ‘’ஆதா கொர்ர்ர்’’ என தூங்கிவிட்டதாக, கண்ணை மூடி குரட்டை விட்டு காட்டுவார். 

இப்படித்தான் ஒரு நாள், பக்கத்து ரூமில் ஒருவனுடன் கையை குலுக்கி குலுக்கி பேசிவிட்டு, என் ரூமிற்கு வந்து கையை பிடித்து ‘’ஈஜி’’ ‘’ஈஜி லாஜிம் ஈஜி’’ என குலுக்கிவிட்டு அடுத்து மேனஜர் ரூமிற்கு போனார். மேனஜரிடம், என்னை கைகாட்டி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அன்வர் குலுக்கியதில் பாதியும், நடப்பதை பார்த்து மீதியுமாக குலுங்கிப்போய் நின்றேன். வடிவேல் காமெடியில், தண்ணிக்குள்ள இருந்து திரும்பவந்து ‘சொல்லிறாதீங்க, அடிச்சி கேட்டாலும் சொல்லிறாதீங்க’ என்பது போல திரும்ப வந்து ‘’ஈஜி’’ ‘’ஈஜி லாஜிம் ஈஜி’’  என சொல்லிவிட்டு சென்றார்.

‘’மோன் ஆக்டிங்கில் ஏதும் தப்பா புரிஞ்சிக்கிட்டு கம்ளைண்ட் பண்ணுறாரோ?’’ என்ற பயம், அதே நேரத்தில் இந்த நாட்டின் தலை வெட்டும் தண்டனையும் எதேச்சையாக எண்ணத்தில் வந்து தொலைந்தது. மேனஜர் என்னிடம் வந்து ‘அவர் பொண்ணுக்கு கல்யாணமாம், கண்டிப்பா நாம எல்லோரும் கலந்துக்கனுமாம், உன்னையும் கூட்டிக்கொண்டு வரச்சொல்லிவிட்டு போகிறார்’’ என சப் டைட்டில் போட்டார். உயிர் வந்தது. ‘நாளைக்கு 11 மணிக்கு, நீ ரெடியா நில்லு நான் வந்து கூட்டிக்கொண்டு போகிறேன்’ என்றார் மேனஜர்.  
    
அபுதாபியில் ஏழு வருசம் இருந்தாலும், ஒரு முறைகூட அரபிகளின் கல்யாண கொண்டாட்டத்தில் கலந்துகொண்டது இல்லை. இதை, யாரும் என்னை கூப்பிடவில்லை என்றும் கூறலாம். 10.30 க்கு எல்லாம் ரெடியாகி மேனஜருக்காக காத்திருந்தேன். 10.45 ஆச்சு ஆளாக் காணோம். நாம போய் தாலி எடுத்துக்கொடுக்காம  மாப்பிள்ளை தாலி கட்டமாட்டானே என்ற பதட்டத்தில், மேனஜருக்கு போன் செய்தால் ‘’காலையில 11 மணி இல்ல, இரவு 11 மணி’’ என்றார். என்னது இரவு 11 மணியா? அடப்பாவிகளா, எங்க ஊர்லயெல்லாம் காலையில கல்யாணம் முடிஞ்சு, நைட்டு 11 மணிக்கு பாப்பாவுக்கு ரெடிபண்ணுற நேரம்மாச்சேடா????!!!!. தப்புப் பண்ண வேண்டிய நேரத்துல, தப்பு தப்பா பண்ணுரீங்களேடா. 
 
இரவு 11 மணிக்கு கல்யாண மண்டபத்திற்கு சென்றால், அங்கே இரண்டு வாசல், ஒன்னு பெண்களுக்கான ஹாலுக்கு, மற்றொன்று ஆண்களுக்கான ஹாலுக்கு. பெண்களுக்கான வாசல் வழியாக ஆண்களுக்கு அனுமதியில்லை. அரபிகளின் வழக்கப்படி, ஆண்களுக்கான வாசலில் அன்வர் நின்றுகொண்டு கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் தெரிந்தது ஏன்? பெண்களுக்கான வழியில் செல்லக்கூடாது என்று. அரை தூக்கத்தில் உள்ளே சென்றால், அந்த அத்த ராத்திரியிலும் எல்லா அரபிகளும் டீயும், பேரிச்சம் பழம் கையுமாக ப்ரஷ்ஷாக இருந்தார்கள்.

என்னோட ஆபிஸில் இருக்கும் ஒருவனிடம் ‘’என்னடா? தி.மு.கவுல சேரவந்த தே.மு.க.காரனுங்க மாதிரி இவ்வளவு கூட்டம்? அதுவும் இத்தன மணிக்கு?’’ என்று கேட்டேன். இதுதான் சவுதியில் நடமுறையாம், 12 மணிக்கு ஆரம்பித்து, அதிகாலை 5 மணி வரை கல கல வென இருக்குமாம். என்னோட அகராதியில் கல்யாணத்தில் கல கல என்றால் அத்த பொண்ணுங்க, மாமன் பொண்ணுங்க பக்கத்துல உட்கார்ந்து பேசுறதுதான். அது இல்லாம என்ன மானங்கெட்ட கல கல?. சுத்தி சுத்தி பார்த்தா எல்லாம் உஜாலா விளம்பரத்துக்கு ஆடிசனுக்கு வந்தவனுங்க மாதிரி வெள்ள டிரஸ்ல அங்கயும், இங்கயும் சுத்திக்கிட்டு திரிஞ்சானுங்க. எல்லாமே வித்தியாசமாக இருந்தது / ரொம்ப புதுசாவும் இருந்தது.

சுத்தி ஷோபாக்களாக இருந்தது. ஒன்றில் அமர்ந்தவுடன், ஒரு சின்ன கிளாசில், இளம் பச்சை நிறத்தில் நல்ல வாசனையுடன் ஒன்றை தந்தார், ‘’சூப்பா?’’ என்று கேட்டேன், ‘’இல்லன்னா மட்டும் நீ வேணாம்னா சொல்லப்போற’’ என்ற அர்த்தத்தில் பார்த்துவிட்டு கொடுத்தான். அது ஒரு விதமான அரபிக் காவா டீ. குடித்தவுடனேயே குமட்டிக்கொண்டு வந்துவிட்டது. பின்பு அங்கு அடிக்கிவைக்கப்பட்ட பேரிச்சம் பழத்தில் ஒரு பத்து எண்ணத்தை பதம் பார்த்தபின்புதான், நாக்கு இயல்பு நிலைக்கே திரும்பியது.

நம்ம ஊர் கல்யாணத்திற்கும், அரபி கல்யாணத்திற்கும் ஒன்றைத் தவிர எல்லாமே வித்தியாசம். பொதுவான அந்த ஒன்று ‘’சாப்பிட வாங்க’’ என்றவுடன் மொத்தகூட்டமும் ராணுவ அணிவகுப்புடன் செல்வது. முதலில் எல்லோரும் எழுந்தவுடன், நான்கூட மாப்பிள்ளையை அழைத்துவருகிறார்கள் போல என எண்ணிக்கொண்டேன். பின்பு ஒவ்வொருவரின் வேகத்தைக் காணும் போதும் புரிந்துபோனது. பகலில் திருமணம் என்று எண்ணியபோது, அரபி சாப்பாட்டை ஒரு கை பார்த்திடவேண்டியதுதான் என்று நினைத்திருந்தேன். இரவு 11 மணி என்றவுடன், சாயாவும், பேரிச்சம் பழமும்தான் என்றுதான் நினைத்தேன். காரணம் ‘’12 மணிக்கு எல்லாம் யாரு சாப்பிடுவார்கள்?’’ என்று கப்பித்தனமான கால்குலேசன்தான்

