திங்கள், டிசம்பர் 26, 2011

இந்த படை போதுமா...?, இன்னும் கொஞ்சம் வேணுமா...?


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
டிசம்பர் 25 ஐ உலகமக்கள் மறந்தாலும் மறக்கலாம், ஆனால் டிசம்பர் 26 ஐ எவரும் மறக்கமாட்டார்கள், மறக்கவும் முடியாது. கடற்தாயின் ருத்தரதாண்டவம் சுனாமி எனும் பெயரில். மிகச்சரியாக 7 வருடங்கள் உருண்டோடிய நிலையில். அதே போல் ஒரு சுனாமி, மெரினாவில் உண்டானது, ஆம், அது மக்களின் சுனாமி!. ஆகாயத்தில் இருந்து பார்த்தவன் கண்டிப்பாக அப்படித்தான் எண்ணியிருப்பான், என்ன இது மறுமுறை ஒரு சுனாமியா என்று. மலையாளிகளுக்கு நாம், நன்றி கடன் தான் பட்டிருக்கின்றோம், என் உறவுகள் இத்தனை உணர்வு உள்ளவர்கள்!!! என்று ஆச்சிரியப்பட்டு, மெய்சிலிர்த்து தெரிந்துகொண்டமைக்கு.

கடந்த இதழில், பாரதிராஜாவின் நேர்காணல், ஆனந்தவிகடனில் பிரசுகமாயிருந்தது. அதில் முல்லைபெரியாருக்காக திரைத்துறையில் இருந்து ஏன் இன்னும் எந்த போராட்டமும் நடத்தவில்லை என்று ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், அதற்கு முன்பு இவர் தலைமையில் நடந்த போராட்டங்கள், சில நபர்களின் அரசியல் நுழைவிற்காகவும் (விஜயகாந்த்), அரசியலில் நல்ல பேர் (சீமான்) எடுக்கவேண்டும் என்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டதாக கூறினார். அது போல இனி எவனுடைய அரசியல் ஆதாயத்திற்காகவும் (விஜய்) நான் போராட்டம் நடத்தப்போவதில்லை என்றும் கூறியிருந்தார்.
 பொதுவாக சினிமாக்காரன் பொதுமக்களுக்காக போராடவேண்டும் என்ற கொள்கைக்கு எதிரானவன் நான். உண்மையில் ஒரு சிலரைத் தவிர, வேறு எவனுக்கும் அந்த மாதிரியான எண்ணம் இருப்பதில்லை. ஏதோ சங்கத்துல இருந்து கூப்பிடுறானுங்கன்னு சொல்லிக்கிட்டு, போட்டோ ஷுட்டுக்கு வர்ரதுமாதிரி, மேக்கப், உடைன்னு போட்டுகிட்டு வந்து போஸ் கொடுத்துட்டு போயிடுறானுங்க. அந்த பேட்டிய படிச்சு முடித்தவுடன், என் நண்பர்களுடனான அரட்டையில், ஒருமையில் பாரதிராஜவைத் திட்டி தீத்திருக்கின்றேன். ‘இவனுக்கு உண்மையில் போராடவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஏன், சினிமாக்காரனை எதிர்பாக்கின்றான், மக்களைக் கூட்டி போராட்டம் நடத்தவேண்டியது தானே, இல்ல போராடுகின்ற மக்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு போராடவேண்டியது தானே..... , இப்படியாக திட்டிக்கொண்டிருந்தது, பாவம் அவர் காதுக்கு கேட்டுவிட்டதோ என்னமோ. 2 நாளுக்கு முன்பு செய்தித்தொலைக்காட்சி ஒன்றினை பார்க்கும் போது, மக்களுடனான ஒரு போராட்டத்தை அறிவித்திருந்தார். அதன் மூலம் நான் பேசிய பேச்சிற்கு என்னை கொஞ்சம் அசிங்கப்படவும் வைத்துவிட்டார்.

