ஞாயிறு, ஜூன் 01, 2014

ஆண்டுவிழாவும் அய்யணார் பாண்டியும்.


“கையெழுத்து எப்படி இருக்குமோ அப்படித்தான் தலையெழுத்தும் இருக்கும்” ன்னு சொல்லி சொல்லி பயங்காட்டியே அழகா எழுதவச்ச ‘எஜுகேட்டட் பேமிலி’ யின் முதலாவது பட்டதாரி நான். ‘எழுதுற எழுத்து அச்சுக்குண்டா இருக்கணும்டா’, ‘கண்ணுல ஒத்திக்கற அளவுக்கு இருக்கணும்டா’ போன்ற வசனங்கள் பத்தாவது பரீட்சை எழுதுவது வரைக்கும் தொடர்ந்தது. ‘இதுக்கு மேல நாய் வாலை நிமித்த, குழலைச் சொரிகிவைத்தாலும், குழல்தான் வளையும்’ எங்கிற உலக உண்மை நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதுதான் அவர்களுக்கு தெரிந்தது.

அழகா இல்லை என்றாலும் மோசமாக இல்லை என்கிற அளவுக்கு என் கையெழுத்து இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் எங்க வீட்டுக்கு அடுத்தவீட்டில் இருந்த சாகுல் ஹமீது தான். சுத்துப்பட்டு பதினெட்டுப் பட்டி கிராமத்திலேயே அவரு மட்டும்தான் எம்.ஏ படித்தவர், முஸ்லீம் என்றாலும் ஹிந்து பத்திரிக்கை வாங்கிப் படித்தவரும் கூட. ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை இப்போது நாம கம்யூட்டரில் தட்டச்சு செய்வதைக்காட்டிலும் அவர் எழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். ஒரு வாக்கியத்தை எழுதிக்கொடுத்தால், அரைமணி நேரம் வச்ச கண்ணு வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இன்னும் கையெழுத்து என்றால் அவர் பெயர்தான் என் நினைவுக்கு வருகிறது.

பள்ளிக்கூட காலங்களில் பொறாமைப்பட வைத்தது அய்யனார் பாண்டியன், மற்றும் முருகையா ஆகியோரின் கையெழுத்து. அய்யனார் பாண்டியன் கையெழுத்து அழகாக இருக்கும், ஆனா ஒவ்வொரு எழுத்தும் அத்தி தண்டி தண்டியா இருக்கும். ஆய்வாளருக்கு மனு எழுத சொன்னா, ஆயிரம் பக்கமாவது ஆகும். ‘ஐயா, வணக்கம்’ என்பதே அஞ்சு பக்கத்துக்கு வந்திடும். ‘டேய், அய்யானாரு எழுத்த குண்டு குண்டா எழுதுறது தப்பில்லை, அதுக்காக குண்டுகல்யாணம் சைசுக்காடா எழுதுறது?’ என்று ஒரு வாத்தியாரே கமெண்ட் அடிச்சது எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கும். பரீட்சை ஹாலில், நாங்க நாலு பக்கம் கொண்ட மெயின் சீட்டில், இரண்டாவது பக்கத்தை எழுதும் போது அவன் அடிசனல் சீட் ஆறு வாங்கியிருப்பான். அவனுக்கு மட்டும் பேப்பரைக் கட்ட நூலுக்கு பதிலாக சணல் கயிறே தேவைப்படும்.

‘அம்பது பக்கத்துக்கு எழுதி எம்பது மார்க் எடுக்கும் நீ அறிவாளியா? இல்ல பத்து பக்கம் எழுதி அம்பது மார்க் எடுக்கும் நான் அறிவாளியா?’ என்று அவனிடம் லந்தை கொடுக்குறதுண்டு. ‘உன்னமாதிரி நானும் அம்பது பக்கம் எழுதியிருந்தால், என்னோட மார்க் 250 தாக்கும். மைண்டிட்’ ன்னு சொல்லி தெரிக்கவிடுறது மட்டும் எங்களுடய அப்போதைய ஒரே ஆருதல்.

அய்யணார் பாண்டிக்கு எக்ஸ்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்னா ரொம்ப பிடிக்கும், பாட்டுப் படிப்பது, டான்ஸ் ஆடுவது, நடிப்பது, இந்தமாதிரி அனைத்து திறமைகளையும் தன்னகத்தே கொண்ட தாடியில்லா டி.ராஜேந்திரன் அவன். ‘இந்த வருட ஆண்டுவிழாவை அதகளப்படித்திடனும்’ என்று ஆசிரியர் கூட்டம், கங்கனம் கட்டிக்கொண்டு, பரதேசி மாதிரி இருந்தவனிடம் ‘எல நீ பிரபுதேவா மாதிரிலா இருக்க, நீ முக்காலா, முக்காப்புலா பாட்டுக்கு ஆடு’, நியூஸ் ரீலில் பேமஸ் குட்கா மகேஷ் குரல் மாதிரி இருந்தவிடம் போய் ‘ஏல... இம்புட்டு நாளு நீ எங்கயிருந்த, ஏய் என்னமா பாடுத, நீ தான் மெலோடி சாங்க் பாடுத’ என கிடச்சவன எல்லாம் நீ டான்ஸ் ஆடு, நீ பாட்டுப்பாடு என உசிரெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

எப்படியோ படாத பாடுபட்டு ஒரு லிஸ்டை ரெடி பண்ணி, தலைமையாசிரியரிடம் நீட்டியவுடன், லிஸ்டில் இருந்த பத்துப்பேரில், பாதிபேரை நீக்கிவிட்டார். ‘என்னையா இது? எல்லாம் பத்தாவது, பனிரெண்டாவது படிக்கிற பயலுகளா இருக்கானுங்க. இப்படி டான்ஸ், பாட்டுன்னு இழுத்துவிட்டா, பிறகு பரீட்சை ரிசல்ட் டான்ஸ் ஆடிடும் தெரியும்ல, போங்க போயி அந்த பயலுகளுக்கு பதிலா +1 அய்யணார்கிட்ட ஒரு நாடகம், டான்ஸ்க்கு ஏற்பாடு பண்ணசொல்லுங்க.’ என்று தலைமை ஆசிரியர் சொல்ல, அடுத்த பத்தாவது நாள் நாடகத்துக்கு ஸ்கிரிப்ட் ரெடி. பத்து ஒரு குயர் நோட்டுப் போட்டு ஸ்கிரிப்ட் / திரைக்கதை எழுதியிருந்தான். நல்ல வேளை நாடகம் பதினைந்து நிமிடம்னு முன்னாடியே சொல்லிட்டானுங்க, இல்லன்னா ஸ்கிரிப்ட் பேப்பரை கொண்டு வர மாட்டுவண்டியத்தான் அனுப்பியிருக்கனும். படித்த மூன்று இளைஞர்களின் கதை பற்றிய நாடகம் அது. அந்த நாடகத்தைப் பற்றி இப்ப கேட்டாலும், கழுவி கழுவி ஊத்துவானுங்க. அவ்வளவு மொக்கையான நாடகம். பகவதி பாதி, வேட்டைகாரன் மீதி மிக்ஸ் பண்ணி படம் எடுத்தமாதிரி.

ஆனாலும், அய்யனார் பாண்டி மற்றும் அவனுடன் நடித்த ரெண்டு பேரு மட்டும், நாடகம் சூப்பர் ஹிட், உலக நாடக மேடையிலே இதுமாதிரி கிடையாதுங்குற ரேஞ்சுக்கு பீலா விட்டுக்கொண்டு இருந்தார்கள். அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழித்து அந்த ரெண்டு பேரில் ஒருத்தனுக்கு உண்மை தெரிந்து ‘ஆமாம் அது ஒரு மொக்கையான நாடகம்’ னு தைரியமாக ஒத்துக்கொள்ள பல வருடங்கள் தேவைப்பட்டது. கடைசி வரை அய்யனார் பாண்டியனுக்கும், அந்த மற்றொருவனுக்கும், என்னைப் போல தைரியம் வரவில்லை.