டைனிங்க் ஹாலில் போய் பார்த்தால், யூ டூபில் பார்த்து, கீ போர்டில் எச்சிவிட்ட அரபி சாப்பாடு. ஒரு பெரிய்ய்ய தட்டில் இறைச்சியில் அங்க அங்க சில சாதங்கல் ஒட்டியிருந்தன, அதைச் சுற்றி ஜீஸ்கள், சோடாக்கள் என செரிமான அய்ட்டங்கள் வேறு. அன்னைக்கு என்று பார்த்து இரவுச் சாப்பாடை இரண்டுமுறை சாப்பிட்டிருந்தேன். வயிற்றில் கொஞ்சம் கூட இடம் இல்லை. ஒரு தட்டைச் சுற்றி என்னுடன் மேலும் இரண்டு பேர். பக்கத்து டேபில்காரகள் உட்பட அனைவரும் ஆக்ரோசமாக பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்க விட்டுக்கொண்டிருந்தார்கள். நானோ லெட்சுமணன் மாதிரி பந்தை காலுக்குள்ளேயே நிருத்திக்கொண்டிருந்தேன்.

 ‘’சாப்பாடு என்றால் இதுதாண்டி சாப்பாடு’’ என என் மனைவியை பிளைட் பிடித்துக்கொண்டு வந்து காட்டவேண்டும் போல இருந்தது. என்ன ஒரு டேஸ்ட். இந்த மாதிரி ஒரு விருந்து என்று அன்வர் சொல்லி இருந்தால், ஐந்து நாள் பட்டினி கிடந்திருப்பேனாடா. போச்சே.......போச்சே. சாப்பிட்டுவிட்டு வந்தவுடன் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பெயரில் இசைக் கச்சேரி வைத்து கொன்று கொண்டிருந்தார்கள். பாடல்கள் எல்லாமே ‘’நின்னுக்கோர் ர்ரீஈஈஈ வர்ணம்’’ ரகம்தான். பாடலுக்கும், தாளத்துக்கும் சம்பந்தமே இல்லை. ‘’உங்களுக்கெல்லாம், சரணம், பல்லவி, அனுபல்லவி என்றால் என்னனு தெரியுமாடா?’’ என நாக்க புடுங்குறமாதிரி கேட்கணும் தோணுச்சு. ஆனால், ‘’அவங்களோட ரேட் என்ன?’’ என்று திருப்பிக் கேட்டுவிட்டாள்? நானெல்லாம் மானஸ்தன், தொங்கிருவேன்.

அன்வரை ''அவர்'' என்று மரியாதையோடு எழுதக் காரணம், ஆள் பார்க்க இரண்டு ஹல்க்கை இணைத்துவைத்ததுபோல் இருப்பார் என்பது மட்டுமல்லாது, அவருக்கு ரெண்டு பொண்டாட்டி. அதுவும் இருவரையும் ஒரே வீட்டில்வைத்துக் கொண்டு வாழுகிறார். இது போதாதா, ஒரு மனிதனுக்கு மரியாதை கொடுக்க. ஒருமுறை ‘’எப்படி அன்வர், ரெண்டு மனைவியையும் சமாளிக்கிறீங்க?’’ என்று கேட்டேன். அதற்கு அன்வரோ ‘நிறைய பாதாம் பருப்பு, பேரிச்சம் பழம், ஆவக்காடு ஜீஸ் சாப்பிடுவேன்’ என்றார். அடங்க்..... ‘’நான் அந்த சமாளிப்பைப் பற்றி கேட்கவில்லை, ரெண்டு மனைவியையும் ஒரே வீட்டில் எப்படி சமாளிக்கிறீங்கன்னு கேட்டேன்’’. அதற்கு அன்வர் ‘’ரெண்டிற்கும் சண்டை வரும் சமயத்தில் மூன்றாவது பற்றி பேசுவேன்’’ என்றார் கூலாக.

மண்டபத்தில் வலிமா எனப்படும் விருந்து மட்டுமே நடைபெருகிறது. திருமண ரிஜிஸ்டெர் பகலில் ஏதாவது ஒரு பள்ளிவாசலிலோ அல்லது அதற்கான கவர்மெண்ட் ஆபிஸிலோ சிம்பிளான கையெழுத்துடன் முடிந்துவிடுகிறது. இது அன்வரின் எத்தனையாவது மனைவியின், எத்தனையாவது மகள் திருமணம் என்று தெரியவில்லை, மேலும் எத்தனையாவதாக கட்டிக்கொடுத்தார் என்றும் தெரியவில்லை. வயிற்றில் இடம் இல்லாத போதும், அன்வரின் அன்புக்காக இறைச்சி மட்டும் இரண்டு கிலோ தின்று நடக்க முடியாமல் நடந்து ரூம் வந்து சேர்ந்தேன்.