வைகோ, ஒரு உண்மைத் தமிழன், இவருடைய கூடங்குளம் போராட்டத்திற்கு என் ஆதரவு இல்லை என்றாலும், இதற்கு என்னுடைய, ஏன், இந்த உலகின் மூலை, முடுக்கு, சந்து, பொந்தில் இருக்கும் அனைத்துத் தமிழனின் ஆதரவும் இவருக்கு உண்டு. அனைத்துக் கட்சித் தலைவர்களும், தன்னுடைய கட்சி கொடியை வைத்துக்கொண்டு, போராட்டம் நடத்தும் வேளையில், தமிழனின் போராட்டத்திற்கு போர்கொடி உயர்த்துவோம், கட்சிகொடியை அல்ல என்று முழங்கும், ஒரு உண்மைத் தலைவன். கடந்த வாரத்தில், கேரளாவிற்கு எதிராக நடந்த, பொருளாதார முற்றுகை போராட்டத்தில், கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்லும் நேரத்தில், ‘தலைவர் வைகோ வாழ்க என்ற கோஷத்திற்கு எதிர்பு தெரிவித்து, தன்னுடைய பேரை உபயோகப்படுத்த வேண்டாம் என்று கூறி, ‘தமிழ் வாழ்க, தமிழன் வாழ்க என்று கோஷங்களை எழுப்புமாறு தெரிவித்து, காவல்துறை வண்டியில் ஏறினார்.

சிங்கத்தின் குகை சென்று என்று எழுதினால், சிங்கத்தின் இனத்திற்கு அவமானம், அதனால், மன்மோகன் ‘சிங்கின் குகைக்கு சென்று, ‘கேரளாக்காரன் பெரியார் அணையின் மீது கைவைத்தால், சோவியத் யூனியன் போல இந்தியா துண்டு, துண்டாக உடையும், அதையும் நான் முன்னின்று நடத்துவேன் என்று பிடரியை பிடித்து ஆட்டிவிட்டு வந்தவர் வைகோ.

 நேற்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்ட பொதுக் கூட்டத்தின் மேடையின் அமைப்பே, போராட்டத்தின் வீரியத்தைக் காட்டியிருக்கும். மேடையில் ஒரு நாற்காலிகூட போடாமல், பேச்சாளர்கள் மேடையின் தரைவிரிப்பிலும், வந்தவர்கள் கடல் மணலிம் இருந்து தம் எதிர்பை தெரிவித்தது அனைவரையும் உணர்சிபடத்தான் வைத்திருக்கும்.

இதில் அரசியல்வாதிகளை நம்பி பிரயோஜனம் இல்லை. கூட்டத்தில் வந்த சிலர், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்று கூடி போராடவேண்டும் என்று சொலவது இயலாத காரியம், கூரை மேல் நிற்கும் கோழியைப் பிடிக்க வக்கில்லாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவத்ற்கு ஒப்பானது. முல்லை பெரியாரு விவகாரத்திற்காக விவாதம் நடத்த, தமிழக அரசு கொண்டுவந்த சட்டசபை கூட்டத்திற்கே, குவாட்டர் வாங்க டாஸ்மார்க் கடையின் லைனில் நின்றுவிட்டு மிகவும் தாமதமாக வந்த மாண்பு மிகு எதிர் கட்சி தலைவர் விஜயகாந்தை வைத்துக்கொண்டா அதை எதிர்பார்பது?, இல்லை நேற்று, பிரதமரை வரவேற்க வந்த தி.மு.க எம்.பிகளும், காங்கிரஸ்காரர்களும் சம்பிரதாயத்திற்கு கூட வணக்கம் வேண்டாம், ஒரு சின்ன புன்னகை கூட, பிரதமர் அருகில் நின்ற முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரிவிக்காத, இந்த அறிவுஜிவிகளை வைத்துக் கொண்டா ஒரே அணியாக நின்று எதிர்ப்பது?.

நேற்றய கூட்டத்தில் கவிஞர் அறிவுமதி சொன்னது போல, தாகத்திற்கு தண்ணீர் கேட்டால், மோர் கொடுக்கும் கலாச்சாரத்தின் புதல்வர்களை சீண்டினால் என்னவாகும் என்பதை காட்டவேண்டும். நம் உரிமைகளை நாம் தான் பெறவேண்டும், எவனாவது பெற்றுத்தர வருவான் எதிர்பார்ப்பது கூடாது.

எதிர்க்கத் துணிந்தால் தான் தமிழ் மீளும்,
எதற்கும் துணிந்தால் தான் தமிழ் ஆளும்.

விரைவில் நாம் ஆள்வோம், நம்மிடம் ஆடியவர்களை ஆட்டிவிப்போம்.
-------------------------------------------------------------------------யாஸிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக