திங்கள், ஜனவரி 27, 2014

கோபல்ல கிராமம்.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.


மங்கயத்தாயாரு அம்மாள், வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட போது அவருக்கு வயது ஜஸ்ட் 137 ஒன்லி. அவளின் 9ம் வயதில் இருந்து கதை தொடங்குகிறது, அதை தன்னுடய மகன் பேரனிடம் விவரிக்கும் விதமாக இந்த நாவல் அமைகின்றது. ஆந்திராவில் இருந்து 60 முதல் 70 பேர் வரை கொண்ட ஒரு சமூகம் எதற்காக தமிழகம் நோக்கி வந்தது, எப்படி தனது வாழ்வாதாரங்களை அமைத்துக்கொண்டது, ஒரு கிராமத்தை உருவாக்கியவிதம் என்ன, அதற்கு அந்த சமூகம் செய்த தியாகங்கள் என்ன என்பது போன்ற விசயங்களை அந்த பூட்டியின் (மங்கயத்தாயாரு) வாயிலாக விளக்குகிறது.

பூட்டியின் ஒன்பதாவது வயதில் அவளின் பெரியப்பா மகள் பருவ வயது சென்னாதேவியின் அழகையும் பெருமையையும் பற்றியே இரண்டு பக்கம் விவரிக்கிறது. ரத்தின வியாபாரிகள், கொள்ளயன் தலைவன் மல்லையா என இவள் அழகில் வாயடைத்து நின்றவர்களின் செய்கைகளை படிப்படியாக விவரிக்கின்றது, அம்மணி  அம்புட்டு அழகாம். இவ்வளவு அழகான பெண் இருக்கும் போது அதற்கு ஈடான அழகுடன் ஒரு ஆண் இருக்கனும் இல்லையா.........., ஆனால் அங்க தான் கதையில டுவிஸ்ட், இந்த கதையில் ஹீரோ கிடையாது, வில்லனாக ஒரு முஸ்லீம் ராஜா வருகிறான் (துலுக்க ராஜா என்றே நாவலில் பூரா இடங்களிலும் வருகிறது).

இவளின் அழகை சில அல்லக்கை முண்டங்களின் வாயிலாக தெரிந்து கொண்டு, அவளை மணக்க சில பரிசுப்பொருட்களோடு தன்னுடய கூட்டத்தினரை அனுப்பி பெண் கேட்கிறார் (மிரட்டுகிறார்). ராஜாவுடன் எதிர்த்து உயிர் வாழமுடியாது என்பதை குடும்ப பொதுக்குழுவில் முடிவெடுத்து அரை மனதுடன் சென்னா தேவியை ராணியாக்க சம்மதிக்கிறார்கள். கல்யாணத்திற்காக பூரா சொந்தக்கார பயபுள்ளைங்களையும் ராஜ இருக்கும் இடத்துக்கு, இரண்டு நாள் பயணமாக அழைத்துவருகின்றார்கள். பெண் வீட்டாருக்கு தடாபுடாலாக "மாட்டுக்கறி" விருந்து ஏற்பாடாகிறது என்று தெரிந்து, அதற்குமேல் அங்கிருந்தால் மோசம் என்று எண்ணி, கும்பலாக ராவோடு ராவாக கம்பியை நீட்டுகின்றார்கள்.

ராஜாவின் குதிரைப்படை துரத்திவரும் போது இடைப்படும் பெரிய்....ய ஆற்றினை, அவர்கள் எப்படி கடந்து செல்கிறார்கள் என்று ராம நாரயணன் பட கிராபிக்ஸை மிஞ்சிம் அளவிற்கு 137 வயது கிழவி சொல்லுவது, ‘அடேங்கப்பா’ ரகம். அதை அடுத்து உதவி செய்யும் ஒரு செல்வந்தர், தமிழகத்தை நோக்கி போகச்சொல்லும் பெண் உருவில் வரும் தெய்வம் என சுவாரஸ்யமோ, சுவாரஸ்யம். இடைப்பட்ட காலங்களில் பிணக்கு ஏற்படும் சொந்தபந்தங்கள், பினியில் ஏற்படும் சாவு என பல சோக சீன்கள்.

யாருக்காக துலுக்க ராஜாவிடம் இருந்து தப்பிக்கின்றார்களோ அந்த பியூட்டிபுல் லேடியும், நோயினால் இறந்துவிடுவது ஒரு பெரிய டிராஜெடி. இதுக்கு மேல ஒரு அடி எடுத்துவைக்க முடியாது என்று முடிவானவுடன், அங்கு இருக்கும் காட்டின் ஒரு பகுதியை சீராக்கி விவசாயம் செய்யமுனைகிறது இந்த சமூகம். காடுன்னா, எர்வாமேட்டின் ஆயில் மூலீகைகள் இருக்கும் அமேசான் காடுகளை விட ரொம்ப அடர்த்தியானது போல, கோடரியால் வெட்டி வெட்டிப் பார்த்து முடியாமல் போக. தங்களுக்கு தேவையான பகுதியை காட்டுப்பகுதியில் இருந்து பிரித்து, அந்த பகுதியை மட்டும் தீ வைக்கின்றனர்.

அந்த பகுதியை எப்படி ஒரு கிராமமாக உருமாற்றம் செய்கின்றார்கள், விவசாயம், வணிகம், தொழில்துறை.....இப்படியாக எவ்வாறு அந்த கிராமம் பரினாமவளர்ச்சி அடைகின்றது என்பதை மிகுந்த விருவிருப்போடு விவரிக்கின்றது. இவை எல்லாம் மங்கய்த்தாயாரு அம்மாவின் ஃபிளாஸ்பேக். 125 வருடங்கள் கழித்து அந்த கிராமம், எப்படி இருக்கிறது?, அங்குள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள்?, என்னென்ன வேலை செய்பவர்கள்?, அவர்களின் பட்டப் பெயர் என்ன?, அந்த பட்டப்பெயர்களின் பெயர்காரணம் என்ன? என்பதை பல் வெளியே தெரியாதபடி சிரிக்கும் அளவிற்கு ஆசிரியர் ஹியூமரில் விளையாடி இருக்கிறார்.

கதைகாலத்தில், அதாவது கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட காலத்தில், அந்த கிராமத்தில் நடக்கும் கொலை, அதற்கான தண்டனை, அதை எவ்வாறு நிறைவேற்றுகின்றார்கள் என்பதையும், தீவட்டி கொள்ளையர்களின் அட்டூழியங்கள், அவர்களை ஓட, ஓட விரட்டுவது என வீரதீற செயல்களையும் வைத்து அந்த கிராமத்தின் கட்டுக்கோப்புகளையும், மக்களின் ஒற்றுமையையும் நம்மாள் அறிந்துகொள்ளமுடிகின்றது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு கீழ் வருவதோடு இந்த நாவல் முடிவடைகின்றது.


வெறும் 176 பக்கம் கொண்ட அற்புதமான நாவல் இது. 

------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

2 கருத்துகள்: