திங்கள், ஜூன் 09, 2014

என்ன்ன்ன பொண்ணுடா அவ..


பள்ளியில் கம்பரோடு காலாட்டிக்கொண்டே ராமாயணத்தையும், திருவள்ளுவர் தோளில் கை போட்டபடியே ‘கடலைப்பால்’ பற்றிய விவாதத்தில் வீற்றிருந்த உ.வே சாமிநாத அய்யரின் எள்ளுப் பேரனின், கொள்ளுப் பேரனாகிய என்னை, பொறிவைத்துப் பிடித்து பொறியாளராக்கிய பெருந்துயரமான காலகட்டம். ஆறு சப்ஜெக்டில் ஒரு சப்ஜெக்ட் ஆங்கிலம் என்பதையே ஏற்காத இந்த பிஞ்சு மனசு, அனைத்து சப்ஜெக்டும் ஆங்கிலம் என்றதும் சின்னதாக இல்லை பெரியதாகவே ஆடிப்போய்விட்டது. கலர் கலர் கன்னிகள் தரிசனத்தை கரிசனத்தில் கொண்டு, ஆங்கிலத்தை அலட்சியமாக எதிர்கொள்ள எத்தனித்தவனுக்கு, அய்யஹோ......... அளப்பெரும் ஏமாற்றம்.

இப்படி திரும்பிய இடமெல்லாம் டின்னுகட்டிகொண்டிருந்த நேரம், ஊருக்கு இரண்டு நாள் விடுமுறை கழித்து, மீண்டும் பாளையங்கோட்டை சிறையின் சிவகாசி பிராஞ்சுக்கு புத்தக பொதியுடன் பிரயாணிக்க பஸ்டாண்ட் வந்துகொண்டிகொண்டிருந்தேன். அதிகாலை ஐந்து மணியிருக்கும், அனைவரும் அயர்ந்து தூங்கும் நேரம், தெரு நெடுக மின்விசிறிச் சத்தம் தூக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியது. தூக்கமும், துக்கமுமாக நடந்துகொண்டே பஸ்டாண்ட் வந்தடைந்தேன்.

காலை தொழுகைக்கு கடன் கேட்க செல்வது போல சாரை சாரையாக தொண்டு செய்து பழுத்த பழங்கள் மசூதியை நோக்கி வேகமெடுத்துக் கொண்டிருந்தனர். பஸ்டாண்டில் யாருமே இல்லை, சிமெண்ட் பெஞ்ச் வா, வா என்றழைத்தது. மூட்டையை ஓரங்கட்டி, மூடினேன் கண்ணை. முழித்து நேரத்தை பார்க்கும் போது மணி ஏழரை. கிட்டத்தட்ட என் நிலமையும் அதேதான். அந்த நேரத்திலும் பஸ்டாண்ட் பயணிகளுக்காக ஏங்கிக்கொண்டுதான் இருந்தது. ‘ஏதாவது பஸ் ஸ்ரைக்கா இருக்குமோ? முக்கிய தலைவர்கள் யாரும் முக்தியடஞ்சிருப்பாங்களோ?, பேசாம வீட்டுக்கே திரும்ப போய் பஸ் வரலன்னு சொல்லிறலாமா? வேண்டாம், வீட்டுக்குப் போனா, கொண்டுவந்த புக்க எடுத்து படிக்கச்சொல்லுவானுங்க, அதுக்கு பேசாம காலேஜுக்கே போயிரலாம்’ என எனக்குள் நானே பேசிக்கொண்டிருந்த நேரம்.

வெள்ளக் கலரில் சிமெண்ட் கலர் கோடு போட்ட டாப்ஸ், சிமெண்ட் கலர் பேண்ட் போட்டு ஒரு பெண். ‘இறைவா இதுக்குத்தானா? இந்த கன்னியைக் காணத்தான் இந்த காளையை கண் அசத்தினாயா? இது எல்லாம் உன் திருவிளையாடலா?’ என மறுபடியும் எனக்கு நானே. போட்டிருக்குற டிரஸ்ஸை பார்த்தா கண்டிப்பா கான்வெண்டுலதான் படிக்கனும், இங்கிலீஸ் எல்லாம் பிச்சு ஒதறும், இந்த பொண்ணை காதலிச்சா இவள வச்சி, வைக்கிற அரியர் பேப்பரை எல்லாம் கிளியர் பண்ணிறலாம் என முடிவெடுத்த நேரம், பக்கத்தில் இருந்து யாரோ வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதாக ஒரு மாயை. ‘நம்ம வாழ்க்கையில அப்படி எல்லாம் நடக்காது’ என்று பக்கத்திலிருந்தவன் கன்னத்தில் அடித்துச் சொல்லிக்கொண்டிருந்த அந்த அப்படி, இப்படி சீக்கிரம் நடக்குமென்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.

