செவ்வாய், பிப்ரவரி 11, 2014

ஹாஸ்டல் சாப்பாடு.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
இன்று இதுதான் நடக்கும் என்று முன்னவே நமக்கு தெரிந்திருந்தால், ஒரு சுவாரஸ்யம் இருக்காது. அதுமாதிரித்தான் எங்க ஹாஸ்டல் சாப்பாடும். உறவுக்காரங்க, நண்பர்கள் யாராவது காலேஜிக்கு வந்து பார்க்கவந்தால், ஹாஸ்டல் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு ‘அடேங்கப்பா,,,, என்ன டேஸ்டுடா, செமய்யா இருக்குதுடா சாப்பாடு, இது தான் நீ ஊருக்கு நாலு மாசத்துக்கு ஒரு தடவ வர்ற காரணமா?, அது சரிதான், இவ்வளவு நல்ல சாப்பாடு கிடச்சா எவனுக்கு சொந்த ஊருக்கு போகனும்னு தோணும்?” ன்னு சொந்தக்காரன் சுதி சுத்தமா சொல்லிக்கிட்டு இருக்கும் போதே பாய்ஞ்சு போயி குரல்வளையை கடிச்சி துப்பனும்னு தோணும்.

ஆனா, உண்மைய சொல்லனும்னா எங்க ஹாஸ்டல் சாப்பாடு ஓரளவுக்கு நல்லாத்தான் இருக்கும், சூப்ப்பரா இருக்கும்னு எவனாவது சொன்னான்னா, அவன் ஒன்னு நாக்கு செத்தவனா இருப்பான், இல்லன்னா சோத்துக்கு செத்தவனா இருப்பான். எங்களோட பிரட்சனை என்னன்னா, திங்கள் கிழமைன்னா, சாம்பார், செவ்வாய் கிழமைன்னா புளிக் குழம்பு, புதன் கிழமைன்னா வெஜ் பிரியாணி, வியாழக்கிழமைன்னா வெரைட்டி ரைஸ், வெள்ளிக்கிழமைன்னா சிக்கன் பிரியாணி, சனிக்கிழமைன்னா மீன் குழம்பு என்ற அட்டவனைதான். “ஆம்மா....இன்னைக்கு வெஜ் பிரியாணிதானே” என்ற சலிப்போடுதான் மெஸ்ஸுக்கே போகுறது. வெஜ் பிரியாணி உண்மையிலேயே நல்லா இருந்தாலும் கூட, அந்த மன்நிலையோட சாப்பிடுவது என்பது முடியாத ஒன்று. பசில கிடந்தா தூக்கம் வராது என்பதற்காக மட்டும், வயிறை நிறப்பிக்கொண்டு கிளாஸுக்கு போவோம்.

இதுமாதிரித்தான் ஒரு தடவ, சாம்பாருக்கு வாங்கும் மூலப்பொருட்களின் விலை கூடிருக்கும் போல, அன்னைக்குன்னு பார்த்து புளிக் குழம்பு வச்சிட்டானுங்க. “ஆம்மா........, இன்னைக்கு சாம்பாருதானே....” ன்னு சளிச்சிக்கிட்டு வந்த பங்காளிகளுக்கு புளிக்குழம்ப பார்த்ததும் பரம சந்தோசம். எப்பவும் வைக்கும் புளி குழம்பை விட அன்னைக்கு டேஸ்ட் ரொம்ப மட்டம்தான், ஆனால் சர்ப்ரைஸ் மெனு என்பதால், ஓப்பனிங்க் பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்புறதுக்கே பல மணி நேரம் ஆகிவிட்டது. இவனுங்க (நானுந்தேன்) சாப்பாடுவதை பார்த்துவிட்டு, கல்லூரி நிர்வாகம், புளிக் குழம்புன்னா பயலுகளுக்கு ரொம்ப இஷ்டம் போலன்னு தப்பா நினச்சிகிட்டு வாரத்துல மூனு நாளு புளிக்குழம்பா போட ஆரம்பிச்சிட்டானுங்க. பின்னாடி புளி விலை கூடிவிட்டதால், மறுபடியும் சாம்பாரே திரும்ப வந்து சேர்ந்திடுச்சு.

என்னதான் இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை சாப்பாட்டை மட்டும் அடிச்சிக்கவே முடியாது. வாரம் பூரா கிளாஸ் ரூமில் தூங்கி, தூங்கி ஏற்படுற டயர்டை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ரூமில் தூங்கி இழைப்பாரிக்கொள்வோம். ஆனால் காலையில சாப்பாட்டுக்கு எந்திருச்சா தூக்கம் கெட்டுருமே என்ற கவலை எங்களுக்கு இல்லை. ஏன் என்றால் காலை டிபன் ஸ்பெசல் தோசை, உருளைக்கிழங்கு குருமா சாப்பிட்டவுடன் கிடைக்கும் மசாலா பால். நான் நிறைய இடத்தில மசாலா பால் சாப்பிட்டிருக்கிறேன், ஆனா ஹாஸ்டல்ல கிடச்சமாதிரி எங்கயும் கிடைக்கல. டிபன் சாப்பிடுவதற்கு மூஞ்சை கழுவும் போது போகும் தூக்க கலக்கம், சாப்பிட்டு விட்டு மசாலா பாலை குடித்தபின்பு இரண்டுமடங்காக திரும்ப வருவதுதான் இதோட ஸ்பெசாலிட்டியே. எனக்கு தெரிஞ்சு, இதை குடிச்சிட்டு எவனும் தூங்காம, புத்தகத்தை தூக்கிகொண்டு திரிவதை பார்த்ததே இல்லை. இந்தமாதிரியான பெருமை கொண்ட பாலுக்கு எவண்டா மசாலா பால்னு வச்சான்? என்று எங்கள் ‘ஆல் இந்திய தூங்குமூஞ்சி மாணவர் பேரவை’ கண்டனத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல், இனி அதை ‘மேட்டர் பால்’ என்றே அழைக்கவேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றினோம். எங்களது தீர்மனம் இன்னும் நடைமுறையில் இருப்பதை கேள்விப்பட்டு பெருமையும் அடைகின்றோம்.

மேட்டர் பாலினுடய இன்னொரு ஸ்பெஷாலிட்டி, எவ்வளவு அசதியாக தூங்கினாலும் மதிய சாப்பாடு டைம் 1-2 க்குள் முழிப்பினை ஏற்படுத்திவிடும். கலை டிபன் சாப்பிட்டபின்னாடி அலாரம் எல்லாம் வைத்துவிட்டு மதிய சாப்பாட்டிற்கு எழவேண்டிய அவசியம் இருக்காது. மதிய சாப்பாடு பிரியாணி என்றால் சாச்சாத் பிரியாணி இல்லை, பிரியாணி மாதிரி. சனிக்கிழமை ஏதாவது புதுப்படம் வந்தாலோ, இல்லை சிவகாசி பழன்யாண்டவரில் ஒரு நல்ல ....... (புரிஞ்சிக்கனும்) படம் வந்தாலோ, சனிக்கிழமை நைட் தக்காளி சாதம் மிஞ்சிடும், அந்தமாதிரியான நாட்களில், அதே தக்காளி சாதம், ஞாயிற்றுக்கிழமை பிரியாணியாக பரினாம வளர்ச்சி பெற்று சில சிக்கன் பீஸ்களுடன் தட்டில் தாண்டவமாடும். மெஸ்ஸில் 20 டேபில் இருக்கும், டேபிலுக்கு ஒன்னு, ரெண்டு தட்டு ரொம்ப நேரமா காலியாக இருக்கும். அவர்கள் எல்லாம் சாப்பிட்டா ‘லெக் பீஸ்’தான் சாப்பிடுவேன்னு அடம்பிடிக்குற பிரஸ்பதிகள். கடைசியில லெக் பீஸ் முடிஞ்சி போச்சு, வேற சிக்கனும் இல்லன்னு தெரிந்து ரசம் ஊத்தி முனங்கிகொண்டே சாப்பிடும் கூட்டங்கள். வாரத்தில் 21 வேலை சாப்பாட்டில் சொல்லுறமாதிரி, இந்த இரண்டு வேலை மற்றும் வியாழக்கிழமை கொடுக்கும் புரோட்டா, சால்னா தவிர்த்து வேறு எதையும், எவனும் விருப்பப்பட்டு விழுங்குனதா எனக்கு தெரியலை.

நாங்க படிக்கும் சமயத்தில் மூன்று ‘பால்’கள். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மாதிரி. அதுல ஒன்னு மேலயே சொல்லியாச்சு ‘மேட்டர் பால்’, இன்னொன்னு ‘தியோடர் பால்’ இவன் EEE படித்துக்கொண்டிருந்த ஒருவன், (சாப்பாட்டைப் பற்றிய பதிவு என்பதால் இந்த நல்லவனைப் பற்றி இங்கு தேவையில்லை). மற்றொரு பால் ‘மிட் நைட் பால்’. பால் எல்லா இரவு நேர சாப்பாட்டுடனும் உண்டு என்றாலும், மி.நை. பால், எக்ஸாம் நேரங்களில் மட்டும்தான் கொடுக்கப்படும். தண்ணியில பால் கலந்து கொடுக்கும் மற்ற பால்களைப் போல அல்லாமல், சுண்ட காய்ச்சி எடுத்தா எப்படி கட்டியா இருக்குமோ அப்படி இருக்கும். மாணவர்கள் கண்விழித்து இரவு முழுவதும் படிக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இரவு 12 மணிக்கு கொடுக்கப்படும் பாலுடன் பேரித்தம் பழங்களும் உண்டு.

பாலுடன் பேர்த்தம் பழங்கள், எவன் சொல்லிக்கொடுத்த காம்பினேசன் என்றே தெரியவில்லை. ஆனால் உண்மையில் வேலை செய்தது, அதைக் குடிச்சா தூக்கமே வராது. மேட்டர் பாலுக்கு நேர் எதிர் இந்த மிட் நைட் பால். ‘நாடி, நரப்பெல்லாம் புடச்சி, உணர்ச்சிகள் எல்லாம் மேலோங்கி படிக்கனும் என்ற வெறியை உண்டு பண்ணும் பால் இந்த மி.நை. பால்’ என்று ஏதோ ஒரு வார்டன், விளம்பரத்துல வர்ற நடிகன் சொன்னமாதிரி சொன்னதாக ஒரு கிசு கிசு இருந்தது. 12 மணி வரைக்கும் ஓரளவு படித்தவர்கள், மி.நை பாலுடன் பேரிச்சம்பழத்தை திண்டுவிட்டு, வார்டன் சொன்னமாதிரி நாடி நரம்பெல்லாம் புடைக்க, படிக்கனும், படிக்கனும்னு வெறி புடிச்சு ‘வண்ணத்திரை’, ‘சினிக் கூத்து’, ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ “திரை மசாலா’....... போன்ற புத்தங்களுடன் கட்டிப்புரண்டு கொண்டிருப்பார்கள். நடுப்பக்கம் கசங்கி இருக்குற கோலத்தைப் பார்த்தால் உங்களுக்கு புரியும் அந்த உணர்ச்சி வெறி. மதவெறி, ஜாதிவெறி எல்லாம் இந்த உணர்ச்சி வெறியிடம் பிச்சை எடுக்கனும்.

மிட் நைட் பால், மிட் நைட் மசாலா ரேஞ்சிக்கு மாறியதை அறிந்த நிர்வாகம், பின்பு பேரித்தம் பழங்களை தடைசெய்துவிட்டது. ‘வேணும்னா பாலை கேன்சல் பண்ணிக்கங்க, பேரீச்சம் பழத்தை தாங்க’ன்னு கண்ணீர் விட்டு கதறி கெஞ்சிப் பார்த்தோம், இரும்பு மனம் கொண்ட நிர்வாகம் இறுதிவரை இறங்கிவரவேயில்லை. மாசத்து ஒரு முறை பஃப்பே சிஸ்டம் உண்டு, எல்லா நாளும் நாங்க இருக்கும் இடத்துக்கு மாஸ்டர் வருவாரு, பஃப்பே சிஸ்டம்ன்னு பேரு வச்சி நம்மள மாஸ்டர் இருக்கும் இடத்துக்கு தட்ட தூக்க விட்டுவானுங்க, ஆனா சாப்பிடுற ஐட்டம்னு பார்த்தா எப்போதும் சாப்பிடுற அதே காஞ்சிபோன சப்பாத்தி, தீஞ்சு போன தோசை, ஊத்துப் போன சப்ஜியாகத்தான் இருக்கும், பெயருக்கு இரண்டு எக்ஸ்ரா ஐட்டங்கள் இருக்கும்.
சைவம், அசைவம் என ரெண்டு மெஸ் உண்டு. முதலிலேயே சைவமா, அசைவமா என்று பெயர் கொடுத்துவிடவேண்டும். சைவம் சமைக்குற மெஸ்ஸில் பேர் கொடுத்தவர்களுக்கே அனுமதி, அங்கு அசைவ பட்சிகள் போகமுடியாது, சென்னை ஏர்போட்டுல கூட அவ்வளவு செக்கிங் இருக்காதுன்னா பார்த்துக்கங்க. சிக்கன் போடுற அன்னைக்கு சைவ மெஸ்ஸில், காலி பிளவர் 65, ஐஸ்கிரீம், குலாம்ஜாம், புரூட் சாலட் இப்படி பல ஐட்டங்கல் உண்டு. அதனால் சைவம்னு பல பேரு பெயர் கொடுத்துவைத்திருந்தார்கள். அசைவத்துக்கு அந்தமாதிரி செக்கிங் எதுவும் கிடையாது, யாருவேணும் என்றாலும் வரலாம், சாப்பிடலாம், போகலாம். நாம நல்லவனா இருந்தாலும் சுத்தியிருக்கும் கூட்டம் “டேய் நீ பேசாம சைவத்துக்கு பேரு கொடு, சிக்கன் போடுற அன்னைக்கு முதலிலேயே போய் நான்வெஜ் மெஸ்ஸில் சாப்பிடுவிடு, அப்புறமா வெஜ் மெஸ்ஸுக்கு வந்து ஐஸ்கிரீம், குலாப்ஜாம் எல்லாம் சாப்பிடு, நாங்களும் அப்படித்தான் செஞ்சிக்கிட்டு இருக்கோம்”ன்னு ஒருத்தன் ஒத்து ஊத, பேர் கொடுக்க வார்டன் முன்னாடி போய் நின்னாச்சு.