------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.  

புதன், ஆகஸ்ட் 03, 2016

அல்பைக் எனும் அம்மா உணவகம்.

எந்த புது இடத்துக்குப் போனாலும் என்னோட முதல் பிரட்சணை சாப்பாடுதான். ஆறுமாத புராஜெட்டுக்காக சவுதி ஜித்தா வருவதற்கு முன், ‘’சேட்டன் கடை மோட்டா ரைஸ் விண்வெளியிலேயே கிடைக்கும் போது, ஜித்தாவில் கிடைக்காதா என்ன?’’ என்று எண்ணிக்கொண்டுதான் வந்தேன். ஆனால் வந்தபின்புதான் தெரிந்தது, சேட்டன்கள் எல்லாம் அரபியாக கன்வெர்ட்டாகி சுட்ட கோழி விற்றுக்கொண்டிருக்கும் கொடூறம். சுட்ட கோழி சாப்பிடுவது என்பது எனக்கு பழகிப்போனது என்றாலும், முப்பது நாள் மூணு வேளையும் சுட்டகோழி என்றால், குஷ்டமாகும்தானே.

வெரைட்டியாக வேறு ஏதாவது சாப்பிடச் சென்றால், பர்சுக்கோ அல்லது வயிற்றுக்கோ பங்கம் வந்துவிடுகிறது. இங்கு சுட்டுப்போட்டால் கூட யாரும் அரபி தவிர்த்து வேறு மொழி பேசுவதில்லை. சுற்றி இருக்கும் ஒரு மலையாளி கடையில் கூட ‘என்ன வேண்டும்?’ என்பதை அரபியில்தான் கேட்கிறான். சிலரின் முகத்தைப் பார்த்து இவன் இன்னவன் என்று கண்டுகொள்வது கடினம், ஆனால் என் மூஞ்சைப் பார்த்தால் என் தெரு பெயர் முதல் பாஸ்போர் நம்பர் வரை தெரியும். தெரிந்தும் என்னிடம் அரபி அல்லது ஹிந்தியில்தான் பேசுறானுங்க. ஒரே ஒருதடவை மட்டும் தமிழ் கடைக்குச் சென்றேன். மலையாளியே பராவாயில்லை என்று தோன்றியது. ஆர்டர் எடுப்பவன் மாஸ்டரிடம் ‘’மூணு தோசைய்ய்ய், அதுல ஒன்னு மொருவலா’’ என்று சொல்லிவிட்டு, நம்மிடம் வந்து ‘’அவுர் ஆப்கா கியா சாயியே’’ன்னு கேட்டான். இதுக்கும் அவன் காதுபடவே கபாலி படத்தில் குமுதவள்ளியாக நடித்த ராதிகா ஆப்தேயின் கும்ம்மான போட்டோ ஷீட்டைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். 

அரபி சாப்பாடு சாப்பிட ஆசைப்பட்டு, சில அரபி ஹோட்டலுக்குச் சென்றால் சர்வநாசம். மெனுகார்டுகூட அரபியிலேயே அச்சடிக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் அதில் இருக்கும் படத்தைச் சுட்டிக்காட்டி ஆர்டர் செய்துவிட்டு டேபிளில் அமர்ந்தால், நான்குபேர் சாப்பிடும் அளவிற்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய தட்டில் கொண்டுவந்து வைப்பார்கள். இல்லையென்றால் சின்ன தட்டில் கொண்டுவருவார்கள் ஆனால் நான்கு நாளுக்கான சாப்பாட்டுப் பைசாவை புடுங்கிவிடுகிறார்கள். துபாயில் எட்டுவருடம் இருந்தும் அரபிமொழி கற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதில்லை, ஆனால் சவுதியில் இறங்கிய எட்டாவது நிமிடமே அந்த கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இப்பவெல்லாம் ஊருக்கு போன் செய்தாலே ‘’பாப்பா, மாமா கெய் பாலக், குல்லு தமாம்?’’ என்றுதான் வாயில் வருகிறது. நமக்கு சோறுதானே முக்கியம்.

இப்படி சாப்பாட்டுக்காக நான் படும் கஷ்டத்தை நண்பன் ஒருவனிடம் சொல்லி அழ, அவன்தான் அல்பைக் ரெஸ்டாரண்ட் பற்றி சொன்னான். இதுவும் KFC போன்றதுதான் என்றாலும், ஆந்திரா மெஸ்ஸில் சோறு போடுவதுபோல 10 ரியாலுக்கு இரண்டு பன்னு, 5, 6 சிக்கென் பீஸ், பிரென்ச் பிரைஸ் என அள்ளிக் கொட்டிவிடுகிறார்கள். முதல்முறையாக சாப்பிடுவதாலோ என்னவோ டேஸ்ட் சூப்பரோ சூப்பர். தொடர்ந்து சாப்பிட்டால் ஒருவேளை பொண்டாட்டி சமையல்மாதிரி சப்பென்று இருக்கலாம். லைட்ட பசிச்சா 5 ரூபாய் சான்விச், ஹெவியா பசிச்சா பத்து ரூபாய் சான்விச் என காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய சைஸ் சான்விச்சை காலையில் வாங்கிவைத்து கடிக்க ஆரம்பித்தால், ஆபிஸ் முடிந்து வீட்டுக்ப்போகும் போது கூட மிச்சம் இருக்கும். எவ்ளோ ‘’பெரிய்ய்ய மாத்திர.....’’ தேவையானி ரியாக்சன் மாதிரி அவ்ளோ பெரிய்ய சான்விச் அது.

அம்மாவைப் பார்த்த பின்புதான் ஹிலாரி கிளிங்டன் கட்சியின் அதிபர் வேட்பாளராகியிருப்பதைப் போல், அம்மா உணவகத்தைப் பார்த்துத்தான் அல்பைக்கும் ஆரம்பிக்கப்பட்டதாக எழுதாலாம் என்று நினைத்தேன். எதையும் நம்பும் தமிழரல்லவா நாம், ஆனால் என் சொந்தக்காரர் நேற்று இரவுதான் தண்டனைக்காக தலையை வெட்டும் இடத்தைக் காண்பித்தார்.  ஜித்தா எப்படி? என்று கேட்பவர்களிடம், ரைமிங்காக தப்பாக எதுவும் சொல்லிவிட்டு, நாட்டிற்கு நாக்கில்லாமல் வர எண்ணமில்லை, ஆகையால், ம்ம்ம்ம் ஓக்கே, பரவாயில்லை, நல்லாயிருக்கு என கவுண்டர் சொல்லுவது போல ‘’ஈயம் பூசுனதுமாரியும் இருக்கனும் பூசாததுமாரியும் இருக்கனும்’’ என்ற லெவலை மெயிண்டெய்ன் செய்கிறேன்.

இங்கு, டாக்ஸி எல்லாம் பாக்கிஸ்தான் நாட்டுக்காரர்களுக்கு பட்டாப்போட்டு கொடுத்துவிட்டார்கள் போல, மீட்டர் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏரியா பெயரைச் சொன்னால், 40 ரூபாய் என்பார்கள், நாம் 10 ரூபாயில் இருந்து பேரத்தை ஆரம்பிக்கவேண்டும். பத்து நிமிடத்தில் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு இருபது நிமிடம் பேரம் பேசி 25 ரூபாய்க்கு முடிக்கவேண்டும். இங்கு எனக்கு என்னுடய சொந்தக்கார மச்சான்தான் வழிகாட்டி. முதல்நாள் அவர், ‘’டாக்ஸியில் ஏறியதும் பாக்கிஸ்தானி எந்த ஊரு? எங்க வேலைபார்க்குற? என கேள்விகேட்பான், அடிச்சிகூட கேட்பான், நீ இஞ்சினியர்னு மட்டும் சொல்லிறாத, இல்லாட்டி இறங்கும் போது கூட பத்து கொடு, இருபது கொடு என்று சண்டைக்கு வருவான்’’ என்று சொன்னார்.