நாடகம் முடிந்த கையோடு அய்யணார் பாண்டியனின் டான்ஸ் ஸோலோ பெர்பாமன்ஸ். பிஸ்தா படத்தில் ‘வில்வெட்டா, வில்வெடா வில்ல, வில்ல வெட்டட்டா....’பாடலுக்கு. நாடகத்துக்கு ஒத்திகை பார்க்கும் போது, நாங்க எவ்வளவு கெஞ்சியும் ஆடிக்காட்ட மாட்டேன்னு அடம் புடிச்சாப்புடி. ‘எல்லோரும் ஸ்டேஜில பாருக்க, இப்பவே ஆடிக்காட்டுனா உங்களுக்கு சுவாரஸ்யமா இருக்காது’ என ஏக போக பில்டப். நாடகம்தான் பிளாக்பஸ்டர் பப்படம் ஆகிடுச்சு, அய்யணார் டான்ஸ் ஆடி பிக் அப்லாஸ் வாங்கி நம்ம கிளாஸ் மானத்தை காப்பாத்திடுவாருன்னு ஆவலுடம் எதிர்பார்திருந்தோம்.

நாலு நிமிச பாட்டுல முதல் ஒரு நிமிசம் பேக் சாட்டுல திரும்பி நின்னாப்புல, அடுத்த ஒரு நிமிசம் இடது பக்கமா போயி கைய சுத்தி சுத்தி முருக்கு சுட்டாப்புடி, அடுத்த ஒரு நிமிசம் வலது பக்கமா போயி அதே மாதிரி இன்னொரு முருக்கு சுட்டாப்புடி. கடைசி ஒரு நிமிசம் செண்டரா வந்து கைய முருக்கி முருக்கி சுட்ட முருக்கு எல்லாத்தையும் எடுத்து சாப்பிடாப்பிடி. ஸ்டேஜிக்கு போகுறதுக்கு முன்னாடி ‘நவரச நாயகன் கார்த்திக் மாதிரி ஆடுவேன் பாரு’ ன்னு சொல்லிட்டுப்போனவன் அந்த பாட்டுல வர்ற கவுண்ட மணிய விட மோசமா டான்ஸ் ஆடுனதை நென்ச்சாலே ரொம்ப பீலிங்க்ஸ் ஆவுது. டான்ஸ் பாக்குற முன்பு வரை நாடகம் ஒரு குப்பை, பெரிய மொக்கை என சொன்னவன் எல்லாம், டான்ஸ் பார்த்த பின்னாடி நாடகம் சூப்பர் சூப்பர்னு ‘அது இது எது’ மாக்காப்பா மாதிரி கைதட்டி பாராட்டினாங்க.

ஆக்சுவலா, அ.பாண்டி எங்களுக்கு ஒரு செட் முந்தியவர், திடீர் சுகவீனத்தால், ஒரு வருடம் நஷ்டப்பட்டு எங்களுடன் +1ல் படிப்பை தொடர்ந்தவர். நாங்க எப்போது அய்யனார் அண்ணன் என அழைத்தாலும், வயது வித்தியாசம் பார்க்காமல் நாங்க கொடுக்கும் லந்தையும், செய்யுற நக்கலை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், பாசத்தை மட்டுமே திருப்பிக் கொடுத்த சிறந்த நண்பர். பள்ளிக்காலத்துக்கு அப்புறமா ஒரு நாலுவருடம் கழித்து ஒரே ஒரு முறை போனில் பேசியது, அப்புறம் டச்சே இல்லாம போச்சு. எப்பவாவது பார்க்கும் போது நாடகத்திலும், டான்ஸிலும் ஏற்பட்ட தவறுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய மனசு பூரா நட்போடு காத்திருக்கும் தம்பி.


--------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

4 கருத்துகள்:

  1. You should have written about GK's hand writing.. a non comparable hand writing :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத பத்தி எழுதனும்னு தான் நெனச்சேன். அய்யாணார் பாண்டிய பத்திய அத்தியாயமே அதிகமாகிட்டதால அடுத்து பார்க்கலாம்.

      நீக்கு