‘என்னப்பா வேணும்?’

‘சார், நான் மெஸ் ஜேஞ்ச் பண்ணனும்’

‘அப்படியா, எந்த மெஸ்ஸுல இருந்து எந்த மெஸ்ஸுக்கு ஜேஞ்ச் பண்ணனும்?’

‘நான்வெஜ்ல இருந்து வெஜ்ஜுக்கு’.

‘சரி உன் பேரு என்ன?’

‘முஹம்மது யாஸிர்’ ன்னு சொன்னதுதான் தாமதம் மனுசன் மேல இருந்து கீழ வரை ஒரு கேவலமான பார்வை பார்த்தாரு பாருங்க அதை என்னால இன்னும் மறக்கமுடியல. போக்கிரி படத்துல வடிவேலு சொன்னதுமாதிரி, ‘மண்ட மேல இருந்த கொண்டய மறந்துட்டோமே’. எல்லாத்தையும் பிளான் பண்ணின நமக்கு பேரை கேட்பானுங்களேங்குற விசயமே ஞாபகத்துக்கு வரலயே?, ‘இனி இந்தமாதிரி தப்பு ஃபுயூச்சர்ல நடக்காம பார்த்துக்கனும்டா யாஸிரு’ என எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.

‘இல்ல சார், போன வாரம் புட் பாய்ஸன் ஆகிடுச்சு, அதனால டாக்டர், ஆடு, கோழி, மீன், முட்டை, மட்டன், சிக்கன், எக், பிஷ் என இந்த 8 ஐட்டங்களையும் தொடக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. அதுனாலத்தான் இந்தமாசம் வெஜ்ஜுக்கு மாறலாமுன்னு.......’ சொல்லும் போதே அவரு நம்பிட்டாரு எங்கிற சமிக்சை தெரிந்தது.

அந்தமாதம் பஃப்பே சிஸ்டத்தில், நான்வெஜ்ஜில் சில சிக்கன்களையும், சில பல பிஷ், மட்டங்களையும் திண்டுவிட்டு, வெஜ் மெஸ்ஸிற்கு சென்று அங்குள்ள ரசகுல்லா, ஜிலேபி, காலி பிளவர் 65, வெஜ் சில்லி புரோட்டா, புரூட் சாலட் வித் ஐஸ் கிரீம் என எல்லா அய்ட்டங்களையும் திண்டுவிட்டு ரூமில் கண்மூடியதுவரை ஞாபகம் இருந்தது. கண் திறந்து பார்த்தா விருதுநகர் ஹாஸ்பிட்டல், ‘எனக்கு என்ன ஆச்சுடா?’ என்று பிணத்த சுத்தி உக்கார்ந்திருந்தவனுங்க மாதிரி என் கட்டிலை சுத்தி இருந்த நண்பர்களிடம் கேட்க ரெண்டு நாள ஹாஸ்பிட்டல்லதான் இருந்தேனாம், காரணம் புட் பாய்ஸனாம்.

விதி வலியது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.






4 கருத்துகள்:

  1. யாஸிர் கலக்கிட்டீங்க. இது மாதிரி பல ஐட்டங்கள் என்கிட்டயும் இருக்கு ...ஆன்னா அதை எழுத நினைக்கையில்தான் வார்த்தை முக்குது...

    பதிலளிநீக்கு
  2. அங்க அங்க மானே தேனே பொன்மானேன்னு போடுங்க. அவ்வளவுதான் ஒரு பதிவு ரெடி.

    பதிலளிநீக்கு