இதுவரைக்கும் நிறைய முறை டாக்ஸியில் ஏறியிருக்கின்றேன், அவர் சொன்னது போலவே, ‘’என்ன தம்பி? எந்த ஊரு? எங்கயிருந்து வர்றீங்க?’’ என்ற கேள்விகளை ஹிந்தியில் கேட்பார்கள் நானும், ‘’இந்தியா, மெட்ராஸ், மதராசி’’ என பதில் சொல்லுவேன். ஆனால், ‘’என்ன வேலை பாக்குற?’’ என்ற கேள்வியை கேட்டுவிட்டு, “ஆபிஸ் பாய்?, ஹவுஸ் டிரைவர்?, கிளினர்?...” என அவர்களே பதிலும் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். ‘’என்னடா இது ஜித்தால ஒரு பொறியாளனுக்கு வந்த உச்சகட்ட சோதனை’’ என்று நானே நினைத்துக்கொள்வேன். எங்கம்மா சத்தியமா நான் இஞ்சினியர்னு சொன்னால் கூட நம்பமாட்டார்கள் போல. நம்ம டிசைன் அப்படி. டாக்ஸிக்காரர்களுக்கு பத்து ரூபாய் அதிகம் கொடுப்பதில் கூட பிரட்சனையில்லை, சிலபேர் வண்டியில் நாத்தம் குடலைப் புடுங்கும். பின் சீட்டில் போய் உட்கார பின் கதவைத் திறந்தால், வம்படியாகப் பிடித்து முன்னாடி உட்காரவைத்து கையை தூக்கி தூக்கி தும்சம் செய்வார்கள். ஒருமுறை பொறுமையிழந்து ‘’குழிக்க வேண்டியதுதாணடா?”” என கேட்டுவிடலாம் என்று தோணியது, ‘’குளிச்சிட்டேனே, வேணும்னா மோந்துபாரு” என்று சட்டயை கழட்டி மூஞ்சை அக்குள்குள்ள கொண்டுபோயிருவானோ? என்ற மரணபயத்தில் வாயையும் மூக்கையும் பொத்திக்கொண்டு உயிர் பிழைத்தேன்.

என் வாழ்வில், இன்னும் என்னென்ன கொடுமைகளை காட்டக் காத்திருக்கிறதோ இந்த உலகம்?. 


--------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.      

ஞாயிறு, ஜூலை 31, 2016

ரஜினி.

சென்னை பெருவெள்ளத்தின் போது ‘’கன்னட நாய் ரஜினியே....’’ என தூற்றியவர்களை, கபாலி படத்தின் முதல் காட்சிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து படம் பார்க்கவைத்ததுதான் ரஜினி பவர். கண்டிப்பாக இது வேற எந்த நடிகனுக்கும் கிடைக்காத ஒரு வரம். மத்தப்படி ஒரு படத்தைப் பற்றி விமர்சனம் செய்வது என்பது அவர் அவர் விருப்பம். குத்துப்பாட்டை எதிர்பார்த்து ஏமாந்து குத்துவாங்கிய ஒருவன் கண்டிப்பாக படம் ‘நல்லா இருக்கிறது’ என்று எழுதப்போவது இல்லை. அதேவேலையில், முந்திய நாளில் லிங்காவைப் பார்த்துவிட்டு, இந்த படத்தை ‘மொக்கை’ என்றும் எழுதப்போவதில்லை. எல்லோரும் ‘’சூப்பர்’’னு சொல்லுறமாதிரி படம் பண்ணனும்னா அப்ப அஜித் நடிச்ச ‘ஆஞ்சிநேயா’வைத்தான் ரஜினியைவைத்து மறுபடியும் எடுக்கணும். 

மெட்ராஸ் படத்தை முதல் தடவை பார்க்கும் போது எனக்கு அந்த படம் சுத்தமாக பிடிக்கவில்லை. மரண மொக்கைன்னு பலபேரிடம் சொன்னேன். பிற்பாடு அந்த படத்தின் அரசியலை பொதுவெளியில் தெரிந்துகொண்டு பார்த்தபின்புதான் அது படமில்லை சிலரது வாழ்க்கைன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அணுவணுவா ரசிச்சேன். ஜானி கேரக்ட்டருக்கே மாறி மாறி பார்த்த படம். என்னைய மாதிரியேதான் இங்க பலபேர் கபாலியை புரிந்துகொண்டது. யார் யாருக்கு ரஜினியை, ஆண்டனியோட மோதற பாட்ஷாவாக பார்க்கப்பிடிக்குமோ அவர்களுக்கு கண்டிப்பாக  இந்த கபாலி பிடிக்காது. எனக்கு ‘’ஆறில் இருந்து அறுவது வரை’’ ‘’எங்கயோ கேட்ட குரல்’’ ‘’முள்ளும் மலரும்’’ ரஜினியைத்தான் பிடிக்கும். அதுனால எனக்கு கபாலியை ரொம்ப இல்லாட்டியும், பிடிச்சிருந்தது.

நேற்றுவரை ரஜினியை பிடிந்திருந்த உங்களுக்கு, ‘’மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேக்காது’’ என்று பாடிக்கிட்டு வரும் ரஜினியை பிடிக்கவில்லை என்றால், தப்பு ரஜினி மேல இல்ல, ரஜினியையும் தாண்டி உங்களுக்கு வேற ஒன்னு புடிச்சியிருக்குன்னு அர்த்தம். ரஜினியின் கெட்டப்பிற்காகவே இந்த படத்தை பார்க்கனும்னு முடிவுபண்ணியிருந்தேன். மம்முடி, அமிதாப்... என சீனியர் நடிகர்கள் எல்லாம் அவர்களோட வயதுக்கு ஒப்பான கதாபாத்திரத்தில் வெற்றிபெற முடியும் என்றால், ஏன் ரஜினியால் முடியாது? என பலநாட்கள் எனக்குள்ளே நான் கேட்டுக்கொண்டது. எப்படியோ ரஜினிக்கும் கேட்டுவிட்டது போல. கள்ள பிரிண்ட்ல பார்த்துவிட்டே, தன் மகளையும், தன் மனைவியையும் அடையாளம் காணும் இடத்தில் எனக்கு கண்ணுல இருந்து ஜலம் வந்திடுச்சின்னா, தியேட்டர்ல பார்த்திருந்தா கதறி அழுதிருப்பான் இந்த கைப்புள்ள.

ரஜினி என்ற ஒரு மகா நடிகனை, ‘’உங்க மாஸ் என்ன? உங்க வேலீவ் என்ன? உங்க லெவல் என்ன?’’ என்ற இன்ன பிற என்ன? என்ன?க்கு இரையாக்கிவிட்டோமேன்னு நினைக்கும் போது, வருத்தம்தான். இந்த படத்தில இருக்குற குறைகளை / லாஜிக் மிஸ்டேக்கை சுட்டிக்காட்டி படம் சரியில்லை என்று சொல்லுபவர்களுக்கும், வசனத்தையும், பாடலையும் சுட்டிக்காட்டி படம் சரியில்லை என்று சொல்லுபவர்களுக்கும் வித்தியாசம் என்ன என்று சொல்லித்தர தேவையில்லை.

ஒருவன் ‘’மணி சார் அளவிற்க்கு பா.ரஞ்சித்திற்கு ரஜினியை பயன்படுத்த தெரியவில்லை’’ என்று கமெண்ட் எழுதுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனுடய கருத்து நூறு சதமானம் உண்மைதான், தளபதி ரஜினிக்கு பக்கத்தில் நிற்க்கக்கூட கபாலி ரஜினிக்கு தகுதியில்லை. ஆனால், அந்த கருத்தில் ஒரு அரசியல் இருப்பதை உங்களால் உணரமுடிகிறதா?. இல்லை என்றால். தெரிந்துகொள்ளுங்கள். மணிக்கு பின்னால் வரும் ‘சார்’ பா.ரஞ்சித்திற்கு பின்னால் வராததுதான் அந்த அரசியல்.

ரஞ்சித்தினுடய நேர்காணலை நீங்கள் பார்த்தீர்களேயானால், கபாலி கண்டிப்பாக ரஜினியின் படம் இல்லை என்பதை உங்களால் உணரமுடியும். ஆனால் ரஞ்சித்தையும் மீறி ரஜினியின் பெயர் வெளியே தெரிவதற்கு காரணம், தன்னுடய பாணி படம் இல்லை என்று தெரிந்தும் அதில் தன்னை இணைத்துக்கொண்டதற்கான ரஜினியின் வெற்றி அது. ஒரு நேர்காணலில் ரஞ்சித்திடம் கேள்வியாளர் ‘’இந்த படத்தில் சில அரசியலை பேசியிருக்குறீர்கள், அது மக்களிடம் ரீச் ஆனதாக நினைக்கின்றீர்களா?’’ என்று கேட்டதற்கு, ‘’கண்டிப்பா, அதனாலதான் கொஞ்சப்பேரு என்ன ரொம்ப திட்டிக்கிட்டு இருக்கானுங்க”” என ரொம்ப இயல்பா பதில் சொன்னார். பாலுமகேந்திரா, பாலச்சந்தருக்கு அடுத்ததாக ஒரு இயக்குனரிடம் இருந்து இவ்வளவு முதிர்ச்சியான இண்டர்விய்யூவை நான் பார்த்த்தே இல்லை.

கபாலி படத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கலாம், அல்லது ஓட்டையில் கபாலிப்படம் இருக்கலாம். அதையும் மீறி இதை பலபேர் கொண்டாடக் காரணம் ரஜினி என்ற ஒரு மிகப் பெரிய சக்திதான். படம் திரைக்கு வருவதற்கு முன்பாக மார்க்கெட்டிங்க் என்ற பெயரில் தாணு செய்த அழுச்சாட்டியங்கள் ரெம்ப அதிகம் என்ற போதிலும், ரஜினிக்காக அனைத்தும் மன்னிக்கப்பட்டது.

படத்தின் குறையாக சில பேர், குமுதவள்ளியை தேடிப் போகும் காட்சியை சொல்கிறார்கள். கண்டிப்பா அவனுங்க எல்லாம் பொண்டாட்டி மடியில தலை வச்சிக்கிட்டு, லேப்டாப்பில் டைப்பண்னுனவனுங்களா இருப்பானுங்க. குடும்பத்த பிரிஞ்சு பல வருசம் வெளியில இருந்துட்டு வீட்டுக்கு வருபவனுக்குத்தான் தெரியும் தனிமையோட வலி என்னன்னு. தன்னோட பொண்ணுகிட்ட ‘’நான்தான் உங்கப்பான்னு தெரியும்ல, பின்ன ஏம்ம என்ன வந்து பார்க்கல?’’ என்று சொல்லும் போதும், பொண்டாட்டிய பார்க்கப் போகுற ராத்திரியில் ‘’என்ன செய்றாளோ, எப்படி இருக்காளோ?’’ என ஏங்கும் காட்சியிலயும் சரி 25 வருசம் ஜெயில்ல இருந்த தனிமையின் வலியை அப்படி பிரதிபலிக்கும். இன்னும் எவனாவது குமுதாவைத் தேடிப்போனதுனாலத்தான் கபாலி எனக்கு பிடிக்கலன்னு சொன்னா, என்னோட பக்கத்து ரூமுக்கு ஆள் தேவைப்படுது, பயபுள்ளய புடுச்சி சவுதிக்கு அனுப்புவையுங்க.

மாய நதி பாடலில் வரும், நீ செத்துட்டேன்னு நெனச்சேன் வசனமும், அதில் வரும் முதிர்ச்சியான் காதல் விளையாட்டுகளும் சரி ‘’வந்திட்டாரு சொல்லு, திரும்ப ரஜினி வந்திட்டாருன்னு சொல்லு, முள்ளும் மலரும்ல எப்படி போனாரோ அப்படியே திரும்ப வந்திட்டாருன்னு சொல்லு’’ன்னு சொல்லத்தோணுது.

-----------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.