கிள்ளிப் பார்த்துக் கொண்டேன், ஆம், உண்மைதான், அவளேதான், அவள் தான் என்னைப் பார்க்கிறாள். நான் பார்க்கும் போது திரும்பிக்கொள்கிறாள், நான் திரும்பும் போது எனைப் பார்க்கிறாள். இன்னும் என்னால் நம்பமுடியவில்லை, என்னைத்தான் பார்க்கிறாளா? எதற்கும் பேண்டில் ஜிப் முறையாக இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டேன். இப்போது ‘கண்பார்ம்’ ஆகிவிட்டது, ஜிப் போட்டிருப்பதும், அந்த பெண் என்னைத்தான் பார்க்கிறாள் என்பதும். எதிர்வீட்டு ஜீனத், பக்கத்து வீட்டு மெகருன்னிசா மாதிரி மொன்னையான பீஸ் இல்லை அழகான பீஸ், சீ ச்சீ.. அழகான அதுவும் பேரழகான பெண். முதல் முறை என்பதால் ஒரே படப்பிடிப்பாக இருந்தது.

எப்போதும் ‘குளிச்சிட்டு காலேஜுக்கு போடா’ என்று கத்தும் அப்பா, இன்னைக்குன்னு பார்த்து கத்த மறந்ததால், கொஞ்சம் கிளாமர் குறைந்திருந்தது, கண்டிப்பாக அவளுக்கு அது ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது, குட்டிகுரா பவுடரின் மனம் அதை கவர்செய்திருக்க வேண்டும் என்றே என் கணிப்பு. பேசவேண்டும் என்ற ஆவல் அவளிடம் அப்பட்டமாக தெரிந்தது, எப்படியும் பேசிவிடுவாள் என்று நான் உறுதியாக நம்பினேன், ‘ஆனா, இங்கிலீஸ்ல பேசிவிட்டால்? என்ன பண்ணுறது என்ற கவலை ஓப்பன் செய்த பீர் பாட்டில் போல பொங்கிக்கொண்டு வந்தது. அதையும் மீறி இங்கிலீஸ்ல பேசினா, ‘நான் ஊமை’ன்னு தமிழ்ல சத்தம்போட்டு கத்திக்கொண்டே இடத்தை காலி பண்ணிறலாம்' என்று எண்ணிக்கொண்டிருந்தேன். நம்பினார் கைவிடப்படார்.

‘மணி என்ன?’ என்று கேட்டால்,

அண்ணான்னு சொல்லாத ஆனந்ததில் ‘7.45’ என்று சொன்னேன்.

‘காலேஜா?’

‘ம்ம். மெப்கோ,’

‘அது எங்க இருக்கு?’ (என்னது எங்க இருக்கா? சேரும் போது பச்சபுள்ளைகிட்ட கேட்டா கூட எங்க காலேஜைப் பற்றி பக்கம் பக்கமா சொல்லும்னு சொன்னானுங்களே, படுபாவீங்க, நாசமா போவானுங்க என சாபம் விட்டு)

‘சிவகாசிக்கும் விருதுநகருக்கும் இடையில இருக்குது’. என்று ஜொல்லினேன்.

‘அச்சச்சோ ரொம்ப வெயில் கொளுத்துமே? குற்றாலத்துக்கு பக்கத்துல இருந்துட்டு எப்படி சமாளிக்கிறீங்க?’ ன்னு கேட்டதுமே முடிவே பண்ணிட்டேன். காலேஜைப் பார்த்துவிட்டு பெத்த அப்பன், ஆத்தாகூட கவலைப்படாத இந்த விசயத்தை பற்றி ஒரு பொண்ணு கவலைப்படுதுன்னா என்ன அர்த்தம்? அதுதானே அர்த்தம்? அதே தான். என முடிவுபண்ணி, முறையா போய் பொண்ணு கேட்போம் இல்ல, நொல்லன்னு சொன்னானுங்கன்னா பொண்ண தூக்கிருவோம் என சபதம் எடுத்த நேரத்தில், பஸ் வந்து நின்றது.

நல்லவேளை, பஸ்ஸில் கூட்டமே இல்லை, புளியங்குடி போகுறவரை வருத்துக்கொண்டே செல்லலாம் என எண்ணியபோது, எருமையில வந்த எமன் மாதிரி ‘பாப்பா, நீ முன்னாடி போ, தம்பி நீங்க இந்த சீட்டுல உட்காருங்க’ ன்னு சொல்லி பாழாப்போன பஸ் கண்டெக்டர் கட்டிக்கொண்டிருந்த கனவுக் கோட்டையில் கருப்பு பெயிண்ட் அடிச்சிட்டான். அவள் நிருத்தம் வந்த பின்பும் அந்த பிரிவின் வலி அவள் கண்களில் தெரிந்தது. நான் பார்க்க, அவள் பார்க்க, பஸ் போக, அவளுடைய நினைவுகளில் நானும் போக, நாசமாப் போன காலேஜ் வந்துவிட்டது.

‘காலேஜ் பக்கமாக இருக்குது என்பதற்காக மாசம் மாசம் வரக்கூடாது, ரெண்டுமாசத்துக்கு ஒரு தடவ வந்தா போதும்’ என்று அப்பா சொன்னது எல்லாம் ஞாபகத்துல வச்சிக்கிட்டு, அடுத்த வாரமே ‘அத்தாச்சிய ரொம்ப தேடுது’ ன்னு அழுதுகொண்டே வீட்டுல வந்து நின்னுட்டேன். ‘வருங்காலத்தை கரெக்டா கணிச்சு, உலகம் 2050 ல இப்படித்தான் இருக்கும், அதுக்கு ஏத்தமாதிரி நாம இந்தகாலத்துல இப்படித்தான் வாழணும்’ என்று பிளான் பண்ணி வாழ்ந்த என் நண்பன் பெயர் அயூப் கான்.

‘இப்ப என்னோட வயசு 20, எனக்கு எப்படினாலும் 27 வயசுல கல்யாணம் பண்ணிவைப்பாங்க, நம்ம ஊர் நிலவரப் படி பார்த்தால், கல்யாண பொண்ணுக்கு வயசு கண்டிப்பா 18 ஆகத்தான் இருக்கவேண்டும்’ என கணக்கு எல்லாம் பக்காவா போட்டு ஆறாவது வகுப்பு படிக்குற பெண்ணை அப்போது லவ் பண்ணிக்கொண்டிருந்தான். அவனிடம் நடந்த விசயத்தை எல்லாம் சொல்லி, ‘நாளைக்கு காலையில அந்த பொண்ண போய் பஸ்டாப்புல பார்க்குறோம், நீ ரெடியா இரு’ என்று சொல்லி முடிக்குறதுக்குள்.

‘அந்த பொண்ணு பேரு, பர்ஹானா. இரசலியா புரம் தெருவில் இருந்து வருகுது, புளியங்குடியில் +2 படிக்குது. அந்த பொண்ணோட அப்பா மெயின் ரோட்டுல பலசரக்கு கடை வச்சிருக்காரு...........................’ என லிஸ்ட் நீள, எனக்கு நா வரண்டு, கண்ணு ரெண்டும் சைடுல சொருகிடுச்சு.

 ‘டேய், அயூப்பு நீயுமாடா?’ என கவுரவ பட சிவாஜி எபெக்ட்டுல நெஞ்ச பிடித்துக்கொண்டே கேட்க. ‘ஆறாவது வகுப்பு படிக்கிற என் ஆள கவுத்துரதுக்கு, ரைம்ஸ் படிக்கவே நேரம் சரியா இருக்குது, இதுல அது வேறயா’ என அவன் கூற

‘அப்ப வேற யாருடா?’ என்று கேட்டேன்.

அதற்கு அயூப், ‘வேற யாருடா இல்ல, வேற எத்தன பேருடா? ன்னு கேளு’ என்றான்.

என்னடா சொல்லுற?.

‘அன்னைக்கு நீ ஏறுனது வேணும்னா பாய்ண்ட் டு பாய்ண்ட் பஸ்ஸா இருக்கலாம், ஆனா அந்த பொண்ணு எங்கும் நிற்கும் பஸ்மாதிரி. உங்க சொந்தத்திலேயே 5 பேரு ஏறுனா அந்த பஸ்ஸுலதான் ஏறுவேண்ணு நிக்குறானுங்க, அவங்க யார் யாருன்னா...............’

என் கல்லூரி நாட்களில் வெள்ளிக்கிழமை மாலை கிளம்பி, சனிக்கிழமை காலை வந்து சேர்ந்த ஒரு நாள் உண்டு என்றால் அது அன்று மட்டும்.

ஸ்டார்ட் மியூசிக்.

♫♫♪ இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா....
அவங்க கண்ணு ரெண்டும் கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா....♫♫♪♫♫♪♪


------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

7 கருத்துகள்:

  1. என்ன சரளமான எழுத்து நடை! பிரமாதம்!

    பதிலளிநீக்கு
  2. நல்லவேளை...
    அதுக்கப்புறம்தான் ஒழுங்கு மரியாதையா படிக்கவே ஆரம்பிச்சீங்கலாமே?